Wednesday, April 28, 2021

மை நேம் ஈஸ் பஷீர் (My Name Is Basheer) ஆவண படம் பற்றிய விமர்சனம்

 மை நேம் ஈஸ் பஷீர் (My Name Is Basheer) என்ற வைக்கம் முகமது பஷீரின் ஆவணப்படம் யூடுப்பில் காண கிடைக்கிறது. இந்த ஆவணப்படம் மலைவாழ் கிராமமொன்றில் ஆனந்தமாக சாரல் மழையில் நனைந்து செல்லும் சுகம் தருகிறது. ஆறுகளின் வழியே இயற்கை காட்சிகளுடன் பறவைகள் சப்தமெழுப்ப, சாதாரண மனிதர்களின் படகுகள் அந்த காட்சிகளின் நீட்சியாக அந்த இயற்கை சூழலிலேயே படகில் சென்றபடி பேட்டி தரும் பஷீரின் சகோதரர் அபு பெக்கர் என கண்களுக்கு விருந்து படைக்கவும் இது தவறவில்லை.

 2007ல் அனுஷ்கா மீனாட்சியும் அவரது படப்பிடிப்பு குழுவும் சென்னையிலிருந்து கோழிக்கோட்டிற்கு சென்று வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கையை ஆவண பட வடிவில் திரும்ப கொண்டு வந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் பார்த்த இரண்டு நாடகங்கள் இதை எடுக்க தூண்டியதாக இந்த ஆவண பட இயக்குனர் சொல்கிறார். பஷீரின் புத்தகத்தை பற்றி பெட்டிக்கடைக்காரர், சமையல் கலைஞர், புத்தக விற்பனர், மாணவிகள் என பலதரப்பட்ட மக்கள் பேசுவதிலிருந்து ஆரம்பமாகிறது இந்த ஆவணப்படம். முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதும் subtitle வைத்திருப்பதும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கின்றது. காலம் தாண்டி அவரது கதைகளில் இன்னமும் புத்துணர்ச்சி இருக்கிறதென கூறுகிறார்கள் அவரை இப்போதும் வாசிப்பவர்கள்.

இடையிடையே அவரது புத்தகங்களின் கதைகளை காட்சிகளாக இந்த படமெடுக்க தூண்டியவரின் நாடகங்கள் வருகின்றன,  அதில் நண்பனை கொலை செய்யும் காட்சிகளில் நடிப்பு திரைப்படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகளை மிஞ்சுமளவு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். மற்றொரு நாடகத்தில் காதல் காட்சிகளில் நகைச்சுவை பொங்கி வழிகிறது,

குறிப்பாக, வேறுவேறு மதத்தை கொண்ட காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் வசனங்கள்,

 "நமக்கு குழந்தை பிறந்தால் எந்த மதத்தில் வளர்ப்பது?"

"மதமே இல்லாமல் வளரட்டுமே?"

"மிருகங்கள் மாதிரியா?" …

 "அவர் எல்லாத்தையும் பார்த்திருக்கார், காதல்கள் கூட உண்டு, நாமொரு புத்தகம் எழுதணும்னா அதில இதெல்லாம் முழுசா வெளிய கொண்டு வரணும், அதில நகைச்சுவை, சந்தோசம், அனுபவம் இதெல்லாம் அடுத்தவங்களுக்கு கொடுக்கிற மாதிரி எழுதணும், இதையெல்லாம் உருவகப்படுத்தினா அதுதான் பஷீர்" அவரது மனைவி பாத்திமா (பாபி).

எனக்கும் பஷீருக்கும் பதினெட்டு வயசு வித்யாசம், அவர் பள்ளி படிப்பு முடிந்ததும் இங்கிருந்து 18ஆவது வயசுல ஓடி போய்ட்டார், பத்து வருஷம் இந்தியால நிறைய இடங்களும், தென் ஆப்ரிக்கா, அரேபியாவெல்லம் போய் அப்புறம் திரும்ப வந்தார், திரும்ப வந்த அவர் பழைய பஷீரல்ல என புரிந்து கொண்டோம், அவர் வேறு மனிதராக இருந்தார், அவரது மீசை, தொப்பி, உடைகள் பகத்சிங்கை ஞாபக படுத்தின, ஒரு புரட்சிக்காரனை போலத்தான் அப்போது வாழ்ந்தார், அவருக்கு எழுத்தின் மீது தீவிர காதல் உண்டுஎன்கிறார் அவரது சகோதரர் அபு பெக்கர்.

"அவர் என்னை மிக சுதந்திரமானவளாக வளர்த்தார், முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த போதும், மத நடவடிக்கைகளை பின்பற்றும் வாழ்க்கை முறை எங்களுடையதில்லை, எப்படி வாழ்க்கை நடத்துவதெனக்கூட அவர் அறிவுரை சொன்னதில்லை. எல்லா மத நண்பர்களும் அப்பாவிற்கு உண்டு, அப்பாவின் வாழ்க்கை முடியும் வரை, அவரை சுற்றிலும் ஒரே சிரிப்பு சப்தமாக இருக்கும், அவர் தனது வாழ்க்கை முழுவதையும் நகைச்சுவையால் நிரப்பிக்கொண்டார்" என்கிறார் பஷீரின் மகள் ஷகீனா.  இந்து மதத்தின் மீது பிடிப்பு கொண்டு சிலகாலம் ஆன்மீக தேடலோடு பஷீர் இருந்திருக்கிறார்

 அவரது நாடகங்களை இயக்கி வரும் ராஜிவ் கிருஷ்ணன் கூறுகையில், "அவர் தனித்துவமான நகைச்சுவை எழுத்துக்களுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல, சோகம், வறுமை, போராட்டம், ஜெயில் வாழ்க்கை என நிறைய அனுபவங்களை எழுத்தில் தந்திருக்கிறார், அதுவும் சாதாரண மனிதர்களை கதா பாத்திரங்களாக வைத்துக்கொண்டு, அவை நம்மை முழுதாக உள்ளிழுத்துக்கொள்ளும், தவிர அவரது நாடகங்களை இயக்குகையில் அவரது பலவித அனுபவங்கள் எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கின்றன"  

எஸ் ராமகிருஷ்ணன் தனது வலைதளத்தில் பல வருடங்களுக்கு முன்பு எழுதி இருந்த பஷீர் த மேன் (Basheer the man) என்ற குறும்படத்தை தேடி youtubeல் பார்த்தேன், இரண்டு பாகமாக அதை வெளியிட்டிருக்கிறார்கள், அட்டகாசமாக இருக்கும். Link: https://www.youtube.com/watch?v=8HBlQXzrxEE அதை எடுத்த திரு M A ரஹ்மான், "என்னோட பால்ய வயதில் புத்தகம் படிச்ச உடனே அந்த எழுத்தாளரை பார்க்கணும்னு தோணும், அப்படிதான் அவரை பார்க்கணும்னு தோணிச்சு,  அதுக்கு முக்கிய காரணம் பஷீரோட நகைச்சுவை உணர்வு. நான் M A படிச்சு முடிச்சதும் அவரை பற்றி படமெடுக்கலாம்னு ஆசைப் பட்டேன், குறிப்பா அவரது பால்யம், சுதந்திர போராட்ட காலம், தனிப்பட்ட வாழ்க்கை, அவரது தத்துவங்களில் இருந்த மாற்றங்கள் எல்லாம் எடுக்க சென்றோம்என்று ஆரம்பித்து அவர் பஷீர் பேசிய ஒலிகளை கொண்டு வர பட்ட பாடுகளை விவரிப்பார், அது மிக சுவாரஸ்யமானது.

ஜமீலாவிடம் காதலை சொல்லும் அப்துல் காதர் காட்சிகள் உங்களை நிச்சயம் சிரிக்க வைக்கும், அதன் வழியே பஷீரின் நகைச்சுவை உணர்வை நீங்கள் உணரலாம்.

கோழிக்கோட்டில் மாத்ருபூமி பத்திரிக்கை இந்த நாடகங்களை பஷீரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக நடத்தியிருக்கிறது. அவரது கொண்டாட்டங்களில் ஒன்றாக மாணவர்களை வைத்து ஓவிய போட்டிகள் நடக்கின்றன, அங்கு வரையப்பட்ட பல ஓவியங்கள் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கின்றன. உண்மையாகவே கேரளா பூமி எழுத்தாளர்களை கொண்டாடுகிறது.

பஷீரை பல அழகான கோணங்களில், தருணங்களில் எடுத்தவர் புனலூர் ராஜன், இது என்னுடைய முதல் கேமரா என்று ஒன்றை காட்டுகிறார், பார்க்க வித்தியாசமாகவும், போட்டோ எடுக்கும்போது வரும் சப்தம் ஈர்ப்புடனும் இருக்கிறது.

அடுத்து வரும் பஷீரால் எழுதப்பட்டு, ஜெயிலில் எடுக்கப்பட்ட மதிலுகள் நாடகம் கண்களை அகலவிடாமல் பார்க்க வைக்கும் தன்மை கொண்டது.

வாரங்கள் நாட்களாகி நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடமாக மாறிய பின்பும் உணவு வைத்துக்கொண்டு ஒவ்வொரு இரவும் தன் மகனுக்காக காத்திருந்த பஷீரின் தாய்டனான நெடுநாள் பிரிவுக்கு பின் வரும் "நான் உன்னை பார்த்தால் போதும்" என்று பேசுகிற வரிகள் நெகிழ்ச்சி.

பஷீரின் மகன் அனீஸ், "அவருக்கு மிகுந்த பிரியம் என்மீது உண்டு, பல சமயங்களில் அதை வெளிக்காட்டியதில்லை, ஒரு சில சமயங்கள் அதைமீறி வந்துவிடும் போது கண்கள் கலங்கியிருக்கிறேன், அப்பா எழுதியதில் முக்கியமானது எங்கள் இனத்தை மோசமான வில்லன்களாக எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், தன்னை சுற்றியிருந்த தனது சமூக மனிதர்களை பார்த்தார், அப்பா, அம்மா, குழந்தைகள், சொந்தங்கள் என மிக சாதாரணமானவர்கள், அன்பானவர்கள், தீயவர்கள் அல்ல என்பதை புரிந்துகொண்டார், அதை அவர்  பிரச்சாரம் செய்யாமல், இயல்பான வாழ்க்கையை அவர் எழுத்தின் மூலம் கொண்டுவந்தது, அதை மற்ற சமூகத்தினர் ஏற்றுக்கொண்டதும், புரிந்துகொண்டதும், நட்பாக வாழ தொடங்கியதும் அவர் எழுத்திற்கு கிடைத்த வெற்றி"

பஷீரின் சுயசரிதை எழுதிய M K ஷானு, “அவர் நல்ல சமையல்காரர், மீன் கறியும், டீயும் அவ்வளவு சுவையாக செய்து தருவார். அப்படிதான் எங்கள் நட்பு வளர்ந்தது, காந்தியை சந்தித்தது, எடப்பள்ளியில் இருந்து ரயிலேறி காளிகட் போனது, அங்கு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டது, அவர் ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கியதில்லை, ராஜஸ்தான், பம்பாய், காஸ்மீர் பின் கப்பலேறி பெரிசியா என பயணம் செய்துகொண்டே இருந்தார், அவரது அனுபவங்களை விளக்கி சொல்வதை கேட்பது அவ்வளவு அழகாக இருக்கும், அது எப்போதும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், அதுதான் என்னை அவருடைய சுயசரிதை எழுத தூண்டியது, “கதைகள் எனக்கு பிடிக்கும், மனிதர்களை அதைவிட பிடிக்கும் இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமே என் எழுத்து என்பார்.”

பஷீர் "எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், நீங்கள் விரும்பிய நேரத்தில் படிக்கலாம், ஆனால் நீங்கள் (மக்கள்) அப்படி இல்லை, மர்மம் நிறைந்திருக்கிறீர்கள், அதை பற்றி தான் அறிய துடிக்கிறேன், அதை தாண்டி நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவெனில் நான் உங்களை நேசிக்கிறேன்"

பஷீரின் அளவுகடந்த மனிதநேயம், காதல், வறுமை அனுபவங்கள், அரசியல் மற்றும் போரைப் பற்றிய விமர்சனம், இசையில் அவரது தனிப்பட்ட ரசனை, இயற்கையின் மீதான காதல் மற்றும் அவரைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் சமூகம் குறித்த அவரது  நம்பிக்கைகள் என அவரது பல கதைகள் எழுத்தாளரின் ஏதோவொன்றை வெளிப்படுத்துகின்றன. மெல்லிய தென்றலின் சுகமென விரிகிறது இந்த ஆவணப்படம். மலையாள உலகின் மிகப்பெரும் ஆளுமையை முழுமையாக தெரிந்து கொள்ள கண்டீப்பாக இந்த ஆவண படத்தை காணுங்கள்.  

Link: https://www.youtube.com/watch?v=9-Tm24XRRCE

 

Directed By:

Anushka Meenakshi

 

Produced by:

School of Media and Cultural Studies, Tata Institute of Social Sciences, Mumbai.

Friday, April 9, 2021

பொர்மாநெக்கும் தமிழ்ப் பெண்டிரும்

 ஒரு வெள்ளைக்காரனுடன் ஒரே வீட்டில் குடியிருந்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்? எனக்குக் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முந்தைய கதையைச் சொல்கிறேன்.

தஞ்சாவூர் மேல வீதியில் பாலோபா சந்தில் குடியிருந்தோம். தஞ்சாவூர் சந்துகள் பிரசித்தி பெற்றவை. புராதனத் தன்மைகொண்டவை. விசித்திரமான மராட்டியப் பெயர்களுடன் கூடிய தஞ்சாவூர் சந்துகளில், தலைமுறை தலைமுறையாக மனிதர்களும் மாடுகளும் வசித்து வருகிறார்கள். அழகான பெண்களும், அசிங்கமான சாக்கடைகளும், தண்ணென்ற குளிர்ச்சியும்கொண்ட எந்தச் சந்தில் நுழைந்தாலும் ஒரே மாதிரி தோற்றத்துடன் திகைப்பை உண்டு பண்ணும்.

வேடிக்கையாக ஒரு கதை சொல்வது உண்டு; சந்துக்கு வெளியே தெருவில் ஒரு மாமி கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அந்த வழியே ஓர் ஆசாமி கையில் ஒரு துண்டுப் பேப்பருடன் முகவரி விசாரித்து இருக்கிறார். மாமி கோலம் போடுவதை நிறுத்திவிட்டு அவருக்கு வழி சொல்லி அனுப்பியிருக்கிறார். அடுத்த வருடம். அதே தெரு. அதே சந்து. அதே மாமி கோலம் போடுகிறார். ஓர் ஆள் முகவரி கேட்டு துண்டுச் சீட்டை நீட்டினாராம். மாமி அமைதியாகக் கேட்டாராம்: ‘இன்னுமா அந்தச் சந்தைக் கண்டுபிடிக்க முடியல?’

அதற்காக, தஞ்சாவூர்ச் சந்துகளை இளக்காரமாக நினைத்துவிடாதீர்கள். பெரிய எழுத்தாளர்கள், சங்கீத வித்வான்கள், பண்டிதர்கள், கலைஞர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள். அதுசரி. வெள்ளைக்காரன் விஷயம் என்ன என்றுதானே கேட்கி றீர்கள்? கொஞ்சம் இருங்கள். ஒரு வாய் வெற்றிலை போட்டுக்கொண்டு வந்துவிடுகிறேன். வெற்றிலை போடாமல் கதை சொல்வதாவது?

அப்போது பல்கலைக்கழகத்தில் நான் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தேன். வெளிநாடுகளில் இருந்து ஆய்வின் நிமித்தமும், தமிழ் படிக்கவும், வெள்ளைக்காரர்கள் நிறையப் பேர் வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுக்கும் பொறுப்பைத் துணைவேந்தர் (வாட் எ நேம்!) என்னிடம் ஒப்படைத்துவிடுவார்.

ஒருநாள். நல்ல வெயில். செக்கோஸ்லோவேகியாவில் இருந்து ஓர் இளைஞன் வந்து சேர்ந்தான். பால் வடியும் முகம். அப்படியே தக்காளிபோல் கன்றிப்போய் இருந்தது. துணைவேந்தரிடம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை.

“அவன் பெயர் யரசலாவ் பொர்மானெக். அவனுக்கு விடுதி வாழ்க்கை வேண்டாமாம். ஏதாவது ஒரு தமிழ்க் குடும்பத்துடன் வாடகை விருந்தாளியாகத் தங்கிக்கொள்ள விரும்புகிறான். பேசாமல் ஒரு பெரிய வீடாகப் பார்த்து, அவனை உன் வீட்டிலேயே தங்கவைத்துக்கொள்ளேன். ஒரு வருஷம்தானே…”

நான் தலையாட்டினேன். என் மனைவிக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. அய்யங் கடைத் தெரு அருகிலேயே ஒரு தனி வீடு கிடைத்தது. 500 ரூபாய் வாடகை. திண்ணை. திண்ணையை ஒட்டி ஒரு தனி அறை. பெரிய கூடம். இரண்டு படுக்கை அறைகள். ஸ்டோர் ரூம். பூஜை அறை. பின்புறம் கிணறு. திண்ணையை ஒட்டிய தனி அறையை பொர்மானெக் குக்கு ஒதுக்கிவிட்டோம்.

“ஒண்டிக்கட்டைதானே. அந்த ரூம் போதுங்க அவனுக்கு. அவன் 300 ரூபா கொடுக்கட்டும். நாம் 200 கொடுப்போம்” என்றாள் என் மனைவி.


“இது அநியாயம்” என்றேன். ஆனால், இதற்கு பொர்மானெக் மறு பேச்சு இன்றி ஒப்புக்கொண்டான். மீந்துபோன குழம்பு, சட்னி வகையறாக்கள், ஆறிய சாதம், கூட்டு எல்லாம் எடுத்துவைத்து பொர்மானெக் குக்குப் பரிமாறினாள்.

“எப்படி இருக்கு எங்கள் வீட்டுச் சமையல்?” என்று கேட்டாள் என் மனைவி. பொர்மானெக் படுகூர்மையானவன். என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி, “நான் ஒங்க வீட்டு தோத்தோ!” என்றானே பார்க்கலாம். என் மனைவி முகம் போன போக்கு!

பொர்மானெக்கின் அறை புத்தகங்களாலும் இசை ஆல்பங்களாலும் நிரம்பி வழிந்தது. அலுவலகத்தில் இருந்து வந்ததும் அவன் அறைக்குள் போய்விடுவான். அகநானூறு, புறநானூறு போன்ற பழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து பெண் களைப்பற்றிய குறிப்புகள் சேகரிப்பான்.

“காக்கை பாடினியார் ஆணா, பெண்ணா?” என்று கேட்டான் ஒருநாள். காக்கையாவது… பாடுவ தாவது? எனக்கு என்ன தெரியும்?

வாசல் பக்கம் ஜன்னலைச் சாத்தியே வைத்திருந்தான். “குழந்தைகள் மட்டுமல்லாமல் சில சமயம் பெரியவர்கள்கூட அதன் வழியே எட்டிப் பார்க்கிறார்கள். எனக்குச் சங்கோஜமாக இருக்கிறது” என்றான். பிறருடைய அந்தரங்கத்தைத் திருட்டுத்தனமாகப் பார்ப்பது எங்களுடைய பிறவிக் குணம் என்று அவனிடம் எப்படிச் சொல்வது?

பொர்மானெக் வந்துவிட்டால், திண்ணைகளில் உட்கார்ந்து இருக்கும் பெண்கள் பேச்சை நிறுத்தி விட்டு, அவனையே பார்த்துக் குசுகுசுவென்றுபேசிக் கொள்வார்கள். பொர்மானெக் யாரையும் ஏறிட்டுக்கூடப் பார்க்க மாட்டான். முகத்தில் நாணம் கலந்த சிரிப்புடன் தன் அறைக்குள் புகுந்து கொள்வான். அங்கே அவனுக்காக பழந்தமிழ்ப் பெண்டிர் கூட்டம் காத்திருக்கும்.

“பழங்காலத்துத் தமிழ்ப் பெண் ஒருத்தி முறத்தால் புலியை விரட்டினாளாமே… முறம் எப்படி இருக்கும்? அது பயங்கரமான ஆயுதமா?” என்று கேட்டான். முறத்தைக் கொண்டுவந்து காட்டினேன். ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டான்.

“அடடே! இதைவைத்துப் புலியை எப்படி விரட்டி இருப்பாள்?”

“விரட்டியது முறம் அல்ல; அவள் வீரம்!” என்றேன்.

என் மனைவிக்குத்தான் கோபம். “ஐயோ! அது அழுக்கு முறம் ஆச்சே. அதைக் கொண்டுபோய் அவனிடம் காட்டினீர்களாக்கும். என்னைப்பற்றி என்ன நினைப்பான்?”

பீத்தோவனின் இசை சிம்பொனியை பொர்மானெக் எனக்கு, அறிமுகப்படுத்திவைத்தான். தியாகய்யரின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது ஏற்படும் அதே பரவசம் எனக்கு பீத்தோவனிடமும் கிடைத்தது. பொர்மானெக்கின் அறை எனக்குப் பொழுதுபோக்கு மட்டுமின்றி, மனைவியிடம் இருந்து தப்பிக்கும் உபாயமாகவும் மாறியது.

“எப்பப் பார்த்தாலும் என்ன அவன் ரூமிலேயே பழியாக் கிடக்கறீங்க? மியூஸிக் வால்யூமைக் குறைச்சுவெக்கச் சொல்லுங்க. ஒரே இரைச்சல்!”

இசை என்னை வேறு ஓர் உலகுக்கு இழுத்துச் சென்றது. அந்த உலகத்தில் ரேஷன் கடை இல்லை. அலுவலகம் இல்லை. சின்னக் கவலைகள் இல்லை. மனைவி இல்லை. ஒரே சமயத்தில் ஆயிரம் வயலின்கள் உச்சத்தைத் தொட்டன. பொர்மானெக் ஆட ஆரம்பித்து விட்டான். நானும் ஆட ஆரம்பித்திருந்தேன்.

திடீரென்று கதவை யாரோ இடிக்கும் சத்தம். கோபத்துடன் திறந்தேன். என் மனைவியின் கண்களில் பொறி பறந்தது.

“மணி என்ன தெரியுமா?” – அவள்.

“தெரியவேண்டியது இல்லை!” – நான்.

“உங்களுக்கு வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் தூங்க வேண்டாமா? ராத்திரி ஒரு மணிக்கு இப்படி அவனோடு சேர்ந்துகொண்டு கூத்தடிக்கிறீர்களே. இது நியாயமா?”

சாதுவான நாய்க்குட்டி மாதிரி போய்ப் படுத்துக்கொண்டேன். பூட்டப்பட்ட அறைக்குள் இருந்து பூம் பூம் என்று இசையின் நீர்வீழ்ச்சி இடுக்கு வழியே கசிந்து வந்து என்னை நனைத்தது. என் மனைவிக்கு அவன் மீது எரிச்சல் அதிகமாகிக்கொண்டே வந்தது.

பொர்மானெக்குக்குப் புரிந்தது. ஆனால், ஏதோ பரீட்சைக்குப் படிப்பவன்போல் தமிழ்ப் புத்தகங்களை விழுந்து விழுந்து வாசித்துக்கொண்டு இருந்தான்.

“இவ்வளவு தூரம் கடல் கடந்து வந்து தமிழ் படிக் கறதுல உனக்கு என்ன பிரயோஜனம்?” என ஒருநாள் கேட்டேன்.

“உங்கள் நாட்டில்தான் படிப்புக்கும் வேலைக்கும் முடிச்சுப் போட்டுவைத்திருக்கிறீர்கள். எங்கள் ஊரில் மனசுக்குப் பிடிக்கிறதைப் படிப்போம். ஏதோ ஒரு வேலை. கொஞ்சம் பணம். கொஞ்சம் புத்தகம். நிறையப் பயணம். பணம் சேர்ந்ததும் மறுபடி ஊர் சுற்றக் கிளம்பிடுவோம்!”

ஒருநாள் சாயங்காலம். எங்கள் வீட்டில் எரிமலை வெடித்தது. “உங்க ஃப்ரெண்டால எனக்கு இன்னிக்கு மானம் போச்சு!” என்று குதித்தாள் என் மனைவி.

“என்னாச்சு சொல்லு?”

“பொர்மானெக் மத்தியானம் வீட்டுக்கு வரும்போது கூடவே ஒரு காதல் ஜோடியைக் கூட்டிக்கிட்டு வந்துட் டான். ரெண்டும் ஒண்ணோடு ஒண்ணா ஒட்டிக்கிட்டே வருதுங்க. அதுங்க ரெண்டும் நம்ம வீட்டுக்கு முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சு வாயைக் கவ்விட்டு அப்டியே… சீச்சீ… எவ்வளவு நேரம். சரிதான் விலகிடுச் சுங்கன்னு பார்த்தா, மறுபடியும் கட்டிப்பிடிச்சு… கண்றாவி. தெருவே வேடிக்கை பார்க்குது. வாயைப் பொத்திட்டுச் சிரிக்குதுங்க!”

“இலவசமா ஒரு சினிமா!” – நான் பாடினேன்.

“ஏங்க உங்களுக்கு வெட்கம், மானமே கிடையாதா?”

“பப்ளிக்ல சண்டை போடலாம். முத்தம் கொடுக்கக் கூடாதா? நாம வெளியில போகும்போது சில சமயம் நீ ரொம்ப அழகா இருப்பே. மஞ்சள் வெயில் காயும். எனக்கு உன்னை அப்படியே கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்கணும்னு தோணும்!”

“சீ! வெட்கம் கெட்ட மனுஷன்.”

நினைத்தபோது எல்லாம் பறவைகள் முத்தம் கொடுத் துக்கொள்வது இல்லையா? மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஹிப்பக்கிரஸி? முத்தத்தைப் பாலியல் சமா சாரத்தோடு முடிச்சுப் போடுவது முட்டாள்தனம் அல்லவோ? ஒருத்தரை ஒருத்தர் நேசிக்கும் ஆணும் பெண்ணும் தங்களைக் கௌரவித்துக்கொள்ளும் உயர்ந்த செயல் அல்லவா அது?

“என்ன யோசனை?” என்று கேட்டான் பொர்மானெக். நடந்ததைச் சொன்னேன்.

“முத்தம் என்பது ஒரு மொழி. அதை எங்கு பேசினால் என்ன?” என்றான் சுருக்கமாக.

“கோபால்! உடுக்கை எங்கே கிடைக்கும்?” – என்று கேட்டான் ஒருநாள் பொர்மானெக். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.

“என்னது… உடுக்கையா?”

“அதான்… உங்க சிவபெருமான் கையில் வைத்திருக்கிறாரே. அது அந்தக் கால இசைக் கருவியாம். நான் பார்க்க வேண்டும் அதை” அவன் கண்களில் ஆர்வம் பளபளத்தது.

“ரொம்பப் பழங்காலத்து இசைக் கருவி ஆச்சே அது. இப்ப கிடைப்பது கஷ்டம்” என்று மழுப்பி தட்டிக் கழித்துவிட்டேன்.

ஒரு வாரம் கழிந்திருக்கும். கூடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தேன்.

“கோபால்!” உற்சாகமாகக் கூவியபடியே உள்ளே நுழைந்தான் பொர்மானெக். நேராக நான் சாப்பிடும் இடத்துக்கே வந்துவிட்டான். என் மனைவி முகம் சுழித்தாள்.

“கோபால், இதோ பார்!” தன் கைப்பையில் இருந்து எதையோ வெளியே எடுத்தான்.

உடுக்கை. நிஜமான உடுக்கை!

“சாப்பிட்டுட்டு என் அறைக்கு வா.”

“கர்மம்! யாரோ பேய் விரட்டும் பூசாரிகிட்டேர்ந்து வாங்கி வந்திருப்பான்போல!” என்றாள் என் மனைவி.

நான் பொர்மானெக் அறைக்குள் நுழைந்தேன். அங்கே செக்கச் செவேல் என்று வெற்று உடம்போடு நின்றுகொண்டு இருந்தான் பொர்மானெக். இடுப்பில் புலித் தோல் மாதிரி வண்ணம் தீட்டிய துண்டு. காலில் சலங்கை. கையில் உடுக்கை.

ரெக்கார்ட் பிளேயரில் இருந்து பீத்தோவனின் அற்புதமான இசை பீறிடுகிறது.

“கோபால்! கவனி. எங்கள் இசையோடு உடுக்கை ஓசையும் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று சோதனை செய்யப் போகிறேன்.”

உடுக்கை ஒலித்தது. வயலின்கள் வீறிட்டன. கால் சலங்கை ஒலிக்க… பொர்மானெக் ஆடலானான். மெள்ள மெள்ள இசையின் ஸ்தாயி உயர உயர… அவன் ஆட்டத்தின் வேகம் கூடிக்கொண்டே போயிற்று. அவனுடைய தலைமுடி சுழன்றது. சிவனின் ஊழித் தாண்டவம்!

“தென்னாடுடைய சிவனே போற்றி!

என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!” கை கூப்பி வணங்கினேன்.

கதவு இடிபடும் ஓசை. திறந்தேன். பத்ரகாளியாக என் மனைவி. அவளுக்குப் பின்னால் எதிர் வீட்டு, பக்கத்து வீட்டு மனிதர்கள்.

“குழந்தைகள் பரீட்சைக்குப் படிக்கிறாங்க. இங்கே என்ன கூத்தடிக்கிறீங்க. ஒண்ணு இந்த வீட்டுல அவன் இருக்கணும். இல்லேன்னா நான் இருக்கணும். சார், நீங்கள்லாம் போங்க… நான் கவனிச்சுக்கிறேன்!”

அவர்கள் வெளியேறினார்கள். என்ன நடந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது. என்ன உலகமடா இது. தினசரி ராத்திரி குடித்துவிட்டு வந்து பெண்டாட்டியை உதை உதை என்று உதைக்கிறான் ஒருத்தன். இந்தத் தெருவில் ஒரு பயல் அவனைக் கேட்டது கிடையாது. நாங்கள் இசை கேட்பது இடைஞ்சலாகப் போய்விட்டதா?

பொர்மானெக் பிடிவாதம் பிடித்தான். விடுதி வேண்டாமாம். நல்ல வேளை. அரண்மனையின் ஒரு பகுதியில் சிதிலம் அடைந்த பழைய கட்டடத்தில் ஓர் அறை இருந்தது. அது மன்னர் பரம்பரையின் நிர்வாகத்தில் இருந்தது. கேட்டதும் கொடுத்துவிட்டார்கள். பகலில்கூட இருட்டாக இருந்த அந்த அறைக்குக் குடிபெயர்ந்தான் பொர்மானெக். உடைந்த பல்லக்குகள். நூலாம்படை தொங்கும் பழங் கால ஓவியங்கள் மாட்டிய சுவர்கள். அங்கே நிலவிய அமைதியில் காலம் நகராமல் நின்றுபோயிருந்தது.

“ஆஹா… பிரமாதம்!” என்றான் பொர்மானெக்.

அங்கே இருந்த வாட்ச்மேன் என் காதில் கிசுகிசுத்தான். “சார்! செத்துப்போன ராஜா, ராணிகளோட ஆவிங்க எல்லாம் இங்கேதான் அலையுது!” நான் பொர்மானெக்கைப் பார்க்கப் போவதைக் குறைத்துக் கொண்டேன்.

பொர்மானெக்கைப் பார்த்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. நானும் என் மனைவியும் ஷாப்பிங் போய்விட்டு கீழ ராஜ வீதியில் இருந்த டாக்டர் நரேந்திரன் கிளினிக் நோக்கிச் சென்றுகொண்டு இருந்தோம்.

போகிற வழியில் தஞ்சை பிரகாஷ் கடையில் ஒரே சிரிப்பு. கூத்து. சுந்தர்ஜி, முத்து, விச்சு, செல்லத்துரை, கவிஜீவன்… நடுநாயகமாக பொர்மானெக்.

எங்களைப் பார்த்து எழுந்து வந்தான்.

“எப்படி இருக்கீங்க?” – என் மனைவியைப் பார்த்து மழலைக் குரலில் கேட்டான்.

என் மனைவி அவனைப் பார்த்துச் சிநேகிதமாகச் சிரித்தாள்.

“நீங்க எப்படி இருக்கீங்க பொர்மானெக்? ஒருநாள் எங்க வீட்டுக்கு வாங்க!” என்றாள்.

அவள் கண்கள் கலங்கிவிட்டன.

பொர்மானெக்கின் விழிகள் வியப்பால் விரிந்தன. துரத்தாத குறையாக பொர்மானெக்கை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டு என்ன உருக்கம்!

என்னை நெருங்கிக் காது அருகே கிசுகிசுத்தான்.

“இந்திய மனைவிகள்பற்றிய ஆய்வுக்கு எனக்கு விஷயம் கிடைத்துவிட்டது!” 


-தஞ்சாவூர்க்கவிராயர்