Wednesday, March 17, 2021

கயிற்றரவம் -போகன் சங்கர்

 

எனக்கு நண்பர்களே இல்லை.அதற்காக ஒரே ஒரு ஆழ்ந்த நட்புக்காக நான் முயற்சிக்காமல் இல்லை.அப்படிப்பட்ட ஒரு உறவுக்காக நான் ஏங்காமல் இருந்த நாளே இல்லை,நினைவு தெரிந்த நாள் முதல் என்னால் எங்கேயும் என்னை பொருத்திப் போக முடியவில்லை. மூன்று பேர் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தால் நான் போன உடன் மவுனமாகிவிடுவார்கள்.மவுனம் கனத்து மூச்சுத் திணறி நீ போகிறாயா அல்லது நாங்கள் போகட்டுமா?என்பது போல் ஒரு பார்வை என் மேல் விழும்.தயவு செய்து போய்விடேன் என்று கண்கள் கெஞ்சும்.பெரும்பாலும் நானே வந்துவிடுவேன்.விடாப்பிடியாக அமர்ந்திருந்தால் ரத்தக் கோரை வருகிற அளவுக்குச் சண்டை வந்துவிடும்.வெளியில் மட்டுமல்லாமல் வீட்டிலும் அப்படித்தான்.நான் போகிற வரை சிரித்துப் பேசிக்கொண்டிருக்கிற வீடு என் செருப்பு சத்தம் கேட்டதும் உறைந்து போய்விடுவதை என்னால் உணர முடியும்.என் செய்கையில் உடல் மொழியில் முக பாவனையில் ஏதோ ஒன்று மனிதர்களை விலக்கி வைத்துக்கொண்டே இருந்தது.இவ்வளவுக்கும் பேச்சில் நான் மிகக் கவனமாக இருப்பேன்.ஆனால் ஒருவர் பேச்சில் கவனமாக இருக்க முயற்சிக்கும்போது பேசவே முடிவதில்லை. அவர் வெறுமனே முகமன்கள் சொல்லும் ஒரு பொம்மையாகிவிடுகிறார் ஆண்கள், பெண்கள், ஏழைகள்,பணக்காரர்கள் யாருடனும் என்னால் பொருந்திப் போகமுடியவில்லை.ஒருமுறை திருவண்ணாமலைக்கு ஓடிப் போய் இருந்தேன்.அங்கிருந்த பிச்சைக்காரர்கள், சாமியார்கள் ,போலீஸ் காரர்கள் எல்லோரும் போ போ என்று என்னை விரட்டினார்கள்.வழக்கமாக இதுபோன்று ஓடிவந்துவிடுகிற பரதேசிகளிடம் கனிவுடன் நடந்துகொள்ளும் ரமணாஸ்ரமத்தில் கூட என்னிடம் கடுமையாக பாரா முகமாக நடந்துகொண்டார்கள்.நான் இருந்ததையே கவனிக்காதவர்களாக கவனிக்க விரும்பாதவர்களாக இருந்தார்கள்.சாலையில் ஒரு பூனையோ நாயோ அடிபட்டு இறந்து கிடக்கும்போது நாம் கவனிக்காது போல் போவோம் இல்லையா?அல்லது கை கால் விரல்கள் முற்றிலும் உதிர்ந்துபோன ஒரு தொழு நோய்ப் பிச்சைக்காரன் அல்லது முகமெல்லாம் கொழுப்புக் கட்டிகள் தொங்கும் ஒரு குரூரனைக் காணும்போது ஏற்படும் சிறிய அசூயையோடு அவர்கள் என்னைக் கடந்துபோனார்கள்.
திருவண்ணாமலையில் ஒரு சாமியார் ஒருவர் "உன்னுடைய ஜன்ம நக்‌ஷத்திரம் என்ன? ஆயில்யமோ?"என்றார்.
நான் வியந்து " ஆமாம்.எப்படி சரியாகச் சொன்னீர்கள்?"என்றேன்.
"பாம்பு படம் எடுத்து பார்ப்பது போல் கழுத்தை நீட்டி நீ பார்ப்பது.ஆதிசேஷனின் நட்சத்திரம்.தர்மரின் நட்சத்திரம் என்றும் சிலர் சொல்வதுண்டு.கேட்டை என்பதும் உண்டு.எப்படியானாலும் ஆயில்யம்,கேட்டை,ரேவதி மூன்றும் ஒரே இனம் தான்.தர்மராஜா பாரதத்தில் பாண்டவர்களில் நட்பையோ காதலையோ பெறாது கடைசி வரை வாழ்ந்து மறைந்தவர்.கர்ணனைக் கூட நேசிப்பவர்கள் இருந்தார்கள்"
நான் "அது ஏனப்படி?" என்றேன்.
அவர் "அது அப்படித்தான்.உனது ஆழத்தில் நெளிகிற எண்ணங்களை பார்க்கக்கூடிய ஒருவர் முன்னால் உன்னால் இயல்பாக இருக்க முடியுமா என்ன?"
நான் "இந்தப் பிறவி முழுவதும் இப்படித்தானா?" என்றேன்.
"இனம் இனத்தோடு போகவேண்டும்.இது ஆநிரைகளின் நிலம்.பசுக்கூட்டம் நடுவே ஒரு சர்ப்பம் வந்தால் அவை எப்படி இயல்பாக இருக்கும்?நீ உன் நிலத்துக்குப் போ."
"என் நிலம்?"
"நாகர்கள் வசிக்கும் நிலம்.கேரளம்"
என்னால் கேரளத்துக்குப் போகமுடியவில்லை.என் விதி அதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அதன் எல்லையைத் தொட்டு வசிக்கும் நிலை வந்தது.பணி நிமித்தம்.ஆனால் இங்கு வந்தும் என் ஜாதகம் பெரிதாக மாறியது போல் தெரியவில்லை. நான் மாலைகளில் அதிகம் ஆள் வராத கோவில்களில் சென்று அமர்ந்திருப்பேன்.பெரும்பாலும் நாகர்காவுகளில்.அது எனக்கொரு அமைதியை அளித்தது.சிறிதும் பெரிதுமாய் வைக்கப்பட்டிருக்கும் நாகர் சிலைகளைப் பார்த்தால் ஒரு நிம்மதி.சீராக வரத்தொடங்கும் மூச்சு.அப்போது அது ஒரு பாம்பின் சீறல் போல இருப்பதாக எனக்கு தோன்றியது.அப்படியொரு மாலையில் அந்தி தன் கடைசிச் சிகப்பையும் மேற்கில் கரைத்துக்கொண்டிருந்த வேளையில் கையில் ஒரு நடுங்கும் தீபத்தோடு அவள் வந்தாள்.நாகர் சிலைகளின் முன் ஏற்றிவிட்டு "நீங்கள் மார்த்தாண்டம் மருத்துவமனையில் வேலை பார்க்கிறீர்கள்.இல்லையா?நான் பார்த்திருக்கிறேன்"
நான் அந்த குறைந்த வெளிச்சத்தில் அவளைப் பார்க்க முயன்றேன்.
"இங்கே அடிக்கடி வந்து அமர்ந்திருப்பதையும் பார்த்திருக்கிறேன்"
நான் பேசவில்லை.ஒரு நிழலுடன் என்ன பேசுவது?
"நாளை மருத்துவமனை வருவேன்."
நான் அப்போதும் பேசவில்லை.இப்போது நிழல் கூட இல்லை.அகல் கூட அணைந்து தூய இருள்.சுவர்க்கோழிகளின் கீறல் ஒலிகள் மட்டும்
மறு நாள் அவள் மருத்துவமனைக்கு வந்தபோது சரியாகப் பார்க்கமுடிந்தது.ஆனால் எதற்காக வந்தாள் என்பது அதிர்ச்சியை அளித்தது.
"மூணு மாசத்துக்கு ஒருமுறை ஒரு செக்கப் வருவது" என்று அவள் சிரித்தாள்."தினமொரு பாம்பு என்னைத் தீண்டுகிறது.அதன் விஷம் இறங்கியிருக்கிறதா? என்று பார்க்கவருவது.என்ன?என் மேலிருந்த மரியாதை போய்விட்டதோ?"அவள் சிரித்தாள்.நான் பதில் பேசவில்லை.
ஆனாலும் அடுத்து ஒவ்வொரு முறை மருத்துவமனை வரும்போதும் கோயிலில் சந்திக்கும்போதும் அவள் என்னிடம் ஐந்து நிமிடமாவது பேசாமல் போக மாட்டாள்.
முதலில் தொந்திரவாக இருந்தது.பிறகு வியப்பாக மாறிற்று.நான் அவளது இந்த சம்பாஷணைகளுக்காக மனதுக்குள் காத்திருக்கவும் ஆரம்பித்தேன்.இவள் மட்டும் ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறாள்?என் மீது பிறர்க்கு ஏற்படும் விலகல் உணர்ச்சி இவளுக்கு ஏன் ஏற்படவில்லை?
ஒரு நாள் அதற்கு விடை கிடைத்தது.
ஒரு நாள் மாலை அந்தியில் வழக்கமாக சென்று அமர்ந்திருக்கும் கோயிலில் சென்று அமர்ந்திருந்தேன்.உட்கார்ந்தவாறே தூங்கிவிட்டேனா என்னவோ திடீரென்று தோன்றி விழித்தேன்.காலை யாரோ குளிர்ந்த விரலால் தொடுவது போன்ற ஒரு உணர்ச்சி.சுதாரித்துக் கொள்வதற்குள் அது என் இடையைச் சுற்றி விட்டது.சுற்றியபடியே சாவதானமாக படம் எடுத்து சுற்றிலும் பார்த்தது.படத்தைத் திருப்பி ஒரு குழந்தை போல் நாய்க்குட்டி போல் என் முகத்தையும் பார்த்தது.நான் உறைந்து போய் அமர்ந்திருந்தேன்.
அப்போது ஒரு சிரிப்பொலி கேட்டது.
"நல்லாருக்கே.ஆச்சியும் ஐய்யரும் ஆலிங்கனம்"
நான் அதிகம் அசைக்காமல் தலையைத் திருப்பி "பாரு",என்றேன்.
அவள் " ஒன்றுமில்லை.இனம் இனம் தேடி வந்தது"என்றாள்.பிறகு என் இடுப்பைச் சுற்றிக்கொண்டிருக்கும் அதை நோக்கி "போ" என்றாள்."அதுதான் நான் வந்துவிட்டேன் அல்லவா?"
அதைக் கேட்டதும் உடையவர் உத்தரவைக் கேட்ட ஒரு பணியாள் போல அது சரசரவென்று தன் பூட்டை விலக்கிக்கொண்டு கீழே இறங்கி மறைந்தது.
நான் விழித்து "நான் கண்டது நிஜமா?" என்றேன்.
அவள் "என்ன சந்தேகம்? கண்டது கயிறோ பாம்போ என்றா?"என்றாள்.
பிறகு தன் குளிர்ந்த கரங்களால் என் நெற்றியில் சந்தனக்குறியை இட்டாள்." உஷ்ணம் உஷ்ணேனு சாந்தி.விஷம் விஷத்தால் தீரும்"என்றாள்.என்னைக் கைகோர்த்து எழுப்பி
"போகலாம்.நானும் ஆயில்யம்தான்"என்றாள்.

Tuesday, March 16, 2021

வண்ணதாசன் சக மனிதர்களுக்கு அன்பை ஊட்டும் தாய்

 கல்யாண்ஜி என்ற வண்ணதாசனின் மொழி ஒன்றே ஒன்றுதான் அது அன்பு,

ஒவ்வொரு நொடியையும் நேசத்தால் நிரப்பும் எழுத்து அவருடையது,

ஒரு மழலையின் சிரிப்பு போல உடனே ஈர்த்துவிடும் தன்மை கொண்டது அவரது அழகியல்.

இவரின் இயற்பெயர் கல்யாண சுந்தரம், 1947ல் திருநெல்வேலியில் பிறந்தவர். வங்கி பணி செய்து ஓய்வு பெற்றவர். அவரது எழுத்துக்களை போலவே அதிர்ந்து பேசாத, காண எளிதான, தென்றல் போன்ற மிக மென்மையான மனிதர், இவரின் மொழி நடை அபாரமானது. 

உரைநடை எழுத்துக்களை கூட கவிதை போன்றே வெளிப்படுத்தும் தன்மை இவருக்கு உண்டு. கோபமோ, சலிப்போ, எரிச்சலோ இல்லாத, நிகழப்பவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகை எழுத்துக்கள் இவருடையவை.  

இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப் பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். விஷ்ணுபுரம் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதான சாகித்திய அகாதமி விருது போன்றவைகளை பெற்றிருக்கிறார். வண்ணதாசன் எழுத்துக்கள் உங்களை அடிமைப்படுத்தி அமைதியான, நிதானமான உலகத்திற்கு கொண்டு செல்லக்கூடியவை.

 இனி அவர் எழுதியதில் எனக்கு பிடித்த சில வரிகளை காணலாம்

 ஏந்திக் கொள்ளத் தெரிந்த உள்ளங்கைக்கு எல்லாம் பூவே

என்ற அவரது எழுத்துக்களே, அவரது படைப்புகள்.

 வண்ணதாசன் ஒரு ஜென்னும் கூட, தத்துவங்கள் கொட்டி கிடக்கும், உதாரணமாக    

உங்கள் பிடி மண்ணை

நீங்கள் இட்டால் போதும்

மற்றவை அனைத்தையும்

மண்புழுக்கள் பார்த்துக் கொள்ளும்


இன்னொன்றையும் பாருங்கள், அழகியலும் ஜென்னும் இணைந்து பயணிக்கும் வரிகள் இவை

சுள்ளி பொறுக்க வந்த  முதியவர்,

மழை பெய்த ஈரத் தரையில்,

குச்சியால் கீறிக்கொண்டே போகிறார்.

இதை விடச் சரியாக

அவருடைய தன் வரலாறை

அவரால் எழுத முடியாது.

 வாழ்வின் நிகழ்வுகளை ஒரே வரியில் புரியவைக்கும் வல்லமை அவரது எழுத்துக்களுக்கு உண்டு

மகிழ்ச்சியைப் போல, வருத்தமும் ஒரு சம்பாத்தியம் தான் என்கிறார்


அவசர கதியில் இயங்கும் மனிதகுலத்தை பார்த்து அவர் கேட்கும் கேள்வி

மனிதர்கள் தங்கள் மேல் உதிரும் பூக்களையும், பழுப்பு இலைகளையும் ஏன் இவ்வளவு உடனுக்குடன் அப்புறப்படுத்தி விடுகிறார்கள்..?

இப்போது அன்பெனப்படுவது வெறுமனே அன்பல்லவாம், அது இப்படித்தான் இருக்கிறதாம்

அன்பாக இருப்பது மட்டும் போதவில்லை. கொஞ்சம் போலி வார்த்தைகள், கெட்டிக்காரத்தனம், அதிகாரம், கொஞ்சல், கெஞ்சல் இப்படி ஏதாவது ஒன்றுடன் கலந்து காட்ட வேண்டியிருக்கிறது. வெறும் அன்பு சலிப்புத் தட்டி விடுகிறது

 காற்றின் உருவம் உங்களுக்கு புரியவில்லை என்கிறார்

காற்றைப் பார்த்தேன்எனறு சொன்னேன்.

நீங்கள் நம்பவில்லை.

சருகுகள் நகர்ந்தனஎன்று சொன்னேன்.

 நீங்கள்  நம்பினீர்கள்.

எதையும் நம்பும்படியாகச்

சொல்லவேண்டியதிருக்கிறது

உங்களுக்கு

மனித மனதின் ஈரம் பற்றி இப்படி எழுதுகிறார்

மனுஷன் உடம்புல வியர்வையும்,கண்ணுல கண்ணீரும் இருக்குற வரை உலகத்துல எப்படிப்பா ஈரம் வத்திப் போகும்?”

 நெருங்கவும் விலகவும் முடியாத இந்த வாழ்வில்தான் கொட்டி கிடைக்கிறதாம் வழியெங்கும் சுதந்திரம்

யாரிடமும் விலகி விடவும் முடிவதில்லை

நெருங்கி விடவும் கூடுவதில்லை

என்பது தான் துயரமான இன்னொரு நிஜம்.!

 பிடித்ததை செய்துகொண்டே இருங்கள் என்பதை எப்படி சொல்கிறார் பாருங்கள்

எழுதாவிட்டால் பரவாயில்லை,படியுங்கள். படிக்காவிட்டால் பரவாயில்லை, வரையுங்கள். வரையா விட்டால் பரவாயில்லை,பழகுங்கள்.ஏதோ ஒரு வகையில் மனதின் கதியில் இயங்கிக் கொண்டிருங்கள். அதுவே போதுமானது

ஒரே நொடிதான் அன்பாக, நெகிழ்வாக மாற்ற போதுமானது என்கிறார்

சொற்ப நேரத் தூறல் தான்.

எல்லா இலையும் நனைந்திருந்தது

பாரதிக்கு எதிர்புறமாக நின்று

எல்லாரும் பெரிதினும் பெரிது கேட்டால் சிறிதினும் சிறிதை யார் தான் கேட்பது?  நான் கேட்கிறேன் என்கிறார்

 

கீழ்காணும் வரிகள் தானே தவமும் வரமும்?  

வேப்பம் பூ

ஒன்றே ஒன்று

என் மேல் உதிரத்தானே

இது வரையில் இந்த

மரத்தடியில் நின்றேன்

 

சாதாரணர்கள் சட்டென உரிமைகொண்டாடும் முகமாக தான் இருக்க வேண்டும் என தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்

ஒரு கை பிடிச்சு தூக்கிவிடுங்க" என்று கனத்த கூடையுடன் சில முகம் அழைக்குமே, அப்படி அழைக்கும்படியாக நான் போய்க் கொண்டிருந்தால் போதும்

பண்டிகைகளை எதற்காக கொண்டாடுகிறோம் என்பதை பற்றி ஒரே வரியில்  

எல்லாவற்றையும் அழித்து விட்டு அதன் தினங்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்

தான் ஏன் எழுதுகிறேன் என்பது பற்றிய சுயவிளக்கம்

 யாராவது எனக்கிருப்பார்கள் என்றும், யாருக்காகவோ நான் இருக்கிறேன் என்றும் நம்பி, எல்லோர்க்கும் அன்புடனே எழுதிக் கொண்டிருக்கவே நான் தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறேன்

 

நான்கு வரிகளில் ஒரு வாழ்க்கை வரலாறு

அத்துணை புடைத்த

நரம்புகளோடும்

குப்புறக் கிடந்தது

உதிர் இலை

எனக்கு மிகவும் பிடித்த அழகான கவிதை, ஒரு நல்ல பாடல் வரிபோல, சட்டென இதயத்துள் சென்று தங்கி கொள்ளும்

இக்கரைக்கும், அக்கரைக்கும், 

பரிசல் ஓட்டி, பரிசல் ஓட்டி,

எக்கரை என்கரை மறக்கும்,

இடையோடும் நதி மெல்லச் சிரிக்கும்


நான் என்பது நானல்லவே என்பதை

ஞாபகங்களைத்

திறக்கிற சாவிகளை

மற்றவர்கள் வைத்திருக்கிறார்கள்

எனக்கு எதுவும் தெரியாது நேசிப்பதை தவிர என்பதை  

தயவுசெய்து என்னை மன்னியுங்கள்.

எந்த பூவின் பெயரும் எனக்கு தெரியாது.

எனக்கு தெரிந்தவை எல்லாம் அவை பூ என்பது மட்டுமே.


அவர் துயரமெல்லாம் இந்த வகையே

தன் கனத்தைத்

தானே தூக்கிவரும்

ஒரு மயிலின் ஓட்டம்

ஒரு வகையில்

துயரூட்டுவது

 

காரணமின்றி, சுயலாபமின்றி நேசியுங்களேன் என்ன தவறு என்கிறார்               

எறும்பு வரிசையில் திடீரென்று

முகர்ந்து பார்த்துப் பிரியும்

எறும்பைப் போல

 

சடுதியில் ஒரு மென் முத்தமிட்டு

அவரவர் வழியில்

எதிர்திசையில்

போய்க்கொண்டு இருந்தால் தான்

என்ன...  

பறவைகள் எப்போதுமே நம்மைவிட பல மடங்கு உயர்வானவை தானே

அ முதல் ஃ வரை

எனக்கு தெரியும்.

என் ஜன்னல்

வழியே தெரியும்

குருவிக்கோ

வானம் தெரியும்.

 தன்னை தாழ்த்திக்கொண்டு உயர்ந்து கொள்ளும் நிலை

என்ன செய்ய முடியும் உங்களால்?

ஒதுக்கித் தள்ளுவீர்கள்...

என்ன செய்ய முடியும் என்னால்?

ஒதுங்கிக் கொள்வேன்.

 எந்நிலையிலும்  நிலா பார்த்தல் 

தெரியவில்லை

யாராவது இப்படி அவசரமாகக்

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு

நிலா பார்ப்பார்களா என்று.  

யாரின் கவனத்தையும் கலைக்காமல் அழகாய் கடந்து போதல்

பெரிய ஆசைகள் ஒன்றுமில்லை

யார் மீதும் பட்டுவிடாமல்

இரு கைகளையும் வீசியபடி

இன்னும் கொஞ்ச தூரம்

போக வேண்டும்

அவ்வளவுதான்..!  

தான் வேறு புத்தர் வேறு என்பதை

 

புத்தரைப் போல

நின்று பார்த்தேன்.

கூடவில்லை .

புத்தரைப்போல

அமர்ந்து பார்த்தேன்.

இயலவில்லை .

சுலபம்தான் என்று

புத்தரைப் போலச்

சிரிக்க முயன்றேன்.

புத்தர் தான் சிரித்துக்

கொண்டிருந்தார்

என்னைப் பார்த்து

இப்போதும்.

செடியை வேண்டுமானால் நடலாம், ஆனால் பூக்களின் வாழ்வை மனிதன் நிர்ணயிக்கமுடியாது அல்லவா

நீ இருக்கும்

திசைக்கு முகம் காட்டி

உன் சதுரமான

எதிர்பார்ப்பின் மேல்

பூக்காது

தொட்டிப்பூ

பூப்பூத்தல் அது இஷ்டம்

போய் பார்த்தல் உன் இஷ்டம்...

 அதெப்படி என்ற வியப்பு

கூண்டுக் கிளியின்

காதலில் பிறந்த

குஞ்சுக் கிளிக்கு

எப்படி எதற்கு

வந்தன சிறகுகள்?  

கீழ்க் கண்ட கவிதை வலி கடத்தி

திருப்பாவைப் பாடல்களின்

கிழிந்த குரல்களை

கழிவுக் காகிதங்களுடன்

பொறுக்குகிறவளுக்கு

வயது பதிமூணு.

வாழ்க்கையை அழகாக மாற்ற யாரோ ஒருவர் கூட போதும்தானே

யாராவது

வழியனுப்பவும்

துணையிருக்கவுமாக

இருந்தால்

இந்த வாழ்க்கை

எவ்வளவு

அடர்த்தியாகி விடுகிறது

மீண்டும் ஒரு ஜென் வரிகள்

 

அர்த்தத்துக்கும் அர்த்தமின்மைக்கும் நடுவே தொங்குகிறது ஆனந்தத்தின் பாலம்

 இழப்பெனப்படுவது யாதெனில்

அடைக்கப் படும் கதவின்

விருப்பமான சத்தத்திற்காக

உள் அறையில் காத்திருக்கிறேன்.

மிகுந்த கவனத்துடன்

சத்தமே கேட்காமல்

சாத்திவிட்டுப் போகிறார்கள்.

இப்படித்தான் ஒரு காரணமுமின்றி

இழந்துவிட நேர்கிறது

இன்னும் சிலவற்றை.

 காலைநேர மேகம் சூழ எடுக்கப்பட்ட அழகான புகைப்படம் போன்ற வரிகள்

கைப்பிள்ளையுடன் பேசிக்கொண்டே

கோலம் போடுகிறாள் அந்தப் பெண்.

நிபந்தனையற்ற அன்பில்

நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது

வாசல்.

 இது சட்டென மனதில் ஒரு வசந்தகாலத்தை கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறதல்லவா?

எனக்கு இருக்கும் இறந்த காலம் போல,

பறவைக்கும் இருக்கும் அல்லவா

ஒரு பறந்த காலம்

 நான் உண்மையாக இருப்பது பட்டமோ புகழோ அடைவதற்கல்ல என் சொந்த விருப்பங்களுக்காக என்பதை

அதிக பட்சம் இந்த வாழ்க்கைக்கும்

மனிதனுக்கும் உண்மையாக

இருக்கவே முயல்கிறேன்.

சிகரங்களை அடைகிற

உந்துதல்கள் இல்லை.

ஆனாலும் போய்க்கொண்டிருக்கத்

தோன்றுகிறது,

தனியாக அல்ல

மிகவும் நட்புணர்வும்

அடிப்படை புரிதல்களும்

உள்ள மனிதர்களுடன்..

 பின் தொடர்ந்து வரும் குரல் ஜென்னன்றி வேறென்ன 

இருந்து...என்ன ஆகப்போகிறது..?

செத்துத் தொலையலாம்.

 

செத்து...என்ன

ஆகப்போகிறது..?

இருந்தே தொலையலாம்.

 உண்மைதானே

உதிர்ந்த இறகுகளில் பறந்த ஆகாயம் இருக்கும்தானே

 மெல்லிசை பாடல் வரிகள் போல மனம் தீண்டிவிட்டு செல்லும் கவிதை

வெயிலில் அலைகிறது

வண்ணத்துப் பூச்சி.

வெயில் அலைகிறது

வண்ணத்துப் பூச்சியோடு.

காற்று அடித்து செல்கின்ற

போகன்வில்லா பூச்சருகுகள்

ஓர் ஆடி மாத தெருவை

அழகாக்குகிறது போல

வைறெதுவும் செய்யமுடியாது

 உணவை உன்னைமட்டுமல்ல, நிதானமாக வாழ்க்கையை வாழவும்தான் அறிவுறுத்துகிறது

ஒரு பழத்தின் உருண்டை வடிவத்தை

எங்கிருந்து கடிக்க துவங்க வேண்டும் என்பதற்கு

 கணிதங்கள் உண்டா , தெரியவில்லை ஒரு அணிலிடமும் பறவையிடமும் கற்றுக்கொள்ள

இருக்கிற விஷயங்களில் பழம் கடித்தலும் அடங்கும்

 வண்ணதாசனின் மிக சிறப்பான கவிதை இது

நிதானமாக குடிக்கத்

தெரியவில்லை .

அவசரப் படாமல்

"அனுபவிக்கத்" தெரியவில்லை .

வேண்டாம் என்பதைச்

சொல்லத் தெரியவில்லை .

சத்தம் போடாமல்

பேசத் தெரியவில்லை .

அவசியத்துக்குக் கூட

கோபப்படத் தெரியவில்லை .

இரண்டாம் மனுஷியை

சிநேகிக்கத் தெரியவில்லை

ஹரிக்கேன் லைட்டைப்

பொருத்தத் தெரியவில்லை .

அடைகிற குருவிகளைப்

பார்க்கத் தெரியவில்லை .

வாழ்வும் கவிதையும்

தெரியுமென்ற

வாய்ச்சவடாலில் மட்டும்

குறைச்சலே இல்லை

இரண்டு வரிகளில் அழகியல்

 சரிந்த பிறகும் அழகாய்ப் பெருக நீராக இருக்க வேண்டும்..

அதுவும் தரையில்

 உடல்கள் விலகினாலும் நிழல்கள் கொண்டாடுகின்றன

ஒரே பாதையில்

ஒரு விளக்கடியில்

அவனும் அவளும்

விலகி நடக்க,

நீளச் சரிந்த நிழல்கள் மட்டும்

கூடிக் கூடிக்

குலவிப் பிரிந்தன

 எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகிற மனிதம் பற்றி

எதையும் சொல்லவில்லை

எதையும் கேட்கவில்லை

'சும்மாதான் வந்தேன்' என்று சொல்லிவிட்டு போனான்.

காற்றைப்போல

வெயிலைப்போல

சும்மாதான் வருகிறவர்கள்

முக்கியம் எனக்கு.

 இழப்பின் வலி

முழுதாக இருக்கும்போது கவனத்தில் விழவில்லை,

இடிந்து கிடக்கும்போது

இம்சைப்படுத்துகிறது,

யாருடையாதகவோ இருந்த வீடு.  

 புதிதாக எழுத வருபவர்கள் முதலில் வண்ணதாசன் என்ற கல்யாண்ஜியை படியுங்கள் என மறைந்த எழுத்தாளர் சுஜாதாவே பரிந்துரைக்கிறார், இதற்கு மேல் நான் என்ன சொல்ல?