Wednesday, March 28, 2018

ஹாசனூர் கோடை வாஸ்தலம்

கொங்கு மண்டலத்தை சேர்ந்த நண்பர்கள் ஒருநாள் பொழுதுபோக்கு வேண்டும் எனில் தாராளமாக ஹாசனூரை தேர்ந்தெடுக்கலாம். (குடும்ப குத்து விளக்குகள், பெண்ணிய போராளிகள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் உங்களுக்கு உபயோகமாக எதுவும் இல்லை, நண்பன் மேல் அக்கறை உள்ள நல்ல பெண்கள் மட்டும் தொடரவும் )

27 மிக குறுகிய கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட திம்பம் மலை பண்ணாரி வன சோதனை சாவடியிலிலிருந்து ஆரம்பமாகிறது. (லஞ்சமா லாரிக்கு இருநூறு ரூபா வாங்கறாங்க, "சாப்பாட்டுக்கு பதிலா வேறு ஏதாவது சாப்பிடலாமே போலீஸ்கார்"ன்னு கூட திட்டினேன், வேகமா அங்கிருந்த சாவடிக்குள்ள புகுந்துட்டார் ஒரு போலீஸ்)

 மிக கவனமாக மலை ஏறுங்கள், முக்கியமாக டேங்கர் லாரிகள் நிறைய போகும் பாதை அது, நூறு மீட்டர் இடைவெளி விட்டே தொடருங்கள், அவர்கள் கொண்டை ஊசி வளைவுகளில் பின்னால் வந்தே திருப்ப முடிகிறது .

காலையில் நேரத்திலேயே பயணத்தை தொடங்கி விடுவது உத்தமம், ஏனெனில் மான்கள், மயில்கள், முயல்கள், உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் கரடி, யானை மற்றும் ஆளை கொல்லும் சிறுத்தை புலிகளைக் கூட காணலாம். நாங்கள் நிறைய மான்களும், மயில்களும், காட்டு பன்றிகளும், ஒரே ஒரு கரடியையும் பார்த்தோம். (கார் பைக் இரண்டும் ஏற்றது)
 திம்பம் மலையில் பாதி தூரம் ஏறும்போதே மெல்லிய குளிர் உங்களை தழுவிக் கொள்ளும்... கொண்டை ஊசி வளைவுகள் முடிந்த பிறகு வனப்பகுதி சோதனை சாவடி அலுவலகம் தாண்டி ஒரு சிறிய கடையில் சுடசுட சிறு பலகாரங்கள் செய்து தருகிறார்கள். நல்ல ருசியும் கூட... (அங்கேயே டச்சர்கள் வாங்கி கொள்க)

தலைக்கு ஐநூறு வீதம் அறை எடுத்து தங்கும் வசதி ஹாசனூர் முழுவதும் நிறைந்து கிடக்கிறது. KAS என்னும் விடுதியில்  நீச்சல் குளம் வெகு சிறப்பு, தேவையான அளவு தண்ணீர் நிரப்பி தருகிறார்கள். அறைகளும் தேறுகிறது.
 சாப்பாடு நன்றாக சமைக்க வரும் எனில் நாட்டு கோழியை வாங்கி காரில் வைத்துக்கொண்டு அங்கு சென்று சமைக்கலாம், சமையலறை, பாத்திரங்கள் எல்லாம் தருகிறார்கள், நாங்கள் அங்கே சென்று சமைத்தோம். இல்லையெனில் அங்கேயே செய்து தர சொல்லியும் சாப்பிடலாம்.


உற்சாக பானம் வாங்க பக்கத்திலேயே டாஸ்மாக் உள்ளது... ஆறு கிலோ மீட்டர் சென்றால் கர்நாடக சரக்கு மளிகை கடைகளிலேயே கிடைக்கிறது (ஹாப் க்கு தாங்கும் என் கஸின் கட்டிங்கிற்கே பாசத்தை கொட்ட ஆரம்பித்தான்) விலை, சுவை, தரம் உத்தரவாதம். இந்த முறை என் தம்பி துபாயில் இருந்தே வாங்கி வந்து விட்டான், இருந்தாலும் நாலு பாக்கெட் வாங்கினோம் (ஆம், அது ஜுஸ் பாக்கெட்களிலும் கிடைக்கிறது)


காலை மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் கர்நாடக எல்லை வரை சென்றால் புலி மானை சாப்பிட்டு கொண்டிருக்கும் டிஸ்கவாரி நிகழ்ச்சிகளை   காணலாம் என்றார்கள். (ஏனெனில் அது புலிகள் காப்பகம்) காலை வரை மட்டையாகி விட்டதால் அதை காண இயலவில்லை
ஆக ஒரு நாளை மிக ஜாலியாக நண்பர்களுடன் பொழுது போக்கி வர உகந்த இடம் ஹாசனூர், ஹாசனூர், ஹாசனூர்
-நிறைவு

No comments:

Post a Comment