Tuesday, February 9, 2021

கர்நாடக சுற்றுலா - பகுதி 1

 சனியன்று கோவையிலிருந்து நான் எனது மனைவி மகன் என மூன்று பேரும் அதிகாலை 3 மணிக்கு கிளம்புவதாக தான் திட்டம், இருவருக்கும் வேலை நீண்டுவிட்டதால் கிளம்ப 5 மணியாயிற்று. கர்நாடக  நஞ்சன்கூடு பகுதியில் உள்ள நஞ்சுண்டீஸ்வரர் கோவிலை தரிசிப்பது முதல் திட்டம். எனது தம்பி ஒருவன் புதிதாக திருமணம் முடித்து நஞ்சன்கூடு பகுதிக்கு அருகிலேயே பந்திப்பூர் சாலையில் எரிக்கட்டி என்ற ஊரில் வீடு வாங்கி கட்டி, அங்கேயே விவசாயம் செய்கிறான், தவிர டிப்பர் லாரிகளும் வைத்திருக்கிறான், அவனையும் கோவிலுக்கு வரச்சொல்லி மைசூர் சுற்றிபார்ப்பதே எங்கள் திட்டம். பவானிசாகர் பண்ணாரி வழியாக திம்பத்தை அடையும்போது மணி ஏழாகி விட்டது, எனது ஓனர் வேறு மலை பயணம் என்றாலே வாந்தி எடுக்கும் ஜீவன் வேறு, திம்பத்தில் எலுமிச்சையெல்லாம் வாங்கி கொடுத்து அமைதி படுத்தவேண்டியதாயிற்று.

 திம்பத்தில் செக் போஸ்ட் ஒட்டியே ஒரு பலகார கடை இருக்கும், அங்கே முறுக்கு, தட்டுவடை போன்ற சிறுதீனிகள் மிக சுவையாக இருக்கும், வாங்கிக்கொள்ளலாம், குளிர் ஊடுருவும் அங்கே டீ சாப்பிடுவது தனி சுகம். கூகுள் எனும் கடவுள் உதவியுடன் நீங்கள் உலகில் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் யாரை கேட்காமலும் பயணம் செய்யலாமல்லவா? குறிப்பாக கேரளாவில் வழி கேட்டீர்கள் எனில் சுற்றுலாவே வேண்டாம், நீங்கள் வந்த வழியே திரும்பி போய் விடலாம், அதனால்தான் கூகிள் மேப் அட்டகாசமான வழிகாட்டி என்கிறேன்.

திம்பம் தாண்டியதும் நாங்கள் கொண்டாட்டத்திற்காக அடிக்கடி செல்லும் ஹாசனூர் வருகிறது, ஆண்களின் கொண்டாட்ட ஸ்தலமான, இதை பற்றி நான் முன்பே விலாவரியாக எழுதிவிட்டதால் ஹாசனுர் , அதை தாண்டியதும் தமிழ்நாடு கர்நாடக எல்லை பகுதியான சுற்றிலும் காடுள்ள பகுதியில் கூட்டமாக மேயும் மான்களை எப்போதும் காணலாம், காட்டு பன்றிகள் வேறு அங்கங்கே சிங்கிளாக சுற்றி திரியும். மான்கள் கூட்டத்தை ரசித்துவிட்டு சிறிது தூரம் கடக்கையில், முன்பெல்லாம் திருமணமான பேச்சுலர்ஸ் நாங்கள் ஹாசனூர் செல்லும் போது மணிக்கணக்கில் காத்திருக்கையில் பார்க்க முடியாத  புலி சலீரென்று காரின் முன்புறம் தாவி ஓடிற்று. எங்கள் குடும்பத்துக்கே இன்ப அதிர்ச்சி, எனது மகன் சப்தமாகவே "புலிப்பாபாபாபாபாபா" என்றான். வாழ்வில் முதல்முதலாக டிவியில் பார்த்து வந்த மிருகத்தை நேரடியாகவே பார்த்த அனுபவம் அவனுடையது. இனி எவ்வளவு முறை அந்த இடத்தை கடந்தாலும் அவனுக்கு எப்போதும் அது நினைவில் தங்கும்.

தமிழக சாலைகள் எவ்வளவு அற்புதமானவை என நீங்கள் கர்நாடக எல்லையை தொட்டாலே தெரியும். நான் கடந்த இருபது ஆண்டுகளாக அந்த சாலையில் சென்றிருக்கிறேன், அவ்வளவு கேவலமான சாலை அது. எட்டு கிலோமீட்டரை கடப்பதற்கு குறைந்தது முக்கால் மணி நேரமாகும். மூன்றடி குழிகளெல்லாம் சாலையில் சர்வ சாதாரணமாக பல்லிளிக்கிறது, பத்து கிலோமீட்டருக்கு மேல் வண்டியை ஓட்டவே முடியாது. கிளட்ச் அழுத்தியே கால்களில் பாரம் சுமப்பதுபோல வலி வந்துவிடும். பயணத்தில் மிக மோசமான அனுபவம் இதுதான்.

கர்நாடக எல்லைக்குள் தமிழ்நாட்டு பகுதியான தாளவாடி இருப்பதும் இங்கேதான். தலைமலை என்றொரு பகுதி இங்குள்ளது, அதன் அபாயங்கள் அற்புதங்கள் பற்றி கடைசியில் எழுதுகிறேன்.

நஞ்சன்கூடு வரை உள்ள கர்நாடக பகுதிக்குள் நீங்கள் கடைகள், உணவகங்கள், பொருட்கள் வாங்குமிடங்கள் என எங்கேயும் தமிழ் பேசலாம், அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், தவிர ஏராளமான தமிழ் மக்கள் அங்கே தோட்டம் பிடித்தோ, வாங்கியோ விவசாயம் செய்கிறார்கள். எளிதில் தாங்கள் வசிக்கும் பகுதியில் புகழ் பெற்று விடுகிறார்கள். (தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு) எனது அக்கா குடும்பம் நஞ்சன்கூடில் தான் வசிக்கிறது. நமது அரசியலில் காழ்ப்புணர்ச்சியில் கன்னடர்கள் விரோதியாக தெரியலாம், ஆனால் பழகினால் உயிரையே கொடுக்குமளவு நல்ல மனிதர்கள், அவ்வப்போது மட்டும் அக்கா வீட்டிற்கு சென்று வரும் எனது அப்பாவிற்கு கன்னடம் மட்டுமே பேச தெரிந்த  நெருங்கிய நண்பர்கள் பலர் உண்டு, இத்தனைக்கும் என் அப்பாவிற்கு சுத்தமாக கன்னடமும், அவர் நண்பர்களுக்கு தமிழும் தெரியாது.

கோவையில் இருந்து நான்கரை மணி நேரத்தில் (around 200 km)  நஞ்சன்கூடு, நஞ்சுண்டீஸ்வரர் கோவிலை அடையலாம். மிக பழமையான கோவிலான இதை, திப்பு சுல்தான் இங்குள்ள மரகத லிங்கத்தை பிரதிஷ்டை செய்தார் என்கிறது வரலாறு. அழகான கட்டிட கலை, மிக பழைமையான வலுவான கல் தூண்கள், உயரமான கோபுரம் என கண்கொள்ளாதபடி நிறைகிறது இந்த கட்டிட கலையின் அற்புதம். கோவில் வெளியே பெரிய சிவன் சிலை ஒன்றை கவரும்படி வண்ணமயமாக அமைத்திருக்கிறார்கள்.

(கோவில் உட்புறத்தில் இருந்து, நான், என் செல்ல புதல்வன் என் தம்பி

புதிதாக திருமணமான என் தம்பியும் அவனது ஓனரும் அங்கே எங்களுக்காக காத்திருந்தார்கள், பயணம் அதன் பின் களை கட்டியது, என் மனைவிக்கும் மகனுக்கும் தோழி கிடைத்துவிட்ட மகிழ்ச்சி, எனக்கோ புது டிரைவர் அமைத்து விட்ட ஆனந்தம். ராம் பிரசாத் எனும் உணவகத்திற்கு எனது தம்பி கூட்டி சென்றான், இதற்கு முன்பு ஒரு உணவகத்தில் சாப்பிட்ட மோசமான அனுபவத்தோடு அதை சகித்து கொள்ளலாம் என சென்றால் உணவு வகைகள் தரமான சுவையாக இருந்தது. நமது அன்புபவன் ஆனந்த பவன் போல பார்வைக்கு உயர்தரம் கொடுக்கும், விலையும் குறைவாகவே இருந்தது. அந்த உணவகத்தை தேடி சென்று தாராளமாக சாப்பிடலாம்



வெளியே வருகையில் பக்கத்தில் மிக சுத்தமாக, அழகாக இருந்த ஒரு கடையை  ஏதோ உயர் ரக பேக்கரி என நினைத்து பார்த்தால் மது விற்பனை கடை. தனியார் வசமிருக்கிறது, கூட்டமும் ஒன்றும் அதிகமில்லை, குடிகார வாடிக்கையாளர்களால் எந்த பஞ்சாயத்தும் இல்லாத இடமாம். பொறாமைகள். காசு கொடுத்து குடிக்கும் குடிகாரர்களை வாடிக்கையாளர்களாக மதிக்கும் இடமாக இருக்கிறது. தவிர பேராச்சர்யங்களில் ஒன்று ஒவ்வொரு பிராண்டிற்கும் அதன் விலை, மற்றும் விளம்பரம் தரமாக இருக்கிறது. அதாவது விற்பனை போட்டி விளம்பரங்கள் கடையில் வைத்திருக்கிறார்கள். 


நாற்றம் சூழ சகிக்க முடியாத இடங்களில், கூச்சலும் சண்டையாக, அதிகமாக விலை வைத்தும், போலி மதுபானங்களை விற்கும் டாஸ்மாக் நமது தமிழ்நாட்டை நினைத்தால் அவமானமாகத்தான் இருக்கிறது.


உணவு உண்டு முடித்ததும் புராதனமான பாலமாக அறிவித்துள்ள நஞ்சன்கூடு பாலத்தை பார்த்தோம். 1735ல் கட்டப்பட்ட இது ரயில் மற்றும் இதர வாகனங்கள் அருகருகே செல்லும்படி இருக்கிறது 



எழுதியது கொஞ்சம், இன்னும் பல சுவாரஸ்யங்கள் நிறைந்திருக்கின்றன
தொடரும்….

2 comments:

  1. மிகவும் அருமை பாஸ்.அப்படியே கொள்ளேகால்- மாதேஸ்வரன் மலை பத்தியும் எழுதுங்கள்.

    ReplyDelete
  2. போரடிக்காம அடுத்து என்ன என்ன னு யோசிக்க வைக்கற மாதிரி சுவாரஸ்யமா எழுதி இருக்கீங்க..சூப்பர்..😍

    ReplyDelete