Thursday, October 25, 2018

பிடித்த புத்தகங்கள் பகுதி 2

படித்த புத்தகங்கள் என்றே வந்திருக்க வேண்டும், முதல் தொகுப்பை பிடித்த என்று எழுதிவிட்டதால் அதையே தொடர்கிறேன்.
ஏற்கனவே நாற்பது புத்தகங்களை பற்றி எழுதி விட்டதால் இனி நாற்பத்தி ஒன்றில் இருந்து ஆரம்பிக்கிறேன். முந்தைய தொகுப்பை தவற விட்டவர்கள் இதை பிடித்த புத்தகங்கள் படித்து விட்டு வாருங்கள்.

41. மலைகள் சப்தமிடுவதில்லை.

இலக்கியமும் இசையும் கலைகளும் இல்லாமல் போனால் மனிதர்கள் வெற்று சக்கையாகி போவார்கள் என்கிறார் இதன் ஆசிரியர்
எஸ். ராமகிருஷ்ணன். நடந்தே இந்தியா முழுவதும் பயணம் செய்த அனலேந்தி, தஸ்தாயேவ்ஸ்கி, சேகா, கார்க்கி, பாஸோ, காமிக்ஸ், ரயிலோடும் தூரம், வெயில், சிற்பங்கள் என உங்களை ஆச்சர்யப்படுத்தும். நிறைய கட்டுரைகள் இதில் உண்டு.

42. பனிமனிதன். 

இது ஏதோ சிறுவர்களுக்கான கதை என்று நினைத்து பத்து பக்கம் படிக்கலாம் என்று ஆரம்பித்தேன், நாவலை முழுவதும் முடித்த பின்பு தான் வைக்க முடிந்தது. கதையின் இடையிடையே வரும் உண்மை தகவல்கள் மிகுந்த ஆச்சர்யங்கள் கொண்டவை. நிச்சயம் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, அனைத்து தரப்பினர்களுக்கான புத்தகம்.

43. பணக்கார தந்தை ஏழை தந்தை. 

ஆங்கிலத்தில் இது Rich dad, Poor dad என்ற பெயருடன் வந்து மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட தந்தைகளின் செழுமை, வாழ்க்கையை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கான புத்தகம்.

44. பொன்னியின் செல்வன்

போதுமானவரை இந்த புத்தகம் பற்றிய பற்றி விளக்கங்கள் வந்து விட்டன. என் தோழி ஒருவர் ஏன் இதை பற்றி எழுதவில்லை என்று கேட்டு கொண்டதற்கிணங்க இதை குறிப்பிடுகிறேன். பத்து வருடங்கள் முன்பே படித்தாயிற்று.

45. Man eaters of kumaon

புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் மனிதர்களை கொல்லும் சிறுத்தை புலிகளை பற்றியும் அவற்றை வேட்டையாடியது பற்றியும் எழுதி இருக்கிறார்.
ஹிமாயூன் புலிகள் என்று தமிழில் புத்தகம் வெளி வந்தது. குறிப்பிட்ட பகுதி மக்களால் தெய்வமாக கொண்டாடப்பட்ட இவர் எழுதிய புத்தகம் ஏறத்தாழ என்பது ஆண்டுகள் கடந்தது. ஆனால் பரபரப்பான நிகழ்வுகள் நிறைந்த புத்தகம்.

46. இனி என் முறை.

ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகரை பார்த்து பாலகுமாரன் சூடு போட்டு கொண்ட நாவல். நான்கைந்து அத்தியாயத்திற்கு பிறகு அதை படிக்க முடியாமல் ஓரமாக வைத்த புத்தகம். இதற்கு பின் இவர் கிரைம் கதை பக்கமே போகவில்லை.

47. சோளகர் தொட்டி 

எரியும் பனிக்காடு என்ற புத்தகத்தை பரதேசியாக மாற்றி பாலா படம் எடுத்தாரில்லையா, அதை விட அதிக அடர்த்தி கொண்ட புத்தகம் இது. பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களை, அவர்களது கடவுளை, வாழும் முறையை, அதன் அழகுகளை புரியவைக்கும் முதல் பாதி, அரசியல் அதிகாரங்களால், வீரப்பன் தேடுதல் வேட்டையால் ஒடுக்கப்பட்டு சிக்கி சின்னாபின்னமாகும் ரத்த மயமான இரண்டாம் பகுதி கலங்கடிக்குமாறு எழுதி இருக்கிறார். பூர்விக நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு, அதிகார வர்க்கத்தால் வதைக்கப்படும் மொத்தப் பழங்குடிகளின் கதை அது என நாவலாசிரியர் பாலமுருகன் கூறி இருக்கிறார்.

48. 19 டி எம் சாரோனிலிருந்து.

பவா செல்லத்துரை எழுதிய பொக்கிஷம். அழகையும் எளிமையையும் மனித தன்மையையம் கலந்து, நாம் கொண்டாடும் கொண்டாட வேண்டிய பல எழுத்தாளர்களை, ஓவியர்களை, புகைப்பட கலைஞர்களை அறிமுகம் செய்திருப்பார். தமிழில் வாசிக்கப்பட வேண்டிய புத்தகங்களில் இது முக்கியமானது.

49.  சித்திரபாவை

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை என் தந்தையிடம் இருந்து தான் கற்றேன். வார இதழ்களும் மாத இதழ்களும் தவறாது வாங்குபவர். புத்தக சேமிப்பும் நிறைய இருந்தன. என் தந்தையின் புத்தகங்களின் சேமிப்பில் இருந்து எடுத்து படித்த புத்தகம். பழைமையின் மூடத்தனத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆனந்தி போராடும் கதை. முன்னொரு காலத்தில் தூர்தர்சனில் நாடகமாக வந்திருக்கிறதாம்.

50. மோகமுள்

பொருந்தா காமம் என்று ஆரம்பித்தாலும், மோகத்தின் வெப்பம், அது நிகழ்த்துகின்ற நாடகம், கர்நாடக சங்கீத இளைஞன் பாபுவின் தனிமை, யமுனாவின் சிறுவயதுமுதலான நெருக்கம், மாறும் பார்வைகள் என விரிந்து செல்லும் இந்த புத்தகம், காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற முடிவை கண்டடையும். தமிழில் அப்போதைய காலகட்டத்தில் இந்த நாவல்  சினிமாவாக வந்து தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

51. கதவை திற காற்று வரட்டும்.

ஆசிரமத்தில் கேமரா வைக்கப்படுவதற்கு முன்பே குமுதத்தில் வந்து பாதியில் நின்று போன நித்யானந்தாவின் தொடர். நான்கைந்து பத்திகள் படித்ததுமே இந்தாளுகிட்ட அப்படி என்ன இருக்குன்னு கோவை வ உ சில இவ்ளோ பெரிய விளம்பரம் பண்ணி கூட்டம் போடுறாங்க என்று வியந்திருக்கிறேன். "அட  த்தூ" வகையறா

52. கந்தர்வன் கதைகள் 

இந்த தொகுப்பில் 62 கதைகள் இருக்கின்றன, இதுதான் அவர் எழுதிய மொத்த கதைகளுமே, பாதியை படித்துவிட்டு என் மாப்பிள்ளை அன்புவிற்கு திருமண பரிசாக கொடுத்துவிட்டேன். கந்தர்வனை பற்றி ஜெயமோகன் எழுதியதை அல்ல கொண்டாடியதை இதிலே கந்தர்வன் படிக்கலாம்.

53. ஸ்ரீரங்கத்து தேவதைகள் 

சுஜாதாவை படிப்பதில் இருக்கும் ஒரு ஜாலி என்னவென்றால் மிகுந்த சுவாரஸ்யமும், வேகமும் இருக்கும். ஒரு கதையின் பெயர் நினைவில் இல்லை "நான் வணிக எழுத்தாளனா? இல்லையா? என்பதை இந்த கதையை படித்து விட்டு முடிவு செய்து கொள்ளுங்கள்" என அடுத்த நாள் இறந்துபோகப் போகிறபோகிற மகளை மருத்துவம சிகிச்சைக்காக அனுமதிக்க அல்லல்படும் தாய் அற்புதமான சிறுகதை ஒன்று இருக்கும். வாசித்தவர்கள் அதன் தலைப்பை சொல்லுங்கள். இந்த ஸ்ரீரங்கத்து தேவதைகள் நிஜமா, கற்பனையா என்ற  சந்தேகம் புத்தகம் முழுக்க படிப்பவருக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்வார். படிக்கும் வாசகனை மெல்லிய புன்னகையை படற செய்வதில் சுஜாதா ஒரு மன்னன்.

54. சுபா

இது புத்தக தலைப்பல்ல, எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் எழுதிய க்ரைம் கதைகளை வெகு சுவாரஸ்யமாக படித்துக்கொண்டிருந்த நாவல்கள் பற்றிய முழு தொகுப்பு. முன்பு பாக்கெட் நாவல் என்று அசோகன் (பார்ப்பதற்கு நக்கீரன் கோபால் மாதிரி இருப்பார் என்று அனுமானம்) வெளியிட்டு வந்தார். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுத்தில் கிரைம் கதைகளாக வெளிவரும், ராஜேஷ்குமாருக்கு விவேக், ரூபலா, பட்டுக்கோட்டை பிரபாகருக்கு பரத், சுசீலா, சுஜாதாவிற்கு கணேஷ், வசந்த் என்று துப்பறியும் கதாபாத்திரங்கள் உண்டு... ஆனால் ஒரு குடும்பத்தையே படைத்தவர்கள் இரட்டையர்கள் சுபா தான். நரேன் வைஜெயந்தி மற்றும் ஈகிள் ஐ,  ராமதாஸ், ஜான் சுந்தர், இன்ஸ்பெக்டர் பால்ராஜ், என ஒரு பட்டாளத்தையே வைத்திருந்தார். அதிலும் முருகேஷ் என்ற சென்னை தமிழ் பேசும் கதாபாத்திரம் மறக்க முடியாதது.

பிடித்த புத்தகங்கள் மூன்றாம் பாகம் தொடரும்


No comments:

Post a Comment