Monday, September 11, 2017

சண்முகம் என்றொரு கூரியர் டெலிவரி மேன்

"அல்லோ எப்படிண்ணே இருக்கீங்க?" என்றபடி என்னை நோக்கி வந்த சண்முகதிற்க்கு எப்படியும் ஐம்பது வயது கடந்திருக்கும். நான்கு வருடங்களுக்கு முன் நான் பணிபுரிந்த நிறுவனத்தின் சகோதர நிறுவனம் ஒரு கொரியர் நிறுவனத்தையும் நடத்தி வந்தது. அதில் தான் அவரை தெரியும், ஐந்து வயது குழந்தையைக் கூட அண்ணா என்றுதான் கூப்பிடுவார். ஒடிசலான, கருப்பு நிற, சைக்கிளில் "சார் கொரியர்" என வரும் அவரை நீங்கள் சந்தித்தித்து உதாசீனபடுத்தியிருக்க வாய்ப்புண்டு. ஏனெனில் மிக எளிய மனிதர் அவர்.
 "அப்படியே தான் இருக்கேன், கொஞ்சம் கூட மாற முடியல" என்றேன்,  சப்தமிட்டு சிரித்தார். "அதே மாதிரியே பேசறீங்கண்ணே, வீடு வாங்கிட்டீங்கன்னு சொன்னாங்க, சந்தோசமா இருந்துச்சு, உங்க போன் நம்பர் இல்ல, என்னை கூப்பிடவே இல்ல பாத்தீங்களா" என்றார்.
"வாங்கினது கடன்ல சண்முகம், இல்லாட்டி கூப்பிட்டு இருப்பேன்ல... சும்மா பேசிட்டு இருந்தா எப்படி, டீ வாங்கி தாங்க" என்றேன். ஓடிப் போய் "ரெண்டு பெசல் டீ, நல்லா இருக்கனும் பாத்துக்கோ" "
"சிகரெட் யார் வாங்கி தருவாங்க?" என்றதும் வாங்கி வந்து பதினாறு ரூவா போட்டு இதை குடிச்சு உடம்பை கெடுத்துக்கனுமா?" என்று சலித்துக்கொண்டார்.
"சம்பளம் எவ்வளவு தராங்க?"
"நாலாயிரம், அங்கே மூவாயிரத்தி ஐந்நூரு தானே, அதான் மாறிட்டேன்"
 "வாழ்க்கை எப்படி போகுது?"
"நல்லா இருக்குண்ணே, இப்போ ஹீரோ புது சைக்கிள் வாங்கினேன், எப்படி இருக்கு?"
 "உங்க மாதிரியே நல்லா இருக்கு"
ஐம்பதுவயது காரரிடம் நீங்கள் வெட்க சிரிப்பை பார்த்தது உண்டா? அதெல்லாம் பொக்கிஷம்.
தயங்கித்தான் காசு கொடுப்பார் என்று தெரியும், அவரின் பர்சில் அம்பது ரூபாய் தான் பார்த்தேன், இருந்தாலும் கட்டாயபடுத்தி  கொடுக்க வைத்தேன், "இருப்பது ஆறு ரூவாண்ணே, இருப்பது ஆறு" என்று கவலையுடன் வந்தார். "கொடுங்க சண்முகம், பெரிய ஆளுக இதுகூட பண்ண மாட்டீங்களா?" ஒரு பெருமிதம் கலந்த வெட்க சிரிப்பு.
டெபிட் கார்டில் நான் செலவுக்கு வைத்திருந்த தொகையில் பாதியை ஏடிஎம்மில் உருவி ஒரு கவரில் வைத்து ஒட்டி, அவரின் கொரியர் அலுவலகம் சென்று, அவரிடன் ஒப்படைக்க சொல்லி விட்டு வந்திருக்கிறேன்...
அது இந்த பிச்சைக்காரன் மாமன்னனுக்கு செய்யும் கைமாறு.

No comments:

Post a Comment