Tuesday, July 23, 2019

என் குரு

மலையாள சார்லி பார்த்திருக்கீங்களா? அதுல வர துல்கரை விட சிறந்த மனிதர் ஒருவர் நிஜத்திலேயே இருக்கார். பேரு விஜயகுமார். ஆனா மனுசன் இந்த உலகத்துல கால் பதிக்காக இடமே இல்ல, இப்போகூட ஆஸ்திரேலியாவில் கங்காரு கறியோ, அமெரிக்காவில் கேப்பஸினா காபியோ, இந்தியாவின் ஏதாவது அடர்ந்த வனம் நடுவில கேம்ப் போட்டோ இருக்க கூடும்.
என்ன வயசுதான் 70 இருக்கும்,

காதலோ, காமமோ, கடவுளோ, புத்தகமோ, அறிவியலோ எதை பத்தி வேணாலும் ரெண்டு மணி நேரம் போரடிக்காம மனுஷன் பேசுவார். கொஞ்சம் கூட தற்பெருமையோ, அனத்தாலோ இருக்காது (40 வயசுக்கு மேல ஆகிட்டவே சில பேரோட, முக்கியமா சொந்தக்காரனுக  இம்சை தாங்காது, அதும் அட்வைஸ் பண்ணும்போது  ஓங்கி அறையலாம்னு தோணும்) clear cut pathன்னு சொல்வாங்களே அப்படி இருக்கும்,

நல்ல வசதியான குடும்பத்துல பிறந்தவர், இப்போ கூட ஒரு கம்பெனி நடத்துறார் ஆயிரம் பேர்க்கு பக்கமா வேலை செய்யறாங்க, போலீஸ்ல இருந்து, இங்க பெரிய ஆளுகன்னு சொல்ற எல்லார் கூடவும் நெருங்கிய நட்புண்டு. சுயநலத்துக்கு அவங்களை எப்பவும் உபயோக படுத்த கூடாதுங்கிறதுல தெளிவா இருப்பார். எளிமையான மனிதரும் கூட.  கார் ரேசர், 35 வயசுல ஒரு விபத்துல முதுகெலும்பில நல்ல அடி, ரெண்டு வருஷம் படுக்கையிலேயே கிடந்திருக்கார்.

 இப்போ கூட அதோட பாதிப்பு இருக்கு, நல்லா நிமிர்ந்து நடக்க முடியாது, அதை பற்றில்லாம் கவலையே படலை மனுஷன், தேடல் தான் வாழ்க்கைன்னு சொல்வார். "அப்படி என்ன தேடி கண்டுபிடிச்சீங்க?"ன்னு ஒரு தடவை கேட்டேன், "அன்பு அது மட்டும்தான் வாழ்க்கை"ன்னார். சின்ன குழந்தைகள்கிட்ட கூட ஆலோசனை கேட்பார், இவருடைய பையனும், பொண்ணும்  கல்யாணமாகி ஆஸ்திரேலியா, கலிபோர்னியாவில இருக்காங்க.  நல்லா ரசனையா வாழுறது எப்படின்னு ரெண்டு நாள் கூட சுத்தினாவே தெரிஞ்சிக்கலாம்னு. ஒரு நல்ல மலை பிரதேசத்துல கடும் குளிர்ல மூணு பெக் உள்ள போன பின்னாடி, சில பழைய பாடல்கள் பாடினார். குரல் அவ்ளோ அழகு . வாழ்க்கைக்குமான மொத்த பரிசு அது.

எவ்ளோ வயசானாலும், காலத்தால பழிவாங்க முடியாத குழந்தையா வாழுற சில பேர் இருக்காங்க அதில நம்மாளு முதல் இடத்துல இருப்பார். "காஷ்மீர் டு கன்னியாகுமரி" ட்ரிப் ஒண்ணு நாம ரெண்டு பேரும் போலாம் ன்னு சொல்லிருக்கார். நடக்கும். எனக்கு அவர்கிட்டயோ அவருக்கு என்கிட்டயோ எந்த எதிர்பார்ப்பும் இல்ல, வரவும் வராது.

இதே மாதிரிதான் தியாகு, என்னை சின்ன வயசில இருந்து பாதை மாறாம பார்த்துக்கிட்டார்னு சொல்லலாம், இந்த புத்தகங்கள் மேல காதல் வர காரணமே அவர்தான்... ராஜ பரம்பரை, இப்போ சொத்து எல்லாம் போய்டுச்சு, அதுக்காகவெல்லாம் அவர் கவலை படமாட்டார்னு தெரியும், கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு முதல்லயே முடிவெடுத்து அதிலேயே உறுதியா இருக்கார்.  ஒண்ணா சரக்கடிப்போம், பயங்கர சண்டைல்லாம் வந்திருக்கு, ரெண்டு நாளைக்கு மேல அது நீடிச்சதில்ல. இப்போ கூட ஏதாவது பிரச்சனைன்னா, சந்தோஷம்னா  அவருக்கு தான் முதல் போன் பண்றேன். ஊருக்கு போறப்ப பத்து புத்தகமாவது வாங்கிட்டு போய் கொடுக்கிறேன். இப்ப அநேகமா அவரை சுத்தியும் குறைஞ்சது பத்து பசங்களாவது இருப்பாங்க, இல்லைன்னா  ஏதாவது ஒரு புத்தகம் படிச்சிட்டு தோட்டத்துல ஆடு மேச்சிட்டு இருப்பார்.

எனக்கு குரு, வழிகாட்டி எல்லாம் இந்த மாதிரி பிரியமா வாழ்க்கையை வாழ தெரிஞ்ச  மனுசங்கதான்.

No comments:

Post a Comment