Saturday, November 3, 2018

இந்த நாள்

நரசிம்ம நாயக்கன் பாளையத்தில், சிறு கட்டிடத்தில் பல வருடங்களாக  இயங்கி வந்த அமுதா ஸ்டோர்ஸ், அதன் எதிரிலேயே  கடையை மாற்றி பெரிய வணிக வளாகமாக உருவெடுத்து இரண்டு மாதங்கள் ஆகிறது. விலை குறைவாக இருப்பதால் வழக்கமாக அங்கேயே நாங்கள் மாத மளிகை வாங்குவது வழக்கம்.

இந்த முறையும் வழக்கம் போல மளிகை வாங்கி கொண்டிருந்தாள் என் எஜமானி,  ஆண்களுக்கான மாத செலவு என்பது மிக சொச்ச பொருள்களோடே முடிந்து விடுமல்லவா, அந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு வாசனை திரவியம் (perfume) மட்டும் எனது பங்காக வாங்கி வைத்தேன்.

வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரத்திற்க்கு பிறகு வாசனை திரவியத்தை தேடுகையில், "அதை வைக்கவே இல்லை" என்று அம்மா சொன்னார்கள். என் செல்வ புத்திரனையும் அழைத்துக்கொண்டு, திரும்ப சென்று பில் போடும் இடத்திற்கே வந்து இது "லிஸ்ட்ல இது விட்டு போச்சு, ஸ்டாக் செக் பண்ணிட்டு எடுத்துதாங்க, இல்லைன்னா CCTV footage பாருங்க" என்றேன். பில் போடுபவர், அங்குள்ள பணியாளர்கள் அனைவரையும் கூப்பிட்டு, "இங்கே அந்த பொருள் ஏதாவது இருந்ததா, எடுத்து வைத்தீர்களா?" விசாரித்தார். யாரும் அந்த வாசனை திரவியத்தை எடுத்து பழைய இடத்தில் வைத்ததாக கூறவில்லை.

பத்து நிமிடம் கடந்த பின் பேச்சு வார்த்தை நீடித்து கொண்டே போனது. சட்டென கோபம் என் இயல்பிலேயே இருப்பதால், "முத்துவை கூப்பிடு நான் பேசிக்கொள்கிறேன்" என்றேன். முத்து அமுதாஸ் ஸ்டார் ஓனருக்கு நெருக்கமானவர், பழைய கடையை அவர்தான் பார்த்துக்கொண்டிருந்தார். நீண்ட கால வாடிக்கையாளரான என்னை நன்கு தெரியும் என்பதால் அவரிடமே பேசி பஞ்சாயத்தை தீர்த்து கொள்ளலாம் என கணக்கிட்டேன்.

"என்ன சார்?" என்றபடி முத்து வந்தார், சொல்ல ஆரம்பித்த உடனேயே, "ஒண்ணும் பிரச்சனை இல்லை சார்", என்றபடி, ஒரு பெண்ணை அழைத்து "சார் எதை சொல்றாரோ, அதை எடுத்து கொடு" என்றார். அப்பாடா என்றிருந்தது. "போயிட்டு வாங்க சார் இதெல்லாம் ஒரு விஷயம்னு இவ்ளோ நேரம் நின்னுட்டு இருந்தீர்களா, நேரா என்னை வந்து பார்க்க வேண்டியதுதானே?" வாடிக்கையாளர்கள், விற்பனை பிரதிநிதிகள் பில் போடுபவர்கள் என ஒரு கூட்டமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது, கொஞ்சம் பெருமிதமாகவும், கூச்சமுமாகவும் இருந்தது. பொருளை வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். ஏதோ ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருந்தது

வீட்டின் கேட்டின் முன் வண்டியை நிறுத்துகையில் என்  தவப்புதல்வன் வீட்டிற்குள் அவசரமாக "மூச்சா வருதுப்பா" ஓடினான். ஓடிய வேகத்திலேயே அலறியபடி திரும்ப ஓடி வந்து "அப்பா, நாம வாங்கிட்டு வந்த மாதிரியே இங்கே இன்னொன்னு இருக்கு" என்றான்.

"அப்புறம் எப்படி இல்லைன்னு சொன்னீங்க?" என்று அம்மாவிடம் கடும் கோபமாக கேட்க, "இது பிரியாக்கு வாங்குற  பவுடர் டப்பா"ன்னு நெனச்சேன் என்றார் மலங்க விழித்தபடி. "என்னம்மா இப்படி பண்ணிட்டீங்க?" என்றதற்கு, "நெஜமாவே தெரியலயே, உனக்கு வாங்கினா, அப்பவே எடுத்து  உன் ரூமுக்கு கொண்டு போய்டுவே, இது அவளுக்குன்னு நெனச்சு" என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, வீட்டின் உள்ளிருந்து வேகமாக வெளியே வந்த என் மனைவி, "அம்மா தெரிஞ்சு செய்வாங்களா? லூசு மாதிரி பேசிட்டு, முதல்ல வண்டிய எடுங்க" வழக்கமாக கட்டளைகளை கேட்டே பழகிய நான் அதை மறுக்காமல் திரும்ப அமுதா ஸ்டோர்ஸ் வந்து, முத்துவை பார்த்து "தயவு செஞ்சு மன்னிசிடுங்க முத்து, முன்னாடி வாங்கினது வீட்ல இருந்தது, சரியா பார்க்கல" என்றேன். "என் கஸ்டமரை எனக்கு தெரியாதா சார், இதுக்கு எதுக்கு மன்னிப்பு? இதை திருப்பி கொடுக்க குடும்பத்தோட வேற வரணுமா" என்று அதே புன்னகையுடன் வாங்கி வைத்து, என் மனைவியும் மன்னிப்பு கோரி கொண்டிருந்ததை "மன்னிப்பெல்லாம் கேட்டு சங்கட படுத்தாதீங்க மேடம்" என்று அந்த சம்பவத்திற்கு முழு முற்றுப்புள்ளி வைத்து விட்டு, வேறு ஒரு வாடிக்கையாளரின் தொலைந்த கதையை சுவாரஸ்யமாக சொல்லி கொண்டே இருந்தார்.

பணியில் இருந்த பில் போடுபவரையும் வரவழைத்து மன்னிப்பு கேட்ட பின்பே, அந்த ஏதோ ஒரு தவிப்பு அடங்கியது. இதை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அம்மாவும், மகனும், மனைவியும் தூங்கி விட்டார்கள். முத்து இவர்களுக்கு முன்பே தூங்கி இருப்பார் என அவதானிக்கிறேன்.

இந்த குறைந்த பட்ச நேர்மை நல்லவர்கள்  என்றோ, நடிப்பையோ காட்டிக்கொள்ள அல்ல, சுய நிம்மதிக்காகவும் படுத்த உடன் தூங்கவும் தான்.

இனிய இரவு.

No comments:

Post a Comment