Tuesday, July 6, 2021

சக்கரவர்த்தி திருமகன்

 உலக மகா ஜோசியர் நாஸ்ட்ரடாமஸ் புகழுக்கு இப்படி ஒரு களங்கம் ஏற்படும் என்று எவரும் எண்ணி பார்த்திருக்க மாட்டர். அதற்கென்ன செய்ய முடியும். 2012 ஆம் ஆண்டு 26 அக்டோபர் அன்று தமிழ்த்திரையுலகில் இப்படி ஒரு குபீர் புரட்சி நாயகன் தோன்றுவான் என்பதை கணிக்க இயலாமல் மாண்டே போனார் அம்மகான். நடிகர், கதாசிரியர் தயாரிப்பாளர் என பல சுமைகளை தோளிலும், முதுகிலும் தாங்கி வாழும் எம்.ஜி.ஆர். சக்கரவர்த்தி அவர்கள் எட்டுத்திக்கும் நம்மை திக்கு (திக்காக) முக்காட வைக்க வந்திருக்கும் ஒப்பற்ற காவியம்தான் சக்கரவர்த்தி திருமகன். ரிலீசுக்கு முன்பு ஒருநாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சுவற்றில் இப்படத்தின் விளம்பரம் இப்படி எழுதப்பட்டு இருந்தது: சக்கரவாத்தி திருமகன். அதை எழுதியவருக்கு முழு சம்பளம் தர முடியாத அளவுக்கு லோ பட்ஜெட் படமோ என்று கண்ணீர் எட்டிப்பார்த்ததன் விளைவே தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரை நோக்கி நேற்று இரவுக்காட்சி செல்வதற்கான ஊக்க மருந்தாய் அமைந்தது.



அதிர்ஷ்டம் இல்லாத பல பதிவர்கள் சிதறி ஓட என்னிடம் சிக்கிய ஒரே பதிவர் அண்ணன் கே.ஆர்.பி.செந்தில். 20 ரூபாய் டிக்கட் எடுக்க நின்றபோது எமக்கு முன்பாக இருந்த சிலர் 'படம் ஆரம்பிச்சாட்டாங்களா சார்?' என்று கவுண்டரில் பதற்றத்துடன் கேட்க நாங்கள் 'பாஸ்...அவ்ளோ பெரிய ரசிகரா நீங்க?' என்றோம். அவர்கள் 'ஆமாங்க. பவர் ஸ்டாருக்கு அப்பறம் நமக்கு ஸ்ட்ரெஸ் ரிலீப் இவருதானுங்களே' என்று சொல்ல எமக்கு தீபாவளி நேற்றிரவே தொடங்கிய உற்சாகம். 

சரி கதை என்ன? ஜெர்மனி நாட்டவர் இருவர் குற்றாலத்தில் கொலை செய்யப்பட, அதை விசாரிக்க வருகிறார் சி.பி.ஐ.அதிகாரி சக்ரவர்த்தி. அவருக்கு துணையாக கவர்ச்சி பதுமைகள் - கம் - அசிஸ்டன்ட்களாக கங்கா, காவேரி துப்பு துலக்குகின்றனர். அண்ணன், தம்பி என இரு போதை மருந்து கடத்தும் வில்லன்கள். ஜெர்மானியர்கள் கொலையில் இவர்கள் பங்கு இருப்பது சக்ர கண்ணுக்கு புலனாகிறது. இவர்களை கம்பி என்ன வைக்க என்னவெல்லாம் செய்கிறார் நம்ம சக்ர என்பதை ஆக்சன், சென்டிமென்ட், கிளாமர் மற்றும் நான் ஸ்டாப் ஹ்யூமருடன் சொல்லி இருக்கிறார்கள். 
சக்ர...ம்ம்..சும்மா சொல்லக்கூடாது. எம்.ஜி.ஆரை தேய்ந்து போன ஜெராக்ஸ்  பிரிண்டில் பார்ப்பது போல சொல்லிலடங்கா அம்சத்துடன் பவனி வருகிறார். தொப்பையை தூக்கிக்கொண்டு வில்லன்களை துரத்தும்போது ஓடும் அழகிற்கு முன்பு அனுஷ்கா, காத்ரீனா கைப் போன்ற அழகிகள் எல்லாம் பீல்ட் அவுட் ஆகின்றனர். இடைவேளைக்கு பின்பு வரும் டூயட் பாடல் டான்ஸில் அஜித்தை அடித்து நொறுக்குகிறார். கஸ்டடியில் இருக்கும் கைதிகளை சக்ர விசாரிக்கும்போது அவர்கள் அலறிக்கொண்டே 'சார்..வேணாம் சார். கண்ணாடிய மட்டும் கழட்டிராதீங்க சார்' என்று பிளிறுவது ஏனென்று முதலில் எமக்கு பிடிபடவில்லை. கண்ணாடியை கழற்றினால்  இன்னும் உக்கிரமாக தலைவர் எதிரிகளை பந்தாடுவார் என்பதே அந்த பிளிறலுக்கு பின்பிருக்கும் டைரக்டர் டச் என்பது பின்பே புரிந்தது. 

சக்ரைக்கு இரு வெள்ளை வெளேர் நாயகிகள். 'அவர் என்னைத்தான் காதலிப்பார்' என்று கங்காவும், 'போடி..அவர் எனக்குத்தான்' என்று காவேரியும் தொண்டை தண்ணீர் வற்ற கத்தினாலும் புத்தியை தீட்டி புல்லுருவிகளை பிடிப்பதிலேயே குறியாக இருக்கிறார் தலைவர். ஸ்கார்பியோ, பி.எம்.டபிள்யூ கார்கள், குற்றால இயற்கை ஸ்பாட்கள், செவ செவா அழகிகள் என்று பெரிய பட்ஜெட் படமாகத்தான் இருக்கிறது இந்த (க்கரவர்த்தி) தி(ருமகன்). இடைவேளையில் போட்ட ட்ரெயிலர்: 'கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு'. ஜேம்ஸ் பான்ட் போஸில் சக்ர கையில் துப்பாக்கியுடன். நமக்கு இன்னொரு தீபாவளி கன்பர்ம். ஏற்கனவே ஒரிஜினல் எம்.ஜி.ஆர் அவர்கள் ஏ.வி.எம்.முடன் இணைந்து நடிக்கவிருந்த படம்தான் இந்த கி.ஆப்ரிக்காவில் ராஜு. ஏனோ அப்படம் விளம்பரத்துடன் நின்று போனது. அதை தூசு தட்டி இப்போது நமக்காக அர்ப்பணிக்கு உள்ளார் சக்ர. 
விசாரணைக்காட்சி ஒன்றில் துப்பாக்கியை ஜிப் போடும் இடத்தருகே சொருகி வைத்திருந்தார் தலைவர். அப்போது கே.ஆர்.பி.என்னிடம் சொன்னது  'துப்பாக்கிய எங்க சொருகி இருக்காரு பாருங்க தம்பி'. எனது பதில் 'ச.தி.யை மட்டும் தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணி இருந்தா 'துப்பாக்கி'ய சொருகி இருப்பார் நம்ம சக்ரவர்த்தி'. படம் முழுக்க இதுவரை கேட்டிராத டயலாக்குகள் கண்டமேனிக்கு வலம் வருகின்றன. சாம்பிள்கள் சில: 

'இவனை ஸ்டேசனுக்கு கொண்டு போய் முட்டிக்கு முட்டி தட்டுங்க'

'நான் நல்லவனுக்கு நல்லவன். கெட்டவனுக்கு ரொம்ப கெட்டவன்'

'இந்த கேசை நான் முடிக்கறேன். நம்புங்க. நம்பிக்கைதான் வாழ்க்கை'

'பீட்சா பயங்கர திகில் படம். என்னமா எடுத்து இருக்காங்க. இந்த வருசத்துல இதுதான் பெஸ்ட்'  என்று கூசாமல் பொய் சொல்லும் ரசனையற்ற ரசிகர்களே, உங்களுக்கு தில் இருந்தால் ச.தி.யை இரண்டரை மணி நேரம் பரவச நிலையுடன் அமர்ந்து பாருங்கள். அதுவும் நைட் ஷோ பார்த்து  விட்டு சொல்லுங்கள். 'பீட்சா' (கலக்சன்) முழுவதையும் ஒரே வாயில் முழுங்கி கொட்டாய் கூரை இடிந்து விழும் அளவிற்கு ஏப்பம் விட்ட எங்கள் சக்ரவர்த்தியின் படம் வரும் வாரங்களில் ஜேம்ஸ்பாண்ட், துப்பாக்கி அனைத்தையும் டுமீலாக்கி வெ(ற்)றிநடைபோடும் என்பதில் கடுகு,எள், சமுத்திர மணல் அளவும் சந்தேகமில்லை. 


பின் குறிப்பு இந்த மகிழ்ச்சி தரும் காவியம் இலவசமாக யூடூப்பில் கிடைக்கிறது, கண்டு உய்ய : https://www.youtube.com/watch?v=ci2lI_1t_Tc

Sunday, June 27, 2021

மேதகு சினிமா விமர்சனம்

 பகுதி பகுதியாக எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்ட பிறகு, இலங்கையில் சுதந்திரம் அடைந்ததில் இருந்து நடந்துகொண்டிருந்த சிங்கள தமிழ் பிரச்சனைகளை மேதகு முதலில்  பார்ப்பவர்களுக்கு புரியும்படி தெளிவாக சொல்லவில்லை, முக்கியமாக தமிழர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டதை, அதனால் நிகழ்ந்த கொந்தளிப்பை பார்ப்பவர்களுக்கு கோபம் ஏற்படுத்தும்படி சொல்லவே இல்லை, அதை ஒட்டி நிகழ்ந்த தமிழர் கட்சிகளின் சப்பை அரசியலை, தமிழர்களுக்கு உரிமை தருவதாக ஓட்டு வாங்கிவிட்டு புத்த பிட்சுக்கள் முன்பு அந்த ஒப்பந்தத்தை கிழித்து போட்டதை, முதல் துப்பாக்கிக்காக பிரபாகரன் பட்ட பாட்டை, அது கிடைக்காமல் திரும்பிய ஏமாற்றத்தைக் கூட சொல்லாமல் ஒரு டான் உருவாவதுபோல் காட்டியிருக்கிறார்கள்.  முக்கியமாக முதல் வெடிப்பு முயற்சியான இவர்களே ஒரு வெடிகுண்டை தயாரித்து பள்ளிக்கூட கழிப்பறை நிகழ்வைக் கூட சொல்லவில்லை. நெஞ்சை பதைபதைக்க செய்யும் நிஜங்கள் ஏராளமாக நடந்திருந்தும் அதை காட்சி படுத்தவில்லை,  சயந்தனின் ஆதிரை, செல்லமுத்து குப்புசாமியின் பிரபாகரன் ஒரு வாழ்க்கை படித்தவர்களுக்கு இந்த படம் நகைச்சுவையாக தெரியக் கூடும். சிங்களர்களின் ஆதரவை பெற ஒரு அரைவேக்காட்டு அரசியல்வாதியின் சொற்கள் தான் மூல காரணம், அதை பிடித்து தொங்கிக்கொண்டிருந்த எதிர் கட்சிகள் தான் அடுத்த காரணம் என்பதையெல்லாம் விட்டுவிட்டு புத்த பிட்சுக்கள் தான் பெரிய வில்லன்கள் என்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். நான் ஆதிரை படித்துக்கொண்டிருந்த நாட்களில் சாப்பிட, தூங்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறேன், அவ்வளவு உணர்வை அந்த புத்தகம் எனக்குள் கடத்தியது. அதில் ஒரு பத்து சதவீதம் கூட இந்த படம் எனக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை

இருந்தாலும் இசையிலும், கேமராவிலும் கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். பிரபாகரன் கேரக்டர் நல்ல தேர்வு. பல்வேறு மக்களிடம் சேகரித்த பணத்தில் ஓரளவு தரமாகவே படத்தை தந்திருக்கிறார்கள். ஈழ அரசியலை பேசியிருக்கிறார்கள் ஆனால் அந்த உணர்வை முழுவதும் கடத்தவில்லை. ஆவணப்படமாக இதை எடுத்துக்கொண்டாலும், இன்னும் வலிமையாக தந்திருக்கலாம். 

இதை எல்லாம் தாண்டி பிரபாகரனை பற்றிய முதல் திரை முயற்சி என்பதாலும், அவருடைய வாழ்க்கை  நிகழ்வுகளை தொகுத்திருப்பதாலும் இதற்காக நாம் கொடுக்கும் தொகை குறைவாக இருப்பதாலும் (70) இந்த படத்தை   பார்க்கலாம். 

திரைப்படத்தை https://bsvalue.com/. இதில் சென்று உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்து பிறந்த தேதி, ஆண்/பெண் விவரத்தை பதிவு செய்து பணம் கட்டி பார்க்கலாம் 


Monday, May 10, 2021

வியாபாரம்

 நாற்பது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய உயரமான கனத்த தொந்தியுடன் தனது குதிரை வண்டியிலிருந்து தாய்க்கிழவியான மக்கோலாவின் பண்ணை வீட்டு முன்பு இறங்கினான் ஜூல்ஸ் சிகோட். நல்ல வியாபாரி என்று ஊருக்குள் பேச்சிருந்தது. 

ஆனால் அதை பொய்யாக்கும் விதமாக கிழவி மக்கோலா நடந்து கொள்கிறாள், ஏனினில் ஜூல்ஸ்ற்கு கிழவியின் நிலத்தின் பக்கத்திலேயே அவனுடைய பெரிய பண்ணை நிலமும் இருந்தது, மக்கோலாவின் நிலத்தை வாங்க எவ்வளவோ பேரம் பேசியும், ஆசை தூண்டிலிட்டும் கிழவி தன் நிலத்தை விற்க மறுத்துவிட்டாள். 

"நான் இங்கதான் பொறந்தேன், இங்கதான் சாவேன்" என அவனை மண்டைகாய விட்டாள். . 

எழுபத்தி இரண்டு வயது கிழம், உருளைக்கிழங்கை உரிப்பதையும் மற்ற வேலைகள் செய்வதையும் பார்த்தால் சிறு பெண்களை விட சுறுசுறுப்பாக இருந்தது சிகோட்டுக்கு கடுப்படித்தது. மக்கோலா முன்புறமிருந்த ஸ்டூலில் உட்கார்ந்தவன் அவள் தோளை தொட்டான். 

"சாகுற வயசுல இவ்ளோ சுறுசுறுப்பா இருக்கியே எப்புடி?" 

"இது வேலை செஞ்சே பழக்கப்பட்ட ஒடம்பு, அப்படித்தான் இருக்கும், நீ எப்படி இருக்கே?"

"எப்போவாவது கால் வலி வருது, மத்தபடி நல்லாத்தான் இருக்கேன்" 

"கேக்க நல்லாருக்கு" என்று சொல்லியபடி, கிளம்பு காத்து வரட்டும் என்பதுபோல் அமைதியானாள். 

ஒரு கையால் உருளையை அனாயசமாக பழைய கத்தி கொண்டு சீவியபடி, சீவி முடித்ததை மறு கையால் அருகில் இருந்த பாத்திர நீரில் வீசினாள். இடையே மூன்று கோழிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து அவள் மேல் ஏறி கால்களுக்கிடையே ஓடின. இதை பார்த்தபடி இருந்த சிகோட், பதட்டமடைந்தவனாக காணப்பட்டான். சிறிது நேரம் பேச யோசித்தவன்,  தயக்கத்திற்கு பின், 

" அம்மா மேக்லோயர் நான் சொல்றதை கேளேன்"

"என்ன?"

"நீ உன்னோட நிலத்தை விப்பியா? மாட்டியா?"

எவ்ளோ தடவை சொல்ரது உனக்கு... மாட்டேன், மறுபடியும் விக்க சொல்லி கேக்காத, கடுப்பாயிடுவேன்"   

"விக்க போறதில்லைன்னு சொல்றே, அப்படியே இருக்கட்டும்.... என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு, என்னன்னுதான் கேளேன்" 

"சொல்லி தொலை" 

"மாச மாசம் நான் ஒரு அமௌன்ட் தரேன், அதை நீயே வச்சுக்க, ஆனா நீ இங்கேயே எப்பவும் போல இருக்கலாம்" 

செய்துகொண்டிருந்த வேலையே நிறுத்திவிட்டு "என்னோட நிலத்தை நீயே வச்சுக்கன்னு சொல்லிட்டு அப்புறம் எதுக்கு பணம் கொடுக்கணும்?" என்றாள். 

"முழுசா கேளு,  நீ இருக்கிறவரை நீயே உன்னோட நிலத்தை எப்பவும் போல வச்சுக்கோ, மாசம் மாசம் மூவாயிரம் தரேன், நீயே ஒரு வக்கீலை வச்சு, நீ இறந்ததும் அப்புறம் எனக்கு இந்த சொத்துன்னு எழுதிக்குடு, உனக்குத்தான் புள்ளகுட்டியக யாருமே இல்லையே? உன் சொந்தக்காரன் எவனும் நீ உயிரோட இருக்கியா இல்லையான்னு கூட கேக்கறதில்ல, இந்த டீல் உனக்கு பெரிய லாபம் தானே?" என்றான். 

கிழவிக்கு உள்ளூர மகிழ்ச்சி என்றபோதும் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை, ஏதாவது பித்தலாட்டமாக இருக்குமோ என்ற கவலை கூட வந்தது. இருந்தாலும், 

"எனக்கு ஒரு வாரம் யோசிக்க டைம் குடு, அடுத்தவாரம் இதே நாள் வா, ஒரு முடிவை உறுதியா சொல்றேன் " என்றாள். 

சிகோட்டுக்கு "பார்ட்டி வலையில மாட்டிருச்சு" என்ற சந்தோஷத்தோடு கிளம்பி போனான். 

கிழவிக்கு தூக்கமே வரவில்லை, இதை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள், நாலு நாள் ஒரு குழப்பத்திலேயே வாழ்ந்தாள், ஏதாவது ஏழரை இருக்குமோ என யோசித்தாள், காசே இல்லாமல் கிடக்கும் அவளுக்கு மாதம் மாதம் வரபோற மூவாயிரம் ருபாய் பெரும் ஆசையை தூண்டி விட்டது. இதை அதிர்ஷ்டமாகவே கருதினாள். 

அடுத்தநாளே ஒரு வக்கீலை பார்த்து இதை சொன்னாள், வக்கீல் ஒத்துக்கொள்ளும்படி சொன்னார், ஆனால் "கேக்கிறதுதான் கேக்குறே ஐயாயிரம் கேளு, உன்னோட நிலம் எப்படியும் அம்பது அறுபது லட்சத்துக்கு போகும், பத்து பதினஞ்சு வருஷம் உயிரோட இருந்தா அவன் கொடுக்கிறது கம்மியாத்தான் இருக்கும்" என்றார். பல கேள்விகள் வக்கீலை கேட்டு அவர் உயிரை வாங்கி, கடைசியாக ஐயாயிரத்துக்கு சம்மதிப்பதாக உயில் எழுதுமாறு சொல்லிவிட்டு வீடு வந்தாள். மட்டமான டாஸ்மாக் சரக்கடித்ததது போல் ஒரு கிறுகிறுப்பு அவள் உடம்பில் இருந்தது. 

அடுத்த இரண்டு நாளில் ஜுல்ஸ் வந்தான், உடனே ஒப்புக்கொண்டால் கெத்து என்னாவது? மாக்லோர் நீண்ட பில்டப்புகளுக்கு மத்தியில், அவனே கடுப்பாகி கிளம்பும் நிலையில் "இங்க பாரு மாசம் ஐயாயிரம் தரதுன்னா ஒப்பந்தம் போட்ரலாம்" என்றாள். "எது அய்யாயிரமா? ஆள உடு" என்றவனை கிழவி சமாதான படுத்த வேண்டி வந்தது. 

"இங்க பாரு, நேத்து கூட படுக்கையை விட்டு எந்திரிக்க முடியல, போய் சேந்துருவேன்னு நினச்சேன், அதிகபட்சம் நாலஞ்சு வருஷம் தான் தாங்குவேன்" என்றவளை இடைமறித்து, 

"யாரு நீ? நான் செத்தா கூட நீ உயிரோட தான் இருப்பே, சின்ன பொண்ணை விட சுறுசுறுப்பா இருக்கே, உனக்கு செஞ்சுரி கன்பார்ம்" என்றான். 

அன்றைய நாள் முழுவதும் இந்த பேரம் நடந்தது. வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான் ஜுல்ஸ். அட்வான்ஸாக ஆயிரம் ரூபாயை வாங்கிகொண்டாள் கிழவி. 

ஒப்பந்தம் போட்டு பணம் கொடுக்க துவங்கி மூன்று ஆண்டுகள் கழிந்தன, கிழவி பழைய நிலையிலிருந்து மிக ஆரோக்யம் பெற்றவளாக தோன்றியது ஜுல்ஸ்க்கு, அவன் பார்க்கப்போகும் போதெல்லாம் கிழவி, நானா டூ ஹண்ட்ரட் போடாம போக போறதில்ல என நக்கலாக சிரிப்பது போன்றே இருந்தது. 

"ஆஹா ஏமாந்துட்டோமோ, இவ சாகிற மாதிரியே தெரியலையே, கழுத்தை நெறிச்சு கொன்றலாமா? அது வேற பிரச்சனையாகிடுமே? என்ன பண்றதுன்னே புரியல" என கடும் குழப்பத்திலும் ஆற்றாமையிலும் இருந்தான். 

பிறிதொருநாள் கிழவியை சந்தித்து, கொஞ்ச நேரம் ஊர்கதைகளை பேசிவிட்டு, "ஏன் என் வீட்டுக்கே வர்ரதில்ல, ஒருநாள் வரலாம்ல? ஊர்காரனுக "உனக்கும் எனக்கும் பிரச்சனை போல"ன்னு பேசுறானுக, அதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு அவனுகளுக்கு தெரியப்படுத்தனும், அதுவுமில்லாம உனக்கு விருந்து கொடுக்கிறதுல எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கும், நீ இஷ்டப்பட்டபோ வா" என்று சொல்லி கிளம்பினான். 

அடுத்தநாளே சந்தை நாளாக இருந்ததால் கிழவி வண்டி கட்டி கொண்டு சந்தைக்கு போய் விட்டு, விருந்தை சிறப்பிக்க ஷிக்கோவின் வீட்டு முன் வந்து இறங்கினாள்.

அவன் கிழவி வருவதில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டான், சிறப்பான வரவேற்புடன், விருந்தை தடபுடலாக ஏற்பாடு செய்தான், கோழி, புட்டு, மட்டன், பீப் என உணவை தயார் செய்து அவளை சாப்பிட அழைத்தான். கிழவி சூப், ரொட்டி மற்றும் வெண்ணெய்களே போதுமென வாழ்ந்து பழக்கப்பட்டவள், "இந்த வயசுல எப்புடி இவ்ளோ தின்கிறது?" என மறுத்தாள். "பரவால்ல சாப்பிடு" என்றவனை, "இவ்ளோல்லாம் முடியாது" என கறாராக மறுத்துவிட்டாள். 

"சாப்பிடாட்டி தான் பரவால்ல, செம்மையான சரக்கு இருக்கு கொஞ்சமா அடிக்கிறியா?" என்றான், 

"சரக்குதான், அதை எப்படி வேண்டாம்னு சொல்றது, கொஞ்சமா குடு" என்றாள், உற்சாகமான ஷிக்கோ உள்ளே, வேலைக்காரனை நோக்கி, அந்த "ஸ்பெஷல் சரக்கை எடுத்துட்டு வா" என்றான். வேலைக்காரன் திராச்சை இலைகளை முகப்பில் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்ட பாட்டிலையும் கூடவே இரண்டு தம்ளரையும் எடுத்துவந்தான். 

"ராஜ போதையா இருக்கும், குடி" 

"ஆமா, செம்ம சரக்கா இருக்கே" என்று சொல்லி முடிக்கவில்லை கிழவி, இன்னொரு பெக் ஊற்றி கொடுத்தான், மறுக்க நினைத்த கிழவி, மனம் தாங்காமல் வாங்கி குடித்தாள். அந்த சுவையும் போதையும் அவளுக்கு பிடித்திருந்தது. "இன்னொரு பெக் போடுறியா?" என்றவனிடம் வேண்டாம் என மறுத்தாள். இது மாதிரி கிடைக்கிறது கஷ்டம், ஒரு புல்லே உள்ள போனாலும் உடம்புக்கு கெடுதல் பண்ணாது, தேன் மாதிரி இருக்கும்  சும்மா அடி" என ஊற்றி கொடுத்தான். கிழவி தயக்கமாக இருந்தாலும் குடித்து முடித்தாள். 

நம்ம நட்புக்கு அடையாளமா இன்னொரு பாட்டில் இருக்கு வீட்டுக்கு கொண்டு போ, தீந்து போச்சுன்னா தயங்காம கேளு தரேன் என்று ஒரு பாட்டிலை கொடுத்து அனுப்பினான். 

அடுத்த நாளே கிழவி வீட்டிற்கு மேலும் ஒரு பாட்டிலுடன் சென்றான், கொண்டுவந்த சரக்கை அவள் கையில் கொடுத்து, "ரெண்டு பேரும் ஆரம்பிக்கலாமா?"என்றான், கிழவி மகிழ்ந்தாள், நான்கு நாட்களுக்கு பிறகு கிழவி சூப் தயார் செய்துகொண்டிருந்தாள், அவன் அவளருகில் சென்ற போது மது வாடை வந்தது. "எனக்கு சரக்கிருக்கா?" என்றான், "இருக்கு, அடிக்கலாம் வா" என்றபடி கிழவியே வாங்கிய பாட்டிலுடன் இரண்டு தம்ளரை எடுத்து வந்தாள். 

கொஞ்சம் கொஞ்சமாக கிழவியின் பண்ணை வீட்டு பக்கத்தில், தெருவில் அதை தாண்டி, அவள் அதிகம் குடிக்கிறாள் எனவும், குடித்துவிட்டு எங்காவது விழுந்து கிடக்கிறாள் எனவும், விழுந்து கிடந்ததை  பார்த்த அவளை சிலர் தூக்கி சென்று பண்ணை வீட்டில் விடுகிறார்கள் எனவும் தகவல் அவனுக்கு வந்து கொண்டு இருந்தது. 

அதன் பிறகு அவன் கிழவி வீட்டு பக்கம் போகவில்லை. 

கிழவியை பற்றி மற்றவர்கள் சொல்லும்போது சோக முகத்துடன் கேட்டுக்கொண்டான். அவன் அவளின் மரணத்துக்காக காத்திருந்தான், 

அதுவும் விரைவில் நிகழ்ந்தது, ஒரு டிசம்பர் மாத குளிர் கால கிறிஸ்துமஸ் நெருங்கிய தினத்தில் அவள் குடித்துவிட்டு தெருவில்  இரவு முழுவதும் கீழே விழுந்து கிடந்து இறந்து விட்டாள். 

அவன் அந்த பண்ணைக்கு வந்து, "முட்டாள்தனமாக குடித்து இறந்து விட்டாள், குடிக்காமல் இருந்திருந்தால் இன்னும் பத்து வருடங்களுக்கு உயிரோடு இருந்திருப்பாள்" என அருகிலிருந்தவர்களிடம் கூறினான்  


Translated From The french famous writer Guy de Maupassant's The Little Cask

  


பேச்சாளர் - ஆன்டன் செகாவ்

 அன்று காலை வருமானவரி அதிகாரி கிரில் இவானோவிச்சுக்கு இறுதி ஊர்வலம். இரண்டு முக்கியமான நோய்களால் அவர் மரணம் எய்தியதாக ஊருக்குள் பேச்சு நிலவியது; ஒன்று குடிப்பழக்கம், மற்றொன்று மனைவியுடன் மனத்தாங்கல்.

சர்ச்சிலிருந்து இடுகாட்டை நோக்கி ஊர்வலம் புறப்படத் துவங்கியது; இறந்தவரின் சக ஊழியர்களில் ஒருவரான பாப்லாவ்ஸ்கி கோச் வண்டியொன்றில் ஏறித் தன் நண்பன் கிரிகரியை அழைத்து வர விரைந்தான்.
கிரிகரி என்பவன் இளம் வயதிலேயே தனது தனித்திறமையால் ஊருக்குள் பெரும் புகழ் பெற்றிருந்தான். அவ‌ன் எந்த நேரத்திலும், எவ்விடத்திலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் அநாயாசமாகப் பேசக் கூடியவன். தூங்கும் போதும், குடித்திருக்கும் போது, பசி வயற்றிக் கிள்ளும் போதும், ஏன் கடும் காய்ச்சலில் கூட அவ‌ன் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருப்பான் என்பார்கள்.
பேச்சு என்றால் சும்மா சாதாரணமாக அல்ல. மடை திறந்த வெள்ளம் போல் தேர்ந்த வார்த்தைகளுடன், கேட்பவரைக் கவரும் வண்ணம் உணர்ச்சிப் பெருக்கோடு பேசுவான். டீக்கடையில் மொய்க்கும் ஈக்களை விட அதிகமான வார்த்தைகள் அவனது அகராதியில் இருப்பதாகப் பேசிக் கொள்வார்கள். ஒரு விழாவில் நிறுத்தாமல் பேசிக் கொண்டே போன அவனைப் பலாத்காரமாக மேடையிலிருந்து இறக்க வேண்டி வந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
“அப்பாடி, நல்ல வேளையா வீட்ல இருக்கே!” – என்றான் அவன் வீட்டுக்குள் நுழைந்த பாப்லாவ்ஸ்கி. “உடனே சட்டைய மாத்திட்டு என்னோட கிளம்பு. என் பாஸ் இறந்துட்டாரு. அவருக்கு இறுதி மரியாதை நடக்குது. கொஞ்சம் நீ வந்து அவரைப் பத்தி நாலு வார்த்தை புகழ்ந்து பேசினா நல்லாருக்கும். நீ தான்யா இதுக்கு சரியான ஆள். வேற யாராவதுன்னா பரவாயில்ல, இது எங்க பாஸ்; பெரிய ஆளு; கடைசியா அவரைப் பத்திப் பாராட்டி நாலு வார்த்தை கூட பேசாம அனுப்பி வெச்சா நல்லாவா இருக்கும்?”
“உங்க பாஸ் யாரு? ஓ! அந்தக் குடிகாரனா?”
“அவரே தான்; இங்க பாரு டீ, மதியானம் சாப்பாடு, எல்லாத்தோட நீ வந்து போன செலவையும் குடுக்க ஏற்பாடு பண்றேன். நல்ல பையனா என் கூட வா. உன் பாணியில அவர் இந்திரன், சந்திரன்னு ஏதாச்சும் அடிச்சு விடு. எல்லாருக்கும் திருப்தியாகிடும்.”
” உன் பாஸ் தான? எனக்கு அந்தாளத் தெரியுமே. சரியான டுபாகூர். ஊரை வித்து உலையில போட்டவனாச்சே.”
“அது உண்மைதான், ஆனா செத்தவனைப் பத்தித் தப்பாப் பேசாதப்பா.”
“அது சரி தான், ஆனாலும் அந்த ஆள் ஒரு ராஸ்கல் தான்.” ‍ முணுமுணுத்தான் கிரிகரி.
நண்பர்கள் இருவரும் சரியான நேரத்தில் போய் ஊர்வலத்தோடு சேர்ந்து கொண்டனர். ஊர்வலம் போன வேகத்துக்கு, அது இடுகாட்டை அடைவதற்குள், இவர்கள் துக்கத்தை மறக்க இரண்டு மூன்று முறை பாருக்குச் சென்றும் திரும்பினர்.
ஒருவழியாக இடுகாட்டை அடைந்தனர். சவப்பெட்டிக்கு அருகே இறந்தவரின் மனைவி, மாமியார், மைத்துனி ஆகியோர் கடமை தவறாமல் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருந்தனர். பெட்டியைச் சவக்குழிக்குள் இறக்கும் போது அவர் மனைவி, “அய்யோ! என்னையும் அவரோட போக விடுங்களேன்!” என்று கூடக் கதறினாள். ஆனால் அவனது கணிசமான பென்ஷனை நினைத்தோ என்னவோ நிஜத்தில் அம்மாதிரி எதுவும் அவள் செய்துவிடவில்லை.
எல்லாரும் அமைதியானபின் கிரிகரி முன்னால் வந்தான். எல்லாரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்து விட்டுத் தன் உரையைத் துவக்கினான்.
“என்னால் நம்பவே முடியவில்லை. இந்தச் சவக்க்குழியும் கண்ணீர் தோய்ந்த இந்தக் கண்களும் ஓலங்களும் ஒரு மோசமான கனவாக இருந்து விடக்க் கூடாதா? அய்யோ! ஆனால் இது கனவல்லவே! நேற்று வரை ஆரோக்கியமாகவும் துடிப்பாகவும், செயல்பட்ட ஒருவர், இந்தச் சமூகத்துக்காக ஒரு தேனியைப் போல அயராது உழைத்தவர் இன்று மண்ணுக்குள் போய்விட்டார்.
கொடிய மரணம் தனது இரும்புக் கைகளால் அவரைத் தழுவிக் கொண்டதே. நடுவயதைத் தாண்டி இருந்தாலும் உடலிலும் மனதிலும் இளமையாகவும், எண்ணற்ற கனவுகளும் கொண்டிருந்தவராயிற்றே!
அவரது இழப்பு நமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாதது. அவரைப் போல யார் உண்டு? ஆயிரமாயிரம் அரசுப் பணியாளர்கள் இருக்கலாம். ஆனால் ப்ரகாஃபி ஒசிபிச் அவர்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். தனது கடைசி மூச்சு வரை தனது கடமையில் நேர்மையையும் கண்ணியத்தையும் கட்டிக் காத்தவர். அல்லும் பகலும் அயராது உழைத்தாலும் லஞ்சம், ஊழல் இவற்றின் காற்றுக் கூடப் படாதவர். லஞ்சம் வாங்குபவர்களையும் கொடுப்பவர்களையும் விஷம் போல் வெறுத்தவர்.
நீங்கள் அறிந்திருப்பீர்களா என்று தெரியவில்லை; தன் சம்பளத்தில் பெரும்பகுதியை ஏழை எளியவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது அவரது வழக்கம். அவர் உதவியால் பிழைத்துக் கொண்டிருக்கும் அனாதைகளும் அபலைப்பெண்களும் ஏராளம். கடமைக்கு முன் தன் சொந்த வாழ்க்கைக்குக் கூட முக்கியவம் தராமல் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர். அய்யோ! முடி முழுதும் மழித்த அவரது அந்த முகத்தையும், அன்பான‌ குரலையும் என்னால் மறக்கவே முடியாது. ப்ரகாஃபி ஒசிபிச், வாழ்க உன் புகழ்! வளர்க உன் பெருமை இப்பூமியில்! அவர்தம் ஆத்மா சாந்தி அடைய‌ வேண்டுவோம். “
கிரிகரி பேசி முடிப்பதற்குள் கூடியிருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுக்கத் தொடங்கினர். முதலாவது ‘இறந்து போனது கிரில் இவானொவிச் ஆயிற்றே. இந்த ஆள் ஏன் பிரகாஃபி யைப் பத்திப் பேசினான்’ என்று குழம்பினார்கள்.
மேலும், அவருக்கும் அவர் மனைவிகும் இருந்த ஏழாம் பொருத்தம் ஊருக்கே தெரியும். அப்படி இருக்க அவர் பிரம்மச்சாரி என்று சொன்னானே? என்றும், காட்டிலிருந்து தப்பி வந்த கரடி மாதிரி மூஞ்சி பூரா முடி இருக்கறவனுக்கு மழித்த‌ முகமா’ என்று பலவாறாகப் பேசித் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டனர்.
கிரிகரி தொடர்ந்தான், “ப்ரகாஃபி ஒசிபிச்! உங்கள் உருவம் அவலட்சணமாக இருந்திருக்கலாம். ஆனால் நீங்கள் உள்ளத்தால் உயர்ந்தவர். அசிங்கமான சிப்பிக்குள் முத்து இருப்பது போல் உங்களுக்குள் இருந்த உள்ளம் பளிங்கு போன்றது.”
இப்போது கிரிகரியின் முகத்திலேயே குழப்ப ரேகைகள் படிவதைப் பார்வையாளர்கள் கண்டனர். சட்டென்று பேச்சை நிறுத்தியவன், அதிர்ச்சியுடன் பாப்லாவ்ஸ்கியிடம் திரும்பினான்.
“டேய்! அவன் உயிரோட இருக்கான்டா” – என்றான் பீதியுடன்.
“எவன்?”
“அதோ அங்க நிக்கிறானே ப்ரகாஃபி”
“அவன் எங்கடா செத்தான்? செத்தது கிரில் தானே?” – அநியாயக் கடுப்புடன் பதிலளித்தான் பாப்லாவ்ஸ்கி.
“நீ தானேடா சொன்னே உன் பாஸ் இறந்துட்டான்னு”
“போடா லூசு. அவனுக்குப் பிரமோஷன் கெடைச்சுப் போய் ரெண்டு வருஷமாச்சேடா. அதுக்கப்பறம் கிரில்
தானேடா இன்கம்டாக்ஸ் ஆஃபிஸ்ல‌ இருக்கான்.”
“இந்த எழவெல்லாம் எனக்கெப்பிடிரா தெரியும்?”
“சரி நீ பாட்டுக்குப் பேசு. பாதியில நிறுத்தினா ஒரு மாதிரி இருக்கும்.”
கிரிகரி தட்டுத் தடுமாறி உரையை முடித்தான். தூரத்தில் ப்ரகாஃபி கொலைவெறியோடு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
எல்லாம் முடிந்ததும் இறந்தவனின் அலுவலக ஊழியர்கள் அனைவரும் கிரிகரியைச் சூழ்ந்து கொண்டனர்.
“அடப்பாவி! உயிரோட ஒருத்தனை மண்ணுக்குள்ள‌ போட்டுப் புதைச்சுட்டியே. சரியான ஆளுப்பா நீ” –
கூச்சலும் சிரிப்புமாக அவன் முதுகில் அடித்துச் சென்றனர்.
ப்ரகாஃபி வந்தான்.
“யோவ்! செத்தவனுக்கு வேணா நீ பேசினதெல்லாம் பெருமையா இருந்திருக்கும்யா… எனக்கு? உன்னை யாருய்யா நான் லஞ்சம் வாங்க மாட்டேன் ஊழல் பண்ணமாட்டேன்னெல்லாம் பேசச் சொன்னது? என்ன, நக்கலா? ஊருக்கே தெரியும் என்னைப் பத்தி; இப்போ அவனவன் என்னைப் பாத்துக் கேவலமா சிரிக்கப் போறான். என் பொழப்புல ஏன்யா மண்ணள்ளிப் போட்டே? ஹூம்.. மூஞ்சிக்கு நேரயே என்னைக் கலாய்ச்சிட்டுப் போயிட்டே. போ! போ! நல்லா இரு” – புலம்பிக் கொண்டே போனான் ப்ரகாஃபி.


ஆன்டன் செகாவ் எழுதிய The Orator என்ற சிறுகதையின் தமிழாக்கம்:  தீபா

Thank you: https://deepaneha.blogspot.in/

Sunday, May 9, 2021

அன்னியப்படுத்தாதீர், அவளுக்குள்ளும் நேசிப்புகளிருக்கும்

பிரத்யேகமாய்...

வடிவமைக்கப்பட்ட ஒவ்வொன்றிலும்

அவளது அபிப்ராயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஏதோவொரு குடியிருப்பின் நுழைவாயினிலோ

பரிச்சயமான பேருந்து நிறுத்தத்திலோ

பழக்கப்பட்ட முகமாகவும், கேட்டறிந்த குரலாகவும் தானிருக்கிறது.

வொடைந்த தேங்காய் துண்டுகள் பொறுக்கி...

வயிறு நிறைக்க முயலுமவள்

கற்சிலை பெண்ணின் முலையுறிஞ்சி பால்குடிக்கும்

வித்தைகள்  கற்றிருப்பதாய் சொல்லி கொள்கிறாள்.

எண்ணெய் வீச்சம் சுற்றித்திரியும்

வளாகத்தினுள் வந்தடையும், புறாக்களோடுதான்

உளறிக்கொண்டிருப்பதாய்...

ஒப்பந்தம் செய்துக்கொண்டிருப்பாள் போலும்

எதிலும் லயிப்புகளற்றவள்.

சிரிப்பினை மட்டுமே பிரதானமாக கொண்டிருக்கிறாள்.

தனது சதையுறிஞ்சி...

ரணமாக்கிய மனித அருவங்கள்  காணப்பொறுக்காது

நகர்ந்துக்கொண்டே இருக்கிறாள்.

கனமான நிகழ்வுகளேதும்

அவளை காயப்படுத்தியிருக்கலாம்

ஆனால் சாட்சியங்களின் பதிவுகளை

மனிதரல்லாத சகலவற்றினுடனும்  ...

பகிர்ந்துக்கொள்ள முனைப்போடிருக்குமவள்

கடைக்கு முன்னாடி நின்னு வியாபாரத்தை கெடுக்காதே மூழி...என

லாவகமாய் வெந்நீர் ஊற்றும்...டீ, கடை  பையனின்

வக்கிரத்தை உதாசினப்படுத்தி போகிறாள்

தாயின் பரிவோடு.... 


 ஈஸ்வர சந்தானமூர்த்தி

 

Saturday, May 8, 2021

The Road from Elephant Pass (Alimankada) திரைப்பட விமர்சனம்

இலங்கையின் இயற்கை அழகும், போர் பகுதிகளில் தமிழர்கள் நிலையும் விரிவாக சொல்லப்பட்டிருக்கிறதென கேள்விப்பட்டு இந்த புத்தகத்தை தேடினேன், அமேசானில் கிடைக்கிறது, வாங்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் கூகிளில் தேடியபோது இதை பற்றி மேலும் தகவலறிய  இது படமாக எடுக்கப்பட்டதென்றும் அது யூடூபில் இலவசமாக காண கிடைக்கிறதென்றும் கண்டு தேடி படத்தைப் பார்த்தேன்.

இது ஒரு சிங்கள மொழி படம். ஆனால்  “சாகும் வரை போராடி எங்கள் மக்களை மீட்டெடுத்து தமிழ் ஈழத்தை வென்றெடுப்போம் என்ற கோட்பாடுடைய எம் தலைவரின் பெயரால் உம்மை வரவேற்கிறோம்என்ற தமிழ் வசனத்துடன் தான் படம் ஆரம்பமாகிறது, சப் டைட்டில் ஆங்கிலத்தில் உண்டு, பேசப்படும் நிறைய சிங்கள வார்த்தைகள் தமிழோடும் மலையாளத்தோடும் ஒத்து போகின்றது, இரண்டு மாதம் முயற்சி செய்தால், ஆன்லைனிலேயே எளிதாக சிங்களம் கற்று கொள்ளலாம் போல

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் இளையராஜாவின் காதல் ஓவியம் ஒலிக்கிறது.  தூக்கம் வர்ல மாமா, காக்க வைக்கலாமாஎன்று இடையில் டீ கடையில் இன்னொரு முறையும் ஒலிக்கிறது.

நிஹால் டி சில்வா இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார். நிறைய பரிசுகளை வென்றிருக்கிறது இந்த புத்தகம். சிங்கள ராணுவத்தையும், விடுதலை புலிகள் செயல்பாடுகளையும் ஒரு ஆர்மி ஆபீஸருக்கும், தமிழ் பெண்ணுக்குமான உரையாடல் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழர்கள் வாழும் பகுதிகள், இயற்கை காட்சிகள் என சுவாரஸ்யமாகவே இருக்கிறது. மலையாள சினிமா பார்ப்பது போன்ற உணர்வு.

அந்த கதாநாயகி ஆச்சர்ய பட வைக்கிறாள், அமைதியான அப்பாவியாக அறிமுகமாகி, உழுந்து, புரண்டு, அடிபட்டு, காட்டு பகுதிக்குள் வேகமாக ஓடி, தன் கோபங்களை நேரடியாக காட்டி என தனித்துவமான உடல்மொழியுடன் நல்ல தேர்ந்த நடிப்பு. தமிழில் இப்படி ஒரு ஹீரோயினை நான் பார்த்ததில்லை. நடிப்பில் சிக்ஸர் அடிக்கிறாள். இறுதியில் தான் என்னவாக விரும்புகிறாள்  என்பதை சொல்கையில் ஆச்சர்யத்துடன் மதிப்பு வர வைக்கிறாள்.

நாயகனும் தனது கதையை சொல்கையில் ஈர்ப்பு கொள்ள வைக்கிறான்.

சில இடங்களில் இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம் என்ற போதிலும், வித்யாசமான படம் எனும்போது அந்த குறை பெரியதாக தெரியவில்லை. கோபங்களுக்கிடையே இயல்பாக மலரும் காதல் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது.  இந்த புத்தகத்தை எழுதிய நிஹால் டி சில்வா தனது மனைவி ஷெர்லீன் மற்றும் அவர்களது இரண்டு மகன்களுடன் கொழும்பில் மே 27, 2006 அன்று வில்பட்டு தேசிய பூங்காவில் கன்னி வெடியில் கொல்லப்பட்டது பெரும் சோகம்.

இந்த படம் வேற்று மொழி படத்தை பார்ப்பது போல அல்லாமல் நமக்கு நெருக்கமாகவே இருக்கிறது,  இலங்கையின் தமிழர் வாழ்ந்த பகுதிகளை நேரடியாக பார்வையிடும் அனுபவம் கிடைக்கவும், அதன் இயற்கை அழகை காணவும், மிக வித்யாசமான ஒரு படம் பார்த்த திருப்தி கிடைக்கவும் இந்த படத்தை தாராளமாக ஒரு முறை காணலாம்

YouTube Link : https://www.youtube.com/watch?v=8njGC8SG4yc  


Wednesday, April 28, 2021

மை நேம் ஈஸ் பஷீர் (My Name Is Basheer) ஆவண படம் பற்றிய விமர்சனம்

 மை நேம் ஈஸ் பஷீர் (My Name Is Basheer) என்ற வைக்கம் முகமது பஷீரின் ஆவணப்படம் யூடுப்பில் காண கிடைக்கிறது. இந்த ஆவணப்படம் மலைவாழ் கிராமமொன்றில் ஆனந்தமாக சாரல் மழையில் நனைந்து செல்லும் சுகம் தருகிறது. ஆறுகளின் வழியே இயற்கை காட்சிகளுடன் பறவைகள் சப்தமெழுப்ப, சாதாரண மனிதர்களின் படகுகள் அந்த காட்சிகளின் நீட்சியாக அந்த இயற்கை சூழலிலேயே படகில் சென்றபடி பேட்டி தரும் பஷீரின் சகோதரர் அபு பெக்கர் என கண்களுக்கு விருந்து படைக்கவும் இது தவறவில்லை.

 2007ல் அனுஷ்கா மீனாட்சியும் அவரது படப்பிடிப்பு குழுவும் சென்னையிலிருந்து கோழிக்கோட்டிற்கு சென்று வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கையை ஆவண பட வடிவில் திரும்ப கொண்டு வந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் பார்த்த இரண்டு நாடகங்கள் இதை எடுக்க தூண்டியதாக இந்த ஆவண பட இயக்குனர் சொல்கிறார். பஷீரின் புத்தகத்தை பற்றி பெட்டிக்கடைக்காரர், சமையல் கலைஞர், புத்தக விற்பனர், மாணவிகள் என பலதரப்பட்ட மக்கள் பேசுவதிலிருந்து ஆரம்பமாகிறது இந்த ஆவணப்படம். முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதும் subtitle வைத்திருப்பதும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கின்றது. காலம் தாண்டி அவரது கதைகளில் இன்னமும் புத்துணர்ச்சி இருக்கிறதென கூறுகிறார்கள் அவரை இப்போதும் வாசிப்பவர்கள்.

இடையிடையே அவரது புத்தகங்களின் கதைகளை காட்சிகளாக இந்த படமெடுக்க தூண்டியவரின் நாடகங்கள் வருகின்றன,  அதில் நண்பனை கொலை செய்யும் காட்சிகளில் நடிப்பு திரைப்படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகளை மிஞ்சுமளவு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். மற்றொரு நாடகத்தில் காதல் காட்சிகளில் நகைச்சுவை பொங்கி வழிகிறது,

குறிப்பாக, வேறுவேறு மதத்தை கொண்ட காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் வசனங்கள்,

 "நமக்கு குழந்தை பிறந்தால் எந்த மதத்தில் வளர்ப்பது?"

"மதமே இல்லாமல் வளரட்டுமே?"

"மிருகங்கள் மாதிரியா?" …

 "அவர் எல்லாத்தையும் பார்த்திருக்கார், காதல்கள் கூட உண்டு, நாமொரு புத்தகம் எழுதணும்னா அதில இதெல்லாம் முழுசா வெளிய கொண்டு வரணும், அதில நகைச்சுவை, சந்தோசம், அனுபவம் இதெல்லாம் அடுத்தவங்களுக்கு கொடுக்கிற மாதிரி எழுதணும், இதையெல்லாம் உருவகப்படுத்தினா அதுதான் பஷீர்" அவரது மனைவி பாத்திமா (பாபி).

எனக்கும் பஷீருக்கும் பதினெட்டு வயசு வித்யாசம், அவர் பள்ளி படிப்பு முடிந்ததும் இங்கிருந்து 18ஆவது வயசுல ஓடி போய்ட்டார், பத்து வருஷம் இந்தியால நிறைய இடங்களும், தென் ஆப்ரிக்கா, அரேபியாவெல்லம் போய் அப்புறம் திரும்ப வந்தார், திரும்ப வந்த அவர் பழைய பஷீரல்ல என புரிந்து கொண்டோம், அவர் வேறு மனிதராக இருந்தார், அவரது மீசை, தொப்பி, உடைகள் பகத்சிங்கை ஞாபக படுத்தின, ஒரு புரட்சிக்காரனை போலத்தான் அப்போது வாழ்ந்தார், அவருக்கு எழுத்தின் மீது தீவிர காதல் உண்டுஎன்கிறார் அவரது சகோதரர் அபு பெக்கர்.

"அவர் என்னை மிக சுதந்திரமானவளாக வளர்த்தார், முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த போதும், மத நடவடிக்கைகளை பின்பற்றும் வாழ்க்கை முறை எங்களுடையதில்லை, எப்படி வாழ்க்கை நடத்துவதெனக்கூட அவர் அறிவுரை சொன்னதில்லை. எல்லா மத நண்பர்களும் அப்பாவிற்கு உண்டு, அப்பாவின் வாழ்க்கை முடியும் வரை, அவரை சுற்றிலும் ஒரே சிரிப்பு சப்தமாக இருக்கும், அவர் தனது வாழ்க்கை முழுவதையும் நகைச்சுவையால் நிரப்பிக்கொண்டார்" என்கிறார் பஷீரின் மகள் ஷகீனா.  இந்து மதத்தின் மீது பிடிப்பு கொண்டு சிலகாலம் ஆன்மீக தேடலோடு பஷீர் இருந்திருக்கிறார்

 அவரது நாடகங்களை இயக்கி வரும் ராஜிவ் கிருஷ்ணன் கூறுகையில், "அவர் தனித்துவமான நகைச்சுவை எழுத்துக்களுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல, சோகம், வறுமை, போராட்டம், ஜெயில் வாழ்க்கை என நிறைய அனுபவங்களை எழுத்தில் தந்திருக்கிறார், அதுவும் சாதாரண மனிதர்களை கதா பாத்திரங்களாக வைத்துக்கொண்டு, அவை நம்மை முழுதாக உள்ளிழுத்துக்கொள்ளும், தவிர அவரது நாடகங்களை இயக்குகையில் அவரது பலவித அனுபவங்கள் எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கின்றன"  

எஸ் ராமகிருஷ்ணன் தனது வலைதளத்தில் பல வருடங்களுக்கு முன்பு எழுதி இருந்த பஷீர் த மேன் (Basheer the man) என்ற குறும்படத்தை தேடி youtubeல் பார்த்தேன், இரண்டு பாகமாக அதை வெளியிட்டிருக்கிறார்கள், அட்டகாசமாக இருக்கும். Link: https://www.youtube.com/watch?v=8HBlQXzrxEE அதை எடுத்த திரு M A ரஹ்மான், "என்னோட பால்ய வயதில் புத்தகம் படிச்ச உடனே அந்த எழுத்தாளரை பார்க்கணும்னு தோணும், அப்படிதான் அவரை பார்க்கணும்னு தோணிச்சு,  அதுக்கு முக்கிய காரணம் பஷீரோட நகைச்சுவை உணர்வு. நான் M A படிச்சு முடிச்சதும் அவரை பற்றி படமெடுக்கலாம்னு ஆசைப் பட்டேன், குறிப்பா அவரது பால்யம், சுதந்திர போராட்ட காலம், தனிப்பட்ட வாழ்க்கை, அவரது தத்துவங்களில் இருந்த மாற்றங்கள் எல்லாம் எடுக்க சென்றோம்என்று ஆரம்பித்து அவர் பஷீர் பேசிய ஒலிகளை கொண்டு வர பட்ட பாடுகளை விவரிப்பார், அது மிக சுவாரஸ்யமானது.

ஜமீலாவிடம் காதலை சொல்லும் அப்துல் காதர் காட்சிகள் உங்களை நிச்சயம் சிரிக்க வைக்கும், அதன் வழியே பஷீரின் நகைச்சுவை உணர்வை நீங்கள் உணரலாம்.

கோழிக்கோட்டில் மாத்ருபூமி பத்திரிக்கை இந்த நாடகங்களை பஷீரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக நடத்தியிருக்கிறது. அவரது கொண்டாட்டங்களில் ஒன்றாக மாணவர்களை வைத்து ஓவிய போட்டிகள் நடக்கின்றன, அங்கு வரையப்பட்ட பல ஓவியங்கள் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கின்றன. உண்மையாகவே கேரளா பூமி எழுத்தாளர்களை கொண்டாடுகிறது.

பஷீரை பல அழகான கோணங்களில், தருணங்களில் எடுத்தவர் புனலூர் ராஜன், இது என்னுடைய முதல் கேமரா என்று ஒன்றை காட்டுகிறார், பார்க்க வித்தியாசமாகவும், போட்டோ எடுக்கும்போது வரும் சப்தம் ஈர்ப்புடனும் இருக்கிறது.

அடுத்து வரும் பஷீரால் எழுதப்பட்டு, ஜெயிலில் எடுக்கப்பட்ட மதிலுகள் நாடகம் கண்களை அகலவிடாமல் பார்க்க வைக்கும் தன்மை கொண்டது.

வாரங்கள் நாட்களாகி நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடமாக மாறிய பின்பும் உணவு வைத்துக்கொண்டு ஒவ்வொரு இரவும் தன் மகனுக்காக காத்திருந்த பஷீரின் தாய்டனான நெடுநாள் பிரிவுக்கு பின் வரும் "நான் உன்னை பார்த்தால் போதும்" என்று பேசுகிற வரிகள் நெகிழ்ச்சி.

பஷீரின் மகன் அனீஸ், "அவருக்கு மிகுந்த பிரியம் என்மீது உண்டு, பல சமயங்களில் அதை வெளிக்காட்டியதில்லை, ஒரு சில சமயங்கள் அதைமீறி வந்துவிடும் போது கண்கள் கலங்கியிருக்கிறேன், அப்பா எழுதியதில் முக்கியமானது எங்கள் இனத்தை மோசமான வில்லன்களாக எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், தன்னை சுற்றியிருந்த தனது சமூக மனிதர்களை பார்த்தார், அப்பா, அம்மா, குழந்தைகள், சொந்தங்கள் என மிக சாதாரணமானவர்கள், அன்பானவர்கள், தீயவர்கள் அல்ல என்பதை புரிந்துகொண்டார், அதை அவர்  பிரச்சாரம் செய்யாமல், இயல்பான வாழ்க்கையை அவர் எழுத்தின் மூலம் கொண்டுவந்தது, அதை மற்ற சமூகத்தினர் ஏற்றுக்கொண்டதும், புரிந்துகொண்டதும், நட்பாக வாழ தொடங்கியதும் அவர் எழுத்திற்கு கிடைத்த வெற்றி"

பஷீரின் சுயசரிதை எழுதிய M K ஷானு, “அவர் நல்ல சமையல்காரர், மீன் கறியும், டீயும் அவ்வளவு சுவையாக செய்து தருவார். அப்படிதான் எங்கள் நட்பு வளர்ந்தது, காந்தியை சந்தித்தது, எடப்பள்ளியில் இருந்து ரயிலேறி காளிகட் போனது, அங்கு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டது, அவர் ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கியதில்லை, ராஜஸ்தான், பம்பாய், காஸ்மீர் பின் கப்பலேறி பெரிசியா என பயணம் செய்துகொண்டே இருந்தார், அவரது அனுபவங்களை விளக்கி சொல்வதை கேட்பது அவ்வளவு அழகாக இருக்கும், அது எப்போதும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், அதுதான் என்னை அவருடைய சுயசரிதை எழுத தூண்டியது, “கதைகள் எனக்கு பிடிக்கும், மனிதர்களை அதைவிட பிடிக்கும் இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமே என் எழுத்து என்பார்.”

பஷீர் "எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், நீங்கள் விரும்பிய நேரத்தில் படிக்கலாம், ஆனால் நீங்கள் (மக்கள்) அப்படி இல்லை, மர்மம் நிறைந்திருக்கிறீர்கள், அதை பற்றி தான் அறிய துடிக்கிறேன், அதை தாண்டி நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவெனில் நான் உங்களை நேசிக்கிறேன்"

பஷீரின் அளவுகடந்த மனிதநேயம், காதல், வறுமை அனுபவங்கள், அரசியல் மற்றும் போரைப் பற்றிய விமர்சனம், இசையில் அவரது தனிப்பட்ட ரசனை, இயற்கையின் மீதான காதல் மற்றும் அவரைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் சமூகம் குறித்த அவரது  நம்பிக்கைகள் என அவரது பல கதைகள் எழுத்தாளரின் ஏதோவொன்றை வெளிப்படுத்துகின்றன. மெல்லிய தென்றலின் சுகமென விரிகிறது இந்த ஆவணப்படம். மலையாள உலகின் மிகப்பெரும் ஆளுமையை முழுமையாக தெரிந்து கொள்ள கண்டீப்பாக இந்த ஆவண படத்தை காணுங்கள்.  

Link: https://www.youtube.com/watch?v=9-Tm24XRRCE

 

Directed By:

Anushka Meenakshi

 

Produced by:

School of Media and Cultural Studies, Tata Institute of Social Sciences, Mumbai.