Monday, November 12, 2018

ரத்த கண்ணீர்

"ராதா "போடுறது தான் போடுறே, அப்படியே கறி சோறு போடு" ராஜேந்திரன் "நாங்க ஜீவ காருண்ய கட்சியில் இருக்கிறோம் அசைவம் சாப்பிட மாட்டோம், எந்த உயிரையும் கொல்ல மாட்டோம்" ராதா "திங்கிறதுக்குக்கூட கட்சி வச்சு இருக்காங்கடா... யப்பா"

பிச்சை எடுத்துக்கொண்டிருக்கையிலேயே இவ்வளவு நக்கல் என்றால் படம் முழுவதும்?

64 வருடங்களுக்கு முந்தைய சினிமா, சாப்பிட உட்காருகையில் ஒரு பத்து நிமிடம் ஏதாவது பார்க்கலாம் என லோக்கல் தொலைகாட்சியில் பார்க்க ஆரம்பித்த இந்த படத்தை முழுதுமே பார்க்கும்படி வைத்தது அந்த ரணகள அறிமுக காட்சியே.

"மோகன் அவர்கள் பாட்டாளிகளை பற்றி பேசுவார்கள்" என்ற உடனே "ஐ டோன்ட் லைக்" என மூக்குடைப்பார், மைக் பக்கத்துல போக மாட்டார், மைக்கை பக்கத்துல கொண்டு வந்து வைக்க சொல்லுவார். "லேடீஸ் அண்ட் ஜெண்டில்மேன்" என ஆரம்பித்த உடனேயே "தமிழ்ல பேசுங்கய்யா" என குரல் கொடுப்பார்கள். "பிரெண்ட்ஸ்" என ஆரம்பித்து, என்னை வரவேற்க பெரிய மனிதர்கள் வந்திருப்பார்கள் என்று வந்தேன், இந்த மாதிரி லேபர்ஸ் கூட்டங்களை கண்டாலே எனக்கு பிடிப்பதில்லை, எப்போதும் பார்த்தாலும் பஞ்சம் பசி பட்னி... நான்சென்ஸ்" கேட்க உட்கார்ந்திருப்பவர்களை வறுத்து எடுப்பார் பாருங்கள் செம்ம ரகளயாக இருக்கும்.
அதற்கும் கைதட்டி கூட்டம் குதூகலிக்கும்.

"நாய் காஸ்ட்லீ நாய் சோறு கீறு போட்டு கெடுத்துறாதே" என சலம்புவதாகட்டும், "கல்யாணம் எதுக்கு பண்றதுன்னே இந்தியால எவனுக்கும் சரியா தெரியாது" என தன் அம்மாவை வாரி விடுவதாகட்டும்.
"எல்லா கட்சிக்காரனும் பிசினெஸ்ல பூத்துண்டான், இவனுக ஒண்ணுக்குமே லாயக்கில்லை" என அன்று பேசியது இன்றுவரை நிஜம்தானே?

கல்யாணம் ஆனா பிறகு மாமனாரை ஓட்டும் விதம் இருக்கிறதே,

"மிஸ்டர் பிள்ளை, உன்னை கல்யாண நாள்ல பார்த்தேன் அடையாளமே தெரியல பேட் பாடியோட இருக்கே"


"என்ன மேன் அசிங்கமா கொடு கீடு இழுத்துகிட்டு இருக்கே! என்ன கோடு இது? "
"இது விபூதி பட்டை"
"வாட் பட்டை"

"ஏம் மேன் பொண்ண பெத்தே? ஏம் பெத்தே?"
என்று அவரை அலற விடுவார்.
தன் அம்மா இறந்து விட்டதை சொல்லி வர சொல்லும் போது,
"டுவெண்ட்டி கிலோ மீட்டர்ஸ்? நடந்ததெல்லாம் வர முடியாது, நான் காந்தா வீட்டுக்கு போயிட்டு அப்படியே கார்ல வந்துடறேன்" என்பதெல்லாம் அந்த மகா செண்டிமெண்ட் காலத்திலேயே வேற லெவல்.

குஷ்டம் வந்து கண் தெரியாமல் போய்விட்ட பிறகு, சரளை கற்கள் மேல் விழுந்து விடுவார், "ரோடு போட மூணு வருசமாகும், கல்ல கொண்டுவந்து இப்போவே கொட்டிருக்கானே" என தன் கவுண்டரை தொடர்வார். இது போல குஷ்டம் வந்தது போல நடித்தாலே ஆயுள் நாட்கள் குறையும் என தெரிந்தும், ஆயிரம் காட்சிகளுக்கு மேல் இது நாடகமாகவும் நடத்தினார் ராதா

தமிழகத்தில் ஏதாவது ஒரு சிறு திரையரங்கத்தில் இவ்வளவு வருடம் கடந்தும் கூட இந்த திரைப்படம் ஓடிக்கொண்டிருப்பதை கவனித்திருக்கிறீர்களா?
MR ராதா ஒரு பிறவி கலைஞன். எல்லாவற்றிலும் தெளிவும், தோலைநோக்கு பார்வையும், வாழ்வில் உறுதியையும் வைத்திருந்த அவருக்கான சரியான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது
இது YouTubeலேயே காண கிடைக்கிறது. தேவை இல்லை எனில் பாடல்களை ஓட்டி விட்டு ரசித்து பாருங்கள்.
link : https://www.youtube.com/watch?v=F63Qhsl5010https://www.youtube.com/watch?v=F63Qhsl5010

Saturday, November 10, 2018

Into the wild விமர்சனம்

உலகின் தலைசிறந்த பயண திரைப்படங்கள் (worlds best traveler movies list) என கூகிள் செய்தால் இது தான் முதல் இடத்தில் வந்து நிற்கிறது. அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது என பார்க்க ஆரம்பித்தேன்.
கையில் பணமோ டெபிட் கிரிடிட் கார்டோ மொபைல் போனே இல்லாமல், உணவுக்கு வழியில்லாமல் உங்களை யாரென்றே தெரியாத ஒரு இயற்கை கொஞ்சும் பிரதேசத்தில், எந்த கவலையும் இல்லாமல் முழு நிறைவை அனுபவித்துக்கொண்டு உங்களால் இருக்க முடியுமா? அது எப்படி என யோசிக்க தோன்றுகிறதல்லவா?  ஆனால் இரண்டு வருடங்கள் மேற்கண்ட எந்த வசதியும் இல்லாமல் படத்தின் நாயகன் கிறிஸ் மேகாண்டில் தன் பெயரை அலெக்சாண்டர் சூப்பர்டிரம்ப் என மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அலாஸ்காவிற்கு சென்ற கதையை சொல்கிறது இந்த திரைப்படம். இது ஒரு உண்மை நிகழ்வு.

ஒவ்வொரு ஆணுக்கும் இது போன்ற, சாகசம் செய்து அழகிய இடத்தில் சில நாலாவது தங்கி இருக்க வேண்டும் என்பது கனவு, அந்த கனவை நம் கண் முன்னே நிறுத்துகிறது இந்த திரைப்படம்

படத்தை பார்த்து முடித்துவிட்டு கிட்டத்தட்ட அரை மணி நேரங்கள் கடந்து விட்டன, செயலற்று வெறுமையாய் வேறு நினைவுகள் இன்றி அமர்ந்திருக்கிறேன். வணிக ரீதியான படமென்றால் எழுத்து தானாகவே வந்து விழும், ஆனால் இந்த படத்தை பற்றி ஏதாவது எழுத வேண்டும் என தோன்றுகிறது,  எங்கிருந்து ஆரம்பிப்பது எதில் முடிப்பது என்றே தெரியவில்லை. அவ்வளவு பாதிப்பு மனதில். இன்னும் ஒரு வாரம் அழகிய நினைவுகளும், பல காட்சிகளும் என்னுள் தங்கும் என்றே தோன்றுகிறது.

1990ல் ஆரம்பிக்கும் இந்த கதை 1992ல் முடிவடைகிறது. படத்தின் ஒளிப்பதிவு கொள்ளை அழகு, அதுதான் படத்தின் பெரும் பலமே. இறப்பதற்கு முன் பார்த்தே ஆக வேண்டிய படங்களில் இது முக்கியமானது.

வெறும் அழகியலோடு இது முடிந்து விடவில்லை, மனிதர்கள் அவனுக்கு செய்யும் உதவிகள், வழி பயணத்தில் அழகான ஒரு காதல், எதிர்படும் இடர்பாடுகள், அவனை தத்தெடுத்து கொள்ள ஆசைப்படும் விபத்தில் மனைவி மகனை இழந்து விட்ட முதியவர் என படம் நெடுகிலும் பிரியங்களும், துன்பங்களும் சேர்ந்து கொள்கின்றன.

செயற்கை இன்பங்களை, வெற்று நடிப்பை, தொலைபேசி கருவிகளை, தொலைக்காட்சிகளை தூர தள்ளி வைத்து விட்டு இந்த படத்தை பார்க்கையில் இது வேறு உலகத்திற்கு நம்மை கொண்டு செல்லும்

படம் முடிந்த பிறகு, மனதில் மனித நேயம் நிரம்பி வழிய. சில கண்ணீர் துளிகளுடன் எழுந்து நின்று கைதட்ட தோன்றுகிறது. அதுதான் இதன் மேஜிக் .


Saturday, November 3, 2018

இந்த நாள்

நரசிம்ம நாயக்கன் பாளையத்தில், சிறு கட்டிடத்தில் பல வருடங்களாக  இயங்கி வந்த அமுதா ஸ்டோர்ஸ், அதன் எதிரிலேயே  கடையை மாற்றி பெரிய வணிக வளாகமாக உருவெடுத்து இரண்டு மாதங்கள் ஆகிறது. விலை குறைவாக இருப்பதால் வழக்கமாக அங்கேயே நாங்கள் மாத மளிகை வாங்குவது வழக்கம்.

இந்த முறையும் வழக்கம் போல மளிகை வாங்கி கொண்டிருந்தாள் என் எஜமானி,  ஆண்களுக்கான மாத செலவு என்பது மிக சொச்ச பொருள்களோடே முடிந்து விடுமல்லவா, அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு வாசனை திரவியம் (perfume) மட்டும் எனது பங்காக வாங்கி வைத்தேன்.

வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரத்திற்க்கு பிறகு வாசனை திரவியத்தை தேடுகையில், "அதை வைக்கவே இல்லை" என்று அம்மா சொன்னார்கள். என் செல்வ புத்திரனையும் அழைத்துக்கொண்டு, திரும்ப சென்று பில் போடும் இடத்திற்கே வந்து இது "லிஸ்ட்ல இது விட்டு போச்சு, ஸ்டாக் செக் பண்ணிட்டு எடுத்துதாங்க, இல்லைன்னா CCTV footage பாருங்க" என்றேன். பில் போடுபவர், அங்குள்ள பணியாளர்கள் அனைவரையும் கூப்பிட்டு, "இங்கே அந்த பொருள் ஏதாவது இருந்ததா, எடுத்து வைத்தீர்களா?" விசாரித்தார். யாரும் அந்த வாசனை திரவியத்தை எடுத்து பழைய இடத்தில் வைத்ததாக கூறவில்லை.

பத்து நிமிடம் கடந்த பின் பேச்சு வார்த்தை நீடித்து கொண்டே போனது. சட்டென கோபம் என் இயல்பிலேயே இருப்பதால், "முத்துவை கூப்பிடு நான் பேசிக்கொள்கிறேன்" என்றேன். முத்து அமுதாஸ் ஸ்டார் ஓனருக்கு நெருக்கமானவர், பழைய கடையை அவர்தான் பார்த்துக்கொண்டிருந்தார். நீண்ட கால வாடிக்கையாளரான என்னை நன்கு தெரியும் என்பதால் அவரிடமே பேசி பஞ்சாயத்தை தீர்த்து கொள்ளலாம் என கணக்கிட்டேன்.

"என்ன சார்?" என்றபடி முத்து வந்தார், சொல்ல ஆரம்பித்த உடனேயே, "ஒண்ணும் பிரச்சனை இல்லை சார்", என்றபடி, ஒரு பெண்ணை அழைத்து "சார் எதை சொல்றாரோ, அதை எடுத்து கொடு" என்றார். அப்பாடா என்றிருந்தது. "போயிட்டு வாங்க சார் இதெல்லாம் ஒரு விஷயம்னு இவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்தீர்களா, நேரா என்னை வந்து பார்க்க வேண்டியதுதானே?" வாடிக்கையாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் பில் போடுபவர்கள் என ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது, கொஞ்சம் பெருமிதமாகவும், கூச்சமுமாகவும் இருந்தது. பொருளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். ஏதோ ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது

வீட்டின் கேட்டின் முன் வண்டியை நிறுத்துகையில் என்  தவப்புதல்வன் வீட்டிற்குள் அவசரமாக "மூச்சா வருதுப்பா" ஓடினான். ஓடிய வேகத்திலேயே அலறியபடி திரும்ப ஓடி வந்து "அப்பா, நாம வாங்கிட்டு வந்த மாதிரியே இங்கே இன்னொன்னு இருக்கு" என்றான்.

"அப்புறம் எப்படி இல்லைன்னு சொன்னீங்க?" என்று அம்மாவிடம் கடும் கோபமாக கேட்க, "இது பிரியாக்கு வாங்குற  பவுடர் டப்பா"ன்னு நெனச்சேன் என்றார் மலங்க விழித்தபடி. "என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க?" என்றதற்கு, "நெஜமாவே தெரியலயே, உனக்கு வாங்கினா, அப்பவே எடுத்து  உன் ரூமுக்கு கொண்டு போய்டுவே, இது அவளுக்குன்னு நெனச்சு" என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, வீட்டின் உள்ளிருந்து வேகமாக வெளியே வந்த என் மனைவி, "அம்மா தெரிஞ்சு செய்வாங்களா? லூசு மாதிரி பேசிட்டு, முதல்ல வண்டிய எடுங்க" வழக்கமாக கட்டளைகளை கேட்டே பழகிய நான் அதை மறுக்காமல் திரும்ப அமுதா ஸ்டோர்ஸ் வந்து, முத்துவை பார்த்து "தயவு செஞ்சு மன்னிசிடுங்க முத்து, முன்னாடி வாங்கினது வீட்ல இருந்தது, சரியா பார்க்கல" என்றேன். "என் கஸ்டமரை எனக்கு தெரியாதா சார், இதுக்கு எதுக்கு மன்னிப்பு? இதை திருப்பி கொடுக்க குடும்பத்தோட வேற வரணுமா" என்று அதே புன்னகையுடன் வாங்கி வைத்து, என் மனைவியும் மன்னிப்பு கோரி கொண்டிருந்ததை "மன்னிப்பெல்லாம் கேட்டு சங்கட படுத்தாதீங்க மேடம்" என்று அந்த சம்பவத்திற்கு முழு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, வேறு ஒரு வாடிக்கையாளரின் தொலைந்த கதையை சுவாரஸ்யமாக சொல்லி கொண்டே இருந்தார்.

பணியில் இருந்த பில் போடுபவரையும் வரவழைத்து மன்னிப்பு கேட்ட பின்பே, அந்த ஏதோ ஒரு தவிப்பு அடங்கியது. இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அம்மாவும், மகனும், மனைவியும் தூங்கி விட்டார்கள். முத்து இவர்களுக்கு முன்பே தூங்கி இருப்பார் என அவதானிக்கிறேன்.

இந்த குறைந்த பட்ச நேர்மை நல்லவர்கள்  என்றோ, நடிப்பையோ காட்டிக்கொள்ள அல்ல, சுய நிம்மதிக்காகவும் படுத்த உடன் தூங்கவும் தான்.

இனிய இரவு.