Friday, February 19, 2016

மாமன்கள் எனும் அடிமைகள்

ஒரு மாலை மயங்கும் நேரத்தில் டீசல் புல்லட்டில் வந்திறங்கிய மாமா என்னையும் என் நண்பனையும் எங்கள் சங்க வாசலில் (ஒரு பெரிய பலகை போன்ற கல்தான் ) அரஸ்ட் செய்தார், அன்றுதான் அவரின் வாழ்க்கையில் பெருத்த அவமானம்  நேர்ந்தது.

கல்லூரி முடித்து வேலை இல்லாமல் அல்லது வேலைக்கு போக பிடிக்காமல் எங்களது ஊரை நாங்கள் ராஜாண்ட ஒரு  காலத்தில், எனது PVK செல்வராஜ் மாமா எனக்கு உற்ற தோழனாகதான் இருந்தார், கட்டுசேவல் சண்டை முடிந்து  சண்டையிட்டு தோற்ற சேவலை எடுத்துக்கொண்டு வந்து விடுவார், அல்லது இவரின் சேவலே அதில் தோற்றாலும் அதற்கும் சேர்த்தி காசு கொடுத்து அதை சமையல் செய்ய எடுத்து வருவார்.  

தோட்டத்தில் சேவலை சுத்தம் செய்து அதை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி, மசாலா எதுவும் சேர்க்காமல் சுமார் நான்கு மணிநேரம் எடுத்துக்கொண்டு செய்வார். அது போல ஒரு சுவை இந்த உலகில் எங்கும் இருக்காது என்ற நம்பிக்கை எனக்கு இன்னமும் உண்டு. 

பக்கத்தில் ஒரு கிணறு இருக்கும், அதில் 2 மணி நேரம் விளையாடிவிட்டு (கவனிக்க: குளித்து விட்டு அல்ல) சாப்பிட ஆரம்பிப்போம்.

நிற்க,

இவை எல்லாம் அவர் திமுக இளைஞர் அணி செயலாளர் ஆகும் வரையே நீடித்தது.

அதன் பின் அவர் எனக்கு பார்க்கும் இடத்தில் எல்லாம் புத்தி சொல்ல ஆரம்பித்தார், "வேலைக்கு போடா, வெங்காயத்துக்கு போடா" என. 
"சரிங் மாமா" என்பதை தவிர இந்த ரொம்ப நல்லவனால் என்ன பேச முடியும்.  

ரகசியமாய் பீர் குடிக்கும் பழக்கத்தை எங்கள் சங்க உறுப்பினர்கள் ஆரம்பித்த நேரம் அது. (பிகு: குடி குடியை கெடுக்கும்), குடித்து முடித்து ஒரு மிதப்பில் இருந்த போதுதான் அவர் எங்களை அரெஸ்ட் செய்வதாக நினைத்து என்னிடம் அரெஸ்ட் ஆனார்

"புத்தி சொல்லு மாமா, இல்ல சொல்லித்தான் பாரேன்" என ஆரம்பித்து ஒரு மணி நேரம் விடாமல் பழைய வஞ்சனையை வைத்து தீர்த்தேன்.  
"கெட்ட வார்த்தைல ஏண்டா ஒரு பெரிய மனுசன திட்டினே"ன்னு என் நண்பன் கூட சொன்னான்
"அப்படியா"ன்னு நான் காலைல கேட்டது தனி கதை.

இரவு முழுவதும் என் நாவினால் சுட்ட வடு தாங்காமல், தூங்காமல் தவித்த என் பிரிய மாமா, காலை 3 மணிக்கே எங்கள் வீட்டு கதவை தட்டி வீட்டில் அனைவரையும் எழுப்பி உக்கார வைத்து அழுது கொண்டிருந்தார்.

இரவு சம்பவங்கள் ஏதும் அறியாமல், தவம் கலைத்து காலை 9 மணிக்கு எழுந்த நான் "சாப்பிடுங்க மாமா" என அன்பொழுக அழைத்த போது ஏன் கோபமாக வெளியே போகிறார் எனவும், எனது  குடும்ப உறுப்பினர்கள் ஏன் துர்வாச அவதாரம் எடுக்க வேண்டும் எனவும் அப்போது எனக்கு தெரியவில்லை.            

சொந்த மாமாக்கள் எப்போதுமே நமக்குத்தான்  அடிமைகள், நாம் அவர்களுக்கு அல்ல என்பது எனது கருத்து.  

No comments:

Post a Comment