Thursday, April 27, 2017

கொஞ்சம் குடிக்க தண்ணி குடுங்க அண்ணே

"கொஞ்சம் குடிக்க தண்ணி குடுங்க அண்ணே", என்று ஒடிசலாக கை கால்களில் அழுக்கு படிந்து ஒரு பெண் இடுப்பில் மூன்று வயது குழந்தையோடு ஒரு பாட்டிலை வைத்துக்கொண்டு வீட்டின் முன் வந்து நின்றது.

கோடை நீர் பற்றாக்குறையால் பத்து நாட்கள் குழாய் தண்ணீர் வரவில்லை, எனவே காலையில்தான் வீட்டில் தண்ணீர் தீர்ந்து போய் ஒரு கேன் காசு கொடுத்து வாங்கி இருந்தேன்.

 கொஞ்சம் எரிச்சல் வேறு, உடைந்த பொம்மையை வைத்து பரிதாமாக பார்த்த குழந்தைக்காக அந்த பாட்டிலை வாங்கி தண்ணீர் ஊற்றி கொடுத்தேன்.

  "நன்றிண்ணே. தண்ணி வரலைன்னு யாரும் கொடுக்க மாட்டேங்கிறாங்க, நான் சித்தாள் வேலை செய்யுறேன்" என்று பக்கத்து கட்டிடத்தை காட்டியது.

"சரி" என்றேன். கிளம்புமாறு தெரியவில்லை. "அவ்ளோதானே கிளம்புங்க" என்றதற்கு, தயங்கியபடி  "இந்த வீடு நல்லாருக்காண்ணே" என்றது அந்த பெண்.
 "நல்லாருக்கே, அதுக்கு என்ன?"
 "நாங்கதான் கட்டினோம், இதோ இவ அப்போ மூணு மாச குழந்தை, இங்கன தான் தொட்டில் போட்டுருந்தோம்" என்று எங்கள் ஹாலை காட்டியது.
பொளீரென தலையில் அடித்தது போல் உணர்வு.
"ரொம்ப நன்றிம்மா, எனக்கு தெரியல"
 நம் வசதிக்காக சிரமப்பட்டவர்கள் இப்போது வேறிடத்தில், இக்கொடை தகிப்பில் செங்கல் சுமந்து.  இன்னொரு வீட்டை உருவாக்குகிறார்கள்.

இது போன்று எத்தனையோ எளிய மனிதர்களின் அடிமை வாழ்க்கையின் சுகத்தை நோகாமல் அனுபவிக்கிறோமென்ற நினைவு உறுத்துகிறது.

 என்னுள் இருக்கும் கொஞ்ச மனித தன்மையையும் உறிஞ்சி காசுக்கு அலையும் முழு சுயநலவாதியாய் மாற்றி விட்டதோ காலம்?

 "பாப்பா சாப்டாச்சா, உள்ள வாங்க சாப்பிடலாம்" என மனைவியை அழைக்க போனேன் "ஐயோ தண்ணிக்கே ரொம்ப நன்றிண்ணே, அதெல்லாம் ஒன்னும் வேணாம்"
 "நீங்க எப்போவென இங்க வந்து. எது வேணுமோ வாங்கிகோங்க அம்மா இருப்பாங்க" என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

இந்த வேலை முடிவதற்குள் யாரெல்லாம் இங்கு வேலை செய்தது என கேட்டு அவர்களை அழைத்து ஒரு வேளை உணவாவது படைத்து என் நன்றியை தெரிவித்து விட வேண்டும்.

No comments:

Post a Comment