Tuesday, February 23, 2016

பள்ளிக்கூடம் to கல்லூரி

"இனி நான் பள்ளிக்கூடம் போவதாக இல்லை"
என  பத்தாம் வகுப்பை முடித்த உடனேயே என் வீட்டில் என் முடிவை அறிவித்து விட்டேன். அது நிச்சயமாக என்னை டாக்டர் ஆக்கி பார்க்கும் கனவுடன் இருந்த என் பாட்டிக்கு தலையில் பாறாங்கல்லை நாலு முறை கொட்டியதற்கு ஈடாக இருந்திருக்கும்.

"ராசா அப்பிடில்லாம் சொல்லகூடாது, பள்ளிக்கோடம் போ" தாத்தா ஒரு பக்கம் பேந்த பேந்த விழித்தவாறு அறிவுரை சொல்லி கொண்டிருந்தார்.

"துரை வேறென்ன பண்ண போறீங்க?" அப்பா
"லாரில போய், வண்டி ஓட்டி பழக போறேன்" சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தனாகிய நான்.
ஏற்கனவே பத்தாம் வகுப்புக்கு 2 அட்டம்ப்டுகள் முயற்சி செய்து தோற்ற என்னை சிறிது நேரம் வெறிக்க பார்த்து விட்டு,  என்ன யோசித்தாரோ கிளம்பி வெளியே போய் விட்டார் அப்பா.

அன்றே நாக்பூர் கிளம்புவதாக இருந்த என் மாமன் நல்லாக்**ண்டனின் (** வரது ஜாதி பேருங்க, அதான் தடை பண்ணி வச்சிருக்கேன் ) வண்டியை மறித்து "மாமா ஐ ஆம் கம்மிங்" என வலுக்கட்டாயமாக ஏறிக்கொண்டேன்.

பெங்களூர், கோவா போன்ற அழகான நகரங்கள், பஞ்சாபி சாப்பாடு, ஹோஸ்பெட் போன்ற அணைகளில் ஆனந்த குளியல், கொல்லம் பீச், கேரளா பீப், (மாட்டுக்கறின்னு சொல்லவே இல்லயே மாமா நீ!)  அரை பீர் (இதை குடிச்சா செத்து போக மாட்டேன்ல) எல்லாம் ஆரம்பத்தில் சுகமாகவே இருந்தது. அரைகுறை டிரைவர் வேறு ஆகிவிட்டேன்.

ஆனால் அதுவே ஏப்ரல், மே மாதத்தில் மிக கொடுமையாக மாறியது. வெயில் தாக்கு பிடிக்க முடியவில்லை, அதுவும் மத்திய பிரதேசங்களில் கடும் அனலடிக்கும், சிறுநீர் கூட ரத்தம் மாதிரி ஒவ்வொரு சொட்டாகத் தான் போகும், லாரியில் இருக்கும் குடி தண்ணீர் தீயை வாயில் ஊற்றினால் போல் இருக்கும்.

இந்த சூழ்நிலையில் என் கூட படித்தவர்கள் பதினொன்றாம் வகுப்பை முடித்தால், மீண்டும் படிக்கும் ஆசை வந்தது. ஆனால் பள்ளியில் சென்று படித்தால் கௌரவ குறைச்சல் ஆகி விடுமல்லவா? ஒரு டுடோரியலில் சேர்வதாக முடிவு செய்து, "இனி நான் லாரிக்கு போக போறதில்ல" என்றேன், என் அப்பாவிற்க்கு இப்போதுதான் உண்மையான அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும், "ஒரு லாரி வாங்கீறலாம்னு இருக்கேன்",னு ஊரெல்லாம் சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார்    

அவரது நினைப்பிலும் மண்ணை போட்டாகி விட்டது, அடுத்த அட்டேம்டில் பத்தாவது, அதற்கு அடுத்த மூன்று அட்டேம்ப்டுகளுக்கு பிறகு பனிரெண்டாம் வகுப்பை முடித்து விட்டேன்.
("என்ன சின்னராசு பெரிய படிப்பெல்லாம் படிச்சு முடிசிட்டே போல? இனி அடுத்தது டாக்டர் ஆயிருவே " இது மணி தாத்தா.
"பாட்டி  போய் பத்து வருஷம் ஆச்சு, டிக்கெட் வாங்குற அபிபிராயம் இருக்கா? இல்லையா! தாத்தா" இது நான்)

என் தந்தை லாரி வாங்கியே விட்டார், லாரியில் போவதா இல்லை ஏதாவது ஒரு பல்கலை கழகம் (அண்ணாமலை பல்கலைகழகம் தொலைதூர கல்வி) மூலம் மேல்படிப்பு படிப்பதா என்ற கடும் யோசனையில் காலம் தள்ளி கொண்டிருந்த போது,
என் தங்கையை (சித்தி மகள்) கல்லூரியில் சேர்க்குமாறு (தண்டமாவே தின்னுட்டு சுத்தாதடா, அவளை காலேஜ்ல சேர்த்தி விட்டுட்டு வா) வந்த அன்பு கட்டளையை மீற முடியாமல், ஈரோடு அருகே இருக்கும் ஒரு கல்லூரிக்கு படை எடுத்தோம்.

அவள் என்னுடன் சேராமல் இருந்ததால் சற்று நல்ல மார்க் எடுத்திருப்பதை கொஞ்சம் பெருமையாகவே வீட்டில் சொல்லி கொள்வார்கள். (உன்னால தாண்டி என் மானமே போகுது)

அவளுக்கு கேட்கும் சீட் தருவதாக சொன்ன பின்பும் இடத்தை காலி செய்யாமல் "சார்ர்ர்ர்ர்ர்ர்ர்", என பம்பி கொண்டிருந்தாள். "போலாம் வாடி", என்ற என்னை மதிக்காமல், "இன்னொரு சீட் வேணும்", என்றாள்.

"யாருக்கும்மா?", என்றார் துணை தலைவர்.
"இவனுக்கு தாங்க",, என்று என்னை கைகாட்டினாள், எனக்கு பேரதிர்ச்சி, என்னைவிட துணை தலைவருக்கு மருத்துவ மனையில் அனுமதியாகும் அளவு அதிர்ச்சி இருந்திருக்க வேண்டும். ஒரு பாட்டில் விஷம் முன்னால் வைக்க பட்டு இருந்தால் அதை அவர் தயங்காமல் குடித்திருப்பார்.

இருக்காதா பின்னே?

என் சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் போடப்படவில்லை, எண்ணெய் வைத்து ஒரு வருடமே இருக்கும் பரட்டை தலை, கழுத்தில் கத்திபோல் தொங்கும் ஒரு செயின், சோலாப்பூர் செருப்பு (அரை கிலோ மீட்டருக்கு முன்பே சத்தம் வரும்), மயில் மார்க் லுங்கி. (ஆடுகளம் தனுஷ்?)

"என்னம்மா சொல்றே?", எனற அவர் கத்திய கத்தலில் அந்த அலுவலக கட்டிடமே கொஞ்சம் தூர் விட்டிருக்கும்.                    

அலுவலகத்தில் இருந்த யாரோ ஒருவர் வந்து அவரை சமாதான படுத்த வேண்டி வந்தது, நீண்ட ஆசுவாசத்திற்கு பின் "இவன் மார்க் சீட் குடு", என்றார் என்னை மேலும் கீழும் பார்த்தபடி.(என்ன ஒரு மன உறுதி?)
"ஹே ஹே அதை வீட்டில் வச்சிருக்கேன்", என்று சொல்லிய என் நம்பிக்கையில் வெடிகுண்டு வைத்தாள் என் அன்பு சகோதரி, அவள் கைப்பையில் (என்னை திட்டம் போட்டு குடும்பமே ஏமாத்தி போட்டீங்களேடி) இருந்து எனது மார்க் சீட் கற்றைகளை எடுத்து கொடுத்தாள்.

"உங்கப்பா என்ன தொழில் பண்றாருப்பா?" என்று திடீரென அன்பொழுக கேட்டார்.
"விவசாயம் பண்றார், ஒரு லாரி கூட வச்சிருக்காருங்க"
"நீங்க எதுல இங்க வந்தீங்க?"
"டீசல் புல்லட்லங்க"
"மார்க் ஷீட் ரொம்ப வெயிட்டா இருக்கேப்பா? எதுக்கு கஷ்டப்பட்டு பைக்ல கொண்டு வந்தீங்க? லாரில போட்டு எடுத்திட்டு வந்திருக்கலாம்ல!"

இதற்கு பிறகு எனக்கும், அவருக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளும், என் தங்கை பியூன் வரைக்கும் போய் கெஞ்சியதையும் (ஆளுதான் இப்படி, மத்தபடி இவன் ரொம்ப நல்லவன்ங்க)  நான் எழுதுவது உங்களுக்கு அவ்வளவு நல்லதல்ல.

எனக்கு நல்லது செய்ய முயன்ற (?) என் தங்கைக்கும், என் குடும்பத்திற்கும் நான் கொடுத்த வாழ்நாள் பரிசு அந்த கல்லூரியில் அவளுக்கும் சீட் இல்லை என்று துணை முதல்வர் எங்களை துரத்தி விட்டதே.

யாருகிட்ட?

அதன் பின் பக்கத்தில் இருந்த இன்னொரு சிறப்பு வாய்ந்த தனியார் கல்லூரி எங்கள் இருவருக்கும் இடம் கொடுத்தது.
ஏன்னா அவங்க அப்பத்தான் கட்டடம் கட்ட ஆரம்பிச்சு இருந்தாங்க....


    

No comments:

Post a Comment