Monday, October 15, 2018

பிடித்த புத்தகங்கள்

எல்லோரையும் போல ராஜேஷ் குமாரில் இருந்து ஆரம்பித்தவன் தான் நானும், கிட்டத்தட்ட புத்தகங்களே கதியென, வேறு மாற்றே வேண்டாம் என  இரண்டு வருடங்கள் இருந்திருக்கிறேன். இன்றுவரை இருபது பக்கங்களாவது படிக்காமல் என்னால் தூங்க போக இயலாது. தமிழில் மிக நல்ல புத்தகங்களை நான் இதுவரை படிக்காமல் கூட இருந்திருக்கலாம். தவிர நல்லது கெட்டது என எதையும் தள்ளி வைப்பதில்லை, கூடுமானவரை எனக்கு ஏற்பில்லாத கருத்துக்கள் பற்றிய புத்தகங்களையும் படிப்பதில் ஆர்வம் உண்டு. எனக்கு பிடித்த புத்தகங்களை பட்டியல் இட்டிருக்கிறேன். அந்தந்த காலங்களில் அவை மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது. உங்களுக்கு பிடித்த புத்தகங்களையும் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்

பிடித்த புத்தகங்களின் பட்டியல்.

1. மிர்தாதின் புத்தகம்

இதை படைத்த நைமி எல்லா நூற்றாண்டிலும் மாபெரும் எழுத்தாளர் என்று ஓஷோ சொல்லிருக்கார். இதயத்தால் வாசிக்கப்பட வேண்டிய புத்தகம்.

2. அறம்

ஜெயமோகன் எழுதியதிலேயே உயர்ந்த இடத்தில் இருப்பது இதுதான். அறத்தின் வழியே வாழ்ந்த மனிதர்களின் கதை. படித்த உடனேயே நாமும் நேர்மையாக வாழ வேண்டும் என தூண்டும் எழுத்துக்கள்.

3. தேசாந்திரி

எஸ். ராமகிருஷ்ணன் எழுதியது, கட்டுரை, அவர் பயணம் செய்த இடங்கள் பற்றிய அழகான பதிவு. அதை பற்றிய விமர்சனம் தேசாந்திரி

4. கிமு கிபி

மதன் விகடனில் இருக்கும்போது எழுதியது. போராடிக்கிற விஷயத்தை அதிஅற்புதமாக வழங்கினார் என சுஜாதா பாராட்டினார், மனித வளர்ச்சியை ஆதியில் இருந்து எழுதிருப்பார், ஒலி வடிவமாகவும் இது வந்திருக்கிறது.

5. கற்றதும் பெற்றதும்

தொடராக வந்து நிறைய பாகங்கள் எழுதினார் சுஜாதா. அப்போதைய சுவாரஸ்ய நிகழ்வுகளை நகைச்சுவை பொங்க எழுதிருப்பார். தடதடவென ஓடும் ரயிலின் வேகம் இருக்கும்.

6. கரையோர முதலைகள்

இதில் வரும் தியாகு கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும், வேலை கிடைக்காத சமயங்களில் பாலகுமாரன் புத்தகங்கள் மீண்டு வரவும் ஆறுதலாகவும் இருந்திருக்கிறது.

7. பிருந்தாவனமும் நொந்த குமாரனும்.

இப்பொழுது படிக்க இயலுமா என தெரியவில்லை, ஆனால் அந்த காலகட்டத்தில் வயிறு வலிக்க சிரிக்க வைத்த நாவல்.  அதுவும் கோபி பேசுற வசனமெல்லாம் வேற லெவல்.

8. ஒரு யோகியின் சுயசரிதம் 


Autobiography of a Yogiன்னு இதை சுதந்திரத்துக்கு முன்னாடியே பரமஹம்ச யோகானந்தர் எழுதிட்டார். தமிழ்ல 2001ல தான் முதற்பதிப்பு வந்துச்சு, இப்போ பத்து பதிப்புகளுக்கு மேல வந்திருச்சு.  எல்லா மதத்தில இருந்தும் மேற்கோள் காட்டி எழுதிருப்பார். வாழ்வில் இருந்து இறப்பு, அதை தாண்டி, வெவ்வேறு நிலை, பிறவி நோக்கம், வாழ்தல் முறைன்னு கிட்டத்தட்ட 800 பக்கங்கள் இருக்கும்.

7. வட்டியும் முதலும் 

ராஜு முருகனின் புத்தகம், மனித தன்மை பற்றி விளிம்பியல் மனிதர்கள் பற்றி எழுதிருப்பார், இளையராஜாவோட சிறந்த மெல்லிசை பாடல் மாதிரி இது மயிலிறகு.

8. மாதொரு பாகன் 

சர்ச்சைகளை தாண்டி இது ஒரு சமூகத்துனருக்கான மொழி ஆவண நூல், அந்த பழங்கால வழக்கு மொழிகளை அப்படியே மீட்டு கொண்டு வந்திருப்பார். அதற்கான அவர் உழைப்பு மிக பெரியது.

9. வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் 

இது கவிதை நூல், ஒரு காலத்தில் தபூ சங்கர் கவிதைகள் தான் காதல் தூதே.


10. கொலுசுகள் பேசக் கூடும்.

ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான விஜய் மில்டன் இந்த ஒரே புத்தகம் தான் எழுதினார். "ஏன் இந்தாளு மறுபடியும் எழுதலை?"ன்னு ஏங்க வைத்த புத்தகம்

11. புளியமரத்தின் கதை

சுந்தர ராமசாமியின் புத்தகம். 1966ல் வெளிவந்தது, விடுதலை பெறுவதற்கு முன்பும் பின்பும் ஒரு புளியமரத்தை சுற்றி நடக்கும் கதை. ஏறக்குறைய நான்கைந்து மொழிக ளில் இது மொழி மாற்றம் செய்யப்பட்டது. தமிழ் இலக்கியவாதிகளால் இன்றும் போற்றப்படுகிறது.


12. பாகிஸ்தான் போகும் ரயில்

எழுதப்பட்டு 70 ஆண்டுகள் கடந்த பின்பும் அதிர்வை உண்டாக்கும் நாவல், இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்த காலத்தில் அமைதியாக இருந்த பஞ்சாபில் ஒரு ரயில் வருவதால் நிகழ்ந்த கொடூரங்களை விவரிக்கும் கதை. இவரின் எழுத்துக்களில் வழக்கம் போல இதிலும் காமமும் கலந்திருக்கும், அரசியல் கலந்து சொல்லப்பட்டிருக்கும்.

13. ஸீரோ டிகிரி.

சாரு நிவேதிதாவின்  புத்தகம், அதிர்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து கட்டி அடித்திருப்பார், இதில் வரும் கவிதைகள் மிக சிறப்பானவையாக இருக்கும். சாருவின் எழுத்துலகம் வேறு, இது எல்லோருக்குமான நாவல் இல்லை.

 14. காடு

விமர்சனம் படிக்க காடு ஒரு பார்வை கிளிக் செய்யுங்கள்

15. ஆதிரை.

புரட்டி போட்ட புத்தகம் ஒரு வரியில் இதை பற்றி சொல்ல முடியாது. Please click this link ஆதிரை

16. எனது இந்தியா

எஸ் ராமகிருஷ்ணனின் எனது இந்தியா, ஜுனியர் விகடனில் தொடராக எழுதப்பட்டு பின்னர் புத்தகமாக வெளியிடப்பட்டது. இந்தியாவில் ஆட்சி அதிகார மாற்றங்கள், மக்களின் வாழ்க்கை நிலை, கொடூரங்கள் கலாசாரம், பண்பாடு என பல சுவாரஸ்ய நிகழ்வுகளை இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

17. எல்லா நாளும் கார்த்திகை

எல்லா நாளும் கார்த்திகை புத்தக விமர்சனம்.

18. செம்புலம்

புத்தக விமர்சனம் Link செம்புலம்

19. ஊழல் உளவு அரசியல்

புத்தக விமர்சனம் Link ஊழல் உளவு அரசியல்

20. குற்றப் பரம்பரை 
புத்தக விமர்சனம் Link குற்றப் பரம்பரை

21. மறைந்திருக்கும் உண்மைகள்

புத்தக விமர்சனம் Link மறைந்திருக்கும் உண்மைகள்

22. வெண்முரசு முதற்கனல்

புத்தக விமர்சனம் Link முதற்கனல்

23. பெயரற்றது

புத்தக விமர்சனம் Link பெயரற்றது

24. மூன்றாம் பிறை 

புத்தக விமர்சனம் Link காழ்ச்சாப்பாடு

25. நினைவு நாடாக்கள்

வாலி கவிதையும் உரைநடையாக எழுதிய அவரின் சினிமா அரசியல் பொது சம்மந்தமான சுவாரஸ்ய பழைய நினைவுகள்

26. நான் ஏன் நாத்திகனானேன் 

இந்திய விடுதலை புரட்சி நாயகனாக அறியப்படும் பகத்சிங் எழுதிய புத்தகம் இது. பகத்சிங் சிறையில் இருந்தபோது அவரது தந்தைக்கு கடிதமாக எழுதப்பட்ட இது பின்பு நூலாக வெளிவந்தது.

27. ஒரு மோதிரம் இரு கொலைகள்

செர்லாக் ஹோம்ஸ் தமிழில் அறிமுகமானதும் வாங்கி படித்த புத்தகம்.   1887ல் எழுதப்பட்ட இதன் மூலக்கதைகள் கிட்டத்தட்ட 130 வருடங்களை கடந்து விட்ட நிலையிலும், திரைப்படங்களாக நாடகங்களாக எடுக்கப்பட்டபின்னரும்  இதன் பரபரப்பு இன்னமும் குறையாமல் இருப்பது மிக ஆச்சர்யமானது.

28. பெரியார் சிந்தனைகள் 

நாத்திகத்தின் வலுவான கருத்துக்களை முன் வைக்கிறது இந்த புத்தகம். தவிர பெரியார் பற்றி தெரியாமல் ஆதரிப்போரும், எதிர்ப்போரும் கட்டாயம் ஒரு முறை படிக்க வேண்டிய புத்தகம்.

29. ஞானத்தின் பிரமாண்டம்

ஜக்கி வாசுதேவிற்கு ஏன் உலகம் முழுவதும் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இந்த புத்தகம் சாட்சி. நிறைய தகவல்களை கொண்டுள்ள இந்த புத்தகம் வாசிக்க பட வேண்டியது.

30. இவன்தான் பாலா 
இயக்குனர் பாலாவின் சுயசரிதை. நகைச்சுவையும், அதிர்ச்சியும், நெகிழ்வும் கலந்த அவரது திரைப்படத்தை போலவே மிக இயல்பான புத்தகம். பாத யாத்திரை போன்ற இடங்களில் எல்லாம் வாய் விட்டு சிரித்திருக்கிறேன்.

31. அணிலாடும் மூன்றில்

மறைந்த கவிஞர் ந முத்துக்குமார் உறவுகளின் வலிமை பற்றி விகடனில் தொடர்கதையாக வந்ததை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். மனம் நெகிழும் நிகழ்வுகளால் நிறைந்திருக்கிறது இந்த புத்தகம்.

32. கடவுள் தொடங்கிய இடம் 

அ முத்துராமலிங்கம் எழுதிய நிஷாந்த் எனும் இலங்கை தமிழ் அகதி ஒருவனின் உலகம் முழுவதும் ஓடி உயிர் போராட்டம் தான் கதை. சரவெடியாய் வெடிக்கும் பட்டாசு. அதிவேகமான கதை, துயரமும், நெகிழ்வும் தாங்கியவன் தேடிய கடவுள் தொடங்கிய இடத்திற்கு எப்படி செல்கிறான் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

33. மகாத்மா காந்தி கொலை வழக்கு

சதி திட்டங்கள், விசாரணை விவரங்கள், வரலாற்று பின்னணி காந்தி கொலை குறித்த முழுமையான ஆய்வு என இதை எழுதிய என் சொக்கன் முன்னுரை கொடுத்துள்ளார்

34. வந்த நாள் முதல் 

96 படம் இருக்கிறதல்லவா அதை விட அழகிய காதலை கொண்டது. இந்த புத்தகம். செழியன் எழுதியது

35.    ம் 
உறைய வைக்கும் தமிழின மக்களின் உயிர்ச் சேதமும், படுக்கொலைகளும், அதற்கு அவர் தரும் முன்எச்சரிக்கைகளும். தாய்மண்ணிலேயே மாற்று கருத்து கொண்ட குழுக்களால் குதறப்படும் உயிர்களும் என்று தன் கதை வாசிப்பவர் மனதில் வடு விழுமாறு படைத்து உள்ளார் ஷோபா சக்தி. -ஈகரை

36. மலையாள சிறுகதைகள்.

முகுந்தன் தொகுத்து ராஜாராம் மொழி பெயர்த்த புத்தகத்தை படித்தேன், ஏன் இந்திய அளவில் அவர்கள் இலக்கியத்தில் மிக உயரத்தில் இருக்கிறார்கள் என புரிகிறது.எனக்கு பிடித்த எழுத்தாளரான பால் சர்க்காரியாவிலிருந்து, ஜெயதேவன், காக்க நாடன், துளசி, குஞ்சப்துள்லா என எழுதி இருக்கிறார்கள்.

37. ஒரு பொருளாதர அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் 

ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய புத்தகம். Confessions of an Economic Hit Man என்ற உலக புகழ் பெற்ற ஆங்கில புத்தகத்தை இரா முருகன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். அமெரிக்கா என்றாலே வளமை, செல்வாக்கு, ஆளுமை என்பதை தாண்டி அதன் கோர முகத்தை துகிலுரித்து காட்டிய புத்தகம்.

38. வண்ணதாசன் கதைகள் (தொகுப்பு)

புதிதாக எழுத வருபவர்கள் தயவு செய்து வண்ணதாசன் என்ற கல்யாண்ஜி யை படியுங்கள் என சுஜாதாவே சொல்லி இருக்கிறார் இதற்க்கு மேல் நான் என்ன சொல்ல

39.  முத்திரை கவிதைகள் 75 

நல்ல கவிதைகளாக தேர்ந்தெடுத்து விகடனில் வெளி வந்தது இரண்டு கவிதைகளை தருகிறேன் படித்து பாருங்கள்

"நகர்ந்து கொண்டே இரு ஒரு நதிபோல,
நான் காத்திருப்பேன் ஓரிடத்தில் கடலாக"

"ஓங்கி ஒலிக்கும் கெட்டிமேளத்தில் அமுங்கி போகிறது
யாரோ ஒருவரின் விசும்பல் சப்தம்"

40. நட்புக்காலம் 

அறிவுமதியின் கவிதைகள், ஆண் பெண்ணிற்க்கிடையேயான நட்பை அழகிய எழுத்துக்கள் கொண்டு நிரப்பியிருப்பார்.
உதாரணம்:
 "நீ நிரூபித்த பெண்மையிலிருந்து வாய்த்தது
நான் மதிக்கும் ஆண்மை"

இன்னும் இருக்கின்றன, பிடித்த புத்தகங்கள் இரண்டில் மேலும் எழுதுகிறேன். வாசிப்பிற்கு நன்றி                


No comments:

Post a Comment