Wednesday, February 10, 2021

கர்நாடக சுற்றுலா பகுதி 2

 அடுத்ததாக நாங்கள் சென்றது ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமையான சாமுண்டீஸ்வரி கோவில், நஞ்சுண்டேஸ்வரா கோவிலில் இருந்து கிட்டதட்ட 30 கிலோமீட்டர், மைசூர் விமான நிலையத்தை செல்லும் வழியில் காணலாம். நாங்கள் செல்லும்போது விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்ததால் சுற்று வழியில் அனுப்பிவிட்டார்கள், கூகுள் மேப் உதவியுடன் சென்றும்  காடு மேடுகள் கடந்து முக்கால் மணி நேரத்தில் போய் சேரவேண்டிய கோவிலுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமானது. 

 இங்கே கொண்டாடப்படும் உலக புகழ் பெற்ற தசரா பாண்டிகை பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம், வெளிநாட்டிலிருந்தெல்லாம் வந்து கலந்துகொள்வார்கள், நீங்கள் வாகனத்தில் மலை மீதி ஏறி செல்லவேண்டும், பார்க்கிங் வசதிகள் நவீன முறையில், திரையரங்கள் கொண்ட மால்களில் இருப்பது போலவே அமைத்திருக்கிறார்கள், கட்டணம் மணிக்கு இவ்வளவு என கொள்ளையடிக்காமல் இருப்பது ஆறுதல், சுத்தமான கழிப்பறை வசதிகளும் இங்கிருக்கின்றன. 

கீழ்காணும் புகைப்படத்தில் பாருங்கள் கோபுர உயரமும் அதன் அழகும்


 



முழுவதும் கற்கள் கொண்டு அட்டகாசமாக வடிவமைத்திருக்கிறார்கள், உயரங்களில் உள்ள சிற்பங்களை பார்க்க பார்க்க வியப்பும் ஆச்சர்யமும் மிஞ்சுகிறது. வேலைப்பாடுகள் கண்களில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கின்றன. கோவில் உள்ளேயும் வெளியேயும் வெள்ளி கவசமிட்ட சிற்பங்கள் பேரழகு தருகின்றன. மூன்றாம் கிருஷ்ணராஜ உடையார் என்ற மஹாராஜா மற்றும் அவரது மனைவியர் சிலைகள் கூட கோவிலுக்குள் இருக்கின்றன.இதன் கோபுரத்தில் எட்டு தங்க கலசங்கள் உள்ளதாம். 
உள்ளே நமது ஊர் கோவில்கள் போல கையில் தராமல் கட்டியில் வெள்ளைவெளேரென திருநீறு வைத்திருக்கிறார்கள், வழிபடும்  அனைவரும் தானே எடுத்து கொள்ளவேண்டியதுதான். இந்த கோவில் மைசூரில் இருந்து எந்த பக்கம் பார்த்தாலும் தெரியும் வண்ணம் அமைத்திருப்பது சிறப்பு.  விஜயதசமியன்று கேரளா போல யானைகள் வரிசையாக வர, சுமார் 750 கிலோ எடை கொண்ட தங்க கோபுரத்தில்  தலைமை யானையில் சாமுண்டீஸ்வரி கோலாகலமாக வருவாராம். அந்த தினத்தன்று அடிவாரத்திலிருந்து கூட்டம் நிரம்பி வழியுமாம்.  இங்கேயும் நாம் சர்வசாதாரணமாக தமிழ் பேசலாம், புரிந்து கொண்டு பதிலளிக்கிறார்கள். கோவிலுக்கு உள்ளேயே டோக்கன் போட்டு நூறு ரூபாய்க்கு ஆறு லட்டு என மீடியம் சைஸில் தருகிறார்கள். அங்கே கொடுக்கப்படும் லட்டு சுவையாக இருக்கிறது, அதுதான் அங்கே ஸ்பெஷல்  

வெளியே வந்தால் ஏதாவது பொருளை கையில் வைத்துக்கொண்டு வாங்க சொல்லி நச்சரிக்கிறார்கள். விலையெல்லாம் பேரம் பேசி வாங்கலாம்,  வேகவைத்த சோளக்கருது சாப்பிடுவதற்கு கற்களை எடுத்து சாப்பிடலாம் அவ்வளவு மோசம், உப்பு மிளகாயில் ஊறவைத்த நெல்லிக்காய் சிறப்பாக இருக்கிறது. நமது பங்காளிகளான குரங்குகள் தொந்தரவும் உண்டு, எனது மைத்துனியின் கையிலிந்த ஸ்வீட் கார்னை மொத்தமாக வழிப்பறி செய்து ஆட்டையை போட்டது ஒரு குரங்கு. 

அதன் பின் பதினைந்தடி உயரமுள்ள நந்தி ஹில்ஸ் சென்றோம். 


இது இருநூறு ஆண்டு பழைமை வாய்ந்த ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிலை, உள்ளே குகைக்குள் உருவாக்கப்பட்ட  குறுகிய  வடிவில் சிரமப்பட்டு உள்ளே சென்றால் சுமார் நூறு பேர் நிற்கக்கூடிய கட்டுமானத்தில் வழிபட சிவன் கோவில் உண்டு. கோவிலை விட்டு வெளியே வந்தால் பாதி மைசூர் நகரம் தெரிகிறது, அதில் மிக சிறப்பான பார்வை காட்சிக்கு ரேஸ் கோர்ஸ் எனப்படும் விளையாட்டு மைதானம் கண்ணை கவர்கிறது. 

இந்த பகுதியோடு கோவில்களுக்கு முற்றும் கொடுத்துவிடுகிறேன், அடுத்தடுத்த பகுதிகளில் அரண்மனை, பிருந்தாவன் கார்டன் போன்ற பொழுது போக்கு சுவாரஸ்யங்களுக்கும், சினிமா பாணியில் இருக்கும் குவாரி அனுபவங்களுக்கும், தாளவாடி  வனப்பகுதி நிகழ்ச்சிகளுக்கு நான் உத்தரவாதம் தருகிறேன். தயாராகுங்கள்


 


No comments:

Post a Comment