கல்யாண்ஜி என்ற வண்ணதாசனின் மொழி ஒன்றே ஒன்றுதான் அது அன்பு,
ஒவ்வொரு நொடியையும் நேசத்தால்
நிரப்பும் எழுத்து அவருடையது,
ஒரு மழலையின் சிரிப்பு போல உடனே
ஈர்த்துவிடும் தன்மை கொண்டது அவரது அழகியல்.
இவரின் இயற்பெயர் கல்யாண சுந்தரம், 1947ல் திருநெல்வேலியில் பிறந்தவர். வங்கி பணி செய்து ஓய்வு பெற்றவர். அவரது எழுத்துக்களை போலவே அதிர்ந்து பேசாத, காண எளிதான, தென்றல் போன்ற மிக மென்மையான மனிதர், இவரின் மொழி நடை அபாரமானது.
உரைநடை எழுத்துக்களை கூட கவிதை போன்றே வெளிப்படுத்தும் தன்மை இவருக்கு உண்டு. கோபமோ, சலிப்போ, எரிச்சலோ இல்லாத, நிகழப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகை எழுத்துக்கள் இவருடையவை.
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப் பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். விஷ்ணுபுரம் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதான சாகித்திய அகாதமி விருது போன்றவைகளை பெற்றிருக்கிறார். வண்ணதாசன் எழுத்துக்கள் உங்களை அடிமைப்படுத்தி அமைதியான, நிதானமான உலகத்திற்கு கொண்டு செல்லக்கூடியவை.
என்ற அவரது எழுத்துக்களே, அவரது
படைப்புகள்.
“உங்கள் பிடி
மண்ணை
நீங்கள் இட்டால் போதும்
மற்றவை அனைத்தையும்
மண்புழுக்கள் பார்த்துக் கொள்ளும்”
இன்னொன்றையும் பாருங்கள், அழகியலும் ஜென்னும் இணைந்து பயணிக்கும் வரிகள் இவை
சுள்ளி பொறுக்க வந்த முதியவர்,
மழை பெய்த ஈரத் தரையில்,
குச்சியால் கீறிக்கொண்டே போகிறார்.
இதை விடச் சரியாக
அவருடைய தன் வரலாறை
அவரால் எழுத முடியாது.
“மகிழ்ச்சியைப் போல, வருத்தமும் ஒரு சம்பாத்தியம் தான்” என்கிறார்
அவசர கதியில் இயங்கும் மனிதகுலத்தை பார்த்து அவர் கேட்கும் கேள்வி
மனிதர்கள் தங்கள் மேல் உதிரும்
பூக்களையும், பழுப்பு இலைகளையும் ஏன் இவ்வளவு
உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுகிறார்கள்..?
இப்போது அன்பெனப்படுவது வெறுமனே அன்பல்லவாம், அது இப்படித்தான் இருக்கிறதாம்
“அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை. கொஞ்சம் போலி வார்த்தைகள்,
கெட்டிக்காரத்தனம், அதிகாரம், கொஞ்சல், கெஞ்சல் இப்படி ஏதாவது ஒன்றுடன் கலந்து காட்ட வேண்டியிருக்கிறது.
வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது”
“காற்றைப் பார்த்தேன்’ எனறு சொன்னேன்.
நீங்கள் நம்பவில்லை.
‘சருகுகள் நகர்ந்தன’ என்று சொன்னேன்.
நீங்கள்
நம்பினீர்கள்.
எதையும் நம்பும்படியாகச்
சொல்லவேண்டியதிருக்கிறது
உங்களுக்கு”
மனித மனதின் ஈரம் பற்றி இப்படி எழுதுகிறார்
“மனுஷன் உடம்புல வியர்வையும்,கண்ணுல கண்ணீரும் இருக்குற வரை உலகத்துல எப்படிப்பா ஈரம் வத்திப்
போகும்?”
“யாரிடமும் விலகி விடவும் முடிவதில்லை
நெருங்கி விடவும் கூடுவதில்லை
என்பது தான் துயரமான இன்னொரு நிஜம்.!”
“எழுதாவிட்டால் பரவாயில்லை,படியுங்கள். படிக்காவிட்டால் பரவாயில்லை, வரையுங்கள். வரையா விட்டால் பரவாயில்லை,பழகுங்கள்.ஏதோ ஒரு வகையில் மனதின் கதியில் இயங்கிக் கொண்டிருங்கள்.
அதுவே போதுமானது”
ஒரே நொடிதான் அன்பாக, நெகிழ்வாக மாற்ற போதுமானது என்கிறார்
“சொற்ப நேரத் தூறல் தான்.
எல்லா இலையும் நனைந்திருந்தது”
பாரதிக்கு எதிர்புறமாக நின்று
“எல்லாரும் பெரிதினும் பெரிது கேட்டால் சிறிதினும் சிறிதை யார் தான்
கேட்பது? நான் கேட்கிறேன்” என்கிறார்
கீழ்காணும் வரிகள் தானே தவமும் வரமும்?
“வேப்பம் பூ
ஒன்றே ஒன்று
என் மேல் உதிரத்தானே
இது வரையில் இந்த
மரத்தடியில் நின்றேன்”
சாதாரணர்கள் சட்டென உரிமைகொண்டாடும் முகமாக தான் இருக்க வேண்டும் என தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்
“ஒரு கை பிடிச்சு தூக்கிவிடுங்க" என்று கனத்த கூடையுடன் சில
முகம் அழைக்குமே, அப்படி
அழைக்கும்படியாக நான் போய்க் கொண்டிருந்தால் போதும்”
பண்டிகைகளை எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை பற்றி ஒரே வரியில்
“எல்லாவற்றையும் அழித்து விட்டு அதன் தினங்களை கொண்டாடிக்
கொண்டிருக்கிறோம்”
தான் ஏன் எழுதுகிறேன் என்பது பற்றிய
சுயவிளக்கம்
“யாராவது எனக்கிருப்பார்கள் என்றும்,
யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும்
நம்பி, எல்லோர்க்கும் அன்புடனே எழுதிக்
கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன்”
நான்கு வரிகளில் ஒரு வாழ்க்கை வரலாறு
“அத்துணை புடைத்த
நரம்புகளோடும்
குப்புறக் கிடந்தது
உதிர் இலை”
எனக்கு மிகவும் பிடித்த அழகான கவிதை, ஒரு நல்ல பாடல் வரிபோல, சட்டென இதயத்துள் சென்று தங்கி கொள்ளும்
“இக்கரைக்கும், அக்கரைக்கும்,
பரிசல் ஓட்டி, பரிசல் ஓட்டி,
எக்கரை என்கரை மறக்கும்,
இடையோடும் நதி மெல்லச் சிரிக்கும்”
நான் என்பது நானல்லவே என்பதை
“ஞாபகங்களைத்
திறக்கிற சாவிகளை
மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள்”
எனக்கு எதுவும் தெரியாது நேசிப்பதை தவிர என்பதை
“தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.
எந்த பூவின் பெயரும் எனக்கு தெரியாது.
எனக்கு தெரிந்தவை எல்லாம் அவை பூ
என்பது மட்டுமே”.
அவர் துயரமெல்லாம் இந்த வகையே
தன் கனத்தைத்
தானே தூக்கிவரும்
ஒரு மயிலின் ஓட்டம்
ஒரு வகையில்
துயரூட்டுவது
காரணமின்றி, சுயலாபமின்றி நேசியுங்களேன் என்ன தவறு என்கிறார்
எறும்பு வரிசையில் திடீரென்று
முகர்ந்து பார்த்துப் பிரியும்
எறும்பைப் போல
சடுதியில் ஒரு மென் முத்தமிட்டு
அவரவர் வழியில்
எதிர்திசையில்
போய்க்கொண்டு இருந்தால் தான்
என்ன...
பறவைகள் எப்போதுமே நம்மைவிட பல மடங்கு உயர்வானவை தானே
அ முதல் ஃ வரை
எனக்கு தெரியும்.
என் ஜன்னல்
வழியே தெரியும்
குருவிக்கோ
வானம் தெரியும்.
என்ன செய்ய முடியும் உங்களால்?
ஒதுக்கித் தள்ளுவீர்கள்...
என்ன செய்ய முடியும் என்னால்?
ஒதுங்கிக் கொள்வேன்.
தெரியவில்லை
யாராவது இப்படி அவசரமாகக்
கண்ணீரைத் துடைத்துக்கொண்டு
நிலா பார்ப்பார்களா என்று.
யாரின் கவனத்தையும் கலைக்காமல் அழகாய் கடந்து போதல்
பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை
யார் மீதும் பட்டுவிடாமல்
இரு கைகளையும் வீசியபடி
இன்னும் கொஞ்ச தூரம்
போக வேண்டும்
அவ்வளவுதான்..!
தான் வேறு புத்தர் வேறு என்பதை
புத்தரைப் போல
நின்று பார்த்தேன்.
கூடவில்லை .
புத்தரைப்போல
அமர்ந்து பார்த்தேன்.
இயலவில்லை .
சுலபம்தான் என்று
புத்தரைப் போலச்
சிரிக்க முயன்றேன்.
புத்தர் தான் சிரித்துக்
கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து
இப்போதும்.
செடியை வேண்டுமானால் நடலாம், ஆனால் பூக்களின் வாழ்வை மனிதன் நிர்ணயிக்கமுடியாது அல்லவா
நீ இருக்கும்
திசைக்கு முகம் காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப்பூ
பூப்பூத்தல் அது இஷ்டம்
போய் பார்த்தல் உன் இஷ்டம்...
கூண்டுக் கிளியின்
காதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு
வந்தன சிறகுகள்?
கீழ்க் கண்ட கவிதை வலி கடத்தி
திருப்பாவைப் பாடல்களின்
கிழிந்த குரல்களை
கழிவுக் காகிதங்களுடன்
பொறுக்குகிறவளுக்கு
வயது பதிமூணு.
வாழ்க்கையை அழகாக மாற்ற யாரோ ஒருவர் கூட போதும்தானே
யாராவது
வழியனுப்பவும்
துணையிருக்கவுமாக
இருந்தால்
இந்த வாழ்க்கை
எவ்வளவு
அடர்த்தியாகி விடுகிறது
மீண்டும் ஒரு ஜென் வரிகள்
அர்த்தத்துக்கும் அர்த்தமின்மைக்கும்
நடுவே தொங்குகிறது ஆனந்தத்தின் பாலம்
அடைக்கப் படும் கதவின்
விருப்பமான சத்தத்திற்காக
உள் அறையில் காத்திருக்கிறேன்.
மிகுந்த கவனத்துடன்
சத்தமே கேட்காமல்
சாத்திவிட்டுப் போகிறார்கள்.
இப்படித்தான் ஒரு காரணமுமின்றி
இழந்துவிட நேர்கிறது
இன்னும் சிலவற்றை.
கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்.
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது
வாசல்.
எனக்கு இருக்கும் இறந்த காலம் போல,
பறவைக்கும் இருக்கும் அல்லவா
ஒரு பறந்த காலம்
அதிக பட்சம் இந்த வாழ்க்கைக்கும்
மனிதனுக்கும் உண்மையாக
இருக்கவே முயல்கிறேன்.
சிகரங்களை அடைகிற
உந்துதல்கள் இல்லை.
ஆனாலும் போய்க்கொண்டிருக்கத்
தோன்றுகிறது,
தனியாக அல்ல
மிகவும் நட்புணர்வும்
அடிப்படை புரிதல்களும்
உள்ள மனிதர்களுடன்..
இருந்து...என்ன ஆகப்போகிறது..?
செத்துத் தொலையலாம்.
செத்து...என்ன
ஆகப்போகிறது..?
இருந்தே தொலையலாம்.
உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம்
இருக்கும்தானே
வெயிலில் அலைகிறது
வண்ணத்துப் பூச்சி.
வெயில் அலைகிறது
வண்ணத்துப் பூச்சியோடு.
காற்று அடித்து செல்கின்ற
போகன்வில்லா பூச்சருகுகள்
ஓர் ஆடி மாத தெருவை
அழகாக்குகிறது போல
வைறெதுவும் செய்யமுடியாது
ஒரு பழத்தின் உருண்டை வடிவத்தை
எங்கிருந்து கடிக்க துவங்க வேண்டும்
என்பதற்கு
கணிதங்கள் உண்டா , தெரியவில்லை ஒரு அணிலிடமும் பறவையிடமும் கற்றுக்கொள்ள
இருக்கிற விஷயங்களில் பழம் கடித்தலும்
அடங்கும்
நிதானமாக குடிக்கத்
தெரியவில்லை .
அவசரப் படாமல்
"அனுபவிக்கத்" தெரியவில்லை .
வேண்டாம் என்பதைச்
சொல்லத் தெரியவில்லை .
சத்தம் போடாமல்
பேசத் தெரியவில்லை .
அவசியத்துக்குக் கூட
கோபப்படத் தெரியவில்லை .
இரண்டாம் மனுஷியை
சிநேகிக்கத் தெரியவில்லை
ஹரிக்கேன் லைட்டைப்
பொருத்தத் தெரியவில்லை .
அடைகிற குருவிகளைப்
பார்க்கத் தெரியவில்லை .
வாழ்வும் கவிதையும்
தெரியுமென்ற
வாய்ச்சவடாலில் மட்டும்
குறைச்சலே இல்லை
இரண்டு வரிகளில் அழகியல்
அதுவும் தரையில்
ஒரே பாதையில்
ஒரு விளக்கடியில்
அவனும் அவளும்
விலகி நடக்க,
நீளச் சரிந்த நிழல்கள் மட்டும்
கூடிக் கூடிக்
குலவிப் பிரிந்தன
எதையும் சொல்லவில்லை
எதையும் கேட்கவில்லை
'சும்மாதான் வந்தேன்' என்று சொல்லிவிட்டு போனான்.
காற்றைப்போல
வெயிலைப்போல
சும்மாதான் வருகிறவர்கள்
முக்கியம் எனக்கு.
முழுதாக இருக்கும்போது கவனத்தில்
விழவில்லை,
இடிந்து கிடக்கும்போது
இம்சைப்படுத்துகிறது,
யாருடையாதகவோ இருந்த வீடு.
Excellent compilation.. My all time favourite..
ReplyDelete💕💕
Deleteதொகுப்பு அருமை
ReplyDelete👌👌💐💐💐
💕💕
Delete👌👌👌👌
ReplyDeleteசெம்ம ❤️
ReplyDeleteகவிதைகளும் தேர்ந்தெடுத்த விதமும் தொகுப்பும் அழகியலும் அன்பியலும் வாழ்வியலுமாக நிறைத்து சென்றது மனதை..நன்றிகள்...🙏🙏🙏
ReplyDelete