Monday, February 15, 2021

ஓஷோ சாஸ்வதம் வகுப்பு

 கடுமையான பணி சுமைகளாலும், எங்கள் பகுதியில் எட்டு நகர் மக்களை  ஒன்று சேர்த்து, அதற்காக பலவிதமாக இயங்கி, பலதரப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் போராட்டத்திலும், சுயநலமில்லாத செயல்களாக இருந்தாலும் அரசியல் உள்ளே நுழைந்ததால் அதை சமாளிக்க திணறியும்,   குடும்ப தேவைகளை பூர்த்தி செய்யும் கடமைகளிலும் உழன்று கொண்டிருந்த நான் எனது நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு ஓஷோ சாஸ்வதம் 2 நாள் வகுப்பை அணுகினேன். வகுப்புகளை பற்றி எந்தவித எதிர்பார்ப்பும் என்னிடம் இல்லை, இன்னமும் சொல்லப்போனால் நான் ஒரு பரபரப்பான மனிதன். ஒரு அமைதியான மனநிலையை நாடி சாஸ்வதம் வந்தேன். 


வெள்ளி மாலை சுமார் ஆறு மணியளவில் உள் நுழைந்தேன். ஓஷோ நிர்தோஷ் அவர்களின் வழிகாட்டுதலின் படி அன்று தொடங்கப்பட்ட முதல் வகுப்பு அறிமுகம் செய்யும் வகையிலும், வெள்ளை கயிறு (White robe) என பொருள்படும்படி வகுப்பு நடைபெற்றது. தியானமென்றால் அமைதியாக அமர்ந்திருப்பது என நினைத்த எனக்கு அதுவே மாறுதலாக இருந்தது. முதல் நாள் உணவும் சுற்றுப்புற சூழ்நிலைகளும் அருமையாக இருந்தன. சுத்தமான வெள்ளை உடைகளை கொடுத்தார்கள், செய்த பயிற்சிகளும், அந்த உடையும், பரபரப்பாக இயங்கி வந்த எனக்கு உள்ளுக்குள்ளே குறைந்த பட்ச அமைதியை கொண்டுவந்தது நிஜம். வேறொரு மனிதனாக என்னை மெல்ல உணர்ந்தேன். 

எனக்கு கொடுக்கப்பட்டிருந்த அறையில் தாராபுரத்தில் இருந்து யுவராஜ், மதன் என இரண்டு நண்பர்கள் அறிமுகமானார்கள். முதல் பழக்கத்திலேயே அவர்களை மிகவும் நெருக்கமான நண்பர்களாக உணர்ந்தேன். 

சனியன்று காலை டைனமிக் எனப்படும் வகுப்பு நடைபெற்றது, மிக சாதாரண மனிதர்களாக தெரிந்த வகுப்பை நடத்தும் ஆசிரியர்களின், அங்கே தங்கியிருக்கும் பெண்களின் மொத்த வலிமையை, அர்ப்பணிப்பை அங்கே நான் உணர்ந்தேன். வாழ்நாள் வரை கூட வரும் அதிஅற்புதமான பயிற்சி என்றால் இதுதான். மொத்தமான ஒரு மனிதனின் செயல்பாடுகளையே மாற்றி அமைக்கும் வல்லமை கொண்டது இந்த பயிற்சி.  



இது தவிர நட்ராஜ் ஜிப்ரிஸ், குண்டலினி வகுப்புகள் சீரான இடைவெளியில் அன்று முழுவதும் நடைபெற்றன. சிந்தனையில் உழன்று கொண்டே இருக்கும் நான் மதியம் கிடைத்த இடைவெளியில் தூங்கி விட்டேன், அங்கே எனக்கு திரு புவியரசு அவர்கள் மொழி பெயர்த்த தஸ்தயேவ்ஸ்கியின் கரமாஸவ் சகோதர்கள் புத்தகம் எனும் புதையல் கிடைத்தது. ஓஷோ பரிந்துரைத்த இது முன்னுரையிலேயே அது எவ்வளவு வலிமையான புத்தகம் என புரிந்தது, எப்படியாவது இரவு நான்கு மணிநேரமாவது படித்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்தில் தூங்கியிருக்கிறேன். என்னை அறியாமல் நடந்த நிகழ்வு இது.  தூங்குவதற்கு கடும் பிரயத்தனம் படும், “நானா இது?” என்பதில் எனக்கு பேராச்சர்யம். 

மைத்ரேயா ஒரு கடுமையான மாஸ்டராகவும், நல்ல நண்பராகவும் இருந்தார், எளிய விளக்கங்கள், நகைச்சுவை உணர்வு, தேவை அறிந்து உதவும் பண்பு என என்னை மிகவும் ஈர்த்தார். குறிப்பாக அவரது இளையராஜா பாடல்களில் முழு ஜீவன் இருந்தது. அவரது துணைவியாரும் அதற்கு சளைத்தவரில்லை என்பதுபோல பயிற்சிகளிலும், பாடல்களிலும் தனித்துவமாக தெரிந்தார். இரண்டு நாட்கள் குடும்பமாகவே பழகிய பிரபு, விஜயன் மற்றும் பெயர் தெரியாத அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. 

தோன்றும் உணர்வுகளை எல்லாம் எழுத்தால் கொண்டு வர இயலாது அல்லவா?  

நான் பாடிய பாடலுடன் அதை வெளிப்படுத்த முயல்கிறேன்.

ஓஷோ சாஸ்வதம் வகுப்பு எனக்கு

“ஏய்...

என் தலைக்கேருற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ?

என் நெலம் மாத்துற

அந்தரமாக்குற

என் நெஜம் காட்டுற

பட்டா கத்தி தூக்கி

இப்போ மிட்டாய் நறுக்குற

விட்டா நெஞ்ச வாரி

உன் பட்டா கிறுக்குற


என் தலைக்கேருற

பொன் தடம் போடுற

என் உயிராடுற

என்னடி மாயாவி நீ?”

சுற்றிலும் மனிதர்கள் இருந்தாலும் தனிமையின் பேரானந்தத்தை உணர்த்திய  சாஸ்வதம் இல்லத்திற்கு நன்றி என்ற வார்த்தை மிகவும் குறைவு.  



1 comment:

  1. நல்ல அமைதி கிடைச்சிருக்கு போல..மகிழ்ச்சி

    ReplyDelete