Thursday, July 5, 2018

அன்புள்ள மிஷ்கின் அவர்களுக்கு

வணக்கம்.

இப்போதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். இந்த கடிதம் வணிக சம்மந்தமானதல்ல, அது சம்மந்தமாக எழுதினாலும் யாருக்கும் உபயோகமும் இல்லை.

தவிர இந்த படத்தையும் நீங்கள் வணிக ரீதியில் சமரசம் செய்ய முற்படவில்லை என்பது வேறு விஷயம். "ஏன் முன்பு தியேட்டரில் பார்க்கவில்லை?" என்ற கேள்விக்கு நிச்சயம் என்னிடம் பதிலில்லை, ஏனெனில் படம் வந்ததே தெரியாத அளவிற்கு எனக்கு ஏற்பட்ட விபத்தோ, மகனின் பிறப்பில் ஏற்பட்ட கோளாறால் மருத்துவமனையிலோ அல்லது வேறு ஏதாவது பண தேவை சம்மந்தப்பட்ட பைத்தியமாகவோ நான் இருந்திருக்க கூடும்.

நிற்க,

படத்தின் கதாநாயகன் சர்வ நிச்சயமாக இளையராஜா தான், இந்த படத்தின் காட்சிகளை பார்வையாளர்களுக்கு வசனம் எழுதி புரிய வைக்க வேண்டிய தேவையை ஏறக்குறைய விலக்கியே வைத்து விட்டார். படத்தை பதைபதைப்பாய் கொண்டு சென்றதில் அவர்தான் போர் வீரன்.

ஓநாய் நீங்கள் தான். உடல் மொழியில் அப்படியே கொண்டுவந்திருக்கிறீர்கள், உடல் முழுவதும் காயம்பட்டு கிடந்தாலும் கொஞ்சம் கூட குறையாத  வேட்டையாடும் துடிப்பும், இழப்பின் ஊமை தவிப்பும், அதுவும் ஒவ்வொரு இழப்பின்போதும் மெளனமாக தலை குனியுமிடம் உச்சம். திருநங்கை ஏஞ்சல் கிளாடியா தலை நிமிர்ந்து உங்களை பார்க்கையில், காப்பாற்ற இயலாமல் தரை நோக்கும் காட்சி உச்சமய்யா. என்னால் இன்னமும் அதிலிருந்து மீண்டு வர இயலவில்லை. படத்தில் உங்களுக்கு வசனமே இல்லையோ என நினைத்திருந்த நேரத்தில் அந்த "எட்வினண்ணா நீங்களாவது கதை சொல்லக் கூடாதா" என குட்டி இளவரசி கேட்கையில் ஆரம்பித்தீர்களே? கண்கள் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது.

ஸ்ரீ எனும் ஆட்டு குட்டியின் உடலில் ஒரு டன் சுமையை வைத்து சுமக்க சொல்லி விட்டீர்கள், அற்புதம் அந்த குட்டி எந்த வித யோசனையுமில்லாமல் உங்களின் உடலைக் கூட சேர்த்தே சுமந்து வந்தது.

 இதை தாண்டிய வசீகரிப்பை சொல்லிக்கொண்டே போகலாம்

"நீ டாக்டர், நீ டாக்டர்" என கையில் கொடுத்த பணத்தை வீசி எறிந்து விட்டு குதூகலிக்கும் மனநிலை தவறியவர்.

"அவனை அரெஸ்ட் பண்ணது தப்புதான் சார், நியாயமா உங்களை முதல்ல பிடிச்சிருக்கணும்" வெறியோடு குற்றவாளியை தேடி தொலைத்துக்கொண்டே இருப்பவனின் கோபம்.


"பணமெல்லாம் தேவைப்படாது, நான் சாகப்போறேன் அதுக்கு முன்னாடி எட்வினை கொல்லனும்" முதன்மை தொழில்முறை வேலைக்காரனின் கூரிய வசனம்.

"மூத்திர பையோட அலைஞ்சிட்டிருக்கேன், அவனை உயிரோடவும், உயிரில்லாதவும் பார்க்கணும்" கடிபட்ட கரடியின் வெறி.


"கொல்லப்பட்டு சாவும் போலீஸ்காரர்கள் வித விதமான குரலெழுப்பி சாவது,
அதிலும் அந்த "ஐயா", பதவியை அந்த வார்த்தையாலே தக்கவைத்து, சாகும் போதும் அது தவிர வேறு எண்ணமே வராத எழுபது விழுக்காடு காவலர்களின் நிலைமை.

"நல்லவேளை அதில ஒருத்தன் மார்ல உதைச்சான், மயக்கமாகி விழிச்சு பார்க்கிறேன், இங்கே இருக்கேன்" எனது நெஞ்சிற்கு கடத்தப்பட்ட வலி.

சாவின் விளிம்பிலும் யாரும் துப்பாக்கியால் சாக கூடாது என மேல் நோக்கி சுடும் அப்பா.

ஒரு பெரும் கொலைகாரன் கதவை திறந்து விடச்சொல்லி பார்வையால் காவலாளியை கெஞ்சும் இடம்

"அம்மாக்கு என்னாச்சு எட்வின் அண்ணா?" என்ற பதில் சொல்லவே இயலாத கேள்விக்கு,
"செத்துட்டாங்க" ஒரே வார்த்தையில் அதை முடித்த விதம்.

 ஒரு திரில்லர் படத்தில் மனித நேயத்தை விதைக்கும் வித்தை எப்படி கை வந்தது?

இந்த அரைகுறை எழுத்தை வைத்துக்கொண்டு என்னால் இதற்கு மேல் எழுத தெரியவில்லை

வேறென்ன....
உங்களுக்கும், பவாவிற்கும் நன்றி மிஷ்கின், ஏனெனில் உங்களை ஒரு இயக்குனராக இல்லாமல் "இந்த ஜோயல் இருக்கானே இவன்தான் என் தாய், தகப்பன், நண்பன் எல்லாம்... மத்தியானம் அவன் பட்டினி கிடந்தது எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்ருக்கான், அவன் கணக்கையே அடைக்க முடியல பவா" என வேறு ஒரு கோணத்தில் எல்லா நாளும் கார்த்திகையில் அறிமுகம் செய்ததே அவர்தான். புத்தகங்களை அடுத்தநாளே அனுப்பிய என் அக்கா சைலஜாவிற்கும் அன்பு.

உங்கள் காட்டின் இந்த இலை, இனி ஒநாயையும் ஆட்டுக்குட்டியையும் அதன் உள்ரேகை போல சுமந்து கொண்டே திரியும்.










No comments:

Post a Comment