Monday, August 1, 2016

இந்தக் கோடை ஏன் சிலரை மட்டும் சுடுகிறது?

ஆறு பேர் அமரக்கூடிய
பெரிய ரக மகிழ்வுந்தொன்று
சிக்னலில் நிற்கிறது
குழந்தையோடு
பிச்சை எடுக்கும் பெண்ணொருத்தி
மூடியிருக்கும்
அந்த வண்டியின்
கண்ணாடியைத் தட்டுகிறாள்
'இல்லை போ’ என்ற
சைகை மட்டுமே கிடைக்க
தட்டிக்கொண்டே இருக்கிறாள்...
வாகனத்தில் உள்ளே இருந்த
குழந்தையன்று
இவள் கையிலிருக்கும்
குழந்தையைப் பார்த்துப்
புன்னகைத்தபடியே
உதடுகளைக் குவித்துக்கொண்டு
கண்ணாடியை நோக்கி
வருகிறது...
வெளியிலிருக்கும் குழந்தை
கண்ணாடியில்
கன்னம்வைக்கும் தருணத்தில்
உள்ளே இருக்கும் குழந்தையை
இழுத்துக்கொள்கிறாள்
ஒரு பெண்மணி
பச்சை விளக்கு எரிந்ததும்
நகரும் அந்த வண்டியின் பின்னால்
'No Hand Signal’ என எழுதப்பட்டிருக்கிறது
ஆனாலும்
கையசைத்து வழியனுப்புகிறது
கையிலிருக்கும்
குழந்தை.
- நாவிஷ் செந்தில்குமார்

No comments:

Post a Comment