Thursday, April 20, 2023

கன்றுக்குட்டி

 ஆறோ ஏழோ படித்துக்கொண்டிருந்தேன், இது போல் ஒரு கோடை விடுமுறை, மணி என்றொரு நாய் வீட்டில் இருக்கும், பயங்கரமாக குரைத்தது. அப்பாரு வெளியே வந்து, "இங்க வாடி" என கத்தினார், நானும் ஆயாவும் வெளியே இருக்கும் தொண்டுபட்டிக்கு ஓடி வந்தோம், "கண்ணு போடுற மாதிரி இருக்கு, பாத்துக்க. நா போயி மாட்டு டாக்டர கூட்டிட்டு வரேன்" என்று சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக போனார்.

போகிற வழியில் எல்லாம் சொல்லிக்கொண்டே போயிருக்கிறார், மாக்காலுர் அண்ணன், விஜயாக்கா, எதிர் வீட்டில் பிட்டர் ஒருவர் இருந்தார் அவர் என ஒரு சின்ன கும்பல் கூடியிருந்தது.
மணி முனகிக்கொண்டே எருமையை சுற்றி சுற்றி வந்தது. ஆயா எருமையை தடவி கொடுத்தபடியே இருந்தாள், அவளது புடவையை பிடித்தபடியே நின்றிருந்தேன். மணி எருமையின் பின்புறம் பார்த்து குரைக்க ஆரம்பித்தது
நான் ஓடி போய் பின்னால் பார்த்தேன், சின்ன கால் தெரிந்தது, "அம்மா அம்மா கால் தெரியுது" என்றேன், "மாரியாயி நல்லபடியா கண்ணு வந்தா காசு போடுறேன்" என்று சத்தமாகவே வேண்டினாள்.
எருமை கத்த ஆரம்பித்து தரையில் கொம்பை முட்டியது. வலி தாங்க முடியாமல் "ம்மேமேமேமேமே" என கத்தியது.
வெட்னரி டிவிஎஸ் 50யில் வந்து சேர்ந்தார். கால்களால் தரையை வேகமாக தட்டிக்கொண்டே இருந்தது எருமை .டாக்டர் ஏதோ செய்த சிறுது நேரத்தில் கொழகொழவென நீர் பின்னால் இருந்து வந்து விழுந்தது. மணி என்னருகே வந்து நின்றுகொண்டது. "எருமை குட்டி வரப்போகுது" என்றேன், வாலை ஆட்டியது.
கன்றின் தலை தெரிந்தது, மணி சுற்றி சுற்றி வேகமாக ஓடி கொண்டிருந்தது.
அப்பாரு வைக்க பில்லயும் சாக்கையும் கொண்டு வந்து போட்டார். "பாவாயி சுடுதண்ணி வையி, ஈன போகுது" என்றார் டாக்டர். சிறிது நேரத்தில் பாதி உடல் வெளியே வந்தது,
"குட்டி வருது குட்டி வருது" என்று கத்தினேன் நான், மணி பயங்கரமாக குரைக்க ஆரம்பித்தது, "சும்மா இருங்கடா" எங்கள் இருவரையும் பார்த்து கத்தினார் அப்பாரு.
"பிடிங்க" என சொல்லி, "அதுவா வெளியே கொஞ்சம் கொஞ்சமா வரும் இழுக்க கூடாது" என்றார் டாக்டர்,
மூட்டை போல ரத்தம் திரவம் கலந்து குட்டி வெளியே வந்து விழுந்தது, நல்ல நிறம், சுடு தண்ணி கொண்டு வந்தாள் ஆயா..
சாக்கை அதில் போட்டு எருமையின் மேல் போட்டார் டாக்டர். கன்றை நக்கி சுத்தம் செய்தது மாடு, கன்று தள்ளாட்டமாக இரண்டு மூன்று முறை எழுந்து நிற்க முயற்சி செய்து விழுந்து விழுந்து எழுந்தது. பின்னர் கால்களை நக்கி, வாலை நக்கி முகர்ந்து முகர்ந்து மடியை கண்டு கொண்டது. வாயில் நுரை வழியும் வரை முட்டி முட்டி பால் குடித்துக்கொண்டிருந்தது. எருமை அதை நக்கி நக்கி சுத்தம் செய்து கொண்டிருந்தது. மணி அமைதியாக பார்த்து கொண்டிருந்தது.
நான் " தொட்டு பார்க்கட்டுமா?" என்று கேட்டேன், பாவாயி பக்கத்தில் கூட்டி சென்று தொட வைத்தாள். தொடும்போது எனக்கு வாயெல்லாம் பல்லாகி இருந்தது.
அப்பாரு டாக்டருக்கு அண்டர்வேரிலிருந்து அம்பது ரூபாய் எடுத்து கொடுத்தார்.

No comments:

Post a Comment