பவாவின் மேய்ப்பர்கள் முடித்திருக்கிறேன், "வாழ்க்கைன்னா என்னன்னு தெரியுமா? எப்படி வாழணும்ன்னு தெரியுமா? " என என்னை கைப்பிடித்து கூட்டிப் போய் அவர் சுட்டிக் காட்டுகிற மனிதர்கள் முன் கூசிப் போய் நிற்கிறேன். காற்றுக்காய் பாடும் இசைக் கலைஞனுக்காக தானாய் வழியுது கண்ணீர், தனிமையில் எப்போதோ வரும் ரயிலுக்காக தனிமையில் புத்தகங்களுடன் தவம் கிடந்தவர் பிரமிக்க வைக்கிறார். நாடகமென்றால் என்னவென்றே தெரியாத என் தலைமுறைக்கு நாடகங்களுக்காக அனைத்தையும் உதறியவரை வியப்போடு பார்க்கிறேன், ஒரு ஓவியத்தை தானே உருவாக்கி அதில் நெக்குருகி தெய்வ தன்மையை காணும் மனிதரும் இருக்கிறார். வாழ்க்கையில் எல்லா புயல்களையும் சந்தித்தும் ஓயாமல், அன்பு என் பெயரல்ல, இனி அதுவே வாழ்வு என வேகமாக செயல்புரிகிறார் வீரப்பன் காடுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர். ஆளுமைகள் என அறியப்படுபவர்களின் முன் கம்பீரமாகவும், அவர்களை மதிக்காமலும், சோற்றுக்கு அமர்ந்திருப்பவர்கள் முன்னே தாழ்ந்தும் போகிற மனிதனல்லவா பெருங் கலைஞன்? "பொருளாதார வளம் மயிருக்கு சமானம்" என்று புறந்தள்ளி எளிய மனிதர்களின் நட்புக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக போராடும் அற மனிதர்கள் கதையில் முக்கால்வாசி நிரம்புகின்றனர்.
Thursday, November 12, 2020
பவாவின் மேய்ப்பர்கள்
Monday, August 24, 2020
சோளகர் தொட்டி புத்தக விமர்சனம்
மிக எளிமையான மொழியில் எழுதியதாலோ என்னவோ முதல் பத்து பதினைந்து பக்கங்களுக்கு இந்த நாவல் மீது ஈர்ப்பே வரவில்லை, அதாவது முன்பெல்லாம் மரண மொக்கை படத்துக்கு தேசிய விருது கொடுப்பார்கள் அல்லவா அப்படி, அத்துடன் நிறுத்திவிட்டு இந்த நாவலை குறித்தும் அதன் ஆசிரியர் குறித்தும் இணையத்தில் தேடி பார்த்தேன். பவானியை சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன், பி.யூ.சி.எல். என்னும் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளராகவும் இருக்கிறார். இந்த புத்தகத்தை தமிழகத்தில் வெளியிட்டால் பிரச்சனை உருவாகும் என கருதி மலேசியாவில் வெளியிட்டிருக்கிறார் என படித்தேன்.
தொடர்ந்து தேடியதில் முக்கியமான செய்தி ஒன்று கண்ணில் பட்டது, வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சதாசிவம் கமிஷன் முன்பு பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களை கூட்டிச் சென்று சாட்சி சொல்ல வைத்திருக்கிறார். அவர்களுக்கு நேர்ந்த அவலங்களை கேட்கையில் நடுங்கி போய் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதி இருக்கிறேன் என்றார்.
அதற்கு பின் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன், அந்த எழுத்துக்களை மீண்டும் படிக்கையில் ஈர்ப்பாக மாறியதை மறுக்க முடியாது. இரண்டு பாகமாக நாவலை பிரித்திருக்கிறார். முதல் பாதி அழகியல், அவர்களின் கொண்டாட்டம், வழிபாடு, எளிய அழகான வாழ்க்கை முறை, வன விலங்குகள், வேட்டை, அரிசியை எப்போதாவது ஒருமுறை மட்டுமே உண்ண கிடைக்கும் சந்தர்ப்பங்கள் என அந்த மலையோர வாழ்க்கைக்கு நம்மை பழக்கப்படுத்திவிடுகிறார். இதில் ஆச்சர்யப்படும் தகவல்கள் என்னவெனில் பெண்ணுரிமை, பகுத்தறிவு என்றெல்லாம் என்னவென்றே தெரியாத, விளக்கினாலும் புரிந்து கொள்ள இயலாத ஒரு இனத்திலிருந்து பெண்ணின் மறுமணம், திருமணமானமாகி கணவன் இறந்த பெண் தன்னைவிட வயது குறைந்த ஆணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்வது என மலைவாழ் மக்களின் வாழ்க்கை ஆச்சர்யப்படுத்துகிறது. இருநூறு பக்கங்கள் தாண்டி வீரப்பனையும் சட்டென நாவலில் கொண்டுவருகிறார்
இரண்டாம் பாகம் லாக்கப் எனும் திரைப்படத்தில் வரும் மனிதத்தன்மையற்ற தாக்குதலை விட நூறு மடங்கு வீரியம் மிக்க தாக்குதல்களை அவர் விவரிக்கும் போது அந்த வலி நம்மையும் தொற்றிக்கொள்கிறது.
"அன்புராஜ், ,தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி சித்தன் ஆகியோர் 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு, இந்தியாவின் 70வது சுதந்திரத்தினத்தை யொட்டி விடுதலை செய்யப்பட்டனர்" என்றொரு சிறிய செய்தியை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சாதாரணமாக கடந்து சென்றிருப்போம், அன்புராஜை பற்றி பவா செல்லதுரை youtubeல் பேசியிருப்பார் தேடி பாருங்கள், தனது வாழ்க்கையை ஏறக்குறைய தொலைத்துவிட்டு புதிதாக உருவமைத்துக்கொண்டவர் அன்பு, அவர் சோளகர் தொட்டி பற்றி சொல்கையில் பாலமுருகன் எழுதியது மிக சொற்பம் என்கிறார்.
விடுதலையான நான்கு பேரில் துப்பாக்கி சித்தன் என்பவர் தான் இந்த நாவலின் நாயகன் சிவண்ணா, கொஞ்சம் தேடி பார்த்தீர்கள் எனில் அவர் வீரபனுடன் இருந்த புகைப்படம் முதற்கொண்டு, தற்போது தனது நிலங்களை வீட்டையெல்லாம் இழந்துவிட்ட நிலையில் அரசின் உதவியை எதிர்பார்க்கும் செய்திகளையும் காணலாம். பாலமுருகன் சமீபமாக ஒப்புக்கொண்ட வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் இன்னமும் கூட பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு எந்த வித நியாயமும் கிடைக்கவில்லை என்பதே.
அந்த சாதாரண எழுத்துக்களின் வலிமை இரண்டாம் பாகத்தில் உலுக்கி எடுத்துவிடுகிறது, படிக்கையில் குமட்டிக்கொண்டு வாந்தி வருவது போல நிகழ்வை நமக்கு கடத்துகிறது.
ஆறுமாத கர்ப்பிணியை வன்புணர்ச்சி செய்வது, நிர்வாணமாக்கி பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது, பிறந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்று தாயிடம் தகவல் மட்டும் தருவது, உடலுறுப்புகளை அடித்து ஊனப்படுத்துவது என ஆதிரைக்கு பிறகு வாசிக்க சிரமப்பட்ட நாவல் என இதை கூறுவேன்.
நிச்சயம் உங்களை இது தூங்கவிடாது பாதிக்கும்.
கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல்... அல்ல, உண்மையில் நடந்த நிகழ்வு
Tuesday, August 18, 2020
சாந்தாக்காவும், சரஸ்வதியம்மாவும்
கடந்த ஆகஸ்ட் 12 வீட்டுக்காரியோட பிறந்தநாள், கொரானாவால பெரிய கொண்டாட்டம் எல்லாம் இல்லை, வழக்கமாக அப்பா, மாமா, அத்தை, நண்பர்கள் என சிறிய கூட்டம் கொள்ளும் வீடு, இந்தமுறை யாரும் இல்லாததால், நாங்கள் மூன்று பேர் மட்டுமே கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டோம். வெள்ளி கொலுசு, ஒரு புடவை, ஒரு சுடிதார், ஒருகிலோ அளவு பர்த் டே கேக் வாங்கியிருந்தேன்.
சரியாக கேக் வெட்டும் சமயத்தில் காலிங் பெல் சப்தம் கேட்டு போய் பார்த்தால் சாந்தாமணி அக்காவும், சரஸ்வதியம்மாவும் நின்றிந்தார்கள். (ஏரியா துப்புரவு பணியாளர்கள்) உள்ளே அழைத்தால் வருவதற்கு தயக்கம் காட்டினார்கள், "யாருமே இல்லை, நீங்களாவது வரப்போறீங்களா? இல்லையா?" என கேட்ட பின் தயங்கி தயங்கி உள்ளே வந்தார்கள். கேக் கொடுத்ததில் சரஸ்வதியம்மா சாப்பிட ஆரம்பித்தார், சாந்தாமணி கையில் வைத்தபடியே நின்றிந்தார். "ஏன்?" என்றேன் "பேரனுக்கு கொண்டு போலாம்ன்னு" என்றவரை சாப்பிடச்சொல்லிவிட்டு அரைகிலோவை இரண்டாக பிரித்து தனித்தனியாக இரண்டு டிபன் பாக்ஸில் போட்டு என்னவள் அவர்கள் இருவரின் கையிலும் கொடுத்துவிட்டாள்.
இன்று இரண்டு டிபன் பாக்ஸ்களும் திரும்ப வந்திருந்தது, அட்டகாசமான சூடான சிக்கன் பிரியாணியுடனும் முட்டையுடனும்.
அதில் அளவுக்கு அதிகமாக பிரியமும் அன்பும் கலந்திருந்தது
அன்பொன்றே வாழ்வின் இழை, அதனால்தான் பெய்கிறது மழை
Tuesday, July 21, 2020
மூணார் சுற்றுலா
- மூணாரை விவரிக்க சொர்க்கம் என்று வார்த்தை நிஜமாகவே போதாது. கோவையில் இருந்து சுமார் நாலரை மணி நேரத்தில் உடுமலைப்பேட்டை வழியாக மூணாரை அடைந்து விடலாம். ஆனால் ஜூன் ஜூலையில் மழை பெய்வதால் உருவாகும் குட்டி குட்டி அருவிகளை நின்று ரசித்து கொண்டே போனால் ஏழு எட்டு மணிநேரம் கூட போதாது.
- உடுமலை செக் போஸ்ட் காரை திறந்து
வைத்திருந்தால் யோசிக்காமல் உள்ளே நுழைந்து தின்பது கிடைத்தால் ஆட்டையை போட நமது
பங்காளிகளாக குரங்குகள் தேடுவார்கள், எனது காரில்
சறுக்கி விளையாடிய குரங்கு வழுக்கிக்கொண்டு வந்த போது கீச் என்று வந்த சப்தம்
இன்னமும் நினைவிருக்கிறது.
- உடுமலை தாண்டி செக் போஸ்ட், அன்பின் தமிழ்காவலர்கள் மூன்றுமுறை சோதனை என்ற பெயரில் ஒவ்வொன்றிலும் 30ரூபாய் வாங்கிக்கொண்டு எதையும் சோதனை செய்யாமல் கேரளாவிற்குள் விடுவார்கள். கேரள செக் போஸ்டில் காசு கொடுத்தால் காறி உமிழ்ந்து வாகனத்தை முழு சோதனையிட்டு பிளாஸ்டிக் அகற்றி அனுமதிப்பார்கள்
- உள்ளே நுழைய ஆரம்பிக்க வேண்டியதுதான். அதன்பின் சாலை ஒற்றை ரோடும் மழையும் இருப்பதால் மிக பாதுகாப்பாக ஓட்ட வேண்டியது அவசியம்.
- முதல்நாளுக்கு தேவையான உணவை வீட்டிலிருந்தே எடுத்து செல்வது பழக்கம். நல்ல உணவென்பது மூணாரில் கிடைக்கும்,
- வழியில் மற்ற உணவகங்கள் மிக மோசமாக
இருக்கிறது. பிரட் ஆம்லெட் நம்பி உண்ணலாம்
நாங்கள் கொண்டு சென்ற உணவை அருவியில் கால் நனைத்துக்கொண்டே சாப்பிட்டது
அழகான அனுபவம்.
- அடுத்தது லேக்கம் என்ற சிறிய அருவி வருகிறது. ஒரு மணி நேரம் சிறுவர்கள் மற்றும் நாம் நீரில் விளையாடலாம். பக்கத்தில் சிறிய கடைகள் இருக்கும், டீ காப்பி கூட சாப்பிட தகுதியில்லாதவை. ரிஸ்க் வேண்டாம்.
- அடுத்தது இரவிகுளம் பார்க்கை தவறவிடாதீர்கள், டிக்கெட் வாங்கி விட்டால், அவர்களே வனத்திற்குள் அழைத்து செல்வார்கள், வெகு உயரத்தில் இருந்து அருவி பேருந்தின் மேல் விழும் அழகு கண் நிறையும். படபட வென நீர் பேருந்தின் மேலும் நம் மேலும் அடிக்கும்போது நம் குழந்தை பருவம் திரும்பும்
- 97 கி.மீ. பூங்கா, அரிய பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடம். நீலக்குறிஞ்சிகள் ஆண்டு முழுவதும் பூத்திருக்கும். அழிந்து வரும் அரிய வகை உயிரினமான வரையாடு இங்கே காணலாம்.
- மூணாறுல நாங்க ஒரு நெஸ்ட்ன்னு ஒரு பட்ஜெட் ரிசார்ட்ல தங்கிருந்தோம், இது மூணார் சிட்டில இல்ல, ஏழு எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருந்தது
- அப்போ எனக்கு அங்கே தங்க Gift Card, make my tripல 30% offer + break fast complimentary. Room and food is OK. ஆனா அதோட பால்கனி வியூ செம்ம சூப்பர்
- அப்புறம் Tour Placeன்னு சொன்னாவே நான் ஜெர்க் ஆகிடுவேன், அதெல்லாம் பயணிக்கு செட்டாகாதுங்கிற மனநிலைதான். இருந்தாலும் இதெல்லாம் நல்லாவே இருக்கும். மற்ற Tour இடமெல்லாம் கோவாலு (Google) கிட்ட கேளுங்க
- Top Point மிஸ் பண்ணிடாதீங்க, காலையிலேயே போய்டுங்க, மேகம் காலுக்கு கீழே இருக்கும். கண்டீப்பா பார்க்க வேண்டிய இடம்.
- பொதுவா கேரளால எனக்கு ரொம்ப பிடிச்சது என்னன்னா, சுத்தம். சின்ன பேப்பர் கீழ கிடந்தாலும் உடனே சுத்தம் பண்ணிடறாங்க, இயற்கையை அழகா வச்சிக்கிறாங்க, பாதுகாக்கறாங்க...
- வேதனை என்னென்னா நம்ம ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா வன பாதுகாப்பு, பராமரிப்பு கூட்டம் எதுக்கு இருக்குன்னே...
- அவ்ளோதான் டீ முடிஞ்சு போச்சு...
- நன்றி வணக்கம்
Monday, May 25, 2020
மதுரை உணவுக்கடைகள் -ஜீவன்
வாங்க போவோம்
முதல்ல மங்களகரமா ஸ்வீட்லருந்து ஆரம்பிப்போம்..
ஸ்வீட்னா இது நம்ம பாரம்பர்ய ஸ்வீட்டு... "அதிரசம்" தானப்ப முதலிதெருவுலருந்து வடக்கு ஆவணி மூலவீதி தொடங்குர முக்குல ஒரு கடை இருக்கு அந்தக்கடையில அதிரசம் திங்கனும்... சும்மா டரியலா இருக்கும்.. அந்த வெளிப்புற மொறுமொறுப்பு... கடிச்சதும் உள்ள அம்புட்டு மிருதுவா இருக்கும்... ஒன்ன எடுத்து திங்க ஆரம்பிச்சா அங்கயே நின்னு நாலஞ்ச திண்ணாத்தான் மனசு ஆறும்...
காலை டிபனுக்கு, காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு எதிர் சந்துல நேரா போய் SS காலனில SBI பேங்க்குக்கு சைடு ரோட்டுல போனா கெளரின்னு ஒரு கடை இருக்கு. பைபாஸ் ரோடு கெளரிகிருஷ்ணா இல்ல... இது குட்டிக்கடை... இட்லி,தோசை,பூரி, பொங்கல்னு எல்லாமே நல்லாருக்கும்... அங்க என்ன ஸ்பெசல்னா... அந்த சாம்பார்ர்ர்ர்ர்ர்... செம்மையா இருக்கும் கைல வாங்கி குடிக்கலாம்... அதோட டெய்லி ஒரு ஸ்பெசல் சட்னி அரைப்பாங்க... எல்லாமே கெத்து காட்டும்
பெரும்பாலும் மதுரைல காலை நேர டிபன கடைல சாப்பிடுர பழக்கம் மக்களுக்கு குறைவு , பெரும்பாலும் சைவக்கடைகள்தான் இருக்கும்... 11 மணிக்கெல்லாம் மத்தியாணச் சோத்த ரெடி பண்ணீருவாய்ங்க... மதியத்த இங்க ஒவ்வொரு மாதிரி கொண்டாடலாம்
அறுமுகம் மெஸ்னு ஒரு கடை தல்லாகுளம் பெருமாள் கோவில் கிரவுண்டுல ஓரமா இருக்கு... முன்னல்லாம் ரோட்டுக்கடையா இருந்தது இப்போ பக்கத்துலயே நல்ல ஹோட்டலா பெரிசாக்கி நடத்துராங்க.. அங்க மட்டன் பிரியாணி நல்லாருக்கும்.. இடிச்ச நாடுக்கோழி யோட சேத்து சொலட்டிக்கிட்டு அடிக்கலாம்
பக்கத்துலயே அம்மா மெஸ், குமார் மெஸ்லாம் இருக்கு ஆனா அதெல்லாம் பேருக்காக வெளியூர்காரங்க வந்து சாப்பிடுர இடமா மாறிப்போச்சு... அடுத்து கீழ்வெளிவீதி அம்சவள்ளி பிரியாணி... பிரியாணி கொஞ்சம் குழைவா இருக்கும்... அங்க விற்கிர கோழிச்சில்லரைன்னு ஒரு குழம்பு ஐட்டத்துக்கு 20 பேர் எப்பவும் வரிசைல நிப்பாய்ங்க... பிரியாணி மதியம் 2.30 க்கெல்லாம் காலியாகிடும்... அங்க ஒரு புரூட் மிக்சர் விப்பாய்ங்க பிரியாணிய ஒரு ஏத்து ஏத்திட்டு ஒரு மிக்சர போட்டம்னா ஒரு பினிஷிங்குக்கு வந்துரும்.
அப்புறம் காமராஜர் சாலைல கிருஷ்ணன் மெஸ்னு ஒரு கடை இருக்கு அங்க நல்லி பிரியாணி மெரட்டலா இருக்கும்... அப்பிடியே அந்த நல்லி எலும்புல கொத்தா ஒட்டி இருக்க கறி நல்லி எலும்ப பிடிச்சு ரெண்டு ஆட்டு ஆட்டுனா அப்பிடியே பூவா உதிரும் பாத்துக்கங்க... அங்க புறா, காடை, முயல்னு எல்லா சைடீஸும் பட்டயக்கெளப்பும்.. நான் சொன்னா எல்லாக்கடைலயுமே சீரகச்சம்பா பிரியாணிதான்... இங்க பாஸ்மதி பிரியாணிய பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டாய்ங்க... ராவுத்தர் கடைல மட்டும் கிடைக்கும்.
Sunday, May 10, 2020
ரத்தம் ஒரே நிறம் -சுஜாதா புத்தக விமர்சனம்
கொரோனா காலங்கள் ஏகப்பட்ட நேரத்தை கையில் கொடுத்திருக்கு. படிக்காம ஸ்டாக் வச்சிருந்த அத்தனை புத்தகங்களையும், பார்க்காம டிஸ்க்ல வச்சிருந்த அத்தனை படங்களையும் பார்க்க வச்சதால, குறைஞ்சது நாலு சேப்டராவது படிப்போம்னு, ரத்தம் ஒரே நிறம் முன்னுரை படிச்சா "அட" ன்னு ஆச்சர்யமா இருந்தது. இதை குமுத்துல தொடரா எழுத ஆரம்பிச்சப்போ சுஜாதாக்கு கொலை மிரட்டல் வரை வந்திருக்கு, எழுதுற கையை வெட்டிடுவோம்னு லட்டர், குமுதம் அலுவலகத்தை தாக்கிருக்காங்க, குமுதம் புத்தகத்தை ஒரு கூட்டமா சேர்ந்து எரிச்சிருக்காங்கன்னு ஏகப்பட்ட அதிர்ச்சி. சுஜாதா எழுத்துலக வாழ்க்கையில இப்படி ஒரு சம்பவமான்னு இருந்திச்சு. மத்தவங்களா இருந்தா அதையே ஒரு விளம்பரமா எடுத்திட்டு காசு பார்த்திருப்பாங்க, ஆனா சுஜாதா, "முழுசா நான் எழுதி இதை அவங்க படிச்சா புரிஞ்சுக்குவாங்க, ஆனா விளக்கம் கொடுக்க இது சரியான நேரமில்லை, தவிர வலது கையை வெட்றோம்கிறங்க, இடது கையால எழுத வேற தெரியாதே?"ன்னு ஜஸ்ட் லைக் தட் கடந்து போனார். பேர் மாற்றி புத்தகமா வந்த பின்னாடி ஏன் இப்போ ஒருத்தர் கூட எதிர்க்கலை? ஏன்னா அதில எதிர்க்கிறதுக்கான காரணமே அதில் இல்லைன்னு எழுதிருக்கார்.
கதை சுஜாதா பாணியிலேயே சொல்லனும்னா சொகுசு கார் அதி விரைவில் சாலையில் செல்வது போல் வழுக்கிக்கொண்டு செல்கிறது.
கதை கிட்டத்தட்ட நூத்தம்பது வருஷம் முன்னாடி நடக்கிறதால, வரலாற்று நாவல்கன்னாவே, சங்க தமிழ்ல எழுதி வாசகனை சாகடிக்காம, நாயகன் வீரத்தை, நாயகி அழகை ஏழு எட்டு பக்கம் விவரிக்காம சட்டுன்னு கதைக்குள்ள போய்டறார். ஆரம்ப பக்கங்கள்ல இருந்தே கதை சூடு பிடிக்குது. அந்த வேகத்தை கொஞ்சம் கூட குறைக்காம ஜெட் வேகத்துல கடைசி வரை நம்மை கொண்டுபோறார்.
தந்தையை கொன்ற இரக்கமில்லாத ஒரு கிறுக்குத்தனமான அதிகாரியான எட்வார்டை எப்படியாவது கொல்ல வேண்டும் அதுதான் தன் வாழ்க்கையின் ஒரே லட்சியம் என முடிவெடுத்து எட்வார்டை தேடி செல்கிறான் முத்துக் குமரன். அவனை பழி தீர்த்தானா என்பதுதான் ஒரு வரிக் கதை, ஆனால் நாமெல்லாம் பள்ளியில் படித்த சிப்பாய் கலகம் என தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இந்தியாவின் முதல் சுதந்திர போரே இந்த கதையின் அடிநாதம். ஆஸ்லி போன்று மனசாட்சி உள்ள வெள்ளைக்காரனையும் படைத்திருக்கிறார், எனக்கு மிகவும் பிடித்துப்போன பாத்திரம் அது. 1857ல் சிப்பாய் கலகம் என்ற முதல் இந்திய சுதந்திர போர், அதை அடக்க கர்னல் நீலின் தலைமையில் சென்னையில் இருந்து ராணுவம் கல்கத்தா சென்றது, அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது, பீகாரில் இந்தியர்கள் வெள்ளைக்காரர்களை சித்திரவதை செய்தது, நாநாவின் ஆதரவு, முடிவு என இந்த கதையில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் உண்மையானவை
உடன்கட்டை ஏறும் காட்சியை சுஜாதா விவரிக்கையில் நேரில் நின்று பார்த்து பதைபதைத்த உணர்வு. சுதந்திர போராட்ட மத்திய காலம் என்பதால் தூய தமிழிற்கு அதிகம் வேலை இல்லை அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனக்கே உரிய பாணியில் ஏராளமான சுவாரஸ்யம் கலந்தது அங்கங்கே நகைச்சுவை வசனங்கள் தூவி விளையாடி இருக்கிறார். வழக்கமான சரித்திர கதைகளில் முக்கியத்துவம் பெரும் வித்தை சாமியார்கள் போன்றவர்களின் பாரம்பரியத்தை சிதைக்காமல் பைராகியை உலாவ விட்டிருக்கிறார்.
பூஞ்சோலையும் எமிலி அட்கின்சனும் மறக்க முடியாத பாத்திரங்கள். சில நாவல்கள் படிக்கையில் நம் கண் முன்னே காட்சிகளாக விரிந்து விஸ்வரூபம் கொள்ளும், அதாவது பாகுபலி பார்த்திருக்கிறோமல்லவா அதுபோல. இது அந்தவகை நாவல். சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் இதுதான், ஜெயமோகனும் எஸ் ராமகிருஷ்ணனும் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதை தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யம் இல்லை.
தவற விடாதீர்கள்
Saturday, May 9, 2020
துர்கா ஸ்டாலின்
குமுதம் சார்பாக துர்கா ஸ்டாலினை ஒரு பெண்மணி பேட்டி எடுத்தார். பொதுவாக நான் எந்த கட்சி அரசியல் கட்சி தலைவர், குடும்ப உறுப்பினர், தொண்டர் என யாருடைய பேட்டிகளையும் பார்ப்பதில்லை, கடுப்படிக்கும், அரசியல் ரத்த கொதிப்பு வரும்வரை எழுதிக்கொண்டிருந்த நான் இப்போது இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் சில சமயம் நக்கலடிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். உடனே நீ அந்த கட்சியா இந்த கட்சியா என்ற அனுமானத்திற்கு போகாதீர்கள், தொகுதியில் நல்ல வேட்பாளர்களை பார்த்து ஓட்டு போட்டு ஏமாறும் சாதாரண பொதுஜனம் தான் நான்.
சரி விசயத்திற்கு வருவோம். குமுதத்தில் ஒரு பெண்மணி துர்காவை பேட்டி எடுத்தார், கோவிலுக்கு போகுது என பலரால் நக்கலடிக்கப் படும் அவரின் பேட்டியை ஏனோ பார்க்கலாம் என தோன்றியது. அதில் துளியும் அரசியல் இல்லை. பத்தாவது படித்துக்கொண்டிருந்த ஒரு கிராமத்து சிறுமியை பெண் பார்த்துவிட்டு போகிறார்கள் ஒரு குடும்பத்தினர், அவர்களுக்கு இந்த பெண்ணை பிடித்து போகிறது. மாப்பிள்ளை ஸ்டாலினும் வந்து பார்க்க அவருக்கும் இந்த பெண்ணை பிடித்து போகிறது. கொஞ்சநாள் கழித்து திருமணம் என்று வருகிறார்கள், படிப்பேன் என்று அழுது அடம்பிடிக்கிறது சிறுவயதில் அம்மாவை இழந்துவிட்ட அந்த பெண், பாட்டியின் வற்புறுத்தலாலும் (பாட்டியை அம்மா என்று அழைக்கிறார், எனக்கும் அம்மா சிறுவயதிலே இறந்துவிட்டார், என் பாட்டியை நானும் அம்மா என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தேன்) தந்தையின் வற்புறுத்தலாலும் திருமணம் நடக்கிறது, கட்சி, பிரபலம், இத்யாதி மற்றும் மெட்றாஸ் என்ற நகரை பற்றிய பயத்துடன் இந்த ஊருக்கு வாழ வருகிறது அந்த பெண். மிக கூச்ச சுபாவம் வேறு, எந்த அளவெனில் திருமணமாகி பத்து நாட்களுக்கு பிறகு முதல் வார்த்தை கணவனுடன் பேசும் அளவு.
இதைவிட கொடுமை ஸ்டாலின் அதைவிட கூச்ச சுபாவமாக இருந்திருக்கிறார். ரெண்டுபேருமே அப்படிதான் இருந்தோம் என்கிறார்.திருமணமாகி மூன்று நான்கு மாதங்களிலேயே கணவனை கைது செய்து அழைத்து கொண்டு போய் விடுகிறார்கள். எதற்கு என்றே தெரியாமல் எப்போது வருவார் என்றும் தெரியாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தான் கணவர் விடுதலையாகி வீட்டிற்கு வந்திருக்கிறார். மாமாவிற்கு என்ன உணவு பிடிக்கும் மற்றவர்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என தெரிந்து கொள்வதே பிரதான வேலையாக வைத்திருக்கிறார். மாமியாரிடம் சமையல் கற்று கொள்கிறார்.
கடவுளின் மீது கடும் பக்தி இருக்கிறது, மாமியாரை போலவே, குங்குமம் வைக்க சொல்லி ஸ்டாலின் சொன்னதால் அதை பின் பற்றி வருகிறாராம். ஸ்டாலின் மேயராகும் வரை கூட்டு குடும்பம்தான் அதன் பின் தனி குடித்தனம் சென்றிருக்கிறார்கள், தினமும் நடைபயிற்சி யோகா என இன்றுவரை கடைபிடிக்கிறார். ஸ்டாலினும் இவரும் முன்பெல்லாம் புதிய படங்கள் ஒன்று விடாமல் இரவு நேரத்தில் தியேட்டர் சென்று பார்த்திருக்கிறார்கள், குறிப்பாக ஸ்டாலின் வற்புறுத்துவாராம், அவ்வளவு சினிமா மோகம். இரவு காட்சி முடிந்த பின் ஸ்டாலின் ஐஸ் கிரீம் பலூடா போன்றவை ஆசையாக வாங்கி கொடுப்பாராம், இவரோ எப்போடா வீட்டுக்கு போவோம் என்ற அரை தூக்கத்தில் இருப்பாராம் இதில் சாப்பிட சொல்லி சண்டை வேறு வருமாம். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் உடைகளை தேர்ந்தெடுத்து வாங்குவார்களாம்.
கணவரை பற்றி மிக பொறுமையானவர் என அபிப்ராயம் வைத்திருக்கிறார். உணவு விஷயமெனில் அவருக்கு வத்த குழம்பு இருந்தால் கூட போதும் திருப்தியாக சாப்பிடுவார் என பெருமிதம் கொள்கிறார்.
எனக்கென்னவோ துர்கா இன்னமும் கிராமத்து மனுஷியாக வாழ்கிறார், இவரை போல நிறைய அத்தைகளை என் கிராமத்தில் பார்த்திருக்கிறேன், கட்சி அரசியல் என எதையும் மனதில் வைத்து கொள்ளாமல், காசிருந்தாலும் தலையில் ஏற்றுக்கொள்ளாமல் அமைதியான முறையில் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். ஸ்டாலின் ஒருவேளை அரசியலுக்கு வராமல் போயிருந்தாலும் நிம்மதியாக அமைதியாக வாழ்க்கையை கொண்டு போயிருப்பார் என தோன்றுகிறது.
Friday, May 8, 2020
பஸ் கட்டண உயர்வு
Monday, April 13, 2020
கொரானா காலங்கள்
Monday, April 6, 2020
அன்புள்ள மிஷ்கின் அவர்களுக்கு,
வணக்கம்.
இடம் -ஜெயமோகன்
“கொரங்கா? இதுவா??
“இது பின்ன கொரங்குல்ல?”
“சிரிக்குது?”
“சிரிக்காதா பின்னே? அம்பது ஓடுல்லா உடைச்சிருக்கு?”
அனந்தன் திரும்பி தன் வீடு நோக்கி ஓடினான். என்ற வரிகளுக்கு சற்றே சிரிப்பு வந்தது, மறுபடியும் முதலில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன். வரிக்கு வரி சிரிப்பு தாங்க இயலவில்லை.
“ஏமான், சொறியுது”
“கொரங்கு சொறியாம பின்ன டான்ஸாலே ஆடும்? வெளங்காப்பயலாட்டு இருக்கானே” என்ற போது இருந்த சிரிப்பு
”சாதி நாயர்மாரு என்ன பிடிப்பானுவ?” என்றன் அனந்தன்
“எலிபிடிப்பானுவ” என்றான் தவளைக்கண்னன் கொஞ்சம் சப்தமாக மாறியது.
“ஒண்ணுக்கடிக்கும்பம் புடுக்க பிடுங்கீட்டுப்போற எனமாக்கும்”
“ஆருக்க புடுக்க?” என்றான் அனந்தன். என்ற வரிகளுக்கெல்லாம் என் வீடே அதிரும்படி சப்தமிட்டு சிரித்துவிட்டேன். வரிக்கு வரி சிரிப்பை கூட்டி கொண்டே சென்று விட்டீர்கள் ஜெமோ. அட்டகாசம். எனது தனிமை, கவலை, பணிச்சுமை கடந்த நாட்களின் துயரங்கள் எல்லாம் எங்கோ ஓடி ஒழிந்து விட்டதை போல உணர்வு. படித்து ஒரு மணி நேரம் கடந்த பிறகும்,
"நாயருண்ணா மூளை இருக்கணும். இல்லேண்ணா $ண்ணி இருக்கணும்.. இது ரெண்டும் இல்லேண்ணா என்ன செய்ய?”
"ஹணிமூண் … ஹனுமானுக்கு இங்கிலீஷ்லே"என்பதெல்லாம் ஞாபகத்தில், சிரித்துக்கொண்டே தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். சுமையை மறக்க செய்த உங்களுக்கு நன்றி என்ற வார்த்தை மிக மிக குறைவு ஜெமோ.எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, சக மனிதனின் மனதின் சுமையை முற்றிலும் குறைத்து மகிழ்விக்கும் கலைஞனுக்கு ஒரு சாதாரண வாசகன் என்ன கைமாறு செய்துவிட முடியும்?
அட்டகாசமான நகைச்சுவை குறும்படமாக இடம் சிறுகதையை பதிவு செய்யலாம். தமிழிலோ மலையாளத்திலோ அல்லது ஒரே சமயத்தில் இரண்டிலுமோ, இதை இளம் வருங்கால இயக்குனர்கள் ஜெமோவின் உதவியுடன் முயற்சி செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.
இந்த சிறுகதையை ஜெமோவின் இணையதளத்தில் படிக்க:
Click இடம் [சிறுகதை]