Saturday, June 24, 2017

வயநாடு

எனது தம்பிக்கு திருமணம் நிச்சயமாகி இருந்தது, அவன் துபாயில் வேலை செய்து கொண்டிருக்கிறான், திருமணத்திற்க்கு பத்திரிக்கை கொடுக்க ஊட்டி, கூடலூர் போக வேண்டி இருந்தது. திருமணதிற்க்கு பத்து நாள் மீதம் இருக்கையில் தமிழ்நாடு வந்து சேர்ந்தான். பத்திரிக்கை கொடுத்துவிட்டு அப்படியே வயநாடு போய் இரண்டு நாட்கள் சுற்றி விட்டு திருமணத்திற்க்கு முன்பு ஒரு வாரம் வீட்டு சிறைக்கு அனுப்பி விட திட்டமிட்டு, மே கடைசி வாரத்தில்  வயநாட்டின் ஒரு பகுதியான புல்பாலியில் அமைந்துள்ள luxinn என்ற விடுதியில் அறை முன்னதாகவே பதிவு செய்து வைத்திருந்தோம்.
    கோவையில் இருந்து அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் காரில் கிளம்பி விட்டோம், இரண்டு பேர் கொண்ட பயணம், கடைசி நாட்களில் இன்னமும் இரண்டு நண்பர்கள் வரலாமா என்று கேட்க, அது நான்கு பேராக மாறியது.
 பரளியாறு தாண்ட ஆரம்பித்ததுமே அந்த ஊட்டி குளிர் காரின் ac யை அணைத்துவிட்டு அதை அனுபவிக்க தூண்டியது. மலைமேல் பயணிக்கும்  காலை பயணங்கள் உண்மையில் சொர்க்கங்கள்.    
   ஊட்டி வரை செல்பவர்கள் அதை தாண்டி கூடலூர் ரோட்டில் ஒரு பதினைந்து கிலோ மீட்டராவது செல்லுங்கள், அங்கே குளிரும் அதிகம், ஊட்டியின் வியாபார தன்மையை தாண்டி அழகு பறந்து விரிந்து கிடக்கிறது, அதுவும் பைகார தாண்டி மலை பார்க்கும் பகுதி இருக்கிறது, மேகம் கூட்டமாய் தலை உரசும் அங்கே தள்ளு வண்டியில் ஐஸ்கிரீம் சாப்பிடும் கணம் இருக்கிறதே, அதை விளக்கும் அளவு அழகியல் எழுத்தில் எனக்கு கைவரவில்லை. மகா அற்புதம் என கொள்ளுங்கள்.
 வயநாடு போன்ற தெரியாத இடங்களுக்கெல்லாம் கூகுள் மேப் எனும் கடவுள் கூடவே உதவிக்கு வருகிறார், ஒரு தடவை கூட நாங்கள் யாரிடமும் வழி கேட்கவில்லை, நேராக Luxinnக்கு அது கூட்டி சென்று விட்டது.
 கூடலூரில் இருந்து பத்து கிமீ தாண்டி சென்றால் குளிர் போய் விடுகிறது.
அதே கூகுள் வயனாடை அழகான படங்களை போட்டு, கேரளாவின் சொர்க்கம் என்றெல்லாம் வர்ணித்து வைத்திருக்கிறது, எக்கசக்க எதிர்பார்ப்புடன் கேரளாவில் நுழைந்தால் சுள்ளென அடிக்கும் வெயில் பட்டவயல் எனும் மலைக்கு கீழிருக்கும் பகுதியில்  வரவேற்கிறது. நாங்கள் சென்ற சமயம் மழை வேறு இல்லை, அடர் வன பகுதிகள் கூட பாதி வறண்டு போய் இருந்தது. நாங்கள் சென்ற luxinn வெகு தொலைவு வேறு.
 வயனாட்டுக்கு செல்வோர் கல்பேட்டாவில் தங்க அறை பதிவு செய்து கொள்ளுங்கள், luxinn பற்றிய நல்ல கூகிள் ரேட்டிங்கில் நாங்கள் ஏமாந்தோம், முதலாவது அதன் முகப்பு மட்டும் நன்றாக இருக்கிறது, தங்கும் அறைகள் அளவில் மிக சிறியவை, டீலக்ஸ் ரூம்களுக்கு தரும் விலை மிகமிக அதிகம், உள்ளே சாப்பிட ஹோட்டல் இல்லை, உணவு ஏற்பாடு செய்து தருகிறோம் என்றார்கள்,  காலையில் சுடுதண்ணிர் மட்டும் அரை மணிநேரம் வருகிறது, பழைய டிவி, மொபைல் சார்ஜ் போடக்கூட ப்ளக் பாய்ண்டுகள் இல்லை, என் கார் சார்ஜர் வேறு பழுதாகி உயிரை வாங்கியது. முக்கியமாக மாதம் ஒருநாள் வீட்டில் அனுமதி வாங்கி குடிக்கும் எனக்காக என் தம்பி அங்கிருந்து கிட்டத்தட்ட ஐயாயிரம் செலவில் இரண்டு புல் ஸ்காட்ச் வாங்கி வந்திருந்தான், குடிக்க அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள், ரூம் பாய்க்கு கொஞ்சம் காசு கையில் திணித்து குடித்தது தனிக்கதை.

 சரி வயனாடுக்கு வருவோம், குருவா ஐலன்ட் என்று கொடுமை அங்கே இருக்கிறது, மதியம் ஒரு மணிக்கு சென்றால் அதற்க்கு பின் அங்கு அனுமதி இல்லை என்றார்கள்.

பணசுரா அணை பற்றி ஓவர் பில்டப் கொடுத்தார்கள், அங்கே சென்றால் நீர் வரத்து மிக மிக குறைவு. பக்கத்தில் மீன் முட்டி அருவி இருக்கிறது அதுவும் அதே லட்சணத்தில் தான்.
 ஒரே பெரிய நிறைவும் ஆறுதலும் பூக்கொட் லேக், அங்கே நாங்கள் செல்லும் வழியில் மழை, அது அழகாக இருந்தது. செம்பரா, எடக்கல் பாறைகள், நீலிமலை காட்சிமுனை, கபினி என்றெல்லாம் சொன்னார்கள். சுமாராக இருந்தாலே உற்சாகமாக பயணங்களை அனுபவிக்கும்  எனக்கே போதுமடா சாமி என இருந்தது, ரூம் திரும்பி விட்டோம்.
 நீதி என்னவெனில், ஊட்டி குளிரை, பைகாரா வரை அனுபவித்து விட்டு கீழே கடும் வெயில் உள்ளதால் (கோவையை விட மிக அதிகம்) மண்டை காய்கிறது, அதிக எதிர்பார்ப்போடு போகக்கூடாது, மிக முக்கியமாக நீங்கள் மழை நன்கு பெய்து கொண்டிருக்கையில் அங்கு பயணம் செல்லுங்கள், ஒவ்வொரு சுற்றுலா இடத்துக்கும் தூரம் மிக அதிகம், அதாவது நாங்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து பணசுரா அணை போய், பூக்காடு முடித்தால் ஒரு நாள் ஆகிறது, ஏறக்குறைய நூறு கிலோ மீட்டர்கள், அதே போலதான் எல்லா சுற்றுலா இடங்களும் உள்ளன, அங்கிருந்த ரோடுகளை போல் படுகேவலமான குண்டும் குழியுமான ரோடுகளை நான் சமீபத்தில் எங்குமே பார்க்கவில்லை, ஒரு சில இடங்களில் வண்டியை பத்து, இருபது ஸ்பீடில் ஓட்டினாலே போதும் என்றாகி விடுகிறது. நன்கு திட்டமிட்டால் மட்டுமே ஒரு நாளில் மூன்று இடங்களை பார்க்க இயலும்.
 அவ்வளவு செலவு செய்து அங்கே போனதை விட, ஆசனூரில் நீச்சல்குளம் உள்ள ஹில்வியூ போன்ற காட்டேஜ்களுக்கு இரண்டு கோழி வாங்கி போயிருந்தால், சிறப்பாக அசைவ உணவு செய்வார்கள், அனுபவித்து குடித்து  சாப்பிட்டு, நீச்சல் குளத்தில் விளையாடி,  மலையை ரசித்தபடி அமைதியாக அமர்ந்து விட்டு, இரவு வனஉலா சென்று அதிஷ்டம் இருந்தால் புலியை கூட பார்த்து திரும்பி இருக்கலாம் என்ற எண்ணம் வராமல் இல்லை.

  

No comments:

Post a Comment