Thursday, November 12, 2020

பவாவின் மேய்ப்பர்கள்

 பவாவின் மேய்ப்பர்கள் முடித்திருக்கிறேன், "வாழ்க்கைன்னா என்னன்னு தெரியுமா? எப்படி வாழணும்ன்னு தெரியுமா? " என என்னை கைப்பிடித்து கூட்டிப் போய் அவர் சுட்டிக் காட்டுகிற மனிதர்கள் முன் கூசிப் போய் நிற்கிறேன். காற்றுக்காய் பாடும் இசைக் கலைஞனுக்காக தானாய் வழியுது கண்ணீர், தனிமையில் எப்போதோ வரும் ரயிலுக்காக தனிமையில் புத்தகங்களுடன் தவம் கிடந்தவர் பிரமிக்க வைக்கிறார். நாடகமென்றால் என்னவென்றே தெரியாத என் தலைமுறைக்கு நாடகங்களுக்காக அனைத்தையும் உதறியவரை வியப்போடு பார்க்கிறேன், ஒரு ஓவியத்தை தானே உருவாக்கி அதில் நெக்குருகி தெய்வ தன்மையை காணும் மனிதரும் இருக்கிறார். வாழ்க்கையில் எல்லா புயல்களையும் சந்தித்தும் ஓயாமல், அன்பு என் பெயரல்ல, இனி அதுவே வாழ்வு என வேகமாக செயல்புரிகிறார் வீரப்பன் காடுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர். ஆளுமைகள் என அறியப்படுபவர்களின் முன் கம்பீரமாகவும், அவர்களை மதிக்காமலும், சோற்றுக்கு அமர்ந்திருப்பவர்கள் முன்னே தாழ்ந்தும் போகிற மனிதனல்லவா பெருங் கலைஞன்? "பொருளாதார வளம் மயிருக்கு சமானம்" என்று புறந்தள்ளி எளிய மனிதர்களின் நட்புக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக போராடும் அற மனிதர்கள் கதையில் முக்கால்வாசி நிரம்புகின்றனர்.

நீங்கள் எங்கோ இருந்து என்னை அன்பெனும் பெருங்கருணையால் தீண்டுகிறீர்கள் பவா, அதற்கு என்னிடம் தகுதியில்லை என தெரிந்தும்.
"மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை"
புத்தகத்தின் கடைசி அறிவுரைக்கு நன்றி, படிக்கிறேன் பவா, இந்த ஜென்ம இறுதி வரை.

Monday, August 24, 2020

சோளகர் தொட்டி புத்தக விமர்சனம்

 மிக எளிமையான மொழியில் எழுதியதாலோ என்னவோ முதல் பத்து பதினைந்து பக்கங்களுக்கு இந்த நாவல் மீது ஈர்ப்பே வரவில்லை, அதாவது முன்பெல்லாம் மரண மொக்கை படத்துக்கு தேசிய விருது கொடுப்பார்கள் அல்லவா அப்படி,  அத்துடன் நிறுத்திவிட்டு இந்த நாவலை குறித்தும் அதன் ஆசிரியர் குறித்தும் இணையத்தில் தேடி பார்த்தேன். பவானியை சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன், பி.யூ.சி.எல். என்னும் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளராகவும் இருக்கிறார். இந்த புத்தகத்தை தமிழகத்தில் வெளியிட்டால் பிரச்சனை உருவாகும் என கருதி மலேசியாவில் வெளியிட்டிருக்கிறார் என படித்தேன். 


தொடர்ந்து தேடியதில் முக்கியமான செய்தி ஒன்று கண்ணில் பட்டது, வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சதாசிவம் கமிஷன் முன்பு பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களை கூட்டிச் சென்று சாட்சி சொல்ல வைத்திருக்கிறார். அவர்களுக்கு நேர்ந்த அவலங்களை கேட்கையில் நடுங்கி போய் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதி இருக்கிறேன் என்றார். 


அதற்கு பின் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன், அந்த எழுத்துக்களை மீண்டும் படிக்கையில் ஈர்ப்பாக மாறியதை மறுக்க முடியாது. இரண்டு பாகமாக நாவலை பிரித்திருக்கிறார். முதல் பாதி  அழகியல், அவர்களின் கொண்டாட்டம், வழிபாடு, எளிய அழகான வாழ்க்கை முறை, வன விலங்குகள், வேட்டை, அரிசியை எப்போதாவது ஒருமுறை மட்டுமே உண்ண கிடைக்கும் சந்தர்ப்பங்கள் என அந்த மலையோர வாழ்க்கைக்கு நம்மை பழக்கப்படுத்திவிடுகிறார். இதில் ஆச்சர்யப்படும் தகவல்கள் என்னவெனில் பெண்ணுரிமை, பகுத்தறிவு என்றெல்லாம் என்னவென்றே தெரியாத, விளக்கினாலும் புரிந்து கொள்ள இயலாத ஒரு இனத்திலிருந்து   பெண்ணின் மறுமணம், திருமணமானமாகி கணவன் இறந்த பெண் தன்னைவிட வயது குறைந்த ஆணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்வது என மலைவாழ் மக்களின் வாழ்க்கை ஆச்சர்யப்படுத்துகிறது. இருநூறு பக்கங்கள் தாண்டி வீரப்பனையும் சட்டென நாவலில் கொண்டுவருகிறார்

இரண்டாம் பாகம் லாக்கப் எனும் திரைப்படத்தில் வரும் மனிதத்தன்மையற்ற தாக்குதலை விட நூறு மடங்கு வீரியம் மிக்க தாக்குதல்களை அவர் விவரிக்கும் போது அந்த வலி நம்மையும் தொற்றிக்கொள்கிறது. 

"அன்புராஜ், ,தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி சித்தன் ஆகியோர் 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு, இந்தியாவின் 70வது சுதந்திரத்தினத்தை யொட்டி விடுதலை செய்யப்பட்டனர்" என்றொரு சிறிய செய்தியை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சாதாரணமாக கடந்து சென்றிருப்போம், அன்புராஜை பற்றி பவா செல்லதுரை youtubeல் பேசியிருப்பார் தேடி பாருங்கள், தனது வாழ்க்கையை ஏறக்குறைய தொலைத்துவிட்டு புதிதாக உருவமைத்துக்கொண்டவர் அன்பு, அவர் சோளகர் தொட்டி பற்றி சொல்கையில் பாலமுருகன் எழுதியது மிக சொற்பம் என்கிறார். 

விடுதலையான நான்கு பேரில் துப்பாக்கி சித்தன் என்பவர் தான் இந்த நாவலின் நாயகன் சிவண்ணா, கொஞ்சம் தேடி பார்த்தீர்கள் எனில் அவர் வீரபனுடன் இருந்த புகைப்படம் முதற்கொண்டு, தற்போது தனது நிலங்களை வீட்டையெல்லாம் இழந்துவிட்ட நிலையில் அரசின் உதவியை எதிர்பார்க்கும் செய்திகளையும் காணலாம். பாலமுருகன் சமீபமாக ஒப்புக்கொண்ட வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் இன்னமும் கூட பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு எந்த வித நியாயமும் கிடைக்கவில்லை என்பதே. 

அந்த சாதாரண எழுத்துக்களின் வலிமை இரண்டாம் பாகத்தில் உலுக்கி எடுத்துவிடுகிறது, படிக்கையில் குமட்டிக்கொண்டு வாந்தி வருவது போல நிகழ்வை நமக்கு கடத்துகிறது. 

ஆறுமாத கர்ப்பிணியை வன்புணர்ச்சி செய்வது, நிர்வாணமாக்கி பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது, பிறந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்று தாயிடம் தகவல் மட்டும் தருவது, உடலுறுப்புகளை அடித்து ஊனப்படுத்துவது என ஆதிரைக்கு பிறகு வாசிக்க சிரமப்பட்ட நாவல் என இதை கூறுவேன். 

நிச்சயம் உங்களை இது தூங்கவிடாது பாதிக்கும். 

கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல்... அல்ல, உண்மையில் நடந்த நிகழ்வு  

Tuesday, August 18, 2020

சாந்தாக்காவும், சரஸ்வதியம்மாவும்

கடந்த ஆகஸ்ட் 12 வீட்டுக்காரியோட பிறந்தநாள், கொரானாவால பெரிய கொண்டாட்டம் எல்லாம் இல்லை, வழக்கமாக அப்பா, மாமா, அத்தை, நண்பர்கள் என சிறிய கூட்டம் கொள்ளும் வீடு, இந்தமுறை யாரும் இல்லாததால், நாங்கள் மூன்று பேர் மட்டுமே கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.  வெள்ளி கொலுசு, ஒரு புடவை, ஒரு சுடிதார், ஒருகிலோ அளவு பர்த் டே கேக் வாங்கியிருந்தேன். 

சரியாக கேக் வெட்டும் சமயத்தில் காலிங் பெல் சப்தம் கேட்டு போய் பார்த்தால் சாந்தாமணி அக்காவும், சரஸ்வதியம்மாவும் நின்றிந்தார்கள்.  (ஏரியா துப்புரவு பணியாளர்கள்) உள்ளே அழைத்தால் வருவதற்கு தயக்கம் காட்டினார்கள், "யாருமே இல்லை, நீங்களாவது  வரப்போறீங்களா? இல்லையா?" என கேட்ட  பின் தயங்கி தயங்கி உள்ளே வந்தார்கள். கேக் கொடுத்ததில் சரஸ்வதியம்மா சாப்பிட ஆரம்பித்தார், சாந்தாமணி கையில் வைத்தபடியே நின்றிந்தார். "ஏன்?" என்றேன் "பேரனுக்கு கொண்டு போலாம்ன்னு" என்றவரை சாப்பிடச்சொல்லிவிட்டு அரைகிலோவை இரண்டாக பிரித்து தனித்தனியாக இரண்டு டிபன் பாக்ஸில் போட்டு என்னவள் அவர்கள் இருவரின் கையிலும் கொடுத்துவிட்டாள். 

இன்று இரண்டு டிபன் பாக்ஸ்களும் திரும்ப வந்திருந்தது, அட்டகாசமான சூடான சிக்கன்  பிரியாணியுடனும் முட்டையுடனும். 

அதில் அளவுக்கு அதிகமாக பிரியமும் அன்பும் கலந்திருந்தது  


அன்பொன்றே வாழ்வின் இழை, அதனால்தான் பெய்கிறது மழை

 

Tuesday, July 21, 2020

மூணார் சுற்றுலா


  1. மூணாரை விவரிக்க சொர்க்கம் என்று வார்த்தை நிஜமாகவே போதாது. கோவையில் இருந்து சுமார் நாலரை மணி நேரத்தில் உடுமலைப்பேட்டை வழியாக மூணாரை அடைந்து விடலாம். ஆனால் ஜூன் ஜூலையில் மழை பெய்வதால் உருவாகும் குட்டி குட்டி அருவிகளை நின்று ரசித்து கொண்டே போனால் ஏழு எட்டு மணிநேரம் கூட போதாது.
  2. உடுமலை செக் போஸ்ட் காரை திறந்து வைத்திருந்தால் யோசிக்காமல் உள்ளே நுழைந்து தின்பது கிடைத்தால் ஆட்டையை போட நமது பங்காளிகளாக குரங்குகள் தேடுவார்கள், எனது காரில் சறுக்கி விளையாடிய குரங்கு வழுக்கிக்கொண்டு வந்த போது கீச் என்று வந்த சப்தம் இன்னமும் நினைவிருக்கிறது.
  3. உடுமலை தாண்டி செக் போஸ்ட், அன்பின் தமிழ்காவலர்கள் மூன்றுமுறை சோதனை என்ற பெயரில் ஒவ்வொன்றிலும் 30ரூபாய் வாங்கிக்கொண்டு எதையும் சோதனை செய்யாமல் கேரளாவிற்குள் விடுவார்கள். கேரள செக் போஸ்டில் காசு கொடுத்தால் காறி உமிழ்ந்து வாகனத்தை முழு சோதனையிட்டு பிளாஸ்டிக் அகற்றி அனுமதிப்பார்கள்
  4. உள்ளே நுழைய ஆரம்பிக்க வேண்டியதுதான்.  அதன்பின் சாலை ஒற்றை ரோடும் மழையும் இருப்பதால் மிக பாதுகாப்பாக ஓட்ட வேண்டியது அவசியம்.
  5. முதல்நாளுக்கு தேவையான உணவை வீட்டிலிருந்தே எடுத்து செல்வது பழக்கம். நல்ல உணவென்பது மூணாரில் கிடைக்கும்,
  6. வழியில் மற்ற உணவகங்கள் மிக மோசமாக இருக்கிறது. பிரட் ஆம்லெட் நம்பி உண்ணலாம்  நாங்கள் கொண்டு சென்ற உணவை அருவியில் கால் நனைத்துக்கொண்டே சாப்பிட்டது அழகான அனுபவம்.
  7. அடுத்தது லேக்கம் என்ற சிறிய அருவி வருகிறது. ஒரு மணி நேரம் சிறுவர்கள் மற்றும் நாம் நீரில் விளையாடலாம். பக்கத்தில் சிறிய கடைகள் இருக்கும், டீ காப்பி கூட சாப்பிட தகுதியில்லாதவை. ரிஸ்க் வேண்டாம்.
  8. அடுத்தது இரவிகுளம் பார்க்கை தவறவிடாதீர்கள், டிக்கெட் வாங்கி விட்டால், அவர்களே வனத்திற்குள் அழைத்து செல்வார்கள், வெகு உயரத்தில் இருந்து அருவி பேருந்தின் மேல் விழும் அழகு கண் நிறையும். படபட வென நீர் பேருந்தின் மேலும் நம் மேலும் அடிக்கும்போது நம் குழந்தை பருவம் திரும்பும்
  9. 97 கி.மீ. பூங்கா, அரிய பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடம். நீலக்குறிஞ்சிகள் ஆண்டு முழுவதும் பூத்திருக்கும். அழிந்து வரும் அரிய வகை உயிரினமான வரையாடு இங்கே காணலாம்.
  10. மூணாறுல நாங்க ஒரு நெஸ்ட்ன்னு ஒரு பட்ஜெட்  ரிசார்ட்ல தங்கிருந்தோம், இது மூணார் சிட்டில இல்ல, ஏழு எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருந்தது 
  11. அப்போ எனக்கு அங்கே தங்க Gift Card, make my trip30% offer + break fast complimentary. Room and food is OK. ஆனா அதோட பால்கனி வியூ செம்ம சூப்பர்
  12. அப்புறம் Tour Placeன்னு சொன்னாவே நான் ஜெர்க் ஆகிடுவேன், அதெல்லாம் பயணிக்கு செட்டாகாதுங்கிற மனநிலைதான். இருந்தாலும் இதெல்லாம் நல்லாவே இருக்கும். மற்ற Tour இடமெல்லாம் கோவாலு (Google) கிட்ட கேளுங்க
  13. Top Point மிஸ் பண்ணிடாதீங்க, காலையிலேயே போய்டுங்க, மேகம் காலுக்கு கீழே இருக்கும். கண்டீப்பா பார்க்க வேண்டிய இடம்.
  14. பொதுவா கேரளால எனக்கு ரொம்ப பிடிச்சது என்னன்னா, சுத்தம். சின்ன பேப்பர் கீழ கிடந்தாலும் உடனே சுத்தம் பண்ணிடறாங்க, இயற்கையை அழகா வச்சிக்கிறாங்க, பாதுகாக்கறாங்க...
  15. வேதனை என்னென்னா நம்ம ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு சுற்றுலா வன பாதுகாப்பு, பராமரிப்பு கூட்டம் எதுக்கு இருக்குன்னே...
  16. அவ்ளோதான் டீ முடிஞ்சு போச்சு...
  17. நன்றி வணக்கம் 

 
 
 
 
 
 




Monday, May 25, 2020

மதுரை உணவுக்கடைகள் -ஜீவன்

மதுரைல குட்டிக்குட்டித் தெருக்கள்ல கூட சுவை மிக்க கடைகள் இருக்கு... அதனால நான் மிஸ் பண்ணீட்டா உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு மன்னிச்சிருங்க...
வாங்க போவோம்
முதல்ல மங்களகரமா ஸ்வீட்லருந்து ஆரம்பிப்போம்..
ஸ்வீட்னா இது நம்ம பாரம்பர்ய ஸ்வீட்டு... "அதிரசம்" தானப்ப முதலிதெருவுலருந்து வடக்கு ஆவணி மூலவீதி தொடங்குர முக்குல ஒரு கடை இருக்கு அந்தக்கடையில அதிரசம் திங்கனும்... சும்மா டரியலா இருக்கும்.. அந்த வெளிப்புற மொறுமொறுப்பு... கடிச்சதும் உள்ள அம்புட்டு மிருதுவா இருக்கும்... ஒன்ன எடுத்து திங்க ஆரம்பிச்சா அங்கயே நின்னு நாலஞ்ச திண்ணாத்தான் மனசு ஆறும்...
காலை டிபனுக்கு, காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு எதிர் சந்துல நேரா போய் SS காலனில SBI பேங்க்குக்கு சைடு ரோட்டுல போனா கெளரின்னு ஒரு கடை இருக்கு. பைபாஸ் ரோடு கெளரிகிருஷ்ணா இல்ல... இது குட்டிக்கடை... இட்லி,தோசை,பூரி, பொங்கல்னு எல்லாமே நல்லாருக்கும்... அங்க என்ன ஸ்பெசல்னா... அந்த சாம்பார்ர்ர்ர்ர்ர்... செம்மையா இருக்கும் கைல வாங்கி குடிக்கலாம்... அதோட டெய்லி ஒரு ஸ்பெசல் சட்னி அரைப்பாங்க... எல்லாமே கெத்து காட்டும்
பெரும்பாலும் மதுரைல காலை நேர டிபன கடைல சாப்பிடுர பழக்கம் மக்களுக்கு குறைவு , பெரும்பாலும் சைவக்கடைகள்தான் இருக்கும்... 11 மணிக்கெல்லாம் மத்தியாணச் சோத்த ரெடி பண்ணீருவாய்ங்க... மதியத்த இங்க ஒவ்வொரு மாதிரி கொண்டாடலாம்
அறுமுகம் மெஸ்னு ஒரு கடை தல்லாகுளம் பெருமாள் கோவில் கிரவுண்டுல ஓரமா இருக்கு... முன்னல்லாம் ரோட்டுக்கடையா இருந்தது இப்போ பக்கத்துலயே நல்ல ஹோட்டலா பெரிசாக்கி நடத்துராங்க.. அங்க மட்டன் பிரியாணி நல்லாருக்கும்.. இடிச்ச நாடுக்கோழி யோட சேத்து சொலட்டிக்கிட்டு அடிக்கலாம்
பக்கத்துலயே அம்மா மெஸ், குமார் மெஸ்லாம் இருக்கு ஆனா அதெல்லாம் பேருக்காக வெளியூர்காரங்க வந்து சாப்பிடுர இடமா மாறிப்போச்சு... அடுத்து கீழ்வெளிவீதி அம்சவள்ளி பிரியாணி... பிரியாணி கொஞ்சம் குழைவா இருக்கும்... அங்க விற்கிர கோழிச்சில்லரைன்னு ஒரு குழம்பு ஐட்டத்துக்கு 20 பேர் எப்பவும் வரிசைல நிப்பாய்ங்க... பிரியாணி மதியம் 2.30 க்கெல்லாம் காலியாகிடும்... அங்க ஒரு புரூட் மிக்சர் விப்பாய்ங்க பிரியாணிய ஒரு ஏத்து ஏத்திட்டு ஒரு மிக்சர போட்டம்னா ஒரு பினிஷிங்குக்கு வந்துரும்.
அப்புறம் காமராஜர் சாலைல கிருஷ்ணன் மெஸ்னு ஒரு கடை இருக்கு அங்க நல்லி பிரியாணி மெரட்டலா இருக்கும்... அப்பிடியே அந்த நல்லி எலும்புல கொத்தா ஒட்டி இருக்க கறி நல்லி எலும்ப பிடிச்சு ரெண்டு ஆட்டு ஆட்டுனா அப்பிடியே பூவா உதிரும் பாத்துக்கங்க... அங்க புறா, காடை, முயல்னு எல்லா சைடீஸும் பட்டயக்கெளப்பும்.. நான் சொன்னா எல்லாக்கடைலயுமே சீரகச்சம்பா பிரியாணிதான்... இங்க பாஸ்மதி பிரியாணிய பெரும்பாலும் யாரும் விரும்ப மாட்டாய்ங்க... ராவுத்தர் கடைல மட்டும் கிடைக்கும்.
மதியச்சாப்பாட்டுக்குன்னே சில கடைகள் இருக்கு... தமிழ்சங்கம் ரோடு ஜானகிராம்ல அயிரமீன் குழம்பு வாங்கி சோத்துல குலைச்சு அடிச்சோம்னா எம்புட்டு திங்கிறோம்னே தெரியாம உள்ள இறங்கும்...3 தடவ கொழம்ப ஊத்தி திண்ணுபுட்டு மறுக்கா சோத்த வாங்கி அந்த எலும்பு ரசத்த ஊத்தி பிசைஞ்சு கரண்டி ஆம்லேட்டோட வச்சு இழுத்தோம்னா... எப்டி இருக்கும்.... ஆங் அப்டி இருக்கும் இதெல்லாம் மக்களுக்கு தெரிஞ்ச கடைகள்தான்... சில கடைகள் சிலருக்கு மட்டுமே தெரிஞ்சது.. அதுல ஒன்னுதான் காளவாசல் தேவகி ஸ்கேனுக்கு பக்கத்துலயே வெளிய தெரியாத அளவுக்கு அடக்கமா ஒரு குட்டிக்கடை லெட்சுமி மெஸ்னு ஒரு பழைய ஸ்டேண்டிங் போர்டு இருக்கும்.. அங்க சோத்துக்கு குடல் குழம்பு, கறிக்குழம்பு, மீன் குழம்பு , நாட்டுக்கோழிக் குழம்புன்னு ஒவ்வொன்னும் பெருமாள் கோயில் தீர்த்தம் மாதிரி கைய குழிவா வச்சு வாங்கிக் குடிக்கலாம் போல இருக்கும்... சோறுகள்ல குழம்புகள குதூகலமா வெளாட விட்டு எடுத்து செங்கச்சூளைல மண்ண அப்புன மாதிரி ஒரு கட்டு கட்டலாம் ... சைட் டிஷ்லாம் தரம்ம்ம்மா இருக்கும்... வக்காளி ஒரு ஊறுகா வைப்பாய்ங்க.... அதுல என்ன மாயம் செய்வாங்களோ... அம்புட்டுப்பயலும் கறிக்கொழம்புக்கே ஊறுகாயத்தொடு வெளுப்பாய்ங்க வெத்தலப்பேட்ட பக்கத்துல நூரி மெஸ்னு ஒரு பாய் கடை... நெய் சோறும் குடல் குழம்பும் அந்தரா இருக்கும். வடக்கு ஆவணி மூலவீதிலருந்து மீனாட்சியம்மன் கோவிலுக்கு போற சந்துகள்ல ரெண்டாவது சந்துல ஒரு செட்டியார் கடை இருக்கு... செட்டிநாட்டு ஸ்டைல்ல பயமுறுத்திவிடுவாய்ங்க... அங்க புறா சாப்பிட்டு பாருங்க.... கீழவாசல் அருளானந்தம்னு ஒரு கடை இருக்கு... சோத்துச் சொர்க்கம்யா... திண்ணுட்டு அங்கனயே ஓரமா எடம் கிடைச்சா தூங்கீரலாம்னிருக்கும்.... சைட்டிஷ்லாம் மயக்குவாளுக.. இன்னும் இருக்கு கொஞ்ச நேரத்துல கண்டினியூ பண்றேன்
சைவ சாப்பாட்டுக்கு பைபாஸ் ரோடு லட்சுமி மெஸ், டவுன்ஹால் ரோடுப்பக்கத்துல சபரீஸ்.. காமராஜர்சாலை சபரீஸ்னு.. பெரிய கடைகளும்...சைவச்சாப்பாட்டோட வெங்காய பக்கோடா வச்சு சாப்பிடுரது மதுரைக்காரனுக வழக்கம்... மத்தியானத்துலயே பெரும்பாலான ஹோட்டல்ல புரோட்டாவும் குஸ்காவும் கிடைக்கும். இருந்தாலும் அது டின்னர் ஸ்பெசல்ல அத தனியா சொல்றேன்.இப்ப சிறு தீனி மற்றும் டீ காபி கூல்ட்ரிங் பக்கம் போவோம் தல்லாகுளம் விசாலம் காபி சாப்பிட்டுப் பாருங்க... சாப்டு அரைமணிநேரமானாலும் அந்த காபி கசப்பு தொண்டைல நிக்கும் அப்பிடி ஒரு டேஸ்ட்டு... அடுத்து தண்ணி குடிக்கக் கூட மனசு வராது
ரயில்வே ஸ்டேசனுக்கு எதிர்ல ப்ரேமவிலாஸ்னு ஒரு மிட்டாய் கடை... ஸ்வீட் கடைதான் அந்தக்காலத்துலருந்து இருக்கதால மிட்டாய்க்கடைன்னே வழக்காகிடுச்சு... தாமரை இலைல அப்டியே பொசுக்கப் பொசுக்க (சுடச்சுட) அல்வா எடுத்து போட்டு குடுப்பாய்ங்க...ரெண்டா பிச்சு வாய்ல போட்டா....அப்டியே கரையும்யா அங்க விக்கிர ஸ்பெசல் மிச்சர்தான் இங்க பாதி பேர் வீட்ல சோத்துக்கு வெஞ்சணம் (சைட்டிஷ்). அந்த அல்வாவ அங்கனயே நின்னு திங்கிர கூட்டமே எப்பயும் பத்துப் பேர் இருப்பாய்ங்க... அல்வா கடை வாசல்லயெட் மல்லியப்பூ வச்சு நாலஞ்சு அக்காக்க விக்கும்ங்க... எம்புட்டு நேக்கா யாவாரம் பண்ணுவாய்ங்க
தெரியுமா... ஏப்பா தம்பி அல்வா மட்டுமா வாங்கிட்டுப்போற... வீட்டுக்காரப்புள்ளைக்கி பூ வாங்கிட்டுப்போய்யான்னு அங்கயே நம்மள வாடிவாசல்ல நிக்கிர காளை மாதிரி உசுப்பேத்தி விட்டுருவாய்ங்க... நேதாஜி ரோட்டுல தங்கமயில் ஜுவல்லரிக்கு பின்னாடி நர்சிங்னு ஒரு ஸ்வீட் கடை இருக்கு நார்த் இந்தியன் ஸ்வீட்டுகள் அங்க மட்டுந்தான் திங்குரது... கச்சோரி அங்க நல்லாருக்கும்... மசால்பூரி பாணிப்பூரியும் அங்க நல்லாருக்கும். சாயங்காலத்துல கோவில சுத்தி நிறைய ஸ்னாக்ஸ் விப்பாய்ங்க ஷப்னம் வாசல்ல விக்கிர காரப்பொரிக்கு காத்துக்கெடக்கலாம்யா பருப்பு போளி,பச்சப்பயிறு, காரப்போளி,சுண்டலு, உளுந்தம்பருப்புன்னு எல்லாத்தையும் அவிச்சு விப்பாய்ங்க... தள்ளுவண்டிகள்ல முள்ளுமுருங்கக்கீர வடை அப்பப்ப போட்டுத்தருவாய்ங்க ரெண்டுரூவா வடைக்கெல்லாம் சொத்தெழுதி வைக்கலாம்யா
ஜிகர்தண்டா... மதுரையோட அடையாளமாவே மாறிப்போச்சு ... விளக்குத்தூண் பேமஸ் ஜிகர்தண்டா கடை ஒன்னுதான் இருக்கும் அப்பல்லாம் இப்ப அவங்க நிறைய ப்ரான்சஸி குடுத்து அங்கங்க இருக்கு.. வெளியூர்கள்லயும் இருக்கு... ஆனா நாங்க பெரும்பாலும் ஜிகர்தண்டாவ மஞ்சணக்காரத்தெரு முக்குல ஒரு பாய் விக்கிராப்புள அங்கதான் சாப்பிடுரது.... டேஸ்ட்டு நம்மள திண்னுரும்... முனிச்சாலைலருந்து செயிண்ட்ஜோசப் கேர்ள்ஸ் ஸ்கூல் போற வழில போஸ்ட்டாபீஸு பக்கத்துல பத்திரீசியார் ஸ்கூலுக்கு முன்னாடி ஒரு பொட்டிக்கடைல க்ரேப்ன்னு கேட்டீங்கன்னா ஒரு ஜூஸ டம்ளர்ல மோந்து குடுப்பாய்ங்க யோவ்வ்வ்வ் அதெல்லாம் குடிச்சுப்பாக்கனும்யா... முனிச்சாலைல சிக்னல் பக்கத்துலயே புகழ்பெற்ற கோவிந்தராஜ் பருத்திப்பால் கடை ஒன்னு இருக்கு ஒரு டம்ளர் குடிச்சா பசியாரிடும் டின்னர மதுரைல கொண்டாடலாம்யா... புரோட்டா மதுரயோட ஊர் உணவு. கொத்து புரோட்டாவ ம்யூசிக்கோட கொத்துரது எங்கூர்ல ஆரம்பிச்சகுதான்... பெஸ்ட் புரோட்டான்னா அண்ணாநகர் நியூமாஸ் ஓட்டல் புரோட்டாதான் அங்க போடுர மடக்கு புரோட்டா பிச்சம்னா அப்பிடியே பூவா பிரியும் பாத்குக்கங்க சால்னா அங்க சுமாராத்தான் இருக்கும்... அண்ணா ப்ம்ஸ்டாண்ட்லருந்து ஆவின் போற வழியில இருக்க கூரைக்கடை... உக்காந்து சாப்பிட ரெண்டு டேபிள்தான் நைட்டு கடை கூட்டம் அம்மும்... சுக்கா, குடலு , ரத்தப்பொரியலு, நாட்டுக்கோழி சாப்ஸு, நெஞ்சு சாப்ஸுன்னு அத்தனையுமே கெரங்கடிக்கும்
ஆவின் பக்கத்துலருக்க பன் பரோட்டா கடைல 3 புரோட்டா வயிறு ரொம்பீரும்... தலைக்கறி ரோஸ்ட்லாம் தெறிக்கவிடும்...குழம்பெல்லாமே அடிச்சுத்தூக்கும் தெற்குவாசல் சுகன்யால புரோட்டாவ வீசி வெளாடுவாய்ங்க டேஸ்ட்டும் அந்தல சிந்தலயா இருக்கும்
க்ராஸ்ரோடு கீர்த்தனா ஓட்டல்லாம் வெரட்டி வெரட்டி திங்கலாம்... கரிமேடு மீன் மார்கெட் பக்கத்துல ஒரு குட்டிக்கடைல விருதுநகர் பொறிச்ச புரோட்டா கிடைக்கும்.. நொறுக்கிப்போட்டு கொழம்புகள கொலச்சு அடிச்சோம்னா விருதுநகர்லயே போய் தின்னுட்டு வந்த மாதிரி இருக்கும்
சைவக்கடைகளும் நைட்ல கலைகட்டும்.... கீழவாசல் நாகலெச்சுமி அனெக்ஸ்... ரேவதி டிபன் செண்டர்லயெல்லாம்... வெண்பொங்கல், தக்காளிப்பொங்கல்( வெரைய்ட்டி ரைஸ செள்ராஸ்ட்ரா கடைகள்ல அப்பிடித்தான் சொல்லுவாய்ங்க), புளியோதர, லெமன்சாதம்னு எல்லா சாதமும் டின்னருக்கு கிடைக்கும்...
இந்த ஐட்டங்கள் ல செளராஸ்ட்ரா கட்சிகள அடிச்சுக்க முடியாது... அங்கயெல்லாம் போனா மிலிட்ரி முறைதான் எல்லா வெரெய்ட்டியும் ஒவ்வொரு வாய் சாப்பிட்டாலே போதும்னு எல்லாத்தையும் ஆர்டர் பண்ணி சுத்துல விட்டு சாப்பிடுவோம்.. பில்ல சரியா பங்கு போட்டுக்குவோம்
மதுரையின் ரோட்டுக்கடைகள என்னவே முடியாது அதுல ஒன்னு ரெண்ட சொல்றேன்... அண்ணா நகர் அக்கா கடைன்னு ஒரு கடை 40 வருசமா இருக்கு... ஒரு மரத்தடில ஆரம்பிச்சது... இப்பவும் அதே மரத்தடில ஒரு வீட்டயே ஓட்டலா மாத்தி நடக்குது ... அங்க முட்ட சப்பாத்திக்கொத்து ஒன்னு போடுவாய்ங்க.... ருசி அள்ளும்
பைபாஸ் ரோட்ல கேஎப்சி இருக்கு அது நமக்கு வேணாம் அதுக்கு கொஞ்சம் தள்ளி ஒரு அக்கா கடை போட்டிருக்கு... முட்டதோசயெல்லாம் பத்துக்கும் மேல தின்னுட்டு அடுத்த தோசைக்கு தட்ட நீட்டீட்டே நிப்போம்... அந்தக்கா போதும் போடான்னு வைய்யும்
யானைக்கல்தான் மதுரைக்கு தூங்கா நகர்னு பேர் வாங்கிக்கொடுத்த இடம், அங்க பரமேஸ்வரி , ராஜேஸ்வரின்னு ரெண்டு கடை எதிரெதிரா இருக்கு... சோறு சாம்பார் ரசம் மோர் பாயசம்னு நைட்டு 3 மணிக்கும் சாப்பிடலாம்... வெங்காயக்குடல் அங்க ரொம்ப நல்லாருக்கும். அடுத்து சுல்த்தான் கடை
நைட்டு 3 மணி வரை பிரியாணி புரோட்டா சைட்டிஷ்னு எல்லாம் கிடைக்கும்... வெளியூர்லருந்து சாப்பிடாம லேட்டா வரவங்களுக்கு அதுதான் புகழிடம்.
நிறைய சொல்லாம விட்டது போலத்தான் இருக்கு... இன்னொரு நாள்ல விட்டத லிஸ்ட் பண்ணி சொல்றேன். கொரொனா லாக்டவும் முடிஞ்சு உலகம் நார்மல் மோடுக்கு வந்ததும் மதுரைக்கு வந்து சாப்பிட்டு பாருங்க மக்களே

-ஜீவன்

ட்விட்டரில் இவரை பின் தொடர: @jeevanlancer

Sunday, May 10, 2020

ரத்தம் ஒரே நிறம் -சுஜாதா புத்தக விமர்சனம்

இதுதான் சுஜாதாவோட பெஸ்ட்ன்னு நண்பன் சொன்னதால வாங்கி, தலைப்பை பார்த்துட்டு கொலைக்கள அல்லது கணேஷ், வசந்த் வச்சு ஏதோ துப்பறியும் நாவல்னு நினைச்சு ரொம்ப காலம் படிக்காம வச்சிருந்தேன்.  முன்பொரு காலத்திலே ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், சாண்டில்யன், புஸ்பா தங்கதுரை, கோட்டயம் புஸ்பநாத், தபூ சங்கர், வைரமுத்து, வாலி விஜய் மில்டன்னு எது கிடைச்சாலும் ஆதரவு கொடுத்து படிச்சு முடிப்பேன். நாவலை தோட்டப்புறம் தான் தெரிஞ்சுது இது கிரைம் நாவல் இல்ல, சரித்திர நாவல். சரித்திர நாவல் வகைன்னாவே இப்பெல்லாம் ஏனோ ஜெர்க்கடிக்குது, பொன்னியின் செல்வனை உலகமே புகழ்ந்து தள்ளிட்டு இருந்தப்போ கொஞ்சம் பக்கம் படிச்சிட்டு தெறிச்சு வந்தவன் நான். அந்த சூடு கொஞ்சம் ஆறின பின்னாடி, பாலகுமாரனை மட்டுமே ஒரு காலத்துல படிச்சிட்டு இருந்த எனக்கு,  உடையார்  ஒரு பாகம் முடிக்கிறதுக்கே நாக்கு தள்ளிடுச்சு. அதனால இப்போ நமக்கு ஜெமோ, சாரு, வண்ணதாசன், எஸ் ரா.,  தான் சரிவரும்னு சமாதான படுத்திக்கிட்டேன். என்ன இருந்தாலும் தினமும் நாற்பது பக்கம் படிக்கிற பழக்கம் விட்டு போகல. இல்லைன்னா இருக்கவே இருக்கார் YouTubeல கதை சொல்ல பவான்னு காலம் அமைதியா போயிட்டு இருந்தது. 

கொரோனா காலங்கள் ஏகப்பட்ட நேரத்தை கையில் கொடுத்திருக்கு.  படிக்காம ஸ்டாக் வச்சிருந்த அத்தனை புத்தகங்களையும், பார்க்காம டிஸ்க்ல வச்சிருந்த அத்தனை படங்களையும் பார்க்க வச்சதால, குறைஞ்சது நாலு சேப்டராவது படிப்போம்னு, ரத்தம் ஒரே நிறம் முன்னுரை படிச்சா "அட" ன்னு ஆச்சர்யமா இருந்தது. இதை குமுத்துல தொடரா எழுத ஆரம்பிச்சப்போ சுஜாதாக்கு கொலை மிரட்டல் வரை வந்திருக்கு, எழுதுற கையை வெட்டிடுவோம்னு லட்டர், குமுதம் அலுவலகத்தை தாக்கிருக்காங்க, குமுதம் புத்தகத்தை ஒரு கூட்டமா சேர்ந்து எரிச்சிருக்காங்கன்னு ஏகப்பட்ட அதிர்ச்சி. சுஜாதா எழுத்துலக வாழ்க்கையில இப்படி ஒரு சம்பவமான்னு இருந்திச்சு. மத்தவங்களா இருந்தா அதையே ஒரு விளம்பரமா எடுத்திட்டு காசு பார்த்திருப்பாங்க, ஆனா சுஜாதா, "முழுசா நான் எழுதி இதை அவங்க படிச்சா புரிஞ்சுக்குவாங்க, ஆனா விளக்கம் கொடுக்க இது சரியான  நேரமில்லை, தவிர வலது கையை வெட்றோம்கிறங்க, இடது கையால எழுத வேற தெரியாதே?"ன்னு ஜஸ்ட் லைக் தட் கடந்து போனார். பேர் மாற்றி புத்தகமா வந்த பின்னாடி ஏன் இப்போ ஒருத்தர் கூட எதிர்க்கலை? ஏன்னா அதில எதிர்க்கிறதுக்கான காரணமே அதில் இல்லைன்னு எழுதிருக்கார்.

கதை சுஜாதா பாணியிலேயே சொல்லனும்னா சொகுசு கார் அதி விரைவில் சாலையில் செல்வது போல்  வழுக்கிக்கொண்டு செல்கிறது.
கதை கிட்டத்தட்ட நூத்தம்பது வருஷம் முன்னாடி நடக்கிறதால, வரலாற்று நாவல்கன்னாவே, சங்க தமிழ்ல எழுதி வாசகனை சாகடிக்காம, நாயகன் வீரத்தை,  நாயகி அழகை ஏழு எட்டு பக்கம் விவரிக்காம சட்டுன்னு கதைக்குள்ள போய்டறார். ஆரம்ப பக்கங்கள்ல இருந்தே கதை சூடு பிடிக்குது. அந்த வேகத்தை கொஞ்சம் கூட குறைக்காம ஜெட் வேகத்துல கடைசி வரை நம்மை கொண்டுபோறார்.


தந்தையை கொன்ற இரக்கமில்லாத ஒரு கிறுக்குத்தனமான அதிகாரியான எட்வார்டை எப்படியாவது கொல்ல வேண்டும் அதுதான் தன் வாழ்க்கையின் ஒரே லட்சியம் என முடிவெடுத்து எட்வார்டை தேடி செல்கிறான் முத்துக் குமரன். அவனை பழி தீர்த்தானா என்பதுதான் ஒரு வரிக் கதை, ஆனால் நாமெல்லாம் பள்ளியில் படித்த சிப்பாய் கலகம் என தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இந்தியாவின் முதல் சுதந்திர போரே இந்த கதையின் அடிநாதம். ஆஸ்லி போன்று மனசாட்சி உள்ள வெள்ளைக்காரனையும் படைத்திருக்கிறார், எனக்கு மிகவும் பிடித்துப்போன பாத்திரம் அது. 1857ல் சிப்பாய் கலகம் என்ற முதல் இந்திய சுதந்திர போர், அதை அடக்க கர்னல் நீலின் தலைமையில் சென்னையில் இருந்து ராணுவம் கல்கத்தா சென்றது, அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது, பீகாரில் இந்தியர்கள் வெள்ளைக்காரர்களை சித்திரவதை செய்தது, நாநாவின் ஆதரவு, முடிவு என  இந்த கதையில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் உண்மையானவை

உடன்கட்டை ஏறும் காட்சியை சுஜாதா விவரிக்கையில் நேரில் நின்று பார்த்து பதைபதைத்த உணர்வு. சுதந்திர போராட்ட மத்திய காலம் என்பதால் தூய தமிழிற்கு அதிகம் வேலை இல்லை அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனக்கே உரிய பாணியில் ஏராளமான சுவாரஸ்யம் கலந்தது அங்கங்கே நகைச்சுவை வசனங்கள் தூவி விளையாடி இருக்கிறார். வழக்கமான சரித்திர கதைகளில் முக்கியத்துவம் பெரும் வித்தை சாமியார்கள் போன்றவர்களின் பாரம்பரியத்தை சிதைக்காமல் பைராகியை உலாவ விட்டிருக்கிறார்.
பூஞ்சோலையும்  எமிலி அட்கின்சனும் மறக்க முடியாத பாத்திரங்கள். சில நாவல்கள் படிக்கையில் நம் கண் முன்னே காட்சிகளாக விரிந்து விஸ்வரூபம் கொள்ளும், அதாவது பாகுபலி பார்த்திருக்கிறோமல்லவா அதுபோல. இது அந்தவகை நாவல். சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் இதுதான், ஜெயமோகனும் எஸ் ராமகிருஷ்ணனும் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதை தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யம் இல்லை.
தவற விடாதீர்கள் 


Saturday, May 9, 2020

துர்கா ஸ்டாலின்

முன்னொரு காலத்தில் எனது அப்பா அதிமுகவில் ஏதோ ஒரு மொக்கை போஸ்டில் இருந்தார்,  என் மாமா pvks செல்வராஜ் திமுகவில் இளைஞரணி செயலாளராக இருந்தார். அவர் கட்டுச்செவல் சண்டையில் மிக ஆர்வமாக இருப்பார், பந்தயத்தில் வெற்றி பெற்றால் எதிரணி சேவலை தருவார்கள், தோற்றால் தன் சேவலை காசு கொடுத்து வாங்கி வந்து விடுவார். அதை அவர் தோட்டத்தில் சமைப்பதே ஒரு கலையாக இருக்கும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் அதை சிறிது சிறிதாக வெட்டி மசால் பொருட்கள் ஏதும் கலக்காமல் செய்வார். என் அப்பா டவுசர்  பொடியனான என்னையும் கூட்டிகொண்டே சாப்பிட செல்வார்,  அந்த அற்புத சுவை எனக்கு இதுவரை எந்த பெரிய உணவகங்களிலும் கிடைத்ததில்லை. எனது அப்பாவை விட்டுவிட்டு அவர் கட்டுசேவலை சமைத்ததே இல்லை. இதில் எனது சித்தப்பா வைகோவின் மதிமுக கட்சியில் இருந்தார் அவரும் இந்த ஜோதியில் கலந்து கொள்வார் (நம்புங்கள் நண்பர்களே, அரசியல் அப்போது அப்படிதான் இருந்தது)  இது நான் துர்கா ஸ்டாலின் பேட்டியை பார்த்த போது ஏனோ ஞாபகம் வந்தது.

குமுதம் சார்பாக துர்கா ஸ்டாலினை ஒரு பெண்மணி பேட்டி எடுத்தார். பொதுவாக நான் எந்த கட்சி அரசியல் கட்சி தலைவர், குடும்ப உறுப்பினர்,  தொண்டர் என  யாருடைய பேட்டிகளையும் பார்ப்பதில்லை, கடுப்படிக்கும், அரசியல் ரத்த கொதிப்பு வரும்வரை எழுதிக்கொண்டிருந்த நான் இப்போது இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் சில சமயம் நக்கலடிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். உடனே நீ அந்த கட்சியா இந்த கட்சியா என்ற அனுமானத்திற்கு போகாதீர்கள், தொகுதியில் நல்ல வேட்பாளர்களை பார்த்து ஓட்டு போட்டு ஏமாறும் சாதாரண பொதுஜனம் தான் நான்.

சரி விசயத்திற்கு வருவோம். குமுதத்தில் ஒரு பெண்மணி துர்காவை பேட்டி எடுத்தார், கோவிலுக்கு போகுது என பலரால் நக்கலடிக்கப் படும் அவரின் பேட்டியை ஏனோ பார்க்கலாம் என தோன்றியது. அதில் துளியும் அரசியல் இல்லை. பத்தாவது படித்துக்கொண்டிருந்த ஒரு கிராமத்து சிறுமியை பெண் பார்த்துவிட்டு போகிறார்கள் ஒரு குடும்பத்தினர், அவர்களுக்கு இந்த பெண்ணை பிடித்து போகிறது. மாப்பிள்ளை ஸ்டாலினும் வந்து பார்க்க அவருக்கும் இந்த பெண்ணை பிடித்து போகிறது.    கொஞ்சநாள் கழித்து திருமணம் என்று வருகிறார்கள், படிப்பேன் என்று அழுது அடம்பிடிக்கிறது சிறுவயதில் அம்மாவை இழந்துவிட்ட அந்த பெண், பாட்டியின் வற்புறுத்தலாலும் (பாட்டியை அம்மா என்று அழைக்கிறார், எனக்கும் அம்மா சிறுவயதிலே இறந்துவிட்டார், என் பாட்டியை நானும் அம்மா என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தேன்)  தந்தையின் வற்புறுத்தலாலும் திருமணம் நடக்கிறது, கட்சி, பிரபலம், இத்யாதி மற்றும் மெட்றாஸ் என்ற நகரை பற்றிய பயத்துடன் இந்த ஊருக்கு வாழ வருகிறது அந்த பெண். மிக கூச்ச சுபாவம் வேறு, எந்த அளவெனில் திருமணமாகி பத்து நாட்களுக்கு பிறகு முதல் வார்த்தை கணவனுடன் பேசும் அளவு. 

இதைவிட கொடுமை ஸ்டாலின் அதைவிட கூச்ச சுபாவமாக இருந்திருக்கிறார். ரெண்டுபேருமே அப்படிதான் இருந்தோம் என்கிறார்.திருமணமாகி மூன்று நான்கு மாதங்களிலேயே கணவனை கைது செய்து அழைத்து கொண்டு போய் விடுகிறார்கள். எதற்கு என்றே தெரியாமல் எப்போது வருவார் என்றும் தெரியாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தான் கணவர் விடுதலையாகி வீட்டிற்கு வந்திருக்கிறார். மாமாவிற்கு என்ன உணவு பிடிக்கும் மற்றவர்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என தெரிந்து கொள்வதே பிரதான வேலையாக வைத்திருக்கிறார். மாமியாரிடம் சமையல் கற்று கொள்கிறார்.

கடவுளின் மீது கடும் பக்தி இருக்கிறது, மாமியாரை போலவே, குங்குமம் வைக்க சொல்லி ஸ்டாலின் சொன்னதால் அதை பின் பற்றி வருகிறாராம். ஸ்டாலின் மேயராகும் வரை கூட்டு குடும்பம்தான் அதன் பின் தனி குடித்தனம் சென்றிருக்கிறார்கள், தினமும் நடைபயிற்சி யோகா என இன்றுவரை கடைபிடிக்கிறார். ஸ்டாலினும் இவரும் முன்பெல்லாம் புதிய படங்கள் ஒன்று விடாமல் இரவு நேரத்தில் தியேட்டர் சென்று பார்த்திருக்கிறார்கள், குறிப்பாக ஸ்டாலின் வற்புறுத்துவாராம், அவ்வளவு சினிமா மோகம். இரவு காட்சி முடிந்த பின் ஸ்டாலின் ஐஸ் கிரீம் பலூடா போன்றவை ஆசையாக வாங்கி கொடுப்பாராம்,  இவரோ எப்போடா வீட்டுக்கு போவோம் என்ற அரை தூக்கத்தில் இருப்பாராம் இதில் சாப்பிட சொல்லி சண்டை வேறு வருமாம். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் உடைகளை தேர்ந்தெடுத்து வாங்குவார்களாம்.

கணவரை பற்றி மிக பொறுமையானவர் என அபிப்ராயம் வைத்திருக்கிறார். உணவு விஷயமெனில் அவருக்கு வத்த குழம்பு இருந்தால் கூட போதும் திருப்தியாக சாப்பிடுவார் என பெருமிதம் கொள்கிறார்.

எனக்கென்னவோ துர்கா இன்னமும் கிராமத்து மனுஷியாக வாழ்கிறார், இவரை போல நிறைய அத்தைகளை என் கிராமத்தில் பார்த்திருக்கிறேன், கட்சி அரசியல் என எதையும் மனதில் வைத்து கொள்ளாமல், காசிருந்தாலும் தலையில் ஏற்றுக்கொள்ளாமல் அமைதியான முறையில் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். ஸ்டாலின் ஒருவேளை அரசியலுக்கு வராமல் போயிருந்தாலும் நிம்மதியாக அமைதியாக வாழ்க்கையை கொண்டு போயிருப்பார் என தோன்றுகிறது.

Friday, May 8, 2020

பஸ் கட்டண உயர்வு

பஸ் கட்டண உயர்வுன்னு படிச்சேன், ஆதரவு, எதிர்ப்புல்லாம் கட்சிக்காரங்க பார்த்துக்கட்டும், நான் யோசிச்சது என்னன்னா100பேருக்கு மேல அடைக்கிற தனியார், அரசு பேருந்துல 20 பேர்தான் இனி ஏத்தணும்னு சொல்றாங்க, நம்ம ஜனத்தொகைக்கு அது ஒத்து வருமான்னு தெரியல, தவிர இரண்டு மடங்கு ஏத்தினாலும் அது டீசலுக்கே பத்தாது, அப்புறம் பணியாளர்களுக்கு சம்பளம் ஈ எஸ் ஐ., மத்தது, ரிட்டைர் ஆனவர்களுக்கு பென்ஷன்... தனியார் பேருந்துகள் அதோட முதலாளி பணியாளர்கள் நிலை ரொம்ப சிரமம், கால் டேக்ஸியளவு ரேட் வெச்சா சமாளிக்கலாம். இருக்கிற பொருளாதார நிலையில அது சாத்தியமில்லை. அரசு, தனியார், மக்கள் எல்லா தரப்புக்குமே கஷ்டம்தான். இல்லைன்னா இந்த சுமையை அரசு தான் தங்கணும். சாராயம் விக்கிற காசுல எத்தனைய சமாளிப்பார்னு தெரியல. மத்திய அரசுகிட்ட இருந்தும் காசு வர போறதில்லை. அப்படியே ஆயிரம் ரூபா கேட்டா பத்து ரூபா நோட்டை கொடுத்து பத்திரமா செலவு பண்ணுப்பா ங்கிற வழக்கமான அப்பாவாதான் மோடி இருக்கார். கஷ்டம். மொக்கையா இருந்தாலும் ஒரே வழிதான் இருக்கு. அமெரிக்கா, இத்தாலி கூட சீனாட்ட காசு கேட்குது, நாமும் கல்ல வீச வேண்டியதுதான்.தர வாய்ப்பில்லை, ஒருவேளை தந்தா சமாளிக்கலாம் இல்லைன்னா வழக்கம் போல உலக வங்கி கிட்ட கையை நீட்ட வேண்டியதுதான்.

Monday, April 13, 2020

கொரானா காலங்கள்

தினசரி காலையில் நானும் இவளும் அரை மணிநேர உடற்பயிற்சி (YouTube Home workout), பின்பு மாடியில் மகனுடன் கிரிக்கெட், மதியம் அரைமணி நேரம்  செஸ், (இப்போது அவனுக்கு பள்ளியில் online வழியாக பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்) தினசரி பத்தே நிமிடம் மட்டும் என்ன நடக்கிறது என TV செய்தி பார்த்தேன், (செய்திகளில் பெருங்கூட்டமாக டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல அல்லாடிய, நடந்தே சென்ற மக்களின் நிலை மட்டுமே கடும் உளைச்சலையும், மிகுந்த பரிதாபத்தையும் ஏற்படுத்தியது, நிச்சயமாக இதற்கு தகுந்த முன்னேற்பாடுகள் நடந்திருக்க வேண்டும்) மதியத்திற்கு மேல் எனக்கும் இவளுக்கும் வீட்டிலிருந்தே வேலை, சனி ஞாயிறுகளில் படங்கள், சமையல் (அசைவம் தொடவே இல்லை) தினசரி மாலை இருபது நிமிட தியானம், இரவு மட்டும் ஒரு சிகரெட் (3 pkt stock). தேவையான பொருட்களை மளிகை அண்ணாச்சிக்கு வாட்சப் செய்தேன் வீட்டில் கொண்டுவந்து கொடுத்து போனார், Google pay செய்தேன். வாங்கிய புத்தகங்களில் பஷீரின் மொத்த நாவல்களும் முடித்தேன், வண்ணதாசனின் நடுகை, கலைக்கமுடியாத ஒப்பனைகள்,  ஓஷோவின் சிவசூத்திரம், மலையாள சிறுகதைகள்,  (முக்கிய எழுத்தாளர்களின் இணைய, முகநூல் தளங்களை தினமும் படித்தேன்) வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. வாரம் ஒருமுறை  மூன்று பேரும் வீட்டை சுத்தம் செய்தோம். அவசியமெனில் குடிக்கலாம் என வாங்கி வைத்த சரக்கை குடிக்கும் வாய்ப்பும் ஏற்படவில்லை. குடிக்க தோன்றவும் இல்லை.
ஏறக்குறைய என் மொபைல் காண்டாக்ட் லிஸ்ட்டில் இருக்கும் அனைவருமே பேசிக்கொண்டோம், ஒன்று அவர்கள் போன் செய்தார்கள் இல்லை நான் கூப்பிட்டேன். கொரானாவை பற்றி அதிகம் பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டேன், ஏனெனில் அனைவருமே அதில் ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றிருக்கிறார்கள் போல. நெட்பிலிக்ஸ்ல் மூன்று தொடர்களை பார்ப்பதாக திட்டம் இருந்தது, நேரம் இல்லை...
அலுவலகத்தை பொறுத்தவரை, இரண்டு மாதங்களுக்கு முன் போட்ட இன்கிரிமெண்ட் கட்டானது, வரும் மாதங்களில் முழுதாக சம்பளம் போட இயலாது 30 அல்லது 50 சதவீதம் பிடித்தம் இருக்கும், அல்லது பணியாளர்களை குறைக்க நேரும் என்று மெயில் வந்தது, எனக்கு பரவாயில்லை, இவளுக்கு “CEO நூறு சதவீத சம்பளத்தை தானமாக வழங்கி இருக்கிறார், எனவே நீங்களும் சம்பளத்தை முன்வந்து வழங்குங்கள் எனக் கேட்டார்கள். “நீயே ரிசைன் லெட்டர் கொடுப்பது புத்திசாலித்தனம்”, என்றேன்.  நிஜமாகவே கவலை தோன்றவில்லை. ஏனெனில் வாழ்க்கையை திரும்பி பார்த்தபோது எனக்கு பயணங்களும், புத்தகங்களும், நண்பர்களும் மட்டுமே நினைவில் நிற்கிறார்கள், வேலையின் இனிமையான நினைவுகள் என்பது சேர்ந்த சில தினங்களுக்கு பிறகு விலகிக்கொண்ட மாயை. சம்பளம் வந்தும் 20ம் தேதியே பிச்சையெடுப்பவர்களில் நானும் ஒருவன், ஆயிரம் வருடங்கள் வாழப்போகிறோம் என்று நினைப்பவர்கள் இதற்கு நமக்கும் சேர்த்து கவலை படட்டும், இதற்கெல்லாம் நான் கவலைப்பட முடியாது. "இந்த நொடியில் வாழ்என்பதே என் முக்கிய வாழ்க்கை தத்துவம், ஆனால் எதிர்மறையாக இதுதான் எனக்கு வாழ்க்கையில் நிறைய கொடுத்திருக்கிறது.

மிக முக்கியமாக கோபம் வரவில்லை நிஜமாகவே எங்களுக்குள் சண்டை வரவில்லை, அம்மாவும் மகனும் மட்டும், சில சமயங்களில் சண்டையிட்டார்கள் (குளி, சாப்பிடு, மொபைலையே நோண்டாதே மாதிரி) காசு சுத்தமாக செலவாகவில்லை, வழக்கமாக செலவாகவும் இந்த மாதம் ஷாப்பிங், காபி, மகனின் வேன் பீஸ் என கணக்கு போட்டு வைத்திருந்த தொகையை நிவாரண நிதிக்கு கொடுத்தேன். (Google payல் தேடினால் கேரளா முதல்வர், அசாம் முதல்வர் மற்றும் பிரதமர் நிவாரண வேண்டிய அழைப்பு முன்னாடி வந்து நிற்கின்றன, தமிழக முதல்வர் நிவாரண நிதி அக்கௌண்டையே காணோம். அதனால் Paid via https://ereceipt.tn.gov.in ரெசிப்ட் அங்கேயே பிரிண்ட் எடுத்து கொள்ளலாம், வரி விலக்கும் உண்டாம்) டிவிட்டரை trending பார்ப்பதற்கு மட்டுமே இரண்டு மூன்று நிமிடங்கள் உபயோக படுத்தினேன், முக்கியமாக பத்து நிமிடங்களுக்கு மேல் செய்தி சேனல்களோ சமூக வலைத்தளங்களோ பார்க்காமல் இருந்ததால் நாங்கள் யாரும் ஒருவருக்கொருவர் குரல்வளையை கடித்துக்கொள்ளுமளவு சைக்கோவாகவில்லை. Online ல் வந்த செய்தித்தாளை மட்டும் முழுவதும் படித்தேன். அன்றைய நாளில் நிலவரம் தெளிவானது. உணவை குறைத்து கொண்டதனாலும் (இரண்டு வேளை மட்டுமே, இதில் திங்கட்கிழமைகளில் விரதம்)  உடற்பயிற்சிகளாலும், தியானங்களாலும்  உடல் இளைத்திருக்கிறது, மனம் வலுவாகி இருக்கிறது  இந்த நாட்களை மிக நிம்மதியுடன் அழகாக வாழ்ந்தோம் என தோன்றுகிறது.
எட்டு வருடங்கள் இமயமலை சாரலில் மைனஸ் டிகிரி கடும் குளிரில் நைந்த ஒரே ஒரு உடையுடன் கடும் பசியுடன் ஞானத்தை மட்டுமே தேடிய சாதுக்கள் பற்றி ஓஷோ எழுதியிருக்கிறார். அதன் தாக்கத்தை உணர்கையில் இவையெல்லாம் ஒன்றுமே இல்லை என தோன்றுகிறது. சுயபுராணம் எனக்கே போராடிகிறதுதான், இருந்தாலும் நிச்சயம் இது ஒரு சரித்திர நிகழ்வு இதை எப்படி கடந்தோம் என நினைவு கொள்வதற்கு இந்த எழுத்து பின்னாளில் உபயோகப்படும்.

சரி அது தவிர இங்கே நிகழ்ந்தவை, நெகிழ்ந்தவை சில  
நிகழ்வு:
·       
             *   சுமார் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்க படுவார்கள், சுமார் 50 லட்சம் மக்கள் இறந்து விடுவார்கள் என உலகின்  பல பெரிய நிபுணர்களால்  கணிக்கப்பட்ட இந்தியாவில் அது நிகழாதது மிகப்பெரிய ஆறுதல்
·         மிக இழிவானது என நான் கருதியது இரு புறங்களிலும்  கொரானாவை வைத்து செய்த அரசியல். நோயாளிகள் மருத்துவ பணியாளர்களை நோக்கி செய்த தேவையில்லாத செயல்கள். அதற்கு மத சாயம் பூசி சண்டையிட்டது. அரசியல்வாதிகள் எப்போதும் மாற மாட்டார்கள் ஐயா, பொது மக்களுக்கு அறிவு எங்கே போயிற்று? ஜாதி, மத, கட்சி வேறுபாடு பார்த்து  சண்டை போட்டு கொண்டிருக்க வேண்டிய நேரமா இது? நிராகரிக்கப்பட வேண்டிய இன்னும் பல இருக்கிறது. அதை சொல்ல விருப்பமில்லை.
·         அரசு இயந்திரம் இதுவரை நான் என் வாழ்நாளில் பார்க்காத காரியங்களை செய்தது ஆச்சர்யம். VAO உடன் மருத்துவ பணியாளர்கள் ஏரியாவில் வீடுவீடாக வந்து சோதனையிட்டார்கள், ஸ்டிக்கர் பாய்ஸ் என நானே விமர்சித்த இந்த அரசு விளம்பரமில்லாமல் பல பணிகளை செய்தது.
·        
    உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் ஏழை மக்களை மத்திய அரசு சரியாக கவனிக்கவில்லை, அவர்களுக்கு உதவி போய் சேரவில்லை என்பது பல விஷயங்களில் நிரூபணமாகிறது. ஒரு ஏழை தாய் கங்கையில் தன் ஐந்து குழந்தைகளையும் வீசி எறிந்தது ஏற்றுக்கொள்ளவே இயலாத செயல். 
·         
     டெல்லி நடைபயணம், கச்சா எண்ணெய், மருத்துவ தேவைகளுக்கு, சுகாதாரத்திற்கு மிக குறைவான ஒதுக்கீடு போன்ற உண்மையில் சீரியஸான  விவகாரங்களை எதிர்க்கட்சிகள் புத்திசாலித்தனமாக மக்களிடம் கொண்டு செல்லாமல், "விளக்குப்பிடிக்கப் போறியா?" என குறிப்பிட்ட பிரிவை பார்த்து கூறுவதாக நினைத்து எழுதிக்கொண்டிருந்தார்கள். (இதில் தெளிவானா அரசியல் பார்வையுள்ள எதிர்க்கட்சியினர் சிலரும் வேறு வழியில்லாமல் மாட்டிக்கொண்டது துயரம்). தமிழக மக்கள் விளக்கை ஏற்றினார்கள், எனது தெருவில் சுமார் 50 வீடுகள் உள்ளன. நான்கு வீடுகளில் விளக்கை ஏற்றுவார்கள் என எதிர்பார்த்து மொட்டை மாடிக்கு போனால் அனைத்து வீடுகளிலும் மின்சாரம் அணைக்கப்பட்டு விளக்கோ டர்ச்சோ மொபைல் திரையோ ஒளிர்ந்துகொண்டிருந்தது. சென்னையில் மட்டுமே 1500 மெகா வாட் குறையும் என எதிர்பார்த்த மின்வாரிய துறைக்கு 2600 குறைந்ததே இதற்க்கு சாட்சி.  மோடி என்ன எதிர்பார்த்தாரோ அதை எதிர்க்கட்சிகள் செய்துகொண்டிருக்கின்றன, தவிர சில தவறுகளை சுட்டி காட்டுபவனைக் கூட சங்கி என முத்திரை குத்தி விடுவதால், மோடி எதிர்ப்பா ஆதரவா என குழம்பிக்கொண்டிருந்தவர்களை எதிர் கட்சிகளே  ஏராளமான மோடி பக்தர்களை உருவாக்கி விட்டது பரிதாபம். காங்கிரஸ் என்றொரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா என்றே தெரியவில்லை. இப்படியே போனால் very difficult to defeat Modi என்பதை புரிந்து கொள்ளுங்கள்.   
·         தன்னார்வ அமைப்புகள் மற்றும் எதிர் கட்சி உதவிகளை ஆளும்கட்சி தடை செய்தது மிகப்பெரிய தவறு, அரசங்களும் உதவி செய்து அமைப்புகளும் உதவி செய்தால் மட்டுமே, ஏழை மக்களின் பசி மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியும் 
·         சிகிச்சை தரும் டாக்டர்கள் கொரானாவால் பாதிக்கப்படுவதும் உயிரிழப்பதும் வேதனையளிக்கிறது

·         நெகிழ்வு: கடும் பசியோடு இருந்த குறிப்பிட்ட பகுதி மக்களை பார்த்த இரண்டு புதுச்சேரி இளைஞர்கள் சமைத்து தினமும் வழங்கி கொண்டிருந்தது,  பல மனிதர்கள் தெருக்களில் உள்ள விலங்குகளுக்கு உணவு வழங்கியது,  பெரும் பணக்காரர்கள் பலர் நிஜமாகவே தன் யார் என இந்த தருணத்தில் காட்டினார்கள். கோவையில் ஸ்ரீதேவி சிவா, விப்ரோ, நாம் திட்டிக்கொண்டிருந்த அம்பானி, அதானி இன்னும் பல பெரிய நிறுவனங்கள் உதவிகளை முன்னெடுத்தன. பள்ளி சிறுவன் ஒருவன் தன் மொத்த சேமிப்பையும் உதவிக்கு வழங்கினான். நிறைய நடிகர்கள் பெரிய அளவில் நிதிகளை கொடுத்தார்கள், பல நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் பெரிய அளவில் உதவி செய்கின்றன. அக் ஷய் 25 கோடி கொடுத்தார், இங்கே லாரன்ஸ் மூன்று கோடியும், அஜித் 1.25 கோடி கொடுத்தது நிறைவு. கொடுக்காதவர்கள் பற்றி குறை கூற இது நேரமில்லை, கொடுத்தவர்களுக்கு நன்றி சொல்லும் நேரம். குறிப்பாக எனக்கு டாட்டா நிறுவன தலைவரின் செயல் மிகுந்த நெகிழ்வை கொடுத்தது, 1500 கோடியை சொத்தில் இருந்து கொடுத்துவிட்டு, இன்னும்   தேவைப்பட்டால் எனது முழு சொத்தையும் தேசத்துக்காக தர தயார் என்று கூறியது. நிறைய மனிதர்கள் கட்சி ஜாதி மத வித்யாசம் பார்க்காமல் செய்த பேருதவிகளை, நெகிழ்வை எழுத பக்கங்கள் போதாது, சக மனிதர்கள் மேலும் மனிதத்தின் மேலும் எனக்கு இருந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை. அனைவருக்கும் நன்றியும் நேசமும்.  

வாழ்க்கை சுருக்கமானது.
பிடிவாதத்திற்கோ, சண்டை போடவோ நேரமில்லை நண்பனே
-லென்னன்
லாக் டவ்னுக்கு நன்றி.  

Monday, April 6, 2020

அன்புள்ள மிஷ்கின் அவர்களுக்கு,


வணக்கம்.
இப்போதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். இந்த கடிதம் வணிக சம்மந்தமானதல்ல, அது சம்மந்தமாக எழுதினாலும் யாருக்கும் உபயோகமும் இல்லை.
தவிர இந்த படத்தையும் நீங்கள் வணிக ரீதியில் சமரசம் செய்ய முற்படவில்லை என்பது வேறு விஷயம். "ஏன் முன்பு தியேட்டரில் பார்க்கவில்லை?" என்ற கேள்விக்கு நிச்சயம் என்னிடம் பதிலில்லை, ஏனெனில் படம் வந்ததே தெரியாத அளவிற்கு எனக்கு ஏற்பட்ட விபத்தோ, மகனின் பிறப்பில் ஏற்பட்ட கோளாறால் மருத்துவமனையிலோ அல்லது வேறு ஏதாவது பண தேவை சம்மந்தப்பட்ட பைத்தியமாகவோ நான் இருந்திருக்க கூடும்.
நிற்க,
படத்தின் கதாநாயகன் சர்வ நிச்சயமாக இளையராஜா தான், இந்த படத்தின் காட்சிகளை பார்வையாளர்களுக்கு வசனம் எழுதி புரிய வைக்க வேண்டிய தேவையை ஏறக்குறைய விலக்கியே வைத்து விட்டார். படத்தை பதைபதைப்பாய் கொண்டு சென்றதில் அவர்தான் போர் வீரன்.
ஓநாய் நீங்கள் தான். உடல் மொழியில் அப்படியே கொண்டுவந்திருக்கிறீர்கள், உடல் முழுவதும் காயம்பட்டு கிடந்தாலும் கொஞ்சம் கூட குறையாத வேட்டையாடும் துடிப்பும், இழப்பின் ஊமை தவிப்பும், அதுவும் ஒவ்வொரு இழப்பின்போதும் மெளனமாக தலை குனியுமிடம் உச்சம். திருநங்கை ஏஞ்சல் கிளாடியா தலை நிமிர்ந்து உங்களை பார்க்கையில், காப்பாற்ற இயலாமல் தரை நோக்கும் காட்சி உச்சமய்யா. என்னால் இன்னமும் அதிலிருந்து மீண்டு வர இயலவில்லை. படத்தில் உங்களுக்கு வசனமே இல்லையோ என நினைத்திருந்த நேரத்தில் அந்த "எட்வினண்ணா நீங்களாவது கதை சொல்லக் கூடாதா" என குட்டி இளவரசி கேட்கையில் ஆரம்பித்தீர்களே? கண்கள் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது.
ஸ்ரீ எனும் ஆட்டு குட்டியின் உடலில் ஒரு டன் சுமையை வைத்து சுமக்க சொல்லி விட்டீர்கள், அற்புதம் அந்த குட்டி எந்த வித யோசனையுமில்லாமல் உங்களின் உடலைக் கூட சேர்த்தே சுமந்து வந்தது.
இதை தாண்டிய வசீகரிப்பை சொல்லிக்கொண்டே போகலாம்
"நீ டாக்டர், நீ டாக்டர்" என கையில் கொடுத்த பணத்தை வீசி எறிந்து விட்டு குதூகலிக்கும் மனநிலை தவறியவர்.
"அவனை அரெஸ்ட் பண்ணது தப்புதான் சார், நியாயமா உங்களை முதல்ல பிடிச்சிருக்கணும்" வெறியோடு குற்றவாளியை தேடி தொலைத்துக்கொண்டே இருப்பவனின் கோபம்.
"பணமெல்லாம் தேவைப்படாது, நான் சாகப்போறேன் அதுக்கு முன்னாடி எட்வினை கொல்லனும்" முதன்மை தொழில்முறை வேலைக்காரனின் கூரிய வசனம்.
"மூத்திர பையோட அலைஞ்சிட்டிருக்கேன், அவனை உயிரோடவும், உயிரில்லாதவும் பார்க்கணும்" கடிபட்ட கரடியின் வெறி.
"கொல்லப்பட்டு சாவும் போலீஸ்காரர்கள் வித விதமான குரலெழுப்பி சாவது,
அதிலும் அந்த "ஐயா", பதவியை அந்த வார்த்தையாலே தக்கவைத்து, சாகும் போதும் அது தவிர வேறு எண்ணமே வராத எழுபது விழுக்காடு காவலர்களின் நிலைமை.
"நல்லவேளை அதில ஒருத்தன் மார்ல உதைச்சான், மயக்கமாகி விழிச்சு பார்க்கிறேன், இங்கே இருக்கேன்" எனது நெஞ்சிற்கு கடத்தப்பட்ட வலி.
சாவின் விளிம்பிலும் யாரும் துப்பாக்கியால் சாக கூடாது என மேல் நோக்கி சுடும் அப்பா.
ஒரு பெரும் கொலைகாரன் கதவை திறந்து விடச்சொல்லி பார்வையால் காவலாளியை கெஞ்சும் இடம்
"அம்மாக்கு என்னாச்சு எட்வின் அண்ணா?" என்ற பதில் சொல்லவே இயலாத கேள்விக்கு,
"செத்துட்டாங்க" ஒரே வார்த்தையில் அதை முடித்த விதம்.
ஒரு திரில்லர் படத்தில் மனித நேயத்தை விதைக்கும் வித்தை எப்படி கை வந்தது?
இந்த அரைகுறை எழுத்தை வைத்துக்கொண்டு என்னால் இதற்கு மேல் எழுத தெரியவில்லை
வேறென்ன....
உங்களுக்கும், பவாவிற்கும் நன்றி மிஷ்கின், ஏனெனில் உங்களை ஒரு இயக்குனராக இல்லாமல் "இந்த ஜோயல் இருக்கானே இவன்தான் என் தாய், தகப்பன், நண்பன் எல்லாம்... மத்தியானம் அவன் பட்டினி கிடந்தது எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்ருக்கான், அவன் கணக்கையே அடைக்க முடியல பவா" என வேறு ஒரு கோணத்தில் எல்லா நாளும் கார்த்திகையில் அறிமுகம் செய்ததே அவர்தான். புத்தகங்களை அடுத்தநாளே அனுப்பிய என் அக்கா சைலஜாவிற்கும் அன்பு.
உங்கள் காட்டின் இந்த இலை, இனி ஒநாயையும் ஆட்டுக்குட்டியையும் அதன் உள்ரேகை போல சுமந்து கொண்டே திரியும்.

இடம் -ஜெயமோகன்

இந்த இரண்டாவது வார வீட்டின் உள்ளிருப்பில் "என்னடா இது" என்ற மன நிலையில் இருந்தேன், சொல்லப்போனால் அதற்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பே வீட்டில் இருந்தபடி வேலை செய்ய சொல்லிவிட்டார்கள். ட்விட்டர் தோழி மேகா, ஜெமோவின் ஒரு சிறுகதை லிங்க் கொடுத்திருந்தார், அதை முடித்துவிட்டு மற்ற கதைகளையும் படிப்போம் என ஜெமோவின் இடம் சிறுகதையை நன்றாக வீட்டில் சூடு இறங்கி கொண்டிருந்த மதியம் 2 மணிக்கு சற்றே எரிச்சலான மனநிலையில் தான் வாசிக்க ஆரம்பித்தேன்,

“கொரங்கா? இதுவா??

“இது பின்ன கொரங்குல்ல?”

“சிரிக்குது?”

“சிரிக்காதா பின்னே? அம்பது ஓடுல்லா உடைச்சிருக்கு?”

அனந்தன் திரும்பி தன் வீடு நோக்கி ஓடினான்.  என்ற வரிகளுக்கு சற்றே சிரிப்பு வந்தது, மறுபடியும் முதலில் இருந்து வாசிக்க ஆரம்பித்தேன். வரிக்கு வரி சிரிப்பு தாங்க இயலவில்லை.

“ஏமான், சொறியுது”

“கொரங்கு சொறியாம பின்ன டான்ஸாலே ஆடும்? வெளங்காப்பயலாட்டு இருக்கானே”  என்ற போது இருந்த சிரிப்பு
”சாதி நாயர்மாரு என்ன பிடிப்பானுவ?” என்றன் அனந்தன்

“எலிபிடிப்பானுவ” என்றான் தவளைக்கண்னன் கொஞ்சம் சப்தமாக மாறியது.
“ஒண்ணுக்கடிக்கும்பம் புடுக்க பிடுங்கீட்டுப்போற எனமாக்கும்”

“ஆருக்க புடுக்க?” என்றான் அனந்தன். என்ற வரிகளுக்கெல்லாம் என் வீடே அதிரும்படி சப்தமிட்டு சிரித்துவிட்டேன். வரிக்கு வரி சிரிப்பை கூட்டி கொண்டே சென்று விட்டீர்கள் ஜெமோ. அட்டகாசம். எனது தனிமை, கவலை, பணிச்சுமை கடந்த நாட்களின் துயரங்கள் எல்லாம் எங்கோ ஓடி ஒழிந்து விட்டதை போல உணர்வு. படித்து ஒரு மணி நேரம் கடந்த பிறகும்,

"நாயருண்ணா மூளை இருக்கணும். இல்லேண்ணா $ண்ணி இருக்கணும்.. இது ரெண்டும் இல்லேண்ணா என்ன செய்ய?”

"ஹணிமூண் … ஹனுமானுக்கு இங்கிலீஷ்லே"என்பதெல்லாம் ஞாபகத்தில்,  சிரித்துக்கொண்டே தான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். சுமையை மறக்க செய்த உங்களுக்கு நன்றி என்ற வார்த்தை மிக மிக குறைவு ஜெமோ.எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, சக மனிதனின் மனதின் சுமையை  முற்றிலும் குறைத்து மகிழ்விக்கும் கலைஞனுக்கு ஒரு சாதாரண வாசகன்  என்ன கைமாறு செய்துவிட முடியும்?     

அட்டகாசமான நகைச்சுவை குறும்படமாக இடம் சிறுகதையை பதிவு செய்யலாம்.  தமிழிலோ மலையாளத்திலோ அல்லது ஒரே சமயத்தில் இரண்டிலுமோ, இதை இளம் வருங்கால இயக்குனர்கள் ஜெமோவின் உதவியுடன் முயற்சி செய்ய வேண்டும் என்பது எனது ஆசை.

இந்த சிறுகதையை ஜெமோவின் இணையதளத்தில் படிக்க:
Click இடம் [சிறுகதை]