Wednesday, September 27, 2017

ஸ்பைடர் விமர்சனம்

ஏ ஆர் முருகதாஸ், மகேஷ்பாபு என்பதாலும், முதல்நாளே பார்த்துவிட நேரமும், வாய்ப்பும், டிக்கெட்டும் கிடைத்தாலும் எதிர்பார்ப்புடனே படம் பார்க்க தொடங்கினேன்.

முதலில் அரை மணி நேரம் நான் விவேகம் இரண்டாம் பாகத்துக்கு தான் வந்து விட்டேனோ என்ற ஜெர்க் வராமல் இல்லை, அத்தனை செலவு செய்து வெளிநாடுகளில் படம் பிடித்த பாடல்கள் ஆரம்பிக்கும் போதே, பெண்கள் கூட வெளியே சென்று தம்மடிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்.

சுடலை என்ற சைக்கோ தான் இதில் வில்லன், எஸ் ஜே சூர்யா என்ற பெரும் சவால் தரக்கூடிய, வசன உச்சரிப்பில் அசத்தகூடிய திருப்புமுனை தரக்கூடிய வில்லனை வைத்துக் கொண்டு, நாலைந்து காட்சிகளில் முடிந்திருக்க கூடிய ஒரு பகுதியை  இடைவேளைக்கு முன்புவரை எதற்காக அந்த பையனை வைத்து தேவையில்லாமல் இழுத்தார் முருகதாஸ் என்றே தெரியவில்லை? பட்ஜெட்டா பாஸ்? அதுவும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே?

கதாநாயகி இந்த படத்தில் தேவையே இல்லாத திணிப்பு, R J பாலாஜி உங்களை ஒரு இடத்திலாவது சிரிக்க வைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.

எதற்காக இவ்வளவு திட்டு என்றால், முருகதாஸ் ஏறக்குறைய நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்.. அதுதான்.

நேரடி படம் செய்ய மகேஷ்பாபுவிற்கு ஒரு மார்க்கெட் தமிழ்நாட்டில் உருவாகும்.

சரி படம் ஓடுமா?

கண்டிப்பாக...

ஏனெனில் இடைவேளைக்கு பிறகு எஸ் ஜே சூர்யா என்ற தனி மனிதனின் பிரித்து மேயப்பட்ட நடிப்பில் மொத்த படமும் தலை நிமிர்கிறது, அதன் பின் அமைக்கப்பட்ட புத்திசாலிதன காட்சிகள் நம்மை அசர வைக்கின்றன.   படத்தின் பாடல்கள் மொக்கையாக இருந்தாலும் BGM அட்டகாசம்.

இடைவேளைக்கு பிறகு நம்மை பரபரப்பாக வைக்கும் இசைக்காகவும், படத்தின் வில்லனுக்காகவும், ஆபாசம் இரட்டை வசனங்கள் இல்லாததாலும் பொழுது போக்கு படமாக இதை குடும்பத்துடனே சென்று பார்க்கலாம்.                    

Monday, September 11, 2017

சண்முகம் என்றொரு கூரியர் டெலிவரி மேன்

"அல்லோ எப்படிண்ணே இருக்கீங்க?" என்றபடி என்னை நோக்கி வந்த சண்முகதிற்க்கு எப்படியும் ஐம்பது வயது கடந்திருக்கும். நான்கு வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஒரு கொரியர் நிறுவனத்தையும் நடத்தி வந்தது. அதில் தான் அவரை தெரியும், ஐந்து வயது குழந்தையைக் கூட அண்ணா என்றுதான் கூப்பிடுவார். ஒடிசலான, கருப்பு நிற, சைக்கிளில் "சார் கொரியர்" என வரும் அவரை நீங்கள் சந்தித்தித்து உதாசீனபடுத்தியிருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் மிக எளிய மனிதர் அவர்.
 "அப்படியே தான் இருக்கேன், கொஞ்சம் கூட மாற முடியல" என்றேன்,  சப்தமிட்டு சிரித்தார். "அதே மாதிரியே பேசறீங்கண்ணே, வீடு வாங்கிட்டீங்கன்னு சொன்னாங்க, சந்தோசமா இருந்துச்சு, உங்க போன் நம்பர் இல்ல, என்னை கூப்பிடவே இல்ல பாத்தீங்களா" என்றார்.
"வாங்கினது கடன்ல சண்முகம், இல்லாட்டி கூப்பிட்டு இருப்பேன்ல... சும்மா பேசிட்டு இருந்தா எப்படி, டீ வாங்கி தாங்க" என்றேன். ஓடிப் போய் "ரெண்டு பெசல் டீ, நல்லா இருக்கனும் பாத்துக்கோ" "
"சிகரெட் யார் வாங்கி தருவாங்க?" என்றதும் வாங்கி வந்து பதினாறு ரூவா போட்டு இதை குடிச்சு உடம்பை கெடுத்துக்கனுமா?" என்று சலித்துக்கொண்டார்.
"சம்பளம் எவ்வளவு தராங்க?"
"நாலாயிரம், அங்கே மூவாயிரத்தி ஐந்நூரு தானே, அதான் மாறிட்டேன்"
 "வாழ்க்கை எப்படி போகுது?"
"நல்லா இருக்குண்ணே, இப்போ ஹீரோ புது சைக்கிள் வாங்கினேன், எப்படி இருக்கு?"
 "உங்க மாதிரியே நல்லா இருக்கு"
ஐம்பதுவயது காரரிடம் நீங்கள் வெட்க சிரிப்பை பார்த்தது உண்டா? அதெல்லாம் பொக்கிஷம்.
தயங்கித்தான் காசு கொடுப்பார் என்று தெரியும், அவரின் பர்சில் அம்பது ரூபாய் தான் பார்த்தேன், இருந்தாலும் கட்டாயபடுத்தி  கொடுக்க வைத்தேன், "இருப்பது ஆறு ரூவாண்ணே, இருப்பது ஆறு" என்று கவலையுடன் வந்தார். "கொடுங்க சண்முகம், பெரிய ஆளுக இதுகூட பண்ண மாட்டீங்களா?" ஒரு பெருமிதம் கலந்த வெட்க சிரிப்பு.
டெபிட் கார்டில் நான் செலவுக்கு வைத்திருந்த தொகையில் பாதியை ஏடிஎம்மில் உருவி ஒரு கவரில் வைத்து ஒட்டி, அவரின் கொரியர் அலுவலகம் சென்று, அவரிடன் ஒப்படைக்க சொல்லி விட்டு வந்திருக்கிறேன்...
அது இந்த பிச்சைக்காரன் மாமன்னனுக்கு செய்யும் கைமாறு.