Wednesday, January 13, 2016

The Way Home இதுவரை பார்க்காமல் இருப்பவர்களுக்காக

அன்பின் முழு பிரியத்தால் கரைந்து போக விரும்புபவர்களுக்கு என்னால் ஒரு கொரிய படத்தை சொல்ல முடியும்.

நமது காக்கா முட்டைதான் தமிழில் மிக குறைந்த பட்ஜெட்டில் எடுத்தார்கள் என்று கேள்விப்பட்டேன், அதை விடவும் குறைவான பணத்திலேயே எடுக்க பட்டிருக்க கூடும். 
பெண் இயக்குனர் லீ ஜியாஸ் ஹியாஸ் in 2002ல் வெளிவந்த The way Home படத்தை பற்றிய ஒரு பார்வை, இது உலக அளவுக்கு திரைப்படம் எடுக்க சிறந்த திரைக்கதை போதும் என நிரூபித்த படம். பிரியத்தின் மொழி உலகெங்கும் ஒன்று தானே? அந்த பாட்டியும் பேரனும் உலகில் எங்கோ மூலையில் இருந்தால் என்ன, நாமும் நமது பாட்டியுமாக இருந்தால் என்ன?

பெரிய வசனங்களோ, அறிவுரைகளோ, சண்டை காட்சிகளோ, பிரமாண்டங்களோ, திடீர் திருப்பங்களோ இல்லாமல், படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் ஜீடோங்க்மா என்ற குக்கிராமத்தில் வாழும் ஒரு பாட்டியையும் அங்கு குடியிருக்கும் எளிய மனிதர்களையும் மட்டுமே கொண்டு எடுக்கப்பட்டது. 
ஒரு நல்ல புத்தகம் போல, இசை போல, பெரு விருந்து போல, கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்து பார்க்க வேண்டிய படம், அவசரங்களை பதட்டங்களை தூர தள்ளி வைத்து விட்டு அமைதியாக உட்கார்ந்தீர்கள் எனில் உங்களுக்குள் வேறொரு உலகத்தை இது திறந்து வைக்கும்



கதை:
தென் கொரியாவின் மிக பின் தங்கிய ஒரு கிராமம்

தென் கொரியாவின் கடை கோடியில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு ரயிலிலும், பின்னர் ஒரு பழைய மினி பஸ்சிலும் ஒரு நகரத்து morden அம்மாவும், கிராமம் என்றால் எனவென்றே தெரிந்திறாத ultra morden சிறுவன் சாங் வூவும் செல்கின்றனர்.

அடுத்து அவர்கள் அந்த மலை கிராமத்தில் நடந்து சென்று ஒரு சிறு வீட்டை அடைகிறார்கள். ஒரு சிறு அறை மட்டுமே இருக்கும் குடிசை அது. காது மட்டுமே கேட்கும், வாய் பேச இயலாத தொண்ணூறு வயது பாட்டி அங்கு இருக்கிறாள்.

வேலை தேடிகொண்டிருப்பதால் சாங் வூவை பாட்டியிடம் விட்டு விட்டு தாய் கொரியா நகரத்திற்கு சென்று விடுகிறாள். அவனுக்கு பாட்டியை சுத்தமாக பிடிக்க வில்லை, அவள் தரும் உணவுகளை தொட்டு பார்க்க கூட அருவருப்பு கொண்டு தான் கொண்டுவந்த நொறுக்கு தீனிகளை மட்டுமே உண்கிறான்
எந்த நேரமும் வீடியோ கேம் இல் மூழ்கி இருக்கும் அவன்.. பாட்டியை கிறுக்குஎன்றும் ஊமைஎன்றும் வீட்டு சுவரில் எழுதி வைக்கிறான்.
வயதான பாட்டி துணி தைக்க ஊசியில் நூலை கோர்த்து தர சொல்லி பேரனின் உதவியை நாடுகிறாள். மிகுந்த சலிப்பிற்கு இடையே அவன் கோர்த்து தருகிறான். தான் விளையாடிகொண்டிருந்த வீடியோ கேம் இன் பாட்டரி தீர்ந்து போகிறது, வேறு பாட்டரி வங்கி தரும்படி பாட்டியிடம் கேட்கிறான். பாட்டிக்கு புரியாததால் பைத்தியம் செவிடு என திட்டுகிறான்.

கிராமத்தில் ஒரு மாடு முட்ட வரும்போது ஒரு சிறுமி அவனை காப்பாற்றுகிறாள் அவளை தோழியாக்கி கொள்ள தன்னை அழகாக்கி காட்ட, பாட்டியிடம் முடி வெட்டி விட சொல்கிறான். முடி வெட்டும் போது தூங்கி விடும் அவன், கண் விழித்து பார்க்கும் போது தலையை ஒட்ட வெட்டி விட்டுள்ளது கண்டு அழுதபடி பாட்டியை திட்டுகிறான்.

அவன் கொண்டு வந்த தீனி தீர்ந்ததும், கென்டக்கி ப்ரய்ட் சிக்கன் வேண்டும் என சைகையில் கேட்க மழைக்குள் அந்த தள்ளாத வயதில் மழையில் நடந்து சென்று அவனுக்காக கோழி வாங்கி சமைத்து கொடுக்க, அது கென்டக்கி ப்ரய்ட் சிக்கென் அல்ல என சாப்பிட மறுத்து விடுகிறான். பின்னரவில் பசி எடுக்க அதே சிக்கனை கொஞ்சம் சாப்பிட ஆரம்பிக்க சுவை பிடித்து போய் முழுதும் சாப்பிடும் காட்சிகளில் இருந்து படம் சுவாரஸ்யமாக ஆரம்பிக்கிறது

அவனுக்கு விளையாட பாட்டரி தேவையாய் இருப்பதை பற்றி புரிந்து கொள்ளும் பாட்டி, தான் வளர்த்து வந்த செடியில் பறித்த காய்கறிகளை விற்க அருகில் இருக்கும் சந்தைக்கு பேரனையும் கூட்டி கொண்டு பஸ்சில் ஏறி செல்கிறாள். அங்கு அவனுக்கு, பாட்டரியும், காலணியும், வாங்கி தருகிறாள்.
அந்த கிராமத்தில் உள்ள எளிய மனிதர்களையும் அதனூடே சொல்லி இருப்பது அற்புதம், பாட்டி பண்டங்களை வாங்கும் போது, கடைகாரர்கள் பாட்டிக்கு சிறிது சேர்த்தே தருவதுடன், அவளின் நலம் பற்றி அக்கறையாக விசாரிப்பதை பேரன் வியப்புடன் பார்ப்பது காட்சி சுவை

அதன் பின் சாக்லெட் வங்கி தர சொல்கிறான். இருக்கிற பணம் எல்லாம் செலவு செய்து அவனுக்கு வாங்கி தந்து அவனை பஸ்ஸில் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறாள். பாட்டியின் கிராமத்துக்கு வந்து சேரும் பேரன்.. பாட்டியை காணாது பஸ் நிறுத்தத்திலேயே அமர்ந்து பாட்டி வரும் பஸ் நோக்கி காத்திருக்கிறான். நடந்து வருவதை காண்கிறான்.

தனக்காக செய்த தியாகங்கள் அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக உரைக்க, அழுகிறான்... பின்னர் பாட்டி மேல் நேசம் கொள்ள தொடங்குகிறான்
அவனுடைய அம்மாவிற்கு வேலை கிடைத்து விட்டதாகவும் அவனை கூட்டி செல்ல வருவதாகவும் கடிதம் வருகிறது.

பாட்டியை பிரிய மனமின்றி அவன் செல்லும் நாளின் முதல் நாள் இரவு.. பாட்டிக்கு ஏகப்பட்ட நூல்களில் ஊசிகள் கோர்த்து வைக்கிறான்.
பாட்டிக்கு அவசரம் அவசரமாக கடிதம் எழுதி பழக்க முயற்சி செய்கிறான், நடுங்கும் விரல்களை கொண்டு எழுத இயலாமல் சோகமாய் அவனை பார்க்கிறாள் பாட்டி

பாட்டிக்காக தானே வாழ்த்து அட்டைகள் செய்து அதில் அனுப்புனர் பகுதியில் பாட்டி என்றும் பெறுநர் பகுதியில் அவன் பெயரை எழுதி ஒவ்வொரு மாதமும் தனக்கு அனுப்புமாறும் அப்போது அவள் நலமாக இருக்கிறாள் என தான் புரிந்துகொள்வேன் என்று கூறுகிறான்.

இறுதிக்காட்சி முழுவதும் அன்பால் கரைந்து போகும் படி இருக்கிறது,
அவன் ஊருக்கு புறப்பட்டு செல்லும் நாளில்,பஸ்சில் ஏறிய பேரனையே பார்த்தபடி நிற்கும் பாட்டியும், பார்க்க இயலாமல் தலை குனித்து கொள்ளும் பேரனும், அதன் பின் பஸ்ஸின் பின்புறம் ஓடி வந்து கண்ணாடி வழியே மன்னிப்பு கேட்டபடி அவன் பாட்டியை பிரிவதும்... கூன் போட்டபடி குச்சியை வைத்து மெல்ல மலை மீது ஏறும் பாட்டியும், மனதை கணக்க வைப்பதோடு அன்பின் முழு ஆழத்தையும் உணர்த்தி செல்கிறது

அழுகைக்காக எடுக்கபட்ட படம் இதல்ல, என்றாலும் இறுதி காட்சிகளில் கண்ணீர் துளி வந்து விடுவதேன்னவோ நிஜம்தான். 



புரிந்து கொள்ளப்படாமலேயே போய்விடும் எளிய அன்பே பெரும்துயரம் என படித்திருக்கிறேன். படம் முடிந்த பிறகு நம்முள் மெல்லிய நேசம் அருகில் உள்ளவர்கள் மீது பூக்க துவங்கும்... நம்முள் புதைந்து கிடக்கின்ற மனித தன்மையை வெளிக்கொண்டு வருவதே இந்த படத்தின் வெற்றி . 

இதே பெயரில் ஒரு ஆங்கில படம் ஒன்று வந்திருக்கிறது, அதை தவிர்த்து விட்டு the way home korean movie என கூகுளில் தேடுங்கள். 


தவற விட வேண்டாம் youtubeலேயே subtitle உடன் காண கிடைக்கிறது

No comments:

Post a Comment