Saturday, May 9, 2020

துர்கா ஸ்டாலின்

முன்னொரு காலத்தில் எனது அப்பா அதிமுகவில் ஏதோ ஒரு மொக்கை போஸ்டில் இருந்தார்,  என் மாமா pvks செல்வராஜ் திமுகவில் இளைஞரணி செயலாளராக இருந்தார். அவர் கட்டுச்செவல் சண்டையில் மிக ஆர்வமாக இருப்பார், பந்தயத்தில் வெற்றி பெற்றால் எதிரணி சேவலை தருவார்கள், தோற்றால் தன் சேவலை காசு கொடுத்து வாங்கி வந்து விடுவார். அதை அவர் தோட்டத்தில் சமைப்பதே ஒரு கலையாக இருக்கும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் அதை சிறிது சிறிதாக வெட்டி மசால் பொருட்கள் ஏதும் கலக்காமல் செய்வார். என் அப்பா டவுசர்  பொடியனான என்னையும் கூட்டிகொண்டே சாப்பிட செல்வார்,  அந்த அற்புத சுவை எனக்கு இதுவரை எந்த பெரிய உணவகங்களிலும் கிடைத்ததில்லை. எனது அப்பாவை விட்டுவிட்டு அவர் கட்டுசேவலை சமைத்ததே இல்லை. இதில் எனது சித்தப்பா வைகோவின் மதிமுக கட்சியில் இருந்தார் அவரும் இந்த ஜோதியில் கலந்து கொள்வார் (நம்புங்கள் நண்பர்களே, அரசியல் அப்போது அப்படிதான் இருந்தது)  இது நான் துர்கா ஸ்டாலின் பேட்டியை பார்த்த போது ஏனோ ஞாபகம் வந்தது.

குமுதம் சார்பாக துர்கா ஸ்டாலினை ஒரு பெண்மணி பேட்டி எடுத்தார். பொதுவாக நான் எந்த கட்சி அரசியல் கட்சி தலைவர், குடும்ப உறுப்பினர்,  தொண்டர் என  யாருடைய பேட்டிகளையும் பார்ப்பதில்லை, கடுப்படிக்கும், அரசியல் ரத்த கொதிப்பு வரும்வரை எழுதிக்கொண்டிருந்த நான் இப்போது இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் சில சமயம் நக்கலடிப்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். உடனே நீ அந்த கட்சியா இந்த கட்சியா என்ற அனுமானத்திற்கு போகாதீர்கள், தொகுதியில் நல்ல வேட்பாளர்களை பார்த்து ஓட்டு போட்டு ஏமாறும் சாதாரண பொதுஜனம் தான் நான்.

சரி விசயத்திற்கு வருவோம். குமுதத்தில் ஒரு பெண்மணி துர்காவை பேட்டி எடுத்தார், கோவிலுக்கு போகுது என பலரால் நக்கலடிக்கப் படும் அவரின் பேட்டியை ஏனோ பார்க்கலாம் என தோன்றியது. அதில் துளியும் அரசியல் இல்லை. பத்தாவது படித்துக்கொண்டிருந்த ஒரு கிராமத்து சிறுமியை பெண் பார்த்துவிட்டு போகிறார்கள் ஒரு குடும்பத்தினர், அவர்களுக்கு இந்த பெண்ணை பிடித்து போகிறது. மாப்பிள்ளை ஸ்டாலினும் வந்து பார்க்க அவருக்கும் இந்த பெண்ணை பிடித்து போகிறது.    கொஞ்சநாள் கழித்து திருமணம் என்று வருகிறார்கள், படிப்பேன் என்று அழுது அடம்பிடிக்கிறது சிறுவயதில் அம்மாவை இழந்துவிட்ட அந்த பெண், பாட்டியின் வற்புறுத்தலாலும் (பாட்டியை அம்மா என்று அழைக்கிறார், எனக்கும் அம்மா சிறுவயதிலே இறந்துவிட்டார், என் பாட்டியை நானும் அம்மா என்றுதான் அழைத்துக்கொண்டிருந்தேன்)  தந்தையின் வற்புறுத்தலாலும் திருமணம் நடக்கிறது, கட்சி, பிரபலம், இத்யாதி மற்றும் மெட்றாஸ் என்ற நகரை பற்றிய பயத்துடன் இந்த ஊருக்கு வாழ வருகிறது அந்த பெண். மிக கூச்ச சுபாவம் வேறு, எந்த அளவெனில் திருமணமாகி பத்து நாட்களுக்கு பிறகு முதல் வார்த்தை கணவனுடன் பேசும் அளவு. 

இதைவிட கொடுமை ஸ்டாலின் அதைவிட கூச்ச சுபாவமாக இருந்திருக்கிறார். ரெண்டுபேருமே அப்படிதான் இருந்தோம் என்கிறார்.திருமணமாகி மூன்று நான்கு மாதங்களிலேயே கணவனை கைது செய்து அழைத்து கொண்டு போய் விடுகிறார்கள். எதற்கு என்றே தெரியாமல் எப்போது வருவார் என்றும் தெரியாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தான் கணவர் விடுதலையாகி வீட்டிற்கு வந்திருக்கிறார். மாமாவிற்கு என்ன உணவு பிடிக்கும் மற்றவர்களுக்கு என்ன உணவு பிடிக்கும் என தெரிந்து கொள்வதே பிரதான வேலையாக வைத்திருக்கிறார். மாமியாரிடம் சமையல் கற்று கொள்கிறார்.

கடவுளின் மீது கடும் பக்தி இருக்கிறது, மாமியாரை போலவே, குங்குமம் வைக்க சொல்லி ஸ்டாலின் சொன்னதால் அதை பின் பற்றி வருகிறாராம். ஸ்டாலின் மேயராகும் வரை கூட்டு குடும்பம்தான் அதன் பின் தனி குடித்தனம் சென்றிருக்கிறார்கள், தினமும் நடைபயிற்சி யோகா என இன்றுவரை கடைபிடிக்கிறார். ஸ்டாலினும் இவரும் முன்பெல்லாம் புதிய படங்கள் ஒன்று விடாமல் இரவு நேரத்தில் தியேட்டர் சென்று பார்த்திருக்கிறார்கள், குறிப்பாக ஸ்டாலின் வற்புறுத்துவாராம், அவ்வளவு சினிமா மோகம். இரவு காட்சி முடிந்த பின் ஸ்டாலின் ஐஸ் கிரீம் பலூடா போன்றவை ஆசையாக வாங்கி கொடுப்பாராம்,  இவரோ எப்போடா வீட்டுக்கு போவோம் என்ற அரை தூக்கத்தில் இருப்பாராம் இதில் சாப்பிட சொல்லி சண்டை வேறு வருமாம். கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனும் உடைகளை தேர்ந்தெடுத்து வாங்குவார்களாம்.

கணவரை பற்றி மிக பொறுமையானவர் என அபிப்ராயம் வைத்திருக்கிறார். உணவு விஷயமெனில் அவருக்கு வத்த குழம்பு இருந்தால் கூட போதும் திருப்தியாக சாப்பிடுவார் என பெருமிதம் கொள்கிறார்.

எனக்கென்னவோ துர்கா இன்னமும் கிராமத்து மனுஷியாக வாழ்கிறார், இவரை போல நிறைய அத்தைகளை என் கிராமத்தில் பார்த்திருக்கிறேன், கட்சி அரசியல் என எதையும் மனதில் வைத்து கொள்ளாமல், காசிருந்தாலும் தலையில் ஏற்றுக்கொள்ளாமல் அமைதியான முறையில் வாழ்ந்தார்கள். வாழ்கிறார்கள். ஸ்டாலின் ஒருவேளை அரசியலுக்கு வராமல் போயிருந்தாலும் நிம்மதியாக அமைதியாக வாழ்க்கையை கொண்டு போயிருப்பார் என தோன்றுகிறது.

No comments:

Post a Comment