Wednesday, September 21, 2016

"ஜக்கு" என்ற ஜெகதீஷ்

என் தம்பியை பற்றி முக நூல் பக்கங்களில் இருந்து மணியன்....

ஜக்கு என்று எல்லோராலும் அழைக்கப்படும் ஜெகதீஷ்... 6 மாதக்குழந்தையாய் இருந்த போது "Tetraplegia" வால் பாதிக்கப்பட்ட இந்த 24 வயது இளைஞருக்கு நம் எல்லோரைப் போலும் எழுந்து நடக்கவோ, ஓடவோ முடியாது. ஏன்? தொடர்ச்சியாய் ஒரே இடத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருக்கவும் முதுகெலும்பு அனுமதியாது. கழுத்துப் பட்டை துணை இன்றி கால் மணி நேரம் அமர்ந்திருக்க முடியாது.. ஆனால் எந்த ஒரு பணியையும் கண நேரத்தில் கட்சிதமாக முடிக்கும் திறன் கொண்டவர்.

"அம்ரித் சிறப்புப் பள்ளியில்" படிக்கும்போது, தான் ஒரு சிறப்பு குழந்தை இல்லை, சமுதாயம் சிறப்பிக்கப் பிறந்த குழந்தை என்ற உறுதியை ஏற்றார். தனது அங்க பல/பலகீனங்களை அறிந்த இவர், "Web Page Development , Corel Draw, Photo Shop" தொழில்நுட்பங்களை கற்று தேர்ந்து சமூகவலைத்தளங்களில் வலைத்தளங்களில் பெரும் புரட்சி செய்துவருகிறார்.

சமூக ஆர்வலர், வலைப்பதிவாளர், இணையதள வடிவமைப்பாளர் என்ற பல்வேறு பரிமாணங்களைக்கொண்ட இவர் சிறந்த வாசிப்பாளர், எழுத்தாளர், கவிஞர் போன்ற அடையாளங்களையும் கொண்டவர்.

இவர் சார்ந்திருக்கும் பரஸ்பரம், Coimbatore zonal Eye Donation Trust அமைப்பு மூலம், கண் தானத்தை ஊக்குவித்து, பலநூறு பேர் விழி கிடைக்கப்பெற்று இந்த உலகைக் காணும் வழி செய்தவர்.
Ultra Service Journey Charitable Trust, Thoorigai Charitable Trust மூலம், குருதிக் கொடை, உடல் உறுப்பு தானம், குழந்தைகள் கல்வி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்துவருகிறார்.

Enable Foundation, United Hearts Charitable Trust, Bhojanam, Sahana Charitable Trust, Pirarukku Udhavu, Kovai Aram Foundation போன்ற அமைப்புகளின் தன்னார்வலராகவும், ஆலோசகராகவும் இருந்து பசிப்பிணி, இளைஞர் திறன் மேம்பாடு, கல்வி மேம்பாடு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்.

சமூக வலைத்தளங்களை ஆக்க சக்திக்குப் பயன்படுத்தி, தனது சமூக வலை தொடர்புகள் மூலம், நிவாரணப் பொருட்களைத் திரட்டி, சமீபத்திய வெள்ளத்தின் போது, C4TN (Coimbatore For Tamilnadu) என்ற அமைப்பின் மூலம், 70 லாரிகள் உணவு மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பியதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

நூலகம் ஒன்றை நிறுவி, கிராமக் குழந்தைகளிடம் வாசித்தலை ஊக்குவித்து வருகிறார்.

மாற்றுத்திறனாளிக்கு தொடர்ந்து உளவியல் ஆலோசனைகளை வழங்கி அவர்களின் தாழ்வுமனப்பான்மையை போக்கி, அவர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் அளப்பரிய பணியை செய்துவருகிறார்.

நம்மில் பெரும்பாலானோருக்கு, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்திருக்கும். ஆனால், நமது ஜக்குவின் பணிகளைக் கேள்விப்பட்ட அவர், தான் ஜக்குவை சந்திக்க விரும்புவதாய் கூறி, கோவை வந்தபோது ஜக்குவை சந்தித்தார்...

சமுதாயத்திற்காகவே சதா சர்வ காலமும் சுழன்று கொண்டிருக்கும் இவரை "Unsung Hero" விருது வழங்கி, நேற்று (17/09/16) இந்திய தொழில் வர்த்தக சபை கௌரவப்படுத்தியது.

நின்னை அன்புத் தம்பியெனக் கொளல் ஆனந்தமடா ஜக்கு!!!

சக்கரம் சுழலட்டும்!!!

No comments:

Post a Comment