Saturday, June 24, 2017

வயநாடு

எனது தம்பிக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது, அவன் துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறான், திருமணத்திற்க்கு பத்திரிக்கை கொடுக்க ஊட்டி, கூடலூர் போக வேண்டி இருந்தது. திருமணதிற்க்கு பத்து நாள் மீதம் இருக்கையில் தமிழ்நாடு வந்து சேர்ந்தான். பத்திரிக்கை கொடுத்துவிட்டு அப்படியே வயநாடு போய் இரண்டு நாட்கள் சுற்றி விட்டு திருமணத்திற்க்கு முன்பு ஒரு வாரம் வீட்டு சிறைக்கு அனுப்பி விட திட்டமிட்டு, மே கடைசி வாரத்தில்  வயநாட்டின் ஒரு பகுதியான புல்பாலியில் அமைந்துள்ள luxinn என்ற விடுதியில் அறை முன்னதாகவே பதிவு செய்து வைத்திருந்தோம்.
    கோவையில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் காரில் கிளம்பி விட்டோம், இரண்டு பேர் கொண்ட பயணம், கடைசி நாட்களில் இன்னமும் இரண்டு நண்பர்கள் வரலாமா என்று கேட்க, அது நான்கு பேராக மாறியது.
 பரளியாறு தாண்ட ஆரம்பித்ததுமே அந்த ஊட்டி குளிர் காரின் ac யை அணைத்துவிட்டு அதை அனுபவிக்க தூண்டியது. மலைமேல் பயணிக்கும்  காலை பயணங்கள் உண்மையில் சொர்க்கங்கள்.    
   ஊட்டி வரை செல்பவர்கள் அதை தாண்டி கூடலூர் ரோட்டில் ஒரு பதினைந்து கிலோ மீட்டராவது செல்லுங்கள், அங்கே குளிரும் அதிகம், ஊட்டியின் வியாபார தன்மையை தாண்டி அழகு பறந்து விரிந்து கிடக்கிறது, அதுவும் பைகார தாண்டி மலை பார்க்கும் பகுதி இருக்கிறது, மேகம் கூட்டமாய் தலை உரசும் அங்கே தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் சாப்பிடும் கணம் இருக்கிறதே, அதை விளக்கும் அளவு அழகியல் எழுத்தில் எனக்கு கைவரவில்லை. மகா அற்புதம் என கொள்ளுங்கள்.
 வயநாடு போன்ற தெரியாத இடங்களுக்கெல்லாம் கூகுள் மேப் எனும் கடவுள் கூடவே உதவிக்கு வருகிறார், ஒரு தடவை கூட நாங்கள் யாரிடமும் வழி கேட்கவில்லை, நேராக Luxinnக்கு அது கூட்டி சென்று விட்டது.
 கூடலூரில் இருந்து பத்து கிமீ தாண்டி சென்றால் குளிர் போய் விடுகிறது.
அதே கூகுள் வயனாடை அழகான படங்களை போட்டு, கேரளாவின் சொர்க்கம் என்றெல்லாம் வர்ணித்து வைத்திருக்கிறது, எக்கசக்க எதிர்பார்ப்புடன் கேரளாவில் நுழைந்தால் சுள்ளென அடிக்கும் வெயில் பட்டவயல் எனும் மலைக்கு கீழிருக்கும் பகுதியில்  வரவேற்கிறது. நாங்கள் சென்ற சமயம் மழை வேறு இல்லை, அடர் வன பகுதிகள் கூட பாதி வறண்டு போய் இருந்தது. நாங்கள் சென்ற luxinn வெகு தொலைவு வேறு.
 வயனாட்டுக்கு செல்வோர் கல்பேட்டாவில் தங்க அறை பதிவு செய்து கொள்ளுங்கள், luxinn பற்றிய நல்ல கூகிள் ரேட்டிங்கில் நாங்கள் ஏமாந்தோம், முதலாவது அதன் முகப்பு மட்டும் நன்றாக இருக்கிறது, தங்கும் அறைகள் அளவில் மிக சிறியவை, டீலக்ஸ் ரூம்களுக்கு தரும் விலை மிகமிக அதிகம், உள்ளே சாப்பிட ஹோட்டல் இல்லை, உணவு ஏற்பாடு செய்து தருகிறோம் என்றார்கள்,  காலையில் சுடுதண்ணிர் மட்டும் அரை மணிநேரம் வருகிறது, பழைய டிவி, மொபைல் சார்ஜ் போடக்கூட ப்ளக் பாய்ண்டுகள் இல்லை, என் கார் சார்ஜர் வேறு பழுதாகி உயிரை வாங்கியது. முக்கியமாக மாதம் ஒருநாள் வீட்டில் அனுமதி வாங்கி குடிக்கும் எனக்காக என் தம்பி அங்கிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் செலவில் இரண்டு புல் ஸ்காட்ச் வாங்கி வந்திருந்தான், குடிக்க அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள், ரூம் பாய்க்கு கொஞ்சம் காசு கையில் திணித்து குடித்தது தனிக்கதை.

 சரி வயனாடுக்கு வருவோம், குருவா ஐலன்ட் என்று கொடுமை அங்கே இருக்கிறது, மதியம் ஒரு மணிக்கு சென்றால் அதற்க்கு பின் அங்கு அனுமதி இல்லை என்றார்கள்.

பணசுரா அணை பற்றி ஓவர் பில்டப் கொடுத்தார்கள், அங்கே சென்றால் நீர் வரத்து மிக மிக குறைவு. பக்கத்தில் மீன் முட்டி அருவி இருக்கிறது அதுவும் அதே லட்சணத்தில் தான்.
 ஒரே பெரிய நிறைவும் ஆறுதலும் பூக்கொட் லேக், அங்கே நாங்கள் செல்லும் வழியில் மழை, அது அழகாக இருந்தது. செம்பரா, எடக்கல் பாறைகள், நீலிமலை காட்சிமுனை, கபினி என்றெல்லாம் சொன்னார்கள். சுமாராக இருந்தாலே உற்சாகமாக பயணங்களை அனுபவிக்கும்  எனக்கே போதுமடா சாமி என இருந்தது, ரூம் திரும்பி விட்டோம்.
 நீதி என்னவெனில், ஊட்டி குளிரை, பைகாரா வரை அனுபவித்து விட்டு கீழே கடும் வெயில் உள்ளதால் (கோவையை விட மிக அதிகம்) மண்டை காய்கிறது, அதிக எதிர்பார்ப்போடு போகக்கூடாது, மிக முக்கியமாக நீங்கள் மழை நன்கு பெய்து கொண்டிருக்கையில் அங்கு பயணம் செல்லுங்கள், ஒவ்வொரு சுற்றுலா இடத்துக்கும் தூரம் மிக அதிகம், அதாவது நாங்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து பணசுரா அணை போய், பூக்காடு முடித்தால் ஒரு நாள் ஆகிறது, ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர்கள், அதே போலதான் எல்லா சுற்றுலா இடங்களும் உள்ளன, அங்கிருந்த ரோடுகளை போல் படுகேவலமான குண்டும் குழியுமான ரோடுகளை நான் சமீபத்தில் எங்குமே பார்க்கவில்லை, ஒரு சில இடங்களில் வண்டியை பத்து, இருபது ஸ்பீடில் ஓட்டினாலே போதும் என்றாகி விடுகிறது. நன்கு திட்டமிட்டால் மட்டுமே ஒரு நாளில் மூன்று இடங்களை பார்க்க இயலும்.
 அவ்வளவு செலவு செய்து அங்கே போனதை விட, ஆசனூரில் நீச்சல்குளம் உள்ள ஹில்வியூ போன்ற காட்டேஜ்களுக்கு இரண்டு கோழி வாங்கி போயிருந்தால், சிறப்பாக அசைவ உணவு செய்வார்கள், அனுபவித்து குடித்து  சாப்பிட்டு, நீச்சல் குளத்தில் விளையாடி,  மலையை ரசித்தபடி அமைதியாக அமர்ந்து விட்டு, இரவு வனஉலா சென்று அதிஷ்டம் இருந்தால் புலியை கூட பார்த்து திரும்பி இருக்கலாம் என்ற எண்ணம் வராமல் இல்லை.

  

Thursday, June 22, 2017

ரங்கூன் ஒரு பார்வை

நடிப்பில் நன்கு தேறி வருகிறார் கௌதம்கார்த்திக், 
கருப்பு மேக்கப்பில் பர்மாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு குடியேறிய மக்களில் ஒருவனாக சிறப்பு... சண்டை காட்சிகள் இயல்பாய் இருக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நல்ல ஆரம்பத்தை அவர் குருவே பட தயாரிப்பின் மூலம்  கொடுத்திருக்கிறார். எதிர்பார்க்கும் படங்களின்  இயக்குனராக வருவாரா என்பது அவரின் இரண்டாம் படத்தில் தெரியும்.

"இங்கே நல்லவன் கெட்டவன் யாரும் கிடையாது, அதிஷ்டத்தை தேடி அலையிற துரதிஷ்டசாலிகள்தான்"
"பணம் நிஜமல்ல வெங்கட், நிஜம் மாதிரி "  சில கூர்மையான வசனங்கள் கவர்கிறது,

யாத்ரிகா பாடலில் அந்த பிரிவு, ஆறு, புத்தர் சிலை, மீண்டும் பர்மா பயணம் என பர்மாவை மிக அழகாய் படம் பிடித்திருக்கிறார்கள். 

"உனக்கென்ன கலெக்டர் வேலையா கிடைச்சுச்சு உங்கொப்பன் பெருமைப்படுறதுக்கு?"என இடையிடையே வரும் பாலா பட டைப் கலாய்தல்கள் சிரிப்பை வர வைக்கின்றன. அதேபோல எதிர்பாராத அந்த துரோகமும். 

இந்தியாவில் இருந்து பர்மாவிற்கு கொண்டு செல்லப்படும் தங்க கடத்தல் சீன்கள் சாதாரணமாக இருந்தாலும் பரபரக்க வைக்கிறது. இடைவேளையில் தரப்படும் மிகப் பெரிய ட்விஸ்ட் சரியாத பாதை கிடைக்காமல் தடுமாறி பின் ட்ராக்கில் வந்து சேர்க்கிறது.  ஆங்காங்கே அயன் போன்ற சில  படங்கள் நினைவு வருவதை தடுக்க இயலவில்லை 
கிளைமாக்ஸ்.... 
சரி வேண்டாம், அதை  பற்றி சொல்லி உங்கள் ஆர்வத்தை கெடுக்க விரும்பவில்லை. 

  ஒருமுறை தாராளமாக பார்க்கலாம். 

Tuesday, June 20, 2017

அனலோன் கவிதைகள்

சமீபத்தைய கவிதைகளில் அனலோன் கவிதைகள் வித்தியாசமாகவும், மனதுக்கு மிக நெருக்கமாகவும் இருக்கிறது. கவிதை உலகில் தனக்கென தனி இடம் பிடிக்க வாய்ப்பும் இருக்கிறது  அவர் எழுத்துக்கள் கூடிய விரைவில் புத்தக வடிவில் வர வாழ்த்துக்கள்.

அவரின் கவிதைகள் சில

மரணம் கொள்ளும் பயணம்


செங்கேழ் மேனி தொட்டு
சிறிததிர்ந்து
விலகி
பின்னரும்  விண்ணில் மீண்டெழ
முயல்கிறது
சிறுபறவை உதிர்த்த இறகொன்று...!!

மரணித்த பின்னும்
தன் பயணம் தன்னை
கொண்டாடித் தீர்க்கிறது
நெடுமரம் உதிர்த்த சருகொன்று...!!


நீள்நதி அலையில்
மௌனமாய் பயணிக்கிறது
செஞ்சாந்து தீற்றல் களைந்து,
கரையோர காட்டு அய்யனார்
சூடிய மாலையொன்று..!!

காட்டையாண்ட
பெருஞ்சிறுத்தை காலம் கொண்டு
வீழ்ந்திறக்க,
பருவுடல் தன்னை
பகிர்ந்து நகட்டிச்செல்கிறது
சிற்றெறும்புக்   கூட்டமொன்று..!!
--------------------------------------------------

அப்பாயி...
எனக்கொரு ஆசை..!!


ஏனோ இன்றுன்னை எண்ணத் தோன்றியது..
எங்கோ ஆழ்மனதின் அடியாழத்தில்
நீ இரவு முழுவதும் வீசிய
ஓலைகாற்று அலைபாய்ந்துகொண்டிருக்கிறது..!!


இருளேறிய மண்வீடு..
பனை உத்திரங்களும் ஓலைக்கூரையையும்
பார்த்தபடி கிடந்துறங்கிய நினைவுகள்
படிமங்களாக உறைந்து கிடக்கிறது..!!


மின்சாரம் இல்லாத
அந்நாட்களில் சிம்னி விளக்கில்
புளிக்குழம்பும்,
கரண்டி முட்டையும்
இந்த 35 வருடங்களில் கிடைக்கவில்லை தாயே..!

அரிக்கேன் வெளிச்சத்தில்
கால் நீட்டி நீ அமர்ந்து, நிலவுபாட்டியாய்
மண்சுவரில் உன் நீண்ட பெருநிழல் விழுந்து
புரியாத மொழியில் பாடிய தாலாட்டில்
லயித்துக்கிடந்த சிறுவயதுப்பிராயம்
திரும்பாது எனிலும்,
காலங்கடந்தும் நெஞ்சில் நிக்குதம்மா..!!

டயர் செருப்பு அணிந்திருப்பாய் ..
பனைவெல்லம் காய்ச்சுகையில்
பதமாய் ..
சிறு குச்சி நீட்டி சவ்வுமிட்டாய் எடுத்து தருவாய்..!!

பொன்னாங்கண்ணி கண்மாயில்
பனைஓலை வெட்டி
கருவேல முள் தைத்து காத்தாடி செய்து கொடுப்பாய்..!!
ஐந்து கண் நுங்கெடுத்து பனைவண்டி
எனக்களித்தாய்..!!

என்ன தருவேன் நான் உனக்கு ஏங்கி ஏங்கி உன்னை நினைப்பதைத் தவிர..?
அப்பாயி..
எனக்கொரு ஆசை...
நிறைவேற்றுவாயா ..??

எனக்கான தீர்ப்பு நாள் தாண்டி
விண்ணேகி நான் வருகையில்
நின்மடியில் படுத்து
ஓலைக்காற்றை சுவாசிக்க வேண்டுமம்மா..!!

உன் கண்டாங்கி சேலை நுனி
நான்பற்றி
கண்துயில வேண்டுமம்மா..!!
-----------------------------------------------------------
நினைவேந்தல்

பலநாள் முன்பு
அகால மரணமடைந்த
நண்பனுடைய  பிறந்தநாளின்
முகநூல்  நினைவுறுத்தல்
குறுஞ்செய்தி
கண்டு
ஒரு கணம்
திகைத்து அடங்கியது உள்ளம்..!!


குழந்தைப் பலி கொண்ட
வீட்டின்
உத்திரத்தில்
கட்டிய தொட்டிலின்
கயிற்றுத் தடம் உடனே
மறைவதில்லை..!!


அய்யம்மாள் கிழவி
தனித்து வாழ்ந்து
மரித்துப்போன சிலவருடம் பின்னும்
பாக்குடைப்பான்
திண்ணையிலேயே இருந்தது..!!


தொழுவம் கட்டிய
லட்சுமியின் கழுத்துச் சலங்கை
கோமாரி கண்டு செத்த பின்னும்
அவ்வப்போது காற்றில் சலசலத்து
அவளை நினைவுறுத்தும்..!!
----------------------------------------------

ஆதியில் ஆப்பிள்...



காது மடல் நுனி...
கழுத்துப்புறம் ஏதோ ஊர… ,

கண்ணெதிரில் நட்சத்திரங்கள்… !
கால்கள் பின்னி
ஊர்ந்த கைகளுக்கிடையே
சிக்கித்தவித்தது வெட்கம்… !
படர்கையில் பாதிதேகம்
நிலைக்கண்ணாடியில்…,
தோன்றி விலக,
மறைந்து சிரித்தது வெட்கம்…!
பின்னிரவுப்பறவையொன்று
ஜன்னல் வழிபார்த்து
சீட்டியடித்தது….. !



மயக்கம் பாதி, தயக்கம் மீதி…
முடிவில் முதலாவது ஜெயிக்க,
தயக்கமும், வெட்கமும்…
கட்டில் நுனியில்… !



தேக அணுக்கள்ஒன்றாகக் குவிந்து,
பின்..ஒவ்வொன்றாய் பிரிய…
வியர்வைத்துளியில்,
கழுவப்பட்டது நாணமும் , தயக்கமும்…. !
புரியாத புதிராய்புதிதாய்த்
தொடங்கத் தொடங்க,புரியாதவை
புலப்படலாயின…!


இருபது வருடங்களாய்
பூட்டிவைத்தபொக்கிஷங்கள்
கொள்ளையிடப்பட்டும்,வாரி வழங்கிய திருப்தியும்,
மிதமிஞ்சிய உணவுண்ட திருப்தியும்,
உண்டாயின…. !
மூச்சூக்காற்றும் வெப்பமாக,
வியர்வையில் தேகம் தெப்பமாக…!


களைத்து விலகும் போது
காதல் மட்டும் பிரவாகமாய்ப்பொங்கும்….. !
வாழ்க…… !
ஆதியில் ஆப்பிள் கடித்தவன்…. !
-------------------------------------------------
உன் சிலநிமிட காத்திருப்புகள்...


நீயின்றி நான் கடக்கும்
சோலையில் உணர்ந்தேன்
பாலையின் வெப்பத்தை…!!

உனதுமழைத்தாகம் தெரிந்தோ என்னவோ,
நாமில்லா சமயங்களில்
பெய்வதில்லை மழை …!!

உனக்குத் தெரியுமா உன் உச்சந்தலை
தொட்டமுதல் மழைத்துளிஎதுவென…… ?!!!

நீ காத்திருக்கும் நிறுத்தத்தில் நீண்டநேரம் என் பேருந்து நிற்பதாய்
எனக்குள் பிரமை… !!!

காத்திருப்புகளும்,
சில நொடி கவனிப்புகளுந்தான் காதலின் சொர்க்கம்...

உனக்கான ...பூக்கள் வாங்கிய
கடைக்காரன் ஏளனமாய்ப்
பார்க்கிறான் இன்று……

உனது மறுதலிப்பு
அவனுக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை…! எனக்கான

உன் சிலநிமிட காத்திருப்புகள்
என்னுள் ஏற்படுத்திய
அதிர்வுகள் பல…! இன்று நீ
எனக்காகக் காத்திருப்பதில்லை…!

இருந்தாலும் ,
நான்தவறவிட்ட
சில நிமிடங்கள் தான்,
எனக்குத் தரப்பட்ட அவகாசங்கள்
என்பதை நான்உணரவில்லை……!

நாம் ஏன் மீண்டும் பிறக்கக் கூடாது…….
நமக்கான ,
நமது காதலைப்புரிந்து
கொள்ள….?!!!
-------------------------------------
வாட்ஸ்அப் வழி பகிர்ந்த செந்தில்குமாருக்கு நன்றி.  

Monday, June 19, 2017

தந்தையாக்கியவளுக்கு நன்றி

வாழைத்
தோட்டத்திற்குள்
வந்து முளைத்த...
காட்டுமரம் நான்..!
எல்லா மரங்களும்
எதாவது...
ஒரு கனி கொடுக்க ,
எதுக்கும் உதவாத...
முள்ளு மரம் நான்...!
தாயும் நல்லவள்...
தகப்பனும் நல்லவன்...
தறிகெட்டு போனதென்னவோ
நான்...
படிப்பு வரவில்லை...
படித்தாலும் ஏறவில்லை...
இங்கிலீஷ் டீச்சரின்
இடுப்பைப் பார்க்க...
இரண்டு மைல் நடந்து
பள்ளிக்கு போவேன் .
பிஞ்சிலே பழுத்ததே..
எல்லாம் தலையெழுத்தென்று
எட்டி மிதிப்பான் அப்பன்...
பத்து வயதில் திருட்டு...
பனிரெண்டில் பீடி...
பதிமூன்றில் சாராயம்...
பதினாலில் பலான படம்...
பதினைந்தில்
ஒண்டி வீட்டுக்காரி...
பதினெட்டில் அடிதடி...
இருபதுக்குள் எத்தனையோ...
பெண்களிடம் விளையாட்டு...
இரண்டு ,மூன்று முறை கருக்கலைப்பு...
எட்டாவது பெயிலுக்கு...
ஹெட்மாஸ்டர் வேலையா கிடைக்கும் ?
மண்லாரி ஓட்டினால் லோடுக்கு...
நூறு தருவார்கள .
வாங்கும் பணத்துக்கு...
குடியும் கூத்தியாரும் என...
எவன் சொல்லியும் திருந்தாமல்...
எச்சிப் பிழைப்பு பிழைக்க ...
கை மீறிப்
போனதென்று...
கால்கட்டுக்கு ஏற்பாடு செய்தனா் .
வேசிக்கு காசு
வேணும் ...
வருபவள் ஓசிதானே...
மூக்குமுட்டத் தின்னவும்...
முந்தானை விரிக்கவும்...
மூன்று பவுனுடன் ...
விவரம் தெரியாத ஒருத்தி...
விளக்கேற்ற வீடு வந்தாள் .
வயிற்றில் பசித்தாலும்...
வயிற்றுக்குக் கீழ் பசித்தாலும்...
வக்கணையாய் பறிமாறினாள்...
தின்னு கொழுத்தேனே தவிர...
மருந்துக்கும் திருந்தவில்லை...
மூன்று பவுன் போட
முட்டாப் பயலா நான்...
இன்னும் ஐந்து வேண்டுமென்று ,
இடுப்பில் மிதித்து அனுப்பி வைக்க ...
கறவை மாட்டை சந்தைக்கு அனுப்பி ,
நான் கட்டினவளை வீட்டுக்கு அனுப்பினான் ,
சொந்தம் விட்டுப்போகாமல் இருக்க...
மாமனாரான மாமன்...!
பார்த்து வாரமானதால்...
பசிக்கிறதென்று கைப்பிடிக்க..,
தள்ளிப் போனதென்று தள்ளி விட்டாள்...
சிறுக்கிமவ .
இருக்கும் சனி...
போதாதென்று
இன்னொரு சனியா..?
மசக்கை என்று சொல்லி...
மணிக்கொரு முறை வாந்தி..,
வயிற்றைக் காரணம் காட்டி...
வாய்க்கு ருசியாய் சமைப்பதில்லை..,
சாராயத்தின் வீரியத்தால்...
சண்டையிட்டு வெளியே அனுப்ப..,
தெருவில் பார்த்தவரெல்லாம்
சாபம் விட்டுப்
போவார்கள் .
கடைசி மூன்று மாதம்...
அப்பன் வீட்டுக்கு
அவள் போக..,
கறிவேப்பிலைக்காரி ஒருத்தி...
வாசனையாய் வந்து போனாள்..,
தர்ம ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளதாக...
தகவல் சொல்லியனுப்ப..,
ரெண்டு நாள் கழித்து...
கடமைக்கு எட்டிப் பார்த்தேன்...
கருகருவென
என் நிறத்தில்...
பொட்டபுள்ள..!
எவன் கேட்டான் இந்த மூதேவியை... ?
'கள்ளிப் பால் கொடுப்பாயோ ...
கழுத்தை திருப்புவாயோ...
ஒத்தையாக வருவதானால் ...
ஒரு வாரத்தில்
வந்து விடு '
என்று சொல்லி திரும்பினேன் .
ஆறு மாதமாகியும் அவள் வரவில்லை...
அரசாங்க மானியம்
ஐயாயிரம்...
கிடைக்குமென்று
கையெழுத்துக்காகப்
பார்க்கப் போனேன் ,
கூலி வேலைக்குப் போனவளைக்
கூட்டி வரவேண்டி...
பக்கத்து வீட்டு பாப்பா ஓடிச் செல்ல...
ஆடி நின்ற ஊஞ்சலில்...
அழுகுரல் கேட்டது..,
சகிக்க முடியாமல்
எழுந்து ...
தூக்கினேன் ...
அதே அந்த பெண்
குழந்தை..!
அடையாளம் தெரியவில்லை ...
ஆனால் அதே கருப்பு...
கள்ளிப் பாலில்
தப்பித்து வந்த அது ,
என் கைகளில் சிக்கிக் கொண்டது..,
வந்த கோபத்திற்கு...
வீசியெறியவே தோன்றியது...
தூக்கிய நொடிமுதல்...
சிரித்துக் கொண்டே இருந்தது,
என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,
என்னைப் போலவே
சப்பை மூக்கு,
என்னைப் போலவே
ஆணாகப்..,
பிறந்திருந்தால் இந்நேரம் இங்கிருக்க
வேண்டியதில்லை...,
பல்லில்லா வாயில்...
பெருவிரலைத் தின்கிறது,
கண்களை மட்டும்..,
ஏனோ சிமிட்டாமல் பார்க்கிறது,
ஒரு கணம் விரல் எடுத்தால்...
உதைத்துக் கொண்டு அழுகிறது,
எட்டி... விரல் பிடித்துத்..
தொண்டை வரை வைக்கிறது,
தூரத்தில்
அவள் வருவது கண்டு...
தூரமாய் வைத்து விட்டேன்...
கையெழுத்து வாங்கிக்கொண்டு...
கடைசி பஸ்ஸுக்கு திரும்பி வருகிறேன்,
முன் சீட்டில் இருந்த குழந்தை...
மூக்கை எட்டிப் பிடிக்க
நெருங்கியும்...
விலகியும் நெடுநேரம்...
விளையாடிக் கொண்டு இருந்தேன்!
ஏனோ அன்றிரவு ...
தூக்கம் நெருங்கவில்லை,
கனவுகூட
கருப்பாய் இருந்தது,
வெளிச்சம் வரும்வரை காத்திருந்தேன்...
போட்ட கையெழுத்துப் பொருந்தவில்லை...
என்ற பொய்த்தனத்தோடு ,
இன்னொரு கையெழுத்துக்கு...
மீண்டும் சென்றேன்,
அதே கருப்பு,
அதே சிரிப்பு,
கண்ணில் மச்சம்,
சப்பை மூக்கு...
பல்லில்லா வாயில்
பெருவிரல் தீனி...
ஒன்று மட்டும் புதிதாய் ...
எனக்கும் கூட
சிரிக்க வருகிறது ...
கடைசி பஸ், ஆனால் பேருந்தில்...
எந்த குழந்தையும் இல்லை .
வீடு நோக்கி நடந்தேன்,
பாதி வழியில் கறிவேப்பிலைகாரி...
கைப் பிடித்தாள்
உதறிவிட்டு நடந்தேன்...
தூக்கம் இல்லை
நெடுநேரம்...
பெருவிரல்
ஈரம் பட்டதால் ...
மென்மையாக
இருந்தது ...
முகர்ந்து பார்த்தேன் ....
விடிந்தும் விடியாததுமாய்...
காய்ச்சல் என்று சொல்லி...
ஊருக்கு
வரச் சொன்னேன்,
பல்கூட விளக்காமல் ...
பஸ் ஸ்டேண்டுக்கு சென்று விட்டேன்,
பஸ் வந்ததும் லக்கேஜை
காரணம் காட்டி...
குழந்தையைக் கொடு என்றேன் !
பல்லில்லா வாயில் பெருவிரல் !
இந்த முறை பெருவிரலைத் தாண்டி... ஈரம் எங்கோ
சென்று கொண்டு இருந்தது...
தினமும் என் மீது படுத்துக்கொண்டு...
பொக்கை வாயில் கடிப்பாள்,
அழுக்கிலிருந்து
அவளைக் காப்பாற்ற...
நாளுக்கு நாலைந்து முறை குளிப்பேன்,
பான்பராக் வாசனைக்கு...
மூக்கைச் சொரிவாள் ,விட்டு விட்டேன் ...
சிகரெட் ஒரு முறை..,
சுட்டு விட்டது
விட்டு விட்டேன்...
சாராய வாசனைக்கு...
வாந்தியெடுத்தாள் ...விட்டு விட்டேன்,
ஒரு வயதானது ...
உறவுகளெல்லாம்...
கூடி நின்று ,
'அத்தை சொல்லு '
'மாமா சொல்லு '
'பாட்டி சொல்லு '
'அம்மா சொல்லு 'என்று...
சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள்...
எனக்கும் ஆசையாக இருந்தது,
'அப்பா 'சொல்லு
என்று சொல்ல,
முடியவில்லை ......
ஏதோ என்னைத் தடுத்தது,
ஆனால் அவளை எதுவும் தடுக்கவில்லை...
அவள் சொன்ன முதல் வார்த்தையே...
'அப்பா'தான்!
அவளுக்காக எல்லாவற்றையும்...
விட்ட எனக்கு ,
அப்பா என்ற
அந்த வார்த்தைக்காக...
உயிரைக்கூட விடலாம் என்று தோன்றியது,
அவள் வாயில் இருந்து வந்த..,
அந்த வார்த்தைக்காக மீண்டும் பிறந்தேன்,
இந்த சாக்கடையை...
அன்பாலேயே கழுவினாள்...
அம்மா சொல்லித் திருந்தவில்லை,
அப்பா சொல்லித் திருந்தவில்லை ,
ஆசான் சொல்லித் திருந்தவில்லை ,
நண்பர்கள் சொல்லித் திருந்தவில்லை ,
நாடு சொல்லியும் திருந்தவில்லை,
முழுசாய் மூன்று வார்த்தை பேச வராத ...
இந்த முகத்தை பார்த்து திருந்தி விட்டேன்..
வளர்ந்தாள்..,
நானும் மனிதனாக வளர்ந்தேன்...
படித்தாள்,
என்னையும் படிப்பித்தாள்...
திருமணம்
செய்து வைத்தேன் ,
இரண்டு குழந்தைகளுக்குத் தாயானாள்,
இரண்டு குழந்தைகளுமே...
பெரியவர்களாய் வளர்ந்து விட்டார்கள்,
நானும்கூட தாத்தாவாகி விட்டேன் ,
என்னை மனிதனாக்க...
எனக்கே மகளாய் பிறந்த...
அந்த தாய்க்காகக் காத்திருக்கிறது ...
ஊரே ஒன்று கூடி..,
உயிர்த் தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்,
எனக்குத் தெரியாதா என்ன?
யாருடைய பார்வைக்கப்புறம்...
பறக்கும் இந்த உயிரென்று?
வானத்தை பார்த்துக் காத்திருக்கிறேன்...
......................வாசலில் ஏதோ சலசலப்பு,
நிச்சயம் என் மகளாகத்தான் இருக்கும்..,
என் பெருவிரலை யாரோ
தொடுகிறார்கள் ,
அதோ அது அவள்தான்,
மெல்ல சாய்ந்து ...
என் முகத்தை பார்க்கிறாள் ...
என்னைப் போலவே...
கண்களில் மச்சம்,
சப்பை மூக்கு,
கருப்பு நிறம்,
நரைத்த தலைமுடி,
தளர்ந்த கண்கள்,
என் கைகளை முகத்தில் புதைத்துக் கொண்டு,
'அப்பா அப்பா' என்று குமுறிக் குமுறி அழுகிறாள்,😰😰😰😭😭
அவள் எச்சில்
என் பெருவிரலிட,
உடல் முழுவதும் ஈரம் பரவ...
ஒவ்வொரு புலனும் துடித்து...
#அடங்குகிறது....................
.......................
"தாயிடம் தப்பி வந்த
மண்ணும்...
கல்லும்கூட ,
மகளின் ...
கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
இதை படிக்கும்போது கண்கள் ஈரமானல் நீங்கள் நல்ல தகப்பனாக பாசமுள்ள பிள்ளையாக இருப்பீர்கள்🙏...

நன்றி 
#முகநூல் #படித்ததில் பிடித்தது 

Monday, June 12, 2017

கோயம்புத்தூர் பற்றி அறியாதவர்களுக்கு.

 கொங்கு தமிழ் பேசும் எங்கள் கோவை, தென்இந்தியாவின் மான்செஸ்டர், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய நகரம், கோவை சுற்றுபுறம் முழுவதும் சேர்த்து, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழும் ஊர்.

  கோவன் என்ற இருளர் தலைவன் பெயரில் உருவானதே கோவன் புத்தூர், அது உருமாறி கோயம்புத்தூர் ஆனதாக வரலாறு.

 14 சட்டமன்ற தொகுதிகளையும், 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் கொண்டது இந்த பெருநகர்.

  மேற்கு தொடர்ச்சி மலைகளின் அடியில் இந்நகரம் அமைந்துள்ளதால் குறைந்த பட்ச வெப்பநிலையான 12 டிகிரி அடிக்கடி இங்கு நிலவும், உலகின் இரண்டாமிட மிக சிறந்த சுவை கொண்ட சிறுவாணி தண்ணீர் இங்கு புகழ் பெற்றது. இங்கு நீர் ஆதாரத்திற்கு அத்திக்கடவும் உண்டு.

 புகழ் பெற்ற இந்து வழிபாட்டு தளங்கள், மருதமலை, பேரூர் பட்டீஸ்வரர், ஈச்சனாரி, கோனியம்மன் கோவில், வெள்ளியங்கிரி, ஈசா, காரமடை ரங்கநாதர், தென்திருப்பதி,  கிறிஸ்துவர்களுக்கு மைக்கேல், பழைய பாத்திமா சர்ச்கள், காருண்யா, முஸ்லீம்களுக்கு கோட்டை,  ரயில்நிலையம், போத்தனூர், உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல்கள்.
     
 தொழில் மற்றும் பல்வேறு துறையில் மிக புகழ் பெற்ற சில பிரபலங்கள்,
 ஜி டி நாயுடு, நரேன் கார்த்திகேயன், ராஜேஷ் குமார், நிருபமா வைத்தியநாதன் உடுமலை நாராயணன், நா, மகாலிங்கம், ஜி கே சுந்தரம், சாண்டோ சின்னப்பா தேவர், அவினாசிலிங்கம் செட்டியார்,

சினிமா துறையில் சிவகுமார், மணிவண்ணன், சத்யராஜ், ரகுவரன்,  கவுண்டமணி, பாக்யராஜ், சுந்தரராஜன், நிழல்கள் ரவி, சின்னி ஜெயந்த், கோவை சரளா என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

300க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களும், ஆயிரக்கணக்கில் சிறு, குறு  தொழில் நிறுவனங்களும், இரண்டாயிரத்தும் அதிகமான தொழிற்சாலைகளும் இங்குண்டு.  

சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் பெருமை குன்றாமல் இயங்கி வருகிறது.

சுற்றுலா தளங்கள் சிறுவாணி, கோவை குற்றாலம், பாரெஸ்ட் மியூசியம், வஉசி பறவைகள் பூங்கா, சிங்கநல்லூர் லேக் போன்றவை.
 ப்ளாக் தண்டர், கோவை கொண்டாட்டம், மகாராஜா என மூன்று தீம் பார்க்குகள் கொண்டது, இதில் ப்ளாக் தண்டர் அதிக நீர் விளையாட்டுகள் கொண்ட இந்திய அளவில் மிக பெரிய தீம் பார்க்குகளில் ஒன்று.

கோவையை சுற்றி அமைத்துள்ள முக்கிய சுற்றுலா தளங்களை கீழ்க்கண்ட லிங்கை சொடுக்கி பாருங்கள்
 நூறு கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள கோவை சுற்றுலா தளங்கள்

உபசரிப்பிற்க்கு எவ்வளவு புகழோ அதே போல் மதச்சண்டைக்கு புகழ் பெற்றது என ஒரு பிம்பம் இருந்தாலும் இங்கு வசிக்கும்  ஒவ்வொருவருக்கும் குறைந்த பட்சம் ஐந்து மிகநெருங்கிய (கவனிக்கவும் மிகநெருங்கிய) நண்பர்களாவது வேற்று மதத்தில் தான் உண்டு. உங்கள் கோவை தோழர், தோழிகளிடம் இதை சோதித்து கொள்ளுங்கள்    
நட்சத்திர விடுதிகள் விபரம் கீழ்க்கண்ட லிங்கில் உள்ளது
Star Hotels in coimbatore     

மூன்று பெரிய வணிக வளாகமும் (இன்னொன்று கட்டப்பட்டு வருகிறது), ஒரு சர்வதேச விமான நிலையமும், ரயில் நிலையமும் உண்டு.  
 சிங்காநல்லூரில் அமைத்திருக்கும் சாந்தி நிறுவனம், பெட்ரோல், உணவு, மருந்து ஆகியவற்றை எல்லோருக்கும் மிகமிக குறைந்த விலையில் அதிக  தரமானவற்றை தருகிறது.

வெளிநாட்டு பணத்தை ஈட்டி தரும் டாலர் தேசமான திருப்பூர் கோவையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோவையின் சுற்றுப்புரங்கள் மற்றும் அழகுகள் பற்றிய முக்கிய மூன்று பாடல்கள் கீழ்க்கண்ட லிங்கில் உள்ளன. இவைகளை பாருங்கள், எங்கள் ஊரை பற்றிய முழுமையை காட்சிப்பூர்வமாக நீங்களே உணர்வீர்கள்.


1. கோவை ஏந்தம்
2. கோவைப்பாட்டு
3. ரேடியோ சிட்டி கோவை பாட்டு


புரியும்படி சொல்ல வேண்டுமெனில், ஆறு மாதங்கள் நீங்கள் இங்கே தங்கி இருந்தால், நிரந்தரமாக தங்க விரும்புவீர்கள்.
அதுதான் கோவை


சற்றேறக்குறைய (சொந்த) சிறுகதை

அசந்து தூங்கிக்கொண்டிருந்த என்னை மாலை 3:55க்கு தர்மபத்தினி எழுப்பி "டைம் ஆகிடுச்சு கிளம்பு" என்றாள். 4 அல்லது 4:05க்கு அவளுக்கு நிறுவன வாகனம் 7 கிலோமீட்டர் தாண்டி வரும், அங்கே அவளை இறக்கி விட வேண்டும். எனக்கு நாலரைக்கு பணி தொடங்கும்.

 "அடிப்பாவி பழி வாங்கிட்டேயே", என்றதற்கு "நல்லா தூங்கிட்டு இருந்தே, அதான் தூங்கட்டும்ன்னு விட்டுட்டேன்" என்றாள். அவசரமாக புறப்பட்டு அவளை கொண்டு போய் சேர்க்க வேண்டியதை எண்ணி வண்டி எடுக்கையில் "ரீசார்ஜ் தீந்து போச்சு, போட்டு விடு" என்றவள்  காலையில் சொன்னது வேறு ஞாபகம் வந்து தொலைத்தது.

 வந்து போட்டு விடலாம் என அதை கிடப்பில் போட்டு விட்டு, வேகமாக நிறுத்தத்தை நோக்கி செல்கையில், "என்கிட்ட காசு இல்ல, போகும்போது தந்துட்டு போ" என்றாள், தலையாட்டி விட்டு பர்ஸை பேண்ட் பாக்கெட்டில்  தடவி பார்க்கையில் அவசரத்தில் மறந்து விட்டு வந்தது தெரிந்தது.
 அந்த வாகனம் மட்டும் போய் விட்டால் பஸ்ஸில் அவளை அனுப்ப  வேண்டும், பத்துபைசா கூட பாக்கெட்டில் இல்லை. திரும்ப வீட்டிற்கு வந்து எடுத்து சென்று பஸ் வைத்து விட வேண்டும். எனக்கும் வேலை நேரம் தாமதமாகும் "இந்த நாள் அநேகமாக நரக நாளா"க மாற தொண்ணூறு சதவீதம் வாய்ப்பு இருக்கிறது.


நல்லவேளையாக நிறுத்தம் வந்த போது அவள் நிறுவன வாகனம் இன்னும் வந்திருக்கவில்லை. "அப்பாடா", என இருந்தது.

மனைவியின் உறவினர் ஒருவரை அங்கு பார்க்க நேர்ந்தது,

"எப்படி வச்சிருக்கீங்க இவளை", என்றார்.
"பேக்ல பத்து பைசா இல்லாம, மொபைல்ல கூட பேலன்ஸ் இல்லாம, சிறப்பா வச்சிருக்கேன்" என்றேன். நல்லவேளை என் தர்மபத்தினியின் பார்வைக்கு நெருப்பில்லை, பொசுங்கி இருப்பேன்.
 கெக்க பேக்கே என சிரிக்க ஆரம்பித்த உறவினர் "எப்பவுமே தமாஸ் தான் தம்பி நீங்க". என்றார்
தமாஸா இது?