Thursday, November 3, 2022

பிடித்திருக்கிறது -ரிஸ்கா முக்தார்

பிடித்திருக்கிறது
கோபத்தில் கத்திப்பேசாதவனை
ஆத்திரத்தில் வார்த்தைகளை விடாதவனை
கண்ணீரை அவமானமெனக் கருதாதவனை
சமைக்கத்தெரிந்தவனை
சமையலைக் குறை கூறாதவனை
சாப்பிட்டத்தட்டை தானேக் கழுவி வைப்பவனை
நட்பினை மதிக்கத்தெரிந்தவனை
யாரையும் மட்டந்தட்டாதவனை
தன் தவறுகளைத் தவறென ஒப்புக்கொள்பவனை
போலியாய் நடிக்காதவனை
பிறர் வயிற்றில் அடித்து உண்ணாதவனை
தன் கொள்கைகளில் உறுதியோடிருப்பவனை
கனவுகளைப் பின் தொடர்பவனை
நேர்த்தியாக உடை அணிபவனை
தன் உடைகளைத் தானே தெரிவு செய்பவனை
காதலுக்காகப் பெற்றோரை நோகடிக்காதவனை
பாதியில் காதலைக் கைவிடாதவனை
பிரிவுக்குப் பின்பும் இரகசியம் காப்பவனை
பயணங்களில் அதீத ஈடுபாடுடையவனை
தனிமையில் மகிழ்ந்திருப்பவனை
எப்போதும் புன்னகையோடிருப்பவனை
அரசியல் அறிவோடிருப்பவனை
கவிதைகள் எழுதாதவனை
கலகலப்பாகப் பேசுபவனை
சமயங்களில் அமைதியாகி விடுபவனை
தோல்வியில் நிலைகுலையாதவனை
வாழ்வோடு போரிட்டு வெல்பவனை
எல்லோரையும் போல
எனக்கும்
பிடித்துதான் இருக்கிறது
இருந்தும்
ஏனோ
பெண்மையின் பலவீனங்களை
பயன்படுத்திக்கொள்ளாத
ஆண்மையின்
தாய்மையைத்தான்
எனக்கு
அவ்வளவு
பிடித்திருக்கிறது
-ரிஸ்கா முக்தார்-

No comments:

Post a Comment