Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Tuesday, November 22, 2022

ஜென்ம தினம் - வைக்கம் முகம்மது பஷீர்

ஜென்ம தினம் என்றொரு சிறுகதையை பஷீர் எழுதியிருக்கிறார், மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திய கதை. 

தமிழில்: குளச்சல் மு. யூசுப்

மகர1 மாதம் 8ஆம் தேதி. இன்று எனது பிறந்த நாள். வழக்கத்துக்கு மாறாக அதிகாலையிலேயே எழுந்து, குளிப்பது போன்ற காலைக் கடன்களை முடித்தேன். இன்று அணிவதற்காகவென்று ஒதுக்கிவைத்திருந்த வெள்ளைக் கதர்ச் சட்டையையும்  வெள்ளைக் கதர் வேட்டியையும் வெள்ளை கேன்வாஸ் ஷ¨வையும் அணிந்து எனது அறையில் சாய்வு நாற்காலியில் கொந்தளிக்கும் மனதுடன் மல்லாந்து படுத்திருந்தேன். என்னை அதிகாலையிலேயே பார்த்தது, பக்கத்தில் ஆடம்பரமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பி.ஏ. மாணவனாகிய மாத்யூவுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. அவன் புன்சிரிப்புடன் எனக்குக் காலை வணக்கம் தெரிவித்தான். 

ஹலோ, குட்மார்னிங்."

நான் சொன்னேன்:

"எஸ். குட்மார்னிங்."

மாத்யூ கேட்டான்:

"என்னா, இன்னைக்கு என்ன விசேஷம், காலையிலேயே? எங்கியாவது போகப்போறீங்களா?"

"சே . . . அதெல்லாம் ஒண்ணுமில்லெ." நான் சொன்னேன், "இன்னைக்கு என்னோட பிறந்த நாள்."

"யுவர் பர்த் டே?"

"எஸ்."

"ஓ . . . ஐ விஷ் யூ மெனி ஹாப்பி ரிட்டன்ஸ் ஆஃப் த டே."

"தாங்க் யூ."

மாத்யூ கையிலிருந்த பிரஷைக் கடித்துப் பிடித்தபடி குளியலறைக்குள் சென்றான். கட்டடத்திற்குள், ஆங்காங்கே கூச்சல்கள், ஆரவாரம், இடையிடையே சிருங்காரப் பாடல்கள். மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான். யாருக்கும் எந்த அல்லல்களுமில்லை. உல்லாசமான வாழ்க்கை. நான் ஒரு சிங்கிள் சாயா குடிக்க என்ன வழியென்று யோசித்துக்கொண்டிருந்தேன். மத்தியானச் சாப்பாட்டுக்கான மார்க்கம் உறுதிசெய்யப்பட்டுவிட்டது. நேற்று பஜார் வழியாகப் போகும்போது ஹமீது என்னை இன்று சாப்பிட வரச்சொல்லி அழைத்திருந்தான். இந்த ஆள், சிறு தோதுவிலான ஒரு கவிஞரும் பெரிய பணக்காரனுமாவார். இருந்தாலும் மத்தியானம்வரை சாயா குடிக்காமலிருக்க முடியாது. சூடான ஒரு சாயாவுக்கு என்ன வழி? மாத்யூவின் வயதான வேலைக்காரன் சாயா போடும் பணியில் சிரமத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விஷயத்தை நான் என் அறையிலிருந்தே கிரகித்தேன். அதற்கான காரணம், நான் தங்கியிருந்த அறை மாத்யூவின் சமையலறையின் ஸ்டோர் ரூம்தான். மாதம் ஒன்றுக்கு எட்டணா2 வாடகைக்குக் கட்டட உரிமையாளர் எனக்குத் தந்திருந்தார். அந்தக் கட்டடத்தின் மிகவும் மோசமானதும் சின்ன அறையும் இதுதான். இதற்குள், என் சாய்வு நாற்காலி, மேஜை, செல்ஃப், படுக்கை – இவ்வளவையும் வைத்தது போக சுவாசம் விடுவதற்கும் இடமில்லை. பெரிய மதில் கட்டினுள்ளிருக்கும் இந்த மூன்று கட்டடங்களின் மாடியிலும் கீழேயும் உள்ள எல்லா அறைகளிலும் மாணவர்களும் குமாஸ்தாக்களும்தான் தங்கியிருந்தார்கள். கட்டடத்தின் உரிமையாளருக்குக் கொஞ்சமும் பிடிக்காத ஒரேயரு நபர், நான் மட்டும்தான். என்னுடனான இந்த விருப்பமின்மைக்கு ஒரே ஒரு காரணம், நான் சரியான வாடகை கொடுப்பதில்லை, அவ்வளவுதான். என்னைப் பிடிக்காத வேறு இரண்டு பிரிவினரும் இங்கே இருக்கிறார்கள், ஓட்டல்காரனும் அரசாங்கமும். ஓட்டல்காரனுக்கு நான் கொஞ்சம் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது. அரசாங்கத்திற்கு அப்படியான பாக்கி எதுவுமில்லை. இருந்தாலும் என்னைப் பிடிக்கவே பிடிக்காது. அப்படி உணவு, உறைவிடம், தேசம் . . . மூன்றிலும் பிரச்சினைகள் இருந்தன. அடுத்த பிரச்சினைகள்: என் உடைகள், ஷ¨, விளக்கு. (விஷயங்களை எல்லாம் எழுதுவதற்கு முன் ஒன்றை மட்டும் தெளிவுபடுத்த வேண்டியதிருக்கிறது. இப்போது நடுஜாமம் கடந்துவிட்டது. காகிதத்தையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே வந்து நீண்ட நேரமாக இந்த நகரத்திலேயே சுற்றித் திரிந்துகொண்டிருக்கிறேன். வேறு விசேஷமான எந்தக் காரணமோ, நோக்கமோ இல்லை. இந்த ஒரு நாளைய நாட்குறிப்பை ஆரம்பம் முதல் இறுதிவரை எழுத வேண்டும். சுமாரான அளவில் ஒரு சிறுகதைக்கான வாய்ப்புகள் இதில் உண்டு. ஆனால், என் அறையிலிருக்கும் விளக்கில் எண்ணெய் இல்லை. நிறைய எழுத வேண்டியதுமிருக்கிறது. ஆகவே தூக்கப் பாயிலிருந்து எழுந்துவந்து இந்த நதியோரத்தின் விளக்குத் தூணில் சாய்ந்தமர்ந்து சம்பவங்களின் சூடு ஆறிப்போவதற்குள் எழுதத் தொடங்கினேன்.) சூல் கொண்ட கார்மேகங்கள் போல், இந்நாளில் சம்பவங்கள் எல்லாம் என் அக மனத்தை வெடிக்கச் செய்துவிடுவதுபோல் நெருக்கியடித்து நிற்கின்றன. பெரிய அளவில் ஒன்றுமில்லைதான். ஆனால், இன்று எனது பிறந்த நாள். நான் சொந்த ஊரிலிருந்து நீண்ட தூரத்தில், அன்னிய தேசத்திலிருக்கிறேன். கையில் காசில்லை. கடன் கிடைப்பதற்கான வழிகளுமில்லை. உடுத்திருப்பதும் மற்றுள்ளவைகளுமெல்லாம் நண்பர்களுடையவை. எனக்கானவை என்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை. இந்த நிலைமையிலான ஒரு பிறந்த நாள் மீண்டும் மீண்டும் வரவேண்டுமென்று மாத்யூ வாழ்த்தியபோது என் மனதிற்குள் ஏதோ ஒரு அகக்குருத்து வலித்தது.

நினைத்துப் பார்த்தேன்.

மணி ஏழு: நான் சாய்வு நாற்காலியில் படுத்தபடியே நினைத்துக்கொண்டேன். இந்த ஒரு நாளையாவது களங்கமேதுமில்லாமல் பாதுகாக்க வேண்டும். யாரிடமிருந்தும் இன்று கடன் வாங்கக் கூடாது. எந்தப் பிரச்சினைக்கும் இன்று இடந்தரக் கூடாது. இன்றைய தினம் மங்களகரமாகவே முடிய வேண்டும். கடந்து போன நாட்களின் கறுப்பும் வெள்ளையுமான சங்கிலித் தொடர் களில் இருக்கும் அந்தப் பல நூறு நான்களாக இருக்கக் கூடாது, இன்றைய தினத்தின் நான். இன்று எனக்கு என்ன வயது? சென்ற வருடத்தைவிட ஒரு வயது அதிகமாகி இருக்கிறது. சென்ற வருடத்தில் . . .? இருபத்தாறு. இல்லை முப்பத்தி இரண்டு, ஒருவேளை நாற்பத்தி ஏழோ?

என் மனதில் தாங்க முடியாத வேதனை. எழுந்து சென்று முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பார்த்தேன். மோசமில்லை. சுமாரான, பரவாயில்லாத முகம். நல்ல அகன்ற முழுமையான நெற்றி. அசைவற்ற கண்கள். வளைந்த, வாள் போன்ற மெல்லிய மீசை. மொத்தத்தில் குறை சொல்ல முடியாது – என்றெல்லாம் யோசித்துக்கொண்டே நிற்கும்போது ஒரு காட்சி கண்ணில் பட்டது. மனதில் கடினமான வலியேற்பட்டது. ஒரு நரைமுடி. என் காதின் மேல் பாகத்தில் கறுத்த முடிகளினூடே ஒரு வெளுத்த அடையாளம். நான் மிகுந்த சிரமத்துடன் அதைப் பிடுங்கியெறிந்தேன். பிறகு தலையைத் தடவிக்கொண்டிருந்தேன். பின்புறம் நல்ல பளபளப்பு. கசண்டி4தான். தடவிக்கொண்டிருக்கும்போது தலை வலிப்பதுபோன்ற சிறு உணர்வு ஏற்பட்டது. சூடு சாயா குடிக்காததால் இருக்குமோ?

மணி ஒன்பது: என்னைக் கண்டதுமே ஓட்டல்காரன் முகத்தைக் கறுவிக்கொண்டு உள்ளே போய்விட்டான். சாயா போடும் அந்த அழுக்குப் பிடித்த பையன் பாக்கியைக் கேட்டான்.

நான் சொன்னேன்:

"சரி . . . அதெ நாளைக்குத் தந்திடுறேன்."

அவனுக்கு நம்பிக்கை வரவில்லை.

"நேற்றைக்கும் இதத்தானே சொன்னீங்க."

"நான் இன்னைக்குக் கெடெச் சுடும்னு நெனச்சிருந்தேன்."

"பழைய பாக்கியெத் தராம உங்களுக்கு சாயா கொடுக்க வேண்டாம்னு மொதலாளி சொல்லிட்டார்."

"செரி."

மணி பத்து: காய்ந்து சுருங்கிப்போய்விட்டேன். வாயில் உமிழ் நீர் சுரக்கவில்லை. மத்தியான நேரத்தின் கடும் வெப்பம். சோர்வின் பெரும் பாரம் என்மீது கவியத் தொடங்கிவிட்டது. அப்போது புதிய மிதியடி விற்பதற்காக வெளுத்து, மெலிந்த எட்டும் பத்தும் வயதுள்ள இரண்டு கிறிஸ்தவப் பையன்மார் என் அறை வாசலுக்கு வந்தார்கள். நான் இரண்டு மிதியடிகள் வாங்க வேண்டுமாம். ஜோடி ஒன்றுக்கு மூன்று அணாதான் விலையாம். மூன்று அணா.

"வேணாம், குழந்தைகளே."

"சாரைப்போல உள்ளவங்க வாங்கலேன்னா வேற யார் சார் வாங்குவாங்க?"

"எனக்கு வேணாம், குழந்தைகளே . . . எங்கிட்டே காசு இல்லெ."

"செரி." நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய சிறு முகங்கள். எதையும் உட்புகுந்து அறிந்துகொள்ளவியலாத சுத்த இதயங்கள். இந்த வேஷமும் சாய்வு நாற்காலியில் கிடக்கும் இந்தத் தோரணையும். நான் ஒரு சாராம் . . .! சாய்வு நாற்காலியும் சட்டையும் வேட்டியும் ஷ¨வும். எதுவும் என்னுடையதல்ல குழந்தைகளே. எனக்கென்று இந்த உலகத்தில் சொந்தமாக எதுவுமே இல்லை. வெறும் நிர்வாணமான இந்த நான்கூட என்னுடையதுதானா? பாரதத்தின் ஒவ்வொரு நகரங்களிலும் எத்தனையெத்தனை ஆண்டு காலங்கள் சுற்றித் திரிந்து ஏதேதோ ஜாதி மக்களுடன் எங்கெங்கெல்லாமோ தங்கியிருக்கிறேன். யாருடைய ஆகாரங்கள் எல்லாம் சேர்ந்தது இந்த நான். எனது இரத்தமும் எனது மாமிசமும் எனது எலும்பும் இந்த பாரதத்திற்குரியது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் கராச்சி4 முதல் கல்கத்தா வரையிலும் – அப்படி பாரதத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். பெண்களும் ஆண்களுமான அந்த அத்தனை நண்பர்களையும் நான் இன்று நினைவுகூர்கிறேன். நினைவு . . . ஒவ்வொருவரையும் தழுவியபடியே என் அன்பு அப்படியே வியாபித்துப் பறக்கட்டும். பாரதத்தைக் கடந்தும் . . . உலகைக் கடந்தும் . . . சுகந்தம் வீசும் வெண்நிலவுபோல் . . . அன்பு, என்னையறிந்து அன்பு காட்டுபவர்கள் யாராவது இருக்கிறார்களா? அறிதல், எனக்குத் தோன்றுவது . . . ரகசியங்களின். . . அந்தத் திரையை விலக்குவதுதான். குறைகளையும் பலவீனங்களையும் களைந்து பார்த்தால் என்ன மிச்சமிருக்கப் போகிறது? வசீகரமான ஏதாவது ஒன்று மனிதனுக்குத் தேவைப்படுகிறது. அன்புகாட்டவும் அன்புகாட்டப்படவும். ஹோ . . . காலந்தான் எத்தனை துரிதமாக இயங்குகிறது. தகப்பனின் சுட்டு விரலை இறுகப் பற்றிக் கொஞ்சி விளையாடித் திரிந்த நான் "உம்மா பசிக்குது" என்று தாயின் உடுமுண்டின் தலைப்பை இழுத்துக் கேட்ட நான், இன்று? ஹோ, காலத்தின் உக்கிரமான பாய்ச்சல். சித்தாந்தங்களின் எத்தனையெத்தனை வெடிகுண்டுகள் என் அகத்தளங்களில் விழுந்து வெடித்துச் சிதறியிருக்கின்றன. பயங்கரமான போர்க்களமாக இருந்தது என் மனது. இன்று நான் யார்? புரட்சிக்காரன், ராஜத் துரோகி, இறை எதிரி, கம்யூனிஸ்ட் – மற்றும் என்னவெல்லாமோ. உண்மையில் இதில் ஏதாவது ஒன்றா நான்? ஹ§ம். என்னென்ன மனச் சஞ்சலங்கள். தெய்வமே? மூளைக்குள் சுள்சுள்ளென்று குத்துகிறது. சாயா குடிக்காததாலிருக்குமோ? தலை நேராக நிற்கவில்லை. போய், சாப்பிட்டுவிட வேண்டியதுதான். இந்தத் தலைவேதனையுடன் ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். இருந்தாலும் வயிறு நிறையச் சாப்பிடலாமல்லவா?

மணி பதினொன்று: ஹமீது கடையில் இல்லை. வீட்டிலிருப்பாரோ? என்னையும் அவர் கூடவே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். அதுதான் முறை. ஒருவேளை, மறந்து போயிருக்கலாம். வீட்டுக்கே போய்விடலாமா? சரி.

மணி பதினொன்றரை: ஹமீதின் மாடி வீட்டின் கீழ் இரும்புக் கதவு அடைக்கப்பட்டிருந்தது. நான் அதைத் தட்டினேன்.

"மிஸ்டர் ஹமீது."

பதில் இல்லை.

"மிஸ்டர் ஹமீ. . .து."

மிகுந்த கோபத்துடனிருந்த ஒரு பெண்ணின் உரத்த குரல் மட்டும்.

"இங்கெ இல்லை."

"எங்கே போயிருக்காரு?"

மௌனம். நான் திரும்பவும் கதவைத் தட்டினேன். மனம் மிகுந்த சோர்வடைந்தது. திரும்பி நடக்கப் போகும்போது பக்கத்தில் யாரோ வருவது போன்ற காலடிச் சத்தம். கூடவே வளை கிலுக்கமும். வாசல் கதவு இலேசாகத் திறந்தது – ஒரு இளவயதுப் பெண்.

நான் கேட்டேன்: "ஹமீது எங்கே போயிருக்காரு?"

"அவசரமா ஒரு எடத்துக்கு." மிகுந்த பொறுமையுடன்தான் பதில்.

"எப்போ வருவாரு?"

"சாயுங்காலத்துக்குப் பிறகு ஆயிடும்."

சாயுங்காலத்துப் பிறகு?

"வந்தா நான் வந்து தேடுனதாகச் சொல்லுங்க."

"நீங்க யாரு?"

நான் யார்?

"நான் . . . ஓ . . . யாருமில்லெ. எதுவும் சொல்ல வேண்டாம்."

நான் திரும்பி நடந்தேன். அனல் தகிக்கும், கால் புதையும் வெள்ளை மணல் பரப்பு. அதைத் தாண்டினால் கண்ணாடிச் சில்லுபோல் பளபளக்கும் கால்வாய். கண்களும் மூளையும் இருண்டு போயின. மிகுந்த மன அங்கலாய்ப்பு. எலும்புகள் சூடேறிக்கொண்டிருந்தன. தாகம், பசி, ஆவேசம். உலகத்தையே விழுங்கிவைக்கும் ஆவேசம். கிடைப்பதற்கான வழியில்லையென்பதுதான் ஆவேசம் அதிகரிப்பதற்கான காரணம். கிடைப்பதற்கான உத்தரவாதமேதுமற்ற நிலையில் எண்ணற்ற பகல் இரவுகள் என் முன். நான் தளர்ந்து விழுந்துவிடுவேனா? தளர்ந்து போய்விடக் கூடாது. நடக்க வேண்டும் . . . நடக்க வேண்டும்.

மணி பன்னிரண்டரை: பரிச்சயமானவர்கள் அனைவரும் பார்த்ததாகவே காட்டிக்கொள்ளாமல் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். "தோழர்களே, இன்று எனது பிறந்த நாள். எனக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டுப் போங்கள்" என்று என் மனம் உச்சரித்தது. நிழல் தடங்கள் என்னைத் தாண்டிப் போய்க்கொண்டிருந்தன. நண்பர்கள் ஏன் என்னைக் கண்டு பேசாமல் போகிறார்கள்? அது சரி!

என் பின்னால் ஒரு சி.ஐ.டி.

மணி ஒன்று: ஒரு காலத்தில் பத்திரிகை அதிபரும் இப்போது வியாபாரியாகவுமிருக்கும் மி.பியைப் பார்க்கச் சென்றேன். கண்பார்வை தெளிவுடன் இல்லை. பதற்றமாக இருந்தது.

பி, கேட்டார். "புரட்சிகளெல்லாம் எந்த இடம்வரை வந்திருக்கு?"

நான் சொன்னேன்: "பக்கத்துலெ வந்துட்டு."

"ம்ஹ§ம்! எங்கிருந்து வாறீங்க? பார்த்தே கொஞ்ச காலம் ஆயிட்டுதே?"

"ஹா . . ."

"அப்புறம், என்ன விசேஷம்?"

"சே . . . ஒண்ணுமில்லெ. சும்மா."

நான் அவரது பக்கத்திலிருந்த செயரில் அமர்ந்தேன். எனது கட்டுரைகளில் பலவற்றை நான் அவரது பெயரில் எழுதிப் பிரசுரம் செய்திருந்தேன். பண்டைப் பெருமை பேசுவதற்காக அவர் அந்தப் பழைய பத்திரிகைகளை அட்டையிட்டுவைத்திருந்தார். நான் அதையெடுத்துத் தலைச்சுற்றலோடு அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன். "எனக்குச் சூடா ஒரு சாயா வேணும். நான் ரொம்பத் தளந்து போயிருக்கேன்" என்று என் மனம் வேகமாகச் சொல்லிக்கொண்டிருந்தது. பி, ஏன் என்னிடம் எதுவுமே கேட்காமலிருக்கிறார்? நான் சோர்ந்து போயிருப்பதை அவர் கவனிக்கவில்லையா? அவர் கல்லாப் பெட்டியின் பக்கத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். நான் மௌனமாகத் தெருவைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். துண்டு தோசைக்காக இரண்டு தெருக்குழந்தைகள் சண்டையிடுகிறார்கள். "ஒரு சூடு சாயா." நான் கேட்கவில்லை. என் சர்வ நாடிகளும் இரந்துகொண்டிருந்தன. பி, பெட்டியைத் திறந்து நோட்டுகளின், சில்லறைகளினிடையிலிருந்து ஒரு அணாவை எடுத்து ஒரு பையனிடம் கொடுத்தார்.

"சாயா கொண்டு வாடா."

பையன் ஓடிச் சென்றான். என் மனம் குளிர்ந்தது. எவ்வளவு நல்ல மனிதன் . . . பையன் கொண்டுவந்த சாயாவை பி. வாங்கிவிட்டு என்னைப் பார்த்துத் திரும்பினார்.

"உங்களுக்குச் சாயா வேணுமா?"

நான் சொன்னேன், "வேண்டாம்."

ஷ¨வின் லேசை இறுக்குவது போன்ற பாவனையுடன் குனிந்து கொண்டேன். முகத்தை அவர் பார்த்துவிடக் கூடாது. என் மன விகாரத்தை அது காட்டிக் கொடுத்துவிடக் கூடும்.

பி, வருத்தத்துடன் சொன்னார், "உங்களோட புத்தகங்கள் எதையும் எனக்குத் தரலியே?"

நான் சொன்னேன்: "தர்றேன்."

"அதெப் பற்றியதான பத்திரிகை விமர்சனங்கள் எல்லாத்தையும் நான் வாசிப்பதுண்டு."

நான் சொன்னேன்: "நல்ல விஷயம்."

சொல்லிவிட்டுக் கொஞ்சம் சிரித்துவிட முயற்சி செய்தேன். மனத்தில் பிரகாசம் வற்றிப்போன முகம், எப்படிச் சிரிக்கும்?

நான் விடைபெற்றுத் தெருவிலிறங்கி நடந்தேன்.

என் பின்னால் அந்த சி.ஐ.டி.

மணி இரண்டு: நான் தளர்ந்து, மிகவும் சோர்ந்துபோய் அறையில் நாற்காலியில் சாய்ந்து கிடந்தேன். நல்ல ஆடைகள் உடுத்தி, வாசனைத் திரவியம் பூசிய ஏதோ ஒரு பெண் எனது அறை வாசலில் வந்தாள். எங்கோ தொலைதூரத்திலுள்ளவள். தண்ணீர் பிரளயத்தால் நாடே அழிந்துபோய்விட்டது; ஏதாவது உதவிசெய்ய வேண்டும். மெல்லிய புன்சிரிப்புடன் அவள் என்னைப் பார்த்தாள். மார்பகங்களை வாசல் கதவின் சட்டத்தில் இறுக அமர்த்தியபடியே பார்த்தாள். என் மனதிற்குள்ளிருந்து சூடான விகாரம் எழுந்தது. அது படர்ந்து நாடி நரம்புகளெங்கும் பரவியது. என் இதயம் அடித்துக் கொள்வது எனக்குக் கேட்பதுபோல் தோன்றியது. பயங்கரமும் சிக்கலும் மிகுந்தது அந்த நிமிடம்.

"சகோதரி, எங்கிட்டே எதுவுமே இல்லை. நீங்க வேறெ எங்கயாவது போய்க் கேளுங்க – எங்கிட்டே எதுவுமே இல்லை."

"எதுவுமே இல்லியா?"

"இல்லே."

அதன் பிறகும் அவள் போகாமல் நின்றாள். நான் சத்தமாகச் சொன்னேன்.

"போயிரு, ஒண்ணுமில்லே."

"சரி." அவள் வருத்தத்தோடு குலுங்கி அசைந்து நடந்து போனாள். அப்போதும் அவளிடமிருந்து பரிமள வாசம் வந்துகொண்டிருந்தது.

மணி மூன்று: யாரிடமிருந்தாவது கடன் வாங்கினால் என்ன? பயங்கரமான சோர்வு. மிகவும் இயலாத ஒரு கட்டம். யாரிடம் கேட்பது? பல பெயர்கள் நினைவுக்கு வந்தன. ஆனால், கடன் வாங்குவது நட்பின் அந்தஸ்தைக் குறையச் செய்கிற ஒரு ஏற்பாடு. செத்துவிடலாமா என்று யோசனை செய்தேன். எப்படியான சாவாக இருக்க வேண்டும்?

மணி மூன்றரை: நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது. கொஞ்சமும் முடியவில்லை. குளிர்ந்த நீரில் அப்படியே மூழ்கிக் கிடந்தால். உடல் முழுவதையும் கொஞ்சம் குளிரவைத்தால். அப்படியே படுத்திருக்கும்போது சில பத்திரிகை அதிபர்களின் கடிதங்கள் வந்தன. கதைகளை உடனே அனுப்பிவைக்க வேண்டும். திருப்பியனுப்பும் வசதியுடன். கடிதங்களை அப்படியே போட்டுவிட்டு நான் இயலாமல் படுத்திருந்தேன். வங்கிக் குமாஸ்தா கிருஷ்ணபிள்ளையின் வேலைக்காரப் பையன் ஒரு தீக்குச்சிக் கேட்டு வந்தான். அவனிடம் சொல்லி ஒரு தம்ளர் தண்ணீர் கொண்டுவரச்செய்து குடித்தேன்.

"சாருக்கு உடம்புக்குச் சொகமில்லையா?" பதினொரு வயதான அந்தப் பையனுக்குச் சோர்வுக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

நான் சொன்னேன், "சுகக்கேடு எதுவுமில்லை."

"பெறகு . . .? சார், சாப்பிடலியா?"

"இல்லெ ."

"அய்யோ, ஏன் சாப்பிடலெ?"

அந்தச் சிறுமுகமும் கறுத்த கண்களும் உடுத்திருக்கும் கரிபுரண்ட ஒரு துண்டும்.

அவன் அதிர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்தான்.

நான் கண்களை மூடிக்கொண்டேன்.

அவன் மெதுவாகக் கூப்பிட்டான்.

"சாரே."

"உம்?"

நான் கண்களைத் திறந்தேன்.

அவன் சொன்னான்: "எங்கிட்டே ரெண்டணா இருக்கு."

"செரி?"

"நான் அடுத்த மாசம் வீட்டுக்குப் போவும்போது சார் தந்தாப் போதும்."

என் மனம் வெதும்பியது. அல்லாஹ§ . . .

"கொண்டு வா."

முழுசாக இதைக் காதில் வாங்குவதற்கு முன் அவன் ஓடினான்.

அப்போது, தோழர் கங்காதரன் வந்தார். வெள்ளைக் கதர் வேட்டி, வெள்ளைக் கதர் ஜிப்பா, அதன்மீது நீளச் சால்வை போர்த்தியிருந்தார். . . கறுத்து, நீண்ட முகமும் விஷய பாவமுள்ள பார்வையும்.

சாய்வு நாற்காலியில் நான் மிடுக்காகப் படுத்திருப்பதைக் கண்டதும் அந்தத் தலைவன் கேட்டான்: "நீ ஒரு பெரிய பூர்ஷ§வா ஆயிட்டே போலிருக்கு?"

எனக்குத் தலைச்சுற்றல் இருந்துகொண்டிருந்தாலும் சிரிப்பு வந்தது. தலைவனின் உடைகளின் உரிமையாளர்யாராக இருக்குமென்ற யோசனை என்னுள் உதித்தது. எனக்குப் பரிச்சயமுள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளின் உருவமும் என் கற்பனையில் ஓடியது. இழப்பதற்கு என்ன இருக்கிறது?

கங்காதரன் கேட்டான்: "நீ எதுக்குச் சிரிக்கிறே?"

நான் சொன்னேன்: "ஒண்ணுமில்லை மக்களே, நம்ம இந்த வேஷங்களை நினைச்சதும் சிரிப்பு வந்தது."

"உன் பரிகாசத்தை விட்டுட்டு விஷயத்தைக் கேளு. பெரிய பிரச்சினை நடந்துட்டிருக்கு. லத்தி சார்ஜும் டீயர்கேசும் துப்பாக்கிச் சூடும் நடக்கும் போலிருக்கு. பத்து மூவாயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருக்காங்க. ஒண்ணரை வாரமாக அவங்க பட்டினி கிடக்கிறாங்க. பெரிய கலவரம் ஏற்படலாம். மனுசன் பட்டினி கிடந்தா என்ன நடக்கும்?"

"இந்த விவரங்கள் எதையும் நான் பத்திரிகைகள்லே வாசிக்கலியே?"

"பத்திரிகைகள்லே போடக் கூடாதுன்னு எச்சரிக்கை விடப்பட்டிருக்கு."

"அது செரி. நான் இப்போ என்ன செய்யணும்?"

"அவங்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்திருக்காங்க. நான்தான் தலைமை. நான் அங்கே போய்ச் சேர, படகுக் கூலி ஓரணா வேணும். அப்புறம், இன்னைக்கு நான் எதுவும் சாப்பிடவுமில்லை. நீயும் கூட்டத்துக்கு வா."

"மக்களே, எல்லாமே செரிதான். ஆனா, எங்கிட்டெ காசெதுவும் இல்லே. கொஞ்ச நாளாயிட்டுது, நானும் ஏதாவது சாப்பிட்டு. நேரம் வெளுத்த பெறகு இதுவரை நானும் ஒண்ணுமே சாப்பிடல்லை. போதாத குறைக்கு இன்னைக்கு என்னோட பிறந்த நாள் வேறே."

"பிறந்த நாளா? நமக்கெல்லாம் ஏது பிறந்த நாள்?"

"பிரபஞ்சத்திலெ உள்ள எல்லாவற்றுக்குமே பிறந்த நாள்னு ஒண்ணு இருக்கு."

அப்படியாக, பேச்சு பல திசைகளிலும் சென்றது. கங்காதரன் தொழிலாளர்களைப் பற்றியும் அரசியல்வாதிகளைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் பேசினான். நான் வாழ்க்கையைப் பற்றியும் பத்திரிகை அதிபர்களைப் பற்றியும் இலக்கியவாதிகளைப் பற்றியும் பேசினேன். அதற்கிடையில் பையன் வந்தான். அவனிடமிருந்து நான் ஒரு அணாவை வாங்கினேன். பாக்கி ஒரு அணாவுக்குச் சாயாவும் பீடியும் தோசையும் கொண்டு வரச் சொன்னேன். சாயா காலணா. தோசை அரையணா. பீடி காலணா.

தோசையை பார்சல் செய்திருந்த அமெரிக்கப் பத்திரிகைக் காகிதத்துண்டில் ஒரு படமிருந்தது. அது என்னை ரொம்பவும் கவர்ந்தது. நானும் கங்காதரனும் தோசை தின்றோம். ஒவ்வொரு தம்ளர் தண்ணீரும் குடித்துவிட்டுக் கூடவே ஆளுக்குக் கொஞ்சம் சாயா. பிறகு ஒரு பீடியைப் பற்றவைத்துப் புகை விட்டபடியே கங்காதரனிடம் ஒரு அணாவைக் கொடுத்தேன். போகும்போது கங்காதரன் விளையாட்டாகக் கேட்டான்: "இன்னைக்கு உன் பிறந்த நாளில்லியா? நீ இந்த உலகத்துக்கு ஏதாவது செய்தி சொல்ல விரும்புறியா?"

நான் சொன்னேன்: "ஆமா, மக்களே. புரட்சி சம்பந்தமான ஒரு செய்தி."

"சொல்லு, கேட்போம்."

"புரட்சியின் அக்னி ஜுவாலைகள் படர்ந்து உலகெங்கும் கொளுந்துவிட்டெரியட்டும். இன்றைய சமூக அமைப்புகள் அனைத்துமே எரிந்து சாம்பலாகி, பூரணமான மகிழ்ச்சியும் அழகும் சமத்துவமும் நிரம்பிய புது உலகம் அமையட்டும்."

"பேஷ். நான் இன்னைக்கு இதைத் தொழிலாளர் கூட்டத்திலெ சொல்லிர்றேன்." என்று சொல்லிவிட்டுக் கங்காதரன் வேகமாக இறங்கிச் சென்றான். நான் ஒவ்வொரு அரசியல்வாதிகளைப் பற்றியும் ஒவ்வொரு எழுத்தாளர்களைப் பற்றியும் எல்லா வகையான ஆண் பெண்களைப் பற்றியும் சிந்திக்கத் தொடங்கினேன். இவர்களெல்லாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? தோசை பொதிந்துவந்த அந்தக் காகிதத் துண்டைப் படுத்திருந்தபடியே எடுத்தேன். அப்போது வாசலைக் கடந்து, முகத்தை இறுக்கிப் பிடித்து, வீட்டின் உரிமையாளர் வருவதைக் கண்டேன். இவரிடம் இன்று என்ன பதில் சொல்லலாம் என்று நினைத்தவாறே காகிதத்தைப் பார்த்தேன். வானத்தை முத்தமிட்டு நிற்கும் உயர்ந்த மணிக்கூண்டுகள் நிறைந்த பெரு நகரம். அதன் நடுவே, தலை உயர்த்தி நிற்கும் ஒரு மனிதன். இரும்புச் சங்கிலிகளால் அவன் வரிந்து கட்டப்பட்டுப் பூமியோடு பிணைக்கப்பட்டிருந்தான். ஆனாலும், அவனது பார்வை சங்கிலியிலோ பூமியிலோ அல்ல. தொலைவில், பிரபஞ்சங்களுக்குமப்பால், முடிவற்ற நெடுந்தொலைவில், ஒளிக்கதிர் விதைக்கும் மாபெரும் ஒளியான அந்தக் குவிமையத்தில். அவனது கால்களின் அருகில் ஒரு திறந்த புத்தகமிருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலுமாக அந்த மனிதனுடையது மட்டுமல்ல, எல்லா மனிதர்களுடையதுமான வரலாறு. அதாவது: ‘விலங்குகளால் மண்ணோடு சேர்த்துப் பிணைக்கப்பட்டி ருந்தாலும் அவன் காண்பது, காலங்களைக் கடந்த, அதி மனோகரமான மற்றொரு நாளை.’

"நாளை . . . அது எங்கே இருக்கிறது?"

"என்னா, மிஸ்டர்?" வீட்டுக்காரரின் எகத்தாளமான கேள்வி. "இன்னைக்காவது தந்துருவீங்களா?"

நான் சொன்னேன், "பணமெதுவும் கையிலெ வந்து சேரல்லெ. அடுத்த ஒண்ணுரெண்டு நாள்லெ தந்திடறேன்." ஆனால், இனி அவர் தவணையை ஏற்றுக் கொள்வதுபோல் தெரியவில்லை.

"இப்படியெல்லாம் எதுக்கு வாழணும்?" அவரது கேள்வி. நியாயமான விஷயம். இப்படியெல்லாம் எதுக்கு வாழணும்? நான் இந்தக் கட்டடத்தில் வந்து மூன்று வருடம் ஆகப் போகிறது. மூணு சமையலறைகளை நான்தான் சரியாக்கிக் கொடுத்தேன். அதற்கு இப்போது நல்ல வாடகை கிடைக்கிறது. இந்த நான்காவது ஸ்டோர் ரூமையும் மனிதன் வாழ்வதுபோல் நான் ஆக்கிக் கொடுத்த பிறகு அதிக வாடகைக்கு இதை எடுக்க வேறு ஆள் இருக்கிறதாம். அந்த வாடகையை நானே தந்து விடுகிறேன் என்று ஒத்துக்கொண்டாலும் போதாது – காலிசெய்து கொடுத்துவிட வேண்டுமாம்.

இல்லெ. முடியாது. காலிசெய்ய விருப்பமில்லெ. என்னவேணா செய்துக்கிடுங்க.

மணி நான்கு: எனக்கு இந்த ஊரே அலுத்துப்போய்விட்டது. என்னைக் கவர்வதற்கான எதுவுமே இந்த நகரில் இல்லை. தினமும் சஞ்சரிக்கும் ரோடுகள். நித்தமும் பார்க்கும் கடைகளும் முகங்களும். பார்த்தவைகளையே பார்க்க வேண்டும். கேட்டதையே கேட்க வேண்டும். பயங்கரமான மன அலுப்பு . . . எதுவுமே எழுதவும் தோன்றவில்லை. இல்லையென்றாலும் எழுதுவதற்குத் தான் என்ன இருக்கிறது?

மணி ஆறு: மகிழ்ச்சியான மாலைப் பொழுது. கடல் விழுங்கிக்கொண்டிருக்கும், வட்ட வடிவமாக ஜொலிக்கும், இரத்த நிற அஸ்தமன சூரியன். பொன்னிற மேகங்கள் நிறைந்த மேற்கு அடிவானம். கரை காண முடியாத பெருங்கடல். அருகே, சிற்றலைகளைப் பரப்பும் கால்வாயின் ஓரத்தில் கரைபுரண்டோடியது மகிழ்ச்சி. ஆடையலங்காரங்களுடன் சிகரெட் புகைத்தபடி சஞ்சரிக்கும் இளைஞர்கள். துடிக்கும் கண்களுடன் வண்ணச் சேலைகளைக் காற்றில் அலையவிட்டுப் புன்னகை தூவும் முகங்களுடன் உலாவும் இளம் பெண்கள். காதல் நாடகங்களின் பின்னணிக் காட்சிபோல், மனதைக் குளிர்விக்கும் பூங்காவனத்தில் வானொலிப் பாடல்களும், இடையே மலர்களைத் தழுவி வாசனைகளுடன் கடந்து செல்லும் இளங் காற்றும் . . . ஆனால், நான் தளர்ந்து விழுந்துவிடுவேன் போலிருக்கிறது.

மணி ஏழு: ஒரு போலீஸ்காரர் நான் தங்கியிருந்த இடத்திற்கு வந்து இன்றும் என்னைக் கூட்டிக்கொண்டு போனார். கண்களைக் கூச வைக்கும் பெட்ரோமாக்ஸ் விளக்கினெதிரில் என்னை உட்காரவைத்தார். கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது என் முகத்தில் தென்படும் பாவமாற்றங்களை நுட்பமாகக் கவனித்தவாறே கைகளைப் பின்புறமாகக் கட்டிக்கொண்டு போலீஸ் டெபுடி கமிஷனர் அங்குமிங்குமாக உலாத்திக் கொண்டிருந்தார். அவரது பார்வை, எப்போதுமே என் முகத்தில்தான் படிந்திருந்தது. என்ன ஒரு பாவனை! எவ்வளவு கம்பீரம்! நான் ஏதோ ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டுத் தலைமறைவாகிவிட்டதுபோல். ஒரு மணிநேரக் கேள்விக்கணைகள். என்னுடைய நண்பர்கள் யார், யார்? எங்கிருந்தெல்லாம் எனக்குக் கடிதங்கள் வருகின்றன? அரசாங்கத்தைக் கவிழ்க்க நினைக்கும் ரகசிய இயக்கத்தின் உறுப்பினன்தானே நீ? புதிதாக இப்போது என்னென்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்? எல்லாவற்றிற்கும் உண்மையான பதிலைத்தான் சொல்ல வேண்டும். அப்புறம் . . .

"உங்களை இங்கிருந்து நாடு கடத்த என்னாலெ முடியுங்கிறது உங்களுக்குத் தெரியும்தானே?"

"தெரியும். நான் எந்த ஆதரவுமில்லாதவன். ஒரு சாதாரண போலீஸ்காரர் நெனைச்சாகூட என்னெ அரெஸ்ட் செய்து லாக்கப்பிலே போட்டு . . ."

மணி ஏழரை: நான் அறைக்குத் திரும்பிவந்து இருட்டில் அமர்ந்திருந்தேன். நன்றாக வேர்த்தது. இன்று என் பிறந்த நாள். நான் தங்குமிடத்தில் வெளிச்சமில்லை. மண்ணெண்ணெய்க்கு என்ன வழி? பசியடங்க ஏதாவது சாப்பிடவும் வேண்டும். ஆண்டவா, யார் தருவார்கள்? யாரிடமும் கடன் கேட்கவும் மனமில்லை. மாத்யூவிடம் கேட்டுப் பார்ப்போமா? வேண்டாம். அடுத்த கட்டடத்தில் வசிக்கும் கண்ணாடிபோட்ட அந்த மாணவனிடம் ஒரு ரூபாய் கேட்டுப் பார்ப்போம். அவன் ஒரு பெரிய வியாதிக்கு நிறையப் பணத்தை ஊசிக்கும் மருந்துக்குமென்று செலவு செய்துகொண்டிருந்தான். கடைசியில் எனது நாலணா மருந்தில் அது குணமாகிவிட்டது. அதற்கான பிரதிபலனாக என்னை ஒரு தடவை சினிமாப் பார்க்கக் கூட்டிக்கொண்டு போனான். அவனிடம் போய் ஒரு ரூபாய் கேட்டால் தராமலிருப்பானா?

மணி எட்டேமுக்கால்: வழியில் மாத்யூ எங்கே என்று விசாரித்தேன். அவன் சினிமா பார்க்கப் போயிருக்கிறானாம். பேச்சுச் சத்தமும் உரத்த சிரிப்பும் கேட்டுக் கொண்டிருந்த அடுத்த கட்டடத்தின் மேல்மாடிக்குச் சென்றேன். புகைந்துகொண்டிருக்கும் சிகரெட்டின் வாசம். மேஜையின் மீது எரியும் சரராந்தலின் ஒளிபட்டுப் பிரகாசிக்கும் பற்கள், ரிஸ்ட் வாட்சுகள், தங்கப் பொத்தான்கள்.

இயலாமையின் பிரதிபிம்பமான நான் செயரில் அமர்ந்தேன். அவர்கள் பேச்சைத் தொடர்ந்தார்கள். அரசியல் விஷயங்கள், சினிமா, கல்லூரி மாணவிகளின் உடல் வர்ணனைகள், தினமும் இரண்டு முறை சேலை மாற்றும் மாணவிகளின் பெயர்கள் . . . இப்படிப் பல விஷயங்கள் . . . எல்லாவற்றிலும் நான் என் கருத்துகளைச் சொன்னேன். இடையே துண்டுக் காகிதத்தில் ஒரு குறிப்பெழுதினேன். ‘ஒரு ரூபாய் வேண்டும். மிக அவசியமான ஒரு தேவை. இரண்டு மூன்று நாளில் திருப்பித் தந்துவிடுகிறேன்.’

அப்போது கண்ணாடிக்காரன் சிரித்தான்.

"என்னா, ஏதாவது சிறுகதைக்கு பிளாட் எழுதுறீங்களா?"

நான் சொன்னேன்.

"இல்லை."

அதைத் தொடர்ந்து விஷயம் சிறுகதை இலக்கியத்திற்கு வந்தது.

அழகாகயிருந்த அரும்பு மீசைக்காரன் குறைபட்டுக் கொண்டான்;

"நம்ம மொழியிலெ நல்ல சிறுகதைகள் ஒண்ணுமே இல்லை."

தாய்மொழியிலும் தாய்நாட்டிலும் நல்லதாக என்ன இருக்கப்போகிறது. நல்ல ஆண்களும் பெண்களும்கூடக் கடலுக்கப்பால்தான்.

நான் கேட்டேன்:

"யாருடைய சிறுகதைகளையெல்லாம் வாசிச்சிருக்கிறீங்க?"

"ரொம்ப ஒண்ணும் வாசிச்சதில்லெ. முதல் விஷயம், தாய்மொழியில் ஏதாவது வாசிக்கிறதுகூட ஒரு அந்தஸ்து குறைஞ்ச விஷயம்தான்."

நான் நமது சில சிறுகதை ஆசிரியர்களின் பெயர்களைச் சொன்னேன். இவர்களில் பெரும்பாலானவர்களின் பெயர்களைக்கூட இவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை.

நான் சொன்னேன்:

"ஆங்கிலத்துலெ மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மொழிச் சிறுகதைகளோடும் போட்டிபோடத் தகுந்த சிறுகதைகள் நம்ம மொழியில் இன்னைக்கு உண்டு. நீங்க ஏன் அதையெல்லாம் வாசிக்கிறதில்லெ?"

சிலவற்றை அவர்கள் வாசித்திருக் கிறார்களாம். அதில் பெருமளவும் வறுமையைப் பற்றிய கதைகள் தானாம். எதுக்கு அதையெல்லாம் எழுத வேண்டும்?

நான் எதுவும் பேசவில்லை.

"உங்களோட கதைகளையெல்லாம் வாசிச்சுப் பார்த்தா . . ." தங்கக் கண்ணாடிக்காரன் அறுதியாகச் சொன்னான்: "இந்த உலகத்துலெ என்னமோ ஒரு கோளாறு இருக்குறதெப்போலெ தோணும்."

உலகத்தில் என்ன கோளாறு? அப்பா அம்மாக்கள் கஷ்டப்பட்டு மாதந்தோறும் பணம் அனுப்பிவைக்கிறார்கள். அதைச் செலவுசெய்து கல்வி பயிலுகிறார்கள். சிகரெட், சாயா, காஃபி, ஐஸ்கிரீம், சினிமா, குட்டிக்கூரா பவுடர், வாஷ்லின், ஸ்பிரே, விலையுயர்ந்த ஆடைகள், உயர்தர உணவு வகைகள், மது வகைகள், போதை மருந்து, சிபிலிஸ், கொனேரியா – அப்படிப்போகிறது, கோளாறு இல்லாமல். எதிர்கால யோக்கியர்கள், நாட்டை ஆள வேண்டியவர்கள், சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள், அறிவுஜீவிகள், பண்பாட்டுக் காவலர்கள், மதத்தலைவர்கள், அரசியல் தலைவர்கள் . . . சித்தாந்தவாதிகள் . . .! உலகத்தில் என்னதான் கோளாறு?

எனக்குப் பயங்கரமாக ஒரு சொற்பொழிவாற்ற வேண்டும்போல் தோன்றியது.

"இன்றைய உலகம் . . ." நான் தொடங்கினேன். அப்போது கீழேயிருந்து தளர்ந்து போன ஒரு சிறு குரல்:

"மிதியடி வேணுமா, மிதியடி?"

"கொண்டுவா" சிரித்தவாறே உத்தரவிட்டான், கண்ணாடிக்காரன். அப்படியாக விஷயம் மாறியது. மேலே ஏறிவந்தவர்கள் காலையில் பார்த்த அதே பிஞ்சு முகங்கள் தான். அவர்கள் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்கள். கண்களை வெறித்தபடி, முகங்கள் வாடித்தளர்ந்து, உதடுகள் வறண்டுபோயிருந்தன. அதில் பெரிய பையன் சொன்னான்:

"சார்மார்களுக்கு வேணும்னா ரெண்டரை அணா."

காலையில் மூன்று அணாவாக இருந்த மிதியடி.

"ரெண்டரை அணாவா?" தங்கக் கண்ணாடிக்காரன் மிதியடியைச் சந்தேகத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.

"இது, கருஈட்டி இல்லியேடா?"

"கருஈட்டிதான் சார்."

"உங்க வீடு எங்கெ குழந்தைகளே?" என் கேள்விக்குப் பெரியவன் பதில் சொன்னான்.

"இங்கிருந்து மூணு மைல் தூரத்துலே உள்ள ஒரு இடம்."

"ரெண்டணா." தங்கக் கண்ணாடிக்காரன் கேட்டான்.

"ரெண்டே காலணா குடுங்க சார்."

"வேண்டாம்."

"ஓ . . ."

அவர்கள் வருத்தத்துடன் படியிறங்கினார்கள். தங்கக் கண்ணாடிக்காரன் திரும்ப அழைத்தான்.

"கொண்டு வாடா."

அவர்கள் திரும்பவும் வந்தார்கள். நல்லதாகப் பார்த்து ஒரு ஜோடி மிதியடியைத் தேர்ந்தெடுத்துவிட்டு ஒரு பத்து ருபாய் நோட்டை நீட்டினான். அந்தக் குழந்தைகளிடம் ஒரு நயா பைசாகூட இல்லை. அவர்கள் இதுவரை எதுவுமே விற்கவில்லை. நேரம் விடிந்தது முதல் அலைந்து திரிகிறார்கள். மூன்று மைல் தொலைவில், ஏதோ ஒரு குடிசையில், அடுப்பில் சூடாறிக் கிடக்கும் தண்ணீருடன் தமது குழந்தைகள் வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெற்றோர்களின் காட்சி என் மனத்தில் ஓடியது.

தங்கக் கண்ணாடிக்காரன் எங்கிருந்தோ தேடியெடுத்து இரண்டணா கொடுத்தான்.

"காலணா, சார்?"

"இவ்வளவுதான் இருக்கு. இல்லேண்ணா இன்னா மிதியடி."

குழந்தைகள் பரஸ்பரம் பார்த்தபின் துட்டை வாங்கிவிட்டுப் பேசாமல் இறங்கிப் போனார்கள். மின்சாரக் கம்பத்தின் கீழ், ரோட்டில் அவர்கள் போவதைப் பார்த்துவிட்டு வந்த தங்கக் கண்ணாடிக்காரன் சிரித்தான்.

"நான் ஒரு வேலை காட்டியிருக்கேன். அதுலெ ஒண்ணு செல்லாத ஒரணாத்துட்டும்."

"ஹ . . . ஹ . . . ஹா . . ." அனைவரும் சிரித்தார்கள். நான் நினைத்துக்கொண்டேன். மாணவர்கள் அல்லவா? சொல்வதற்கு என்ன இருக்கிறது? வறுமையும் கஷ்டங்களும் என்னவென்று இன்னும் அறியவில்லை. நான் எழுதிவைத்திருந்த குறிப்பை மற்றவர்கள் பார்க்காமல் தங்கக் கண்ணாடிக்காரனிடம் கொடுத்தேன். அவன் அதை வாசிக்கும்போது என் கற்பனை ஓட்டலில் பதிந்திருந்தது. ஆவி பறக்கும் சோற்றின் எதிரில் நான் அமர்ந்திருப்பது போன்றெல்லாம். ஆனால், குறிப்பை வாசித்துப் பார்த்துவிட்டுத் தங்கக் கண்ணாடிக்காரன் அனைவரும் கேட்கும்படியாகச் சொன்னான்;

"சாரி, சேஞ்ச் ஒண்ணுமில்லெ."

இதைக் கேட்டதுமே என் உடலிலிருந்து சூடான ஆவி பரந்தது. வேர்வையைத் துடைத்துவிட்டு நான் கீழே இறங்கி அறைக்கு நடந்தேன்.

மணி ஒன்பது: நான் பாயை விரித்துப் படுத்துக்கொண்டேன். ஆனால், இமைகள் மூட மறுத்தன. தலை, பாரமாக இருந்தது. இருந்தாலும் படுத்தே கிடந்தேன். உலகில் வாழும் கதியற்றவர்களைப் பற்றி நான் நினைத்தேனா. . . எங்கெங்கெல்லாம் எத்தனையெத்தனை கோடி ஆண் பெண்கள் இந்த அழகான பூலோகத்தில் பட்டினி கிடக்கிறார்கள. அதில் நானும் ஒருவன். எனக்கு மட்டும் என்ன விசேஷ அம்சம்? நானும் ஒரு ஏழை அவ்வளவுதான். இப்படி நினைத்துக் கொண்டே படுத்திருக்கும்போது – எனது வாயில் நீரூறியது. மாத்யூவின் சமையலறையில் கடுகு தாளிக்கும் சத்தம் . . . வெந்த சாதத்தின் வாசமும்.

மணி ஒன்பதரை: நான் மெதுவாக வெளியில் வந்தேன். இதயம் வெடித்துவிடுவதுபோல் . . . யாராவது பார்த்துவிட்டால். . . ? எனக்கு வேர்த்துக் கொட்டியது. . . வந்து முற்றத்தில் காத்து நின்றேன். அதிர்ஷ்டம், முதியவர் விளக்கையெடுத்துக்கொண்டு குடத்துடன் வெளியில் வந்து, சமையலறைக் கதவை மெதுவாக அடைத்துவிட்டுக் குழாயடிக்குச் சென்றார். குறைந்தது பத்து நிமிடமாவது பிடிக்கும், திரும்பிவர. சத்தமில்லாமல் படபடக்கும் இதயத்துடன் மெதுவாகக் கதவைத் திறந்து சமையலறைக்குள் நுழைந்தேன்.

மணி பத்து: நிறைந்த வயிறுமாகத் திருப்தியுடன் வேர்த்துக் குளித்து வெளியே வந்தேன். முதியவர் திரும்பியதும் நான் குழாயடிக்குச் சென்று தண்ணீர் குடித்து, கைகால் முகம் அலம்பிவிட்டுத் திரும்ப என் அறைக்குள் வந்து ஒரு பீடியைப் பற்றவைத்து இழுத்தேன். முழுதிருப்தி. சுகமாக இருந்தது. இருந்தாலும் ஏதோ ஒரு மனப்பதற்றம். உடல் சோர்வுமிருந்தது. படுத்துக் கொண்டேன். தூக்கம் வருவதற்கு முன் சிறிது யோசனையிலாழ்ந்தேன். பெரியவருக்குத் தெரிந்திருக்குமோ? அப்படியென்றால் மாத்யூவும் அறிந்துவிடுவான். மற்ற மாணவர்களும் குமாஸ்தாக்களும் அறிந்துகொள்வார்கள். அவமானமாகப் போய்விடும். எதுவானாலும் சரி, வருவது வரட்டும். பிறந்த நாளும் அதுவுமாக, சுகமாகத் தூங்கலாம். எல்லோருடையவும் எல்லாப் பிறந்த நாட்களும். . . மனிதன் . . . பாவப்பட்ட உயிர். நான் அப்படியே தூக்கத்திலாழ்ந்துகொண்டிருந்தேன். . . அப்போது என் அறைக்குப் பக்கத்தில் யாரோ வருகிறார்கள்.

"ஹலோ மிஸ்டர்." மாத்யூவின் குரல். எனக்கு வேர்க்கத் தொடங்கியது. தூக்கம் கடல் கடந்தது. சாப்பிட்டதனைத்தும் ஜீரணமாயின. எனக்குப் புரிந்துவிட்டது. மாத்யூ அறிந்துவிட்டான். பெரியவர் கண்டுபிடித்துவிட்டார் போலிருக்கிறது. நான் கதவைத் திறந்தேன். இருளின் இதயத்திலிருந்து வருவதுபோல் சக்திவாய்ந்த வெளிச்சத்தின் நீள ஈட்டிபோல் ஒரு டார்ச் வெளிச்சம். நான் அதனுள். மாத்யூ என்ன கேட்கப் போகிறான்? பதற்றத்தால் என் இதயம் துண்டு துண்டுகளாக உடைந்து சிதறிவிடும் போலிருந்தது.

மாத்யூ சொன்னான்,

"ஐ ஸே . . சினிமாவுக்குப்போயிருந்தோம். விக்டர் ஹ்யூகோவின் ‘பாவங்கள்.’ நீங்க பார்க்க வேண்டிய ஒரு ஃபர்ஸ்ட்கிளாஸ் ஃபிலிம்."

"ஓஹோ. . ."

"நீங்க சாப்டீங்களா? எனக்குப் பசிக்கலெ. சோறு வேஸ்டாயிடும். வந்து சாப்பிடுங்களேன். வர்ற வழியிலெ நாங்க ‘மாடர்ன் ஹோட்டல்’லெ ஏறினோம்."

"தாங்க்ஸ். நான் சாப்பிட்டாச்சு."

"அப்படியா? சரி தூங்குங்க, குட்நைட்."

"எஸ். குட் நைட் . . ." 


நாக்பூரில் கடும் மழை நாட்களில் ஒரு சிறிய வீட்டில் சிக்கி மூன்று நாட்கள் கடும் பசியை அனுபவித்திருக்கிறேன். ஏறக்குறைய பஷீரை விட கடுமையானதொரு நிலைக்கு தள்ளப்பட்டு பின்னர் ஒரு முதியவரின் உதவியால் உயிர் பிழைத்து வந்திருக்கிறேன், பல வருடங்கள் கழிந்த பின்னர் அதன் தாக்கத்தையும் அந்த ஞாபகங்களையும் அப்படியே மீட்டு கொடுத்தார் பஷீர். 

நன்றி : அழியா சுடர்கள்


Wednesday, April 28, 2021

மை நேம் ஈஸ் பஷீர் (My Name Is Basheer) ஆவண படம் பற்றிய விமர்சனம்

 மை நேம் ஈஸ் பஷீர் (My Name Is Basheer) என்ற வைக்கம் முகமது பஷீரின் ஆவணப்படம் யூடுப்பில் காண கிடைக்கிறது. இந்த ஆவணப்படம் மலைவாழ் கிராமமொன்றில் ஆனந்தமாக சாரல் மழையில் நனைந்து செல்லும் சுகம் தருகிறது. ஆறுகளின் வழியே இயற்கை காட்சிகளுடன் பறவைகள் சப்தமெழுப்ப, சாதாரண மனிதர்களின் படகுகள் அந்த காட்சிகளின் நீட்சியாக அந்த இயற்கை சூழலிலேயே படகில் சென்றபடி பேட்டி தரும் பஷீரின் சகோதரர் அபு பெக்கர் என கண்களுக்கு விருந்து படைக்கவும் இது தவறவில்லை.

 2007ல் அனுஷ்கா மீனாட்சியும் அவரது படப்பிடிப்பு குழுவும் சென்னையிலிருந்து கோழிக்கோட்டிற்கு சென்று வைக்கம் முகமது பஷீரின் வாழ்க்கையை ஆவண பட வடிவில் திரும்ப கொண்டு வந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் பார்த்த இரண்டு நாடகங்கள் இதை எடுக்க தூண்டியதாக இந்த ஆவண பட இயக்குனர் சொல்கிறார். பஷீரின் புத்தகத்தை பற்றி பெட்டிக்கடைக்காரர், சமையல் கலைஞர், புத்தக விற்பனர், மாணவிகள் என பலதரப்பட்ட மக்கள் பேசுவதிலிருந்து ஆரம்பமாகிறது இந்த ஆவணப்படம். முழுவதும் ஆங்கிலத்தில் இருப்பதும் subtitle வைத்திருப்பதும் புரிந்து கொள்ள எளிதாக இருக்கின்றது. காலம் தாண்டி அவரது கதைகளில் இன்னமும் புத்துணர்ச்சி இருக்கிறதென கூறுகிறார்கள் அவரை இப்போதும் வாசிப்பவர்கள்.

இடையிடையே அவரது புத்தகங்களின் கதைகளை காட்சிகளாக இந்த படமெடுக்க தூண்டியவரின் நாடகங்கள் வருகின்றன,  அதில் நண்பனை கொலை செய்யும் காட்சிகளில் நடிப்பு திரைப்படங்களில் கிளைமாக்ஸ் காட்சிகளை மிஞ்சுமளவு பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். மற்றொரு நாடகத்தில் காதல் காட்சிகளில் நகைச்சுவை பொங்கி வழிகிறது,

குறிப்பாக, வேறுவேறு மதத்தை கொண்ட காதலனும் காதலியும் பேசிக்கொள்ளும் வசனங்கள்,

 "நமக்கு குழந்தை பிறந்தால் எந்த மதத்தில் வளர்ப்பது?"

"மதமே இல்லாமல் வளரட்டுமே?"

"மிருகங்கள் மாதிரியா?" …

 "அவர் எல்லாத்தையும் பார்த்திருக்கார், காதல்கள் கூட உண்டு, நாமொரு புத்தகம் எழுதணும்னா அதில இதெல்லாம் முழுசா வெளிய கொண்டு வரணும், அதில நகைச்சுவை, சந்தோசம், அனுபவம் இதெல்லாம் அடுத்தவங்களுக்கு கொடுக்கிற மாதிரி எழுதணும், இதையெல்லாம் உருவகப்படுத்தினா அதுதான் பஷீர்" அவரது மனைவி பாத்திமா (பாபி).

எனக்கும் பஷீருக்கும் பதினெட்டு வயசு வித்யாசம், அவர் பள்ளி படிப்பு முடிந்ததும் இங்கிருந்து 18ஆவது வயசுல ஓடி போய்ட்டார், பத்து வருஷம் இந்தியால நிறைய இடங்களும், தென் ஆப்ரிக்கா, அரேபியாவெல்லம் போய் அப்புறம் திரும்ப வந்தார், திரும்ப வந்த அவர் பழைய பஷீரல்ல என புரிந்து கொண்டோம், அவர் வேறு மனிதராக இருந்தார், அவரது மீசை, தொப்பி, உடைகள் பகத்சிங்கை ஞாபக படுத்தின, ஒரு புரட்சிக்காரனை போலத்தான் அப்போது வாழ்ந்தார், அவருக்கு எழுத்தின் மீது தீவிர காதல் உண்டுஎன்கிறார் அவரது சகோதரர் அபு பெக்கர்.

"அவர் என்னை மிக சுதந்திரமானவளாக வளர்த்தார், முஸ்லீம் குடும்பத்தில் பிறந்த போதும், மத நடவடிக்கைகளை பின்பற்றும் வாழ்க்கை முறை எங்களுடையதில்லை, எப்படி வாழ்க்கை நடத்துவதெனக்கூட அவர் அறிவுரை சொன்னதில்லை. எல்லா மத நண்பர்களும் அப்பாவிற்கு உண்டு, அப்பாவின் வாழ்க்கை முடியும் வரை, அவரை சுற்றிலும் ஒரே சிரிப்பு சப்தமாக இருக்கும், அவர் தனது வாழ்க்கை முழுவதையும் நகைச்சுவையால் நிரப்பிக்கொண்டார்" என்கிறார் பஷீரின் மகள் ஷகீனா.  இந்து மதத்தின் மீது பிடிப்பு கொண்டு சிலகாலம் ஆன்மீக தேடலோடு பஷீர் இருந்திருக்கிறார்

 அவரது நாடகங்களை இயக்கி வரும் ராஜிவ் கிருஷ்ணன் கூறுகையில், "அவர் தனித்துவமான நகைச்சுவை எழுத்துக்களுக்கு மட்டும் சொந்தக்காரர் அல்ல, சோகம், வறுமை, போராட்டம், ஜெயில் வாழ்க்கை என நிறைய அனுபவங்களை எழுத்தில் தந்திருக்கிறார், அதுவும் சாதாரண மனிதர்களை கதா பாத்திரங்களாக வைத்துக்கொண்டு, அவை நம்மை முழுதாக உள்ளிழுத்துக்கொள்ளும், தவிர அவரது நாடகங்களை இயக்குகையில் அவரது பலவித அனுபவங்கள் எனக்கு மிகுந்த சுவாரஸ்யமாக இருக்கின்றன"  

எஸ் ராமகிருஷ்ணன் தனது வலைதளத்தில் பல வருடங்களுக்கு முன்பு எழுதி இருந்த பஷீர் த மேன் (Basheer the man) என்ற குறும்படத்தை தேடி youtubeல் பார்த்தேன், இரண்டு பாகமாக அதை வெளியிட்டிருக்கிறார்கள், அட்டகாசமாக இருக்கும். Link: https://www.youtube.com/watch?v=8HBlQXzrxEE அதை எடுத்த திரு M A ரஹ்மான், "என்னோட பால்ய வயதில் புத்தகம் படிச்ச உடனே அந்த எழுத்தாளரை பார்க்கணும்னு தோணும், அப்படிதான் அவரை பார்க்கணும்னு தோணிச்சு,  அதுக்கு முக்கிய காரணம் பஷீரோட நகைச்சுவை உணர்வு. நான் M A படிச்சு முடிச்சதும் அவரை பற்றி படமெடுக்கலாம்னு ஆசைப் பட்டேன், குறிப்பா அவரது பால்யம், சுதந்திர போராட்ட காலம், தனிப்பட்ட வாழ்க்கை, அவரது தத்துவங்களில் இருந்த மாற்றங்கள் எல்லாம் எடுக்க சென்றோம்என்று ஆரம்பித்து அவர் பஷீர் பேசிய ஒலிகளை கொண்டு வர பட்ட பாடுகளை விவரிப்பார், அது மிக சுவாரஸ்யமானது.

ஜமீலாவிடம் காதலை சொல்லும் அப்துல் காதர் காட்சிகள் உங்களை நிச்சயம் சிரிக்க வைக்கும், அதன் வழியே பஷீரின் நகைச்சுவை உணர்வை நீங்கள் உணரலாம்.

கோழிக்கோட்டில் மாத்ருபூமி பத்திரிக்கை இந்த நாடகங்களை பஷீரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டமாக நடத்தியிருக்கிறது. அவரது கொண்டாட்டங்களில் ஒன்றாக மாணவர்களை வைத்து ஓவிய போட்டிகள் நடக்கின்றன, அங்கு வரையப்பட்ட பல ஓவியங்கள் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கின்றன. உண்மையாகவே கேரளா பூமி எழுத்தாளர்களை கொண்டாடுகிறது.

பஷீரை பல அழகான கோணங்களில், தருணங்களில் எடுத்தவர் புனலூர் ராஜன், இது என்னுடைய முதல் கேமரா என்று ஒன்றை காட்டுகிறார், பார்க்க வித்தியாசமாகவும், போட்டோ எடுக்கும்போது வரும் சப்தம் ஈர்ப்புடனும் இருக்கிறது.

அடுத்து வரும் பஷீரால் எழுதப்பட்டு, ஜெயிலில் எடுக்கப்பட்ட மதிலுகள் நாடகம் கண்களை அகலவிடாமல் பார்க்க வைக்கும் தன்மை கொண்டது.

வாரங்கள் நாட்களாகி நாட்கள் மாதங்களாகி மாதங்கள் வருடமாக மாறிய பின்பும் உணவு வைத்துக்கொண்டு ஒவ்வொரு இரவும் தன் மகனுக்காக காத்திருந்த பஷீரின் தாய்டனான நெடுநாள் பிரிவுக்கு பின் வரும் "நான் உன்னை பார்த்தால் போதும்" என்று பேசுகிற வரிகள் நெகிழ்ச்சி.

பஷீரின் மகன் அனீஸ், "அவருக்கு மிகுந்த பிரியம் என்மீது உண்டு, பல சமயங்களில் அதை வெளிக்காட்டியதில்லை, ஒரு சில சமயங்கள் அதைமீறி வந்துவிடும் போது கண்கள் கலங்கியிருக்கிறேன், அப்பா எழுதியதில் முக்கியமானது எங்கள் இனத்தை மோசமான வில்லன்களாக எழுதிக்கொண்டிருந்த சமயத்தில், தன்னை சுற்றியிருந்த தனது சமூக மனிதர்களை பார்த்தார், அப்பா, அம்மா, குழந்தைகள், சொந்தங்கள் என மிக சாதாரணமானவர்கள், அன்பானவர்கள், தீயவர்கள் அல்ல என்பதை புரிந்துகொண்டார், அதை அவர்  பிரச்சாரம் செய்யாமல், இயல்பான வாழ்க்கையை அவர் எழுத்தின் மூலம் கொண்டுவந்தது, அதை மற்ற சமூகத்தினர் ஏற்றுக்கொண்டதும், புரிந்துகொண்டதும், நட்பாக வாழ தொடங்கியதும் அவர் எழுத்திற்கு கிடைத்த வெற்றி"

பஷீரின் சுயசரிதை எழுதிய M K ஷானு, “அவர் நல்ல சமையல்காரர், மீன் கறியும், டீயும் அவ்வளவு சுவையாக செய்து தருவார். அப்படிதான் எங்கள் நட்பு வளர்ந்தது, காந்தியை சந்தித்தது, எடப்பள்ளியில் இருந்து ரயிலேறி காளிகட் போனது, அங்கு உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டது, அவர் ஒரு இடத்தில் நிரந்தரமாக தங்கியதில்லை, ராஜஸ்தான், பம்பாய், காஸ்மீர் பின் கப்பலேறி பெரிசியா என பயணம் செய்துகொண்டே இருந்தார், அவரது அனுபவங்களை விளக்கி சொல்வதை கேட்பது அவ்வளவு அழகாக இருக்கும், அது எப்போதும் என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும், அதுதான் என்னை அவருடைய சுயசரிதை எழுத தூண்டியது, “கதைகள் எனக்கு பிடிக்கும், மனிதர்களை அதைவிட பிடிக்கும் இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமே என் எழுத்து என்பார்.”

பஷீர் "எனது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம், நீங்கள் விரும்பிய நேரத்தில் படிக்கலாம், ஆனால் நீங்கள் (மக்கள்) அப்படி இல்லை, மர்மம் நிறைந்திருக்கிறீர்கள், அதை பற்றி தான் அறிய துடிக்கிறேன், அதை தாண்டி நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்னவெனில் நான் உங்களை நேசிக்கிறேன்"

பஷீரின் அளவுகடந்த மனிதநேயம், காதல், வறுமை அனுபவங்கள், அரசியல் மற்றும் போரைப் பற்றிய விமர்சனம், இசையில் அவரது தனிப்பட்ட ரசனை, இயற்கையின் மீதான காதல் மற்றும் அவரைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் சமூகம் குறித்த அவரது  நம்பிக்கைகள் என அவரது பல கதைகள் எழுத்தாளரின் ஏதோவொன்றை வெளிப்படுத்துகின்றன. மெல்லிய தென்றலின் சுகமென விரிகிறது இந்த ஆவணப்படம். மலையாள உலகின் மிகப்பெரும் ஆளுமையை முழுமையாக தெரிந்து கொள்ள கண்டீப்பாக இந்த ஆவண படத்தை காணுங்கள்.  

Link: https://www.youtube.com/watch?v=9-Tm24XRRCE

 

Directed By:

Anushka Meenakshi

 

Produced by:

School of Media and Cultural Studies, Tata Institute of Social Sciences, Mumbai.

Thursday, November 12, 2020

பவாவின் மேய்ப்பர்கள்

 பவாவின் மேய்ப்பர்கள் முடித்திருக்கிறேன், "வாழ்க்கைன்னா என்னன்னு தெரியுமா? எப்படி வாழணும்ன்னு தெரியுமா? " என என்னை கைப்பிடித்து கூட்டிப் போய் அவர் சுட்டிக் காட்டுகிற மனிதர்கள் முன் கூசிப் போய் நிற்கிறேன். காற்றுக்காய் பாடும் இசைக் கலைஞனுக்காக தானாய் வழியுது கண்ணீர், தனிமையில் எப்போதோ வரும் ரயிலுக்காக தனிமையில் புத்தகங்களுடன் தவம் கிடந்தவர் பிரமிக்க வைக்கிறார். நாடகமென்றால் என்னவென்றே தெரியாத என் தலைமுறைக்கு நாடகங்களுக்காக அனைத்தையும் உதறியவரை வியப்போடு பார்க்கிறேன், ஒரு ஓவியத்தை தானே உருவாக்கி அதில் நெக்குருகி தெய்வ தன்மையை காணும் மனிதரும் இருக்கிறார். வாழ்க்கையில் எல்லா புயல்களையும் சந்தித்தும் ஓயாமல், அன்பு என் பெயரல்ல, இனி அதுவே வாழ்வு என வேகமாக செயல்புரிகிறார் வீரப்பன் காடுகளில் களப்பணியில் ஈடுபட்டுள்ள ஒருவர். ஆளுமைகள் என அறியப்படுபவர்களின் முன் கம்பீரமாகவும், அவர்களை மதிக்காமலும், சோற்றுக்கு அமர்ந்திருப்பவர்கள் முன்னே தாழ்ந்தும் போகிற மனிதனல்லவா பெருங் கலைஞன்? "பொருளாதார வளம் மயிருக்கு சமானம்" என்று புறந்தள்ளி எளிய மனிதர்களின் நட்புக்காக, அவர்களின் வளர்ச்சிக்காக போராடும் அற மனிதர்கள் கதையில் முக்கால்வாசி நிரம்புகின்றனர்.

நீங்கள் எங்கோ இருந்து என்னை அன்பெனும் பெருங்கருணையால் தீண்டுகிறீர்கள் பவா, அதற்கு என்னிடம் தகுதியில்லை என தெரிந்தும்.
"மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை"
புத்தகத்தின் கடைசி அறிவுரைக்கு நன்றி, படிக்கிறேன் பவா, இந்த ஜென்ம இறுதி வரை.

Monday, August 24, 2020

சோளகர் தொட்டி புத்தக விமர்சனம்

 மிக எளிமையான மொழியில் எழுதியதாலோ என்னவோ முதல் பத்து பதினைந்து பக்கங்களுக்கு இந்த நாவல் மீது ஈர்ப்பே வரவில்லை, அதாவது முன்பெல்லாம் மரண மொக்கை படத்துக்கு தேசிய விருது கொடுப்பார்கள் அல்லவா அப்படி,  அத்துடன் நிறுத்திவிட்டு இந்த நாவலை குறித்தும் அதன் ஆசிரியர் குறித்தும் இணையத்தில் தேடி பார்த்தேன். பவானியை சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன், பி.யூ.சி.எல். என்னும் மனித உரிமை அமைப்பின் மாநிலச் செயலாளராகவும் இருக்கிறார். இந்த புத்தகத்தை தமிழகத்தில் வெளியிட்டால் பிரச்சனை உருவாகும் என கருதி மலேசியாவில் வெளியிட்டிருக்கிறார் என படித்தேன். 


தொடர்ந்து தேடியதில் முக்கியமான செய்தி ஒன்று கண்ணில் பட்டது, வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சதாசிவம் கமிஷன் முன்பு பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களை கூட்டிச் சென்று சாட்சி சொல்ல வைத்திருக்கிறார். அவர்களுக்கு நேர்ந்த அவலங்களை கேட்கையில் நடுங்கி போய் அதை மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இதை எழுதி இருக்கிறேன் என்றார். 


அதற்கு பின் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன், அந்த எழுத்துக்களை மீண்டும் படிக்கையில் ஈர்ப்பாக மாறியதை மறுக்க முடியாது. இரண்டு பாகமாக நாவலை பிரித்திருக்கிறார். முதல் பாதி  அழகியல், அவர்களின் கொண்டாட்டம், வழிபாடு, எளிய அழகான வாழ்க்கை முறை, வன விலங்குகள், வேட்டை, அரிசியை எப்போதாவது ஒருமுறை மட்டுமே உண்ண கிடைக்கும் சந்தர்ப்பங்கள் என அந்த மலையோர வாழ்க்கைக்கு நம்மை பழக்கப்படுத்திவிடுகிறார். இதில் ஆச்சர்யப்படும் தகவல்கள் என்னவெனில் பெண்ணுரிமை, பகுத்தறிவு என்றெல்லாம் என்னவென்றே தெரியாத, விளக்கினாலும் புரிந்து கொள்ள இயலாத ஒரு இனத்திலிருந்து   பெண்ணின் மறுமணம், திருமணமானமாகி கணவன் இறந்த பெண் தன்னைவிட வயது குறைந்த ஆணை தேர்ந்தெடுத்து திருமணம் செய்துகொள்வது என மலைவாழ் மக்களின் வாழ்க்கை ஆச்சர்யப்படுத்துகிறது. இருநூறு பக்கங்கள் தாண்டி வீரப்பனையும் சட்டென நாவலில் கொண்டுவருகிறார்

இரண்டாம் பாகம் லாக்கப் எனும் திரைப்படத்தில் வரும் மனிதத்தன்மையற்ற தாக்குதலை விட நூறு மடங்கு வீரியம் மிக்க தாக்குதல்களை அவர் விவரிக்கும் போது அந்த வலி நம்மையும் தொற்றிக்கொள்கிறது. 

"அன்புராஜ், ,தங்கராஜ், அப்பர்சாமி மற்றும் துப்பாக்கி சித்தன் ஆகியோர் 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு, இந்தியாவின் 70வது சுதந்திரத்தினத்தை யொட்டி விடுதலை செய்யப்பட்டனர்" என்றொரு சிறிய செய்தியை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு சாதாரணமாக கடந்து சென்றிருப்போம், அன்புராஜை பற்றி பவா செல்லதுரை youtubeல் பேசியிருப்பார் தேடி பாருங்கள், தனது வாழ்க்கையை ஏறக்குறைய தொலைத்துவிட்டு புதிதாக உருவமைத்துக்கொண்டவர் அன்பு, அவர் சோளகர் தொட்டி பற்றி சொல்கையில் பாலமுருகன் எழுதியது மிக சொற்பம் என்கிறார். 

விடுதலையான நான்கு பேரில் துப்பாக்கி சித்தன் என்பவர் தான் இந்த நாவலின் நாயகன் சிவண்ணா, கொஞ்சம் தேடி பார்த்தீர்கள் எனில் அவர் வீரபனுடன் இருந்த புகைப்படம் முதற்கொண்டு, தற்போது தனது நிலங்களை வீட்டையெல்லாம் இழந்துவிட்ட நிலையில் அரசின் உதவியை எதிர்பார்க்கும் செய்திகளையும் காணலாம். பாலமுருகன் சமீபமாக ஒப்புக்கொண்ட வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் இன்னமும் கூட பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு எந்த வித நியாயமும் கிடைக்கவில்லை என்பதே. 

அந்த சாதாரண எழுத்துக்களின் வலிமை இரண்டாம் பாகத்தில் உலுக்கி எடுத்துவிடுகிறது, படிக்கையில் குமட்டிக்கொண்டு வாந்தி வருவது போல நிகழ்வை நமக்கு கடத்துகிறது. 

ஆறுமாத கர்ப்பிணியை வன்புணர்ச்சி செய்வது, நிர்வாணமாக்கி பிறப்புறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சுவது, பிறந்த குழந்தையை ஈவு இரக்கமின்றி கொன்று தாயிடம் தகவல் மட்டும் தருவது, உடலுறுப்புகளை அடித்து ஊனப்படுத்துவது என ஆதிரைக்கு பிறகு வாசிக்க சிரமப்பட்ட நாவல் என இதை கூறுவேன். 

நிச்சயம் உங்களை இது தூங்கவிடாது பாதிக்கும். 

கட்டாயம் வாசிக்கவேண்டிய நாவல்... அல்ல, உண்மையில் நடந்த நிகழ்வு  

Sunday, May 10, 2020

ரத்தம் ஒரே நிறம் -சுஜாதா புத்தக விமர்சனம்

இதுதான் சுஜாதாவோட பெஸ்ட்ன்னு நண்பன் சொன்னதால வாங்கி, தலைப்பை பார்த்துட்டு கொலைக்கள அல்லது கணேஷ், வசந்த் வச்சு ஏதோ துப்பறியும் நாவல்னு நினைச்சு ரொம்ப காலம் படிக்காம வச்சிருந்தேன்.  முன்பொரு காலத்திலே ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், சாண்டில்யன், புஸ்பா தங்கதுரை, கோட்டயம் புஸ்பநாத், தபூ சங்கர், வைரமுத்து, வாலி விஜய் மில்டன்னு எது கிடைச்சாலும் ஆதரவு கொடுத்து படிச்சு முடிப்பேன். நாவலை தோட்டப்புறம் தான் தெரிஞ்சுது இது கிரைம் நாவல் இல்ல, சரித்திர நாவல். சரித்திர நாவல் வகைன்னாவே இப்பெல்லாம் ஏனோ ஜெர்க்கடிக்குது, பொன்னியின் செல்வனை உலகமே புகழ்ந்து தள்ளிட்டு இருந்தப்போ கொஞ்சம் பக்கம் படிச்சிட்டு தெறிச்சு வந்தவன் நான். அந்த சூடு கொஞ்சம் ஆறின பின்னாடி, பாலகுமாரனை மட்டுமே ஒரு காலத்துல படிச்சிட்டு இருந்த எனக்கு,  உடையார்  ஒரு பாகம் முடிக்கிறதுக்கே நாக்கு தள்ளிடுச்சு. அதனால இப்போ நமக்கு ஜெமோ, சாரு, வண்ணதாசன், எஸ் ரா.,  தான் சரிவரும்னு சமாதான படுத்திக்கிட்டேன். என்ன இருந்தாலும் தினமும் நாற்பது பக்கம் படிக்கிற பழக்கம் விட்டு போகல. இல்லைன்னா இருக்கவே இருக்கார் YouTubeல கதை சொல்ல பவான்னு காலம் அமைதியா போயிட்டு இருந்தது. 

கொரோனா காலங்கள் ஏகப்பட்ட நேரத்தை கையில் கொடுத்திருக்கு.  படிக்காம ஸ்டாக் வச்சிருந்த அத்தனை புத்தகங்களையும், பார்க்காம டிஸ்க்ல வச்சிருந்த அத்தனை படங்களையும் பார்க்க வச்சதால, குறைஞ்சது நாலு சேப்டராவது படிப்போம்னு, ரத்தம் ஒரே நிறம் முன்னுரை படிச்சா "அட" ன்னு ஆச்சர்யமா இருந்தது. இதை குமுத்துல தொடரா எழுத ஆரம்பிச்சப்போ சுஜாதாக்கு கொலை மிரட்டல் வரை வந்திருக்கு, எழுதுற கையை வெட்டிடுவோம்னு லட்டர், குமுதம் அலுவலகத்தை தாக்கிருக்காங்க, குமுதம் புத்தகத்தை ஒரு கூட்டமா சேர்ந்து எரிச்சிருக்காங்கன்னு ஏகப்பட்ட அதிர்ச்சி. சுஜாதா எழுத்துலக வாழ்க்கையில இப்படி ஒரு சம்பவமான்னு இருந்திச்சு. மத்தவங்களா இருந்தா அதையே ஒரு விளம்பரமா எடுத்திட்டு காசு பார்த்திருப்பாங்க, ஆனா சுஜாதா, "முழுசா நான் எழுதி இதை அவங்க படிச்சா புரிஞ்சுக்குவாங்க, ஆனா விளக்கம் கொடுக்க இது சரியான  நேரமில்லை, தவிர வலது கையை வெட்றோம்கிறங்க, இடது கையால எழுத வேற தெரியாதே?"ன்னு ஜஸ்ட் லைக் தட் கடந்து போனார். பேர் மாற்றி புத்தகமா வந்த பின்னாடி ஏன் இப்போ ஒருத்தர் கூட எதிர்க்கலை? ஏன்னா அதில எதிர்க்கிறதுக்கான காரணமே அதில் இல்லைன்னு எழுதிருக்கார்.

கதை சுஜாதா பாணியிலேயே சொல்லனும்னா சொகுசு கார் அதி விரைவில் சாலையில் செல்வது போல்  வழுக்கிக்கொண்டு செல்கிறது.
கதை கிட்டத்தட்ட நூத்தம்பது வருஷம் முன்னாடி நடக்கிறதால, வரலாற்று நாவல்கன்னாவே, சங்க தமிழ்ல எழுதி வாசகனை சாகடிக்காம, நாயகன் வீரத்தை,  நாயகி அழகை ஏழு எட்டு பக்கம் விவரிக்காம சட்டுன்னு கதைக்குள்ள போய்டறார். ஆரம்ப பக்கங்கள்ல இருந்தே கதை சூடு பிடிக்குது. அந்த வேகத்தை கொஞ்சம் கூட குறைக்காம ஜெட் வேகத்துல கடைசி வரை நம்மை கொண்டுபோறார்.


தந்தையை கொன்ற இரக்கமில்லாத ஒரு கிறுக்குத்தனமான அதிகாரியான எட்வார்டை எப்படியாவது கொல்ல வேண்டும் அதுதான் தன் வாழ்க்கையின் ஒரே லட்சியம் என முடிவெடுத்து எட்வார்டை தேடி செல்கிறான் முத்துக் குமரன். அவனை பழி தீர்த்தானா என்பதுதான் ஒரு வரிக் கதை, ஆனால் நாமெல்லாம் பள்ளியில் படித்த சிப்பாய் கலகம் என தவறாக புரிந்துகொள்ளப்பட்ட இந்தியாவின் முதல் சுதந்திர போரே இந்த கதையின் அடிநாதம். ஆஸ்லி போன்று மனசாட்சி உள்ள வெள்ளைக்காரனையும் படைத்திருக்கிறார், எனக்கு மிகவும் பிடித்துப்போன பாத்திரம் அது. 1857ல் சிப்பாய் கலகம் என்ற முதல் இந்திய சுதந்திர போர், அதை அடக்க கர்னல் நீலின் தலைமையில் சென்னையில் இருந்து ராணுவம் கல்கத்தா சென்றது, அங்கிருந்து லக்னோ கான்பூர் சென்றது, பீகாரில் இந்தியர்கள் வெள்ளைக்காரர்களை சித்திரவதை செய்தது, நாநாவின் ஆதரவு, முடிவு என  இந்த கதையில் வரும் பெரும்பாலான சம்பவங்கள் உண்மையானவை

உடன்கட்டை ஏறும் காட்சியை சுஜாதா விவரிக்கையில் நேரில் நின்று பார்த்து பதைபதைத்த உணர்வு. சுதந்திர போராட்ட மத்திய காலம் என்பதால் தூய தமிழிற்கு அதிகம் வேலை இல்லை அதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனக்கே உரிய பாணியில் ஏராளமான சுவாரஸ்யம் கலந்தது அங்கங்கே நகைச்சுவை வசனங்கள் தூவி விளையாடி இருக்கிறார். வழக்கமான சரித்திர கதைகளில் முக்கியத்துவம் பெரும் வித்தை சாமியார்கள் போன்றவர்களின் பாரம்பரியத்தை சிதைக்காமல் பைராகியை உலாவ விட்டிருக்கிறார்.
பூஞ்சோலையும்  எமிலி அட்கின்சனும் மறக்க முடியாத பாத்திரங்கள். சில நாவல்கள் படிக்கையில் நம் கண் முன்னே காட்சிகளாக விரிந்து விஸ்வரூபம் கொள்ளும், அதாவது பாகுபலி பார்த்திருக்கிறோமல்லவா அதுபோல. இது அந்தவகை நாவல். சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் இதுதான், ஜெயமோகனும் எஸ் ராமகிருஷ்ணனும் நூறு சிறந்த நாவல்களில் ஒன்றாக இதை தேர்ந்தெடுத்ததில் ஆச்சர்யம் இல்லை.
தவற விடாதீர்கள் 


Thursday, October 25, 2018

பிடித்த புத்தகங்கள் பகுதி 2

படித்த புத்தகங்கள் என்றே வந்திருக்க வேண்டும், முதல் தொகுப்பை பிடித்த என்று எழுதிவிட்டதால் அதையே தொடர்கிறேன்.
ஏற்கனவே நாற்பது புத்தகங்களை பற்றி எழுதி விட்டதால் இனி நாற்பத்தி ஒன்றில் இருந்து ஆரம்பிக்கிறேன். முந்தைய தொகுப்பை தவற விட்டவர்கள் இதை பிடித்த புத்தகங்கள் படித்து விட்டு வாருங்கள்.

41. மலைகள் சப்தமிடுவதில்லை.

இலக்கியமும் இசையும் கலைகளும் இல்லாமல் போனால் மனிதர்கள் வெற்று சக்கையாகி போவார்கள் என்கிறார் இதன் ஆசிரியர்
எஸ். ராமகிருஷ்ணன். நடந்தே இந்தியா முழுவதும் பயணம் செய்த அனலேந்தி, தஸ்தாயேவ்ஸ்கி, சேகா, கார்க்கி, பாஸோ, காமிக்ஸ், ரயிலோடும் தூரம், வெயில், சிற்பங்கள் என உங்களை ஆச்சர்யப்படுத்தும். நிறைய கட்டுரைகள் இதில் உண்டு.

42. பனிமனிதன். 

இது ஏதோ சிறுவர்களுக்கான கதை என்று நினைத்து பத்து பக்கம் படிக்கலாம் என்று ஆரம்பித்தேன், நாவலை முழுவதும் முடித்த பின்பு தான் வைக்க முடிந்தது. கதையின் இடையிடையே வரும் உண்மை தகவல்கள் மிகுந்த ஆச்சர்யங்கள் கொண்டவை. நிச்சயம் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, அனைத்து தரப்பினர்களுக்கான புத்தகம்.

43. பணக்கார தந்தை ஏழை தந்தை. 

ஆங்கிலத்தில் இது Rich dad, Poor dad என்ற பெயருடன் வந்து மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட தந்தைகளின் செழுமை, வாழ்க்கையை கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கான புத்தகம்.

44. பொன்னியின் செல்வன்

போதுமானவரை இந்த புத்தகம் பற்றிய பற்றி விளக்கங்கள் வந்து விட்டன. என் தோழி ஒருவர் ஏன் இதை பற்றி எழுதவில்லை என்று கேட்டு கொண்டதற்கிணங்க இதை குறிப்பிடுகிறேன். பத்து வருடங்கள் முன்பே படித்தாயிற்று.

45. Man eaters of kumaon

புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் மனிதர்களை கொல்லும் சிறுத்தை புலிகளை பற்றியும் அவற்றை வேட்டையாடியது பற்றியும் எழுதி இருக்கிறார்.
ஹிமாயூன் புலிகள் என்று தமிழில் புத்தகம் வெளி வந்தது. குறிப்பிட்ட பகுதி மக்களால் தெய்வமாக கொண்டாடப்பட்ட இவர் எழுதிய புத்தகம் ஏறத்தாழ என்பது ஆண்டுகள் கடந்தது. ஆனால் பரபரப்பான நிகழ்வுகள் நிறைந்த புத்தகம்.

46. இனி என் முறை.

ராஜேஷ் குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகரை பார்த்து பாலகுமாரன் சூடு போட்டு கொண்ட நாவல். நான்கைந்து அத்தியாயத்திற்கு பிறகு அதை படிக்க முடியாமல் ஓரமாக வைத்த புத்தகம். இதற்கு பின் இவர் கிரைம் கதை பக்கமே போகவில்லை.

47. சோளகர் தொட்டி 

எரியும் பனிக்காடு என்ற புத்தகத்தை பரதேசியாக மாற்றி பாலா படம் எடுத்தாரில்லையா, அதை விட அதிக அடர்த்தி கொண்ட புத்தகம் இது. பழங்குடி மக்களின் பழக்க வழக்கங்களை, அவர்களது கடவுளை, வாழும் முறையை, அதன் அழகுகளை புரியவைக்கும் முதல் பாதி, அரசியல் அதிகாரங்களால், வீரப்பன் தேடுதல் வேட்டையால் ஒடுக்கப்பட்டு சிக்கி சின்னாபின்னமாகும் ரத்த மயமான இரண்டாம் பகுதி கலங்கடிக்குமாறு எழுதி இருக்கிறார். பூர்விக நிலங்களைப் பறிகொடுத்துவிட்டு, அதிகார வர்க்கத்தால் வதைக்கப்படும் மொத்தப் பழங்குடிகளின் கதை அது என நாவலாசிரியர் பாலமுருகன் கூறி இருக்கிறார்.

48. 19 டி எம் சாரோனிலிருந்து.

பவா செல்லத்துரை எழுதிய பொக்கிஷம். அழகையும் எளிமையையும் மனித தன்மையையம் கலந்து, நாம் கொண்டாடும் கொண்டாட வேண்டிய பல எழுத்தாளர்களை, ஓவியர்களை, புகைப்பட கலைஞர்களை அறிமுகம் செய்திருப்பார். தமிழில் வாசிக்கப்பட வேண்டிய புத்தகங்களில் இது முக்கியமானது.

49.  சித்திரபாவை

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை என் தந்தையிடம் இருந்து தான் கற்றேன். வார இதழ்களும் மாத இதழ்களும் தவறாது வாங்குபவர். புத்தக சேமிப்பும் நிறைய இருந்தன. என் தந்தையின் புத்தகங்களின் சேமிப்பில் இருந்து எடுத்து படித்த புத்தகம். பழைமையின் மூடத்தனத்திலிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள ஆனந்தி போராடும் கதை. முன்னொரு காலத்தில் தூர்தர்சனில் நாடகமாக வந்திருக்கிறதாம்.

50. மோகமுள்

பொருந்தா காமம் என்று ஆரம்பித்தாலும், மோகத்தின் வெப்பம், அது நிகழ்த்துகின்ற நாடகம், கர்நாடக சங்கீத இளைஞன் பாபுவின் தனிமை, யமுனாவின் சிறுவயதுமுதலான நெருக்கம், மாறும் பார்வைகள் என விரிந்து செல்லும் இந்த புத்தகம், காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற முடிவை கண்டடையும். தமிழில் அப்போதைய காலகட்டத்தில் இந்த நாவல்  சினிமாவாக வந்து தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.

51. கதவை திற காற்று வரட்டும்.

ஆசிரமத்தில் கேமரா வைக்கப்படுவதற்கு முன்பே குமுதத்தில் வந்து பாதியில் நின்று போன நித்யானந்தாவின் தொடர். நான்கைந்து பத்திகள் படித்ததுமே இந்தாளுகிட்ட அப்படி என்ன இருக்குன்னு கோவை வ உ சில இவ்ளோ பெரிய விளம்பரம் பண்ணி கூட்டம் போடுறாங்க என்று வியந்திருக்கிறேன். "அட  த்தூ" வகையறா

52. கந்தர்வன் கதைகள் 

இந்த தொகுப்பில் 62 கதைகள் இருக்கின்றன, இதுதான் அவர் எழுதிய மொத்த கதைகளுமே, பாதியை படித்துவிட்டு என் மாப்பிள்ளை அன்புவிற்கு திருமண பரிசாக கொடுத்துவிட்டேன். கந்தர்வனை பற்றி ஜெயமோகன் எழுதியதை அல்ல கொண்டாடியதை இதிலே கந்தர்வன் படிக்கலாம்.

53. ஸ்ரீரங்கத்து தேவதைகள் 

சுஜாதாவை படிப்பதில் இருக்கும் ஒரு ஜாலி என்னவென்றால் மிகுந்த சுவாரஸ்யமும், வேகமும் இருக்கும். ஒரு கதையின் பெயர் நினைவில் இல்லை "நான் வணிக எழுத்தாளனா? இல்லையா? என்பதை இந்த கதையை படித்து விட்டு முடிவு செய்து கொள்ளுங்கள்" என அடுத்த நாள் இறந்துபோகப் போகிறபோகிற மகளை மருத்துவம சிகிச்சைக்காக அனுமதிக்க அல்லல்படும் தாய் அற்புதமான சிறுகதை ஒன்று இருக்கும். வாசித்தவர்கள் அதன் தலைப்பை சொல்லுங்கள். இந்த ஸ்ரீரங்கத்து தேவதைகள் நிஜமா, கற்பனையா என்ற  சந்தேகம் புத்தகம் முழுக்க படிப்பவருக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்வார். படிக்கும் வாசகனை மெல்லிய புன்னகையை படற செய்வதில் சுஜாதா ஒரு மன்னன்.

54. சுபா

இது புத்தக தலைப்பல்ல, எழுத்தாளர்கள் சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் எழுதிய க்ரைம் கதைகளை வெகு சுவாரஸ்யமாக படித்துக்கொண்டிருந்த நாவல்கள் பற்றிய முழு தொகுப்பு. முன்பு பாக்கெட் நாவல் என்று அசோகன் (பார்ப்பதற்கு நக்கீரன் கோபால் மாதிரி இருப்பார் என்று அனுமானம்) வெளியிட்டு வந்தார். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் ஆகியோர் எழுத்தில் கிரைம் கதைகளாக வெளிவரும், ராஜேஷ்குமாருக்கு விவேக், ரூபலா, பட்டுக்கோட்டை பிரபாகருக்கு பரத், சுசீலா, சுஜாதாவிற்கு கணேஷ், வசந்த் என்று துப்பறியும் கதாபாத்திரங்கள் உண்டு... ஆனால் ஒரு குடும்பத்தையே படைத்தவர்கள் இரட்டையர்கள் சுபா தான். நரேன் வைஜெயந்தி மற்றும் ஈகிள் ஐ,  ராமதாஸ், ஜான் சுந்தர், இன்ஸ்பெக்டர் பால்ராஜ், என ஒரு பட்டாளத்தையே வைத்திருந்தார். அதிலும் முருகேஷ் என்ற சென்னை தமிழ் பேசும் கதாபாத்திரம் மறக்க முடியாதது.

பிடித்த புத்தகங்கள் மூன்றாம் பாகம் தொடரும்


Thursday, June 21, 2018

எல்லா நாளும் கார்த்திகை புத்தக விமர்சனம்

வம்சியில் புத்தகங்களின் பெயரை அலைபேசியில் அனுப்பினால் கூட அடுத்தநாளே வீடு வந்து சேர்ந்து விடுகிறது.
சைலஜா அவர்களுக்கு, அன்பும் நன்றியும்.

பவாவின் மேல் சத்தியமாக பொறாமையாக இருக்கிறது, மனிதர் எல்லோருடைய வாழ்வில் இருந்தும் எப்படி நிறைகளை மட்டும் எடுத்து நிரப்பி கொள்கிறார் என. அன்பென்பதை வாழ்வின் பாதையாகவே மாற்றிக் கொண்ட அபூர்வ பிறவி. எனது தாத்தாவிற்கு பின்னர் அவர்தான் கதை எனக்கு சொல்லி, நீடூழி வாழ்க.

எல்லா நாளும் கார்த்திகையில் இந்தியாவில் தலைசிறந்த மனிதர்களாக போற்றப்படும் 24 பேரின் மறுபக்கத்தை பகிர்ந்திருக்கிறார்.

இந்த ஆளுமைகளுக்கான சில வரிகளை, சில குறிப்புகளை பவா எழுத்தின் மூலமாகவே உங்களுக்கு பகிர தருகிறேன். இவர் சொன்ன படைப்பாளிகள் யார் என்று புத்தகம் படிக்கும் போது மிகுந்த சுவாரஸ்யத்தை கூட்டும் என்பதால் பெயர்களை மறைத்திருக்கிறேன்.

இதில் வரும் ஒவ்வொரு வரியும் ஒரு பிரபலங்களை பற்றியது அல்லது அவர்கள் சொன்னது...

"நான் புலி பவா"

"முதுகு குனிந்து நடக்கும் சமூகத்தில் நான் நிமிர்ந்து நடக்கிறேன்.
ஆம், நான் திமிர் பிடித்தவன் தான்"

"நீங்கள் உடன்பட வேண்டாம், ஆனால் இது என் கருத்து"

 அவர் உரையாற்ற தொடங்கியதுமே எல்லா அரசு ஊழியர்களின் முகங்களும் வெளிறி போயின

"சார் எத்தனை வருடமா குடிக்கிறீங்க?"
"அநேகமா ஒன்றரை வருடத்தில் இருந்து"

படைப்பின் உச்சத்தில் ஒளிரும்போதே கீழே விழுந்து கருகி விட வேண்டும் அதுதான் அவருக்கு நிகழ்ந்தது

இவர் இயக்கிய "குற்றவாளி" எனும் குறும்படம் என்றென்றும் பேச தக்கது

கமல்ஹாசன் தன் வாழ்வில் காண துடிக்கும் படைப்பாளி இவர்

இரு பெரும் ஆளுமையின் முன் ஒரு உள்ளூர் கவிஞன் வெட்கமாக நின்ற தருணம்.

"எனக்கொன்றும் இல்லை சார், அவரின் பெயர் இவ்வருட நோபல் பரிந்துரைக்கு போயிருப்பதாக சொல்கிறார்கள், அவ்வளவு பெரிய எழுத்தாளரை தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டு துறை அமைச்சருக்கே யாரென்று தெரியவில்லை என பதிவு செய்து கொள்ளட்டுமா?"

"என்ன வேணும் ***** உனக்கு?"
"ஒன்றுமே இல்லை"

"தமிழ் மக்களின் ரசனையை இத்தனை படம் எடுத்த அப்புறமும் புரிஞ்சிக்க முடியல பவா"


"ஒவ்வொரு தேசத்திலும் ஏதோ ஒன்று மட்டும்தான் என்னுள் பிரவேசிக்கிறது, மற்றதெல்லாம் பொருட்படுத்ததக்கவை அல்ல, ஸ்வீடனில் ஏரி, எகிப்தில் வீடு, இந்தியாவில் சாதுக்கள்'

"படைப்பிழந்து நின்ற அந்த தலைமை வரலாற்று சோகம்"

"எனக்கு அடுத்தவாரம் புதன் வியாழன் படப்பிடிப்பு இல்லை திருவண்ணாமலை வரட்டா? உங்க பிரண்ட் காலேஜில பிலிம் பத்தி சின்னதா ஒரு ஒர்க்க்ஷாப் நடத்தி தரேனே?"

"அவரோடு இருந்த பல தருணங்களை என் அப்பாவோடு இருந்த கதகதப்பை மனம் உணர்ந்திருக்கிறது"

"ரொம்ப குளிருதுப்பா, சிதையில் வச்சாத்தான் இந்த குளிர் போகும் போல"

"அம்பது குழந்தைகளுக்கு கேமரா கற்று தர வரமுடியுமா சார்?"
"அதை விட எனக்கு என்ன புடுங்கற வேலை?"

"அப்பா... உங்ககிட்ட ஒரு பாராட்டு வாங்க எனக்கு எட்டு வருஷம் ஆச்சு"

"மேடம், நான் உங்களை படம் எடுத்து பொழப்பு நடத்துற தேர்ட் ரேட் வியாபாரி இல்ல"

"அதை விடும்மா இன்னைக்கு ஒரு படம் எடுக்கலாம் எடுக்காம போகலாம் என் அப்பாவை நல்லா பார்த்துக்கறீங்கல்ல அது போதும் எனக்கு"

 "எழுத்தாளனாக இருப்பதை விட தமிழக அரசில் ஒரு கடை நிலை பணி ஊழியனாக பணி கிடைத்து உள்ளூரிலேயே இருக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தால் இதைவிட சந்தோசமாக இருந்திருப்பேன்"

"எந்த அகாலத்திலும் போக  இரண்டு வீடுகள் எனக்கு உண்டு என்பதை நம்புகிறேன், ஒன்று என் வீடு மற்றது பவா வீடு"

"இந்த ஜோயல் இருக்கானே இவன்தான் என் தாய், தகப்பன், நண்பன் எல்லாம்... மத்தியானம் அவன் பட்டினி கிடந்தது எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்ருக்கான் அவன் கணக்கையே அடைக்க முடியல"

பிரியங்களும், மனித நேயமும், ஆளுமையும் கொட்டி கிடக்கிறது இந்த புத்தகத்தில். காலம் கடந்து நிற்கபோகும் ஒரு அருமையான படைப்பு. இது நமக்கு நன்கு தெரிந்த ஒளி வட்டமும், பெருமையும், புகழும் நிறைந்திருக்கும் மனிதர்களின் மறுபக்கம். இந்த புத்தகம் மூடப்படும் தருணம் மனித நேயமேனும் வாசல் திறக்கிறது. நன்றி பவா.

கண்டீப்பாக வாசிக்க பட வேண்டிய புத்தகம்.

வெளியீடு: வம்சி புக்ஸ்


Wednesday, June 13, 2018

காஷ்மீரில் ரட்சகன்

மம்மூட்டியின் மலையாள புத்தகமான "காழ்ச்சப்பாடு" எனும் புத்தகத்தை  மூன்றாம் பிறை எனும் பெயரில் திருமதி சைலஜா மொழி பெயர்த்திருக்கிறார். ஒரு நடிகராக பார்த்தவரின் பின்னால் என்ன இருக்க போகிறது என்ற எண்ணத்தில் தான் தொடங்கினேன். ஆனால் அன்பால் பின்னப்பட்ட, சமூக பார்வை கொண்ட தத்துவ புத்தகமாக தொடர்ந்ததால் பெரும் ஆர்ச்சர்யம் கொள்ள வேண்டியதாயிற்று.

இன்னொன்றை கட்டாயம் சொல்லியாக வேண்டும், சைலஜா அவர்களின் மொழி பெயர்ப்பு மிகுந்த ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. மொழி பெயர்ப்பு புத்தகம் வாசிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அதன் அந்நியத்தன்மை நம்மை ஒன்ற விடாது. ஆனால் இதில் அதை தகர்த்துவிட்டு முழுதாக புத்தகத்தில் மூழ்க செய்கிறார் சைலஜா.

மொழிநடையும், அழகும், பரபரப்பும் கொண்ட ஒரு பகுதியை உங்களுக்கு படிக்க தருகிறேன், அதிலேயே தெரிந்துவிடும் இந்த புத்தகத்தின் மொத்த வீச்சும்.
----------------------------------------------------------------------------------------
பனிமலையில் சலனமற்ற அமைதி என்னை காஷ்மீரை நேசிக்க வைத்தது. பார்வை துளித்துளியாய் முடியும் நேரம் வரை வெண் பஞ்சு கூட்டமாய் கொட்டிக்கிடக்கும் பனி ப்ரவாகமும், தத்தி தத்தி விழும் பால்யத்தை போன்ற பனி துகள்களும் இப்போதும் மனதில் உறைந்திருக்கிறது.பனி குன்றுகளில் இருந்து குன்றுகளுக்கு தாவும் காட்சிதான் அன்றைய படப்பிடிப்பு.


காலை பதினோரு மணிக்கு படப்பிடிப்பு ஆரம்பிப்பதாக இருந்தது. "குல்மர்க் ஹில்டன்" விடுதியிலிருந்து அதிக தூரம் பயணம் செய்த பின்னரே படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அடைய முடியும். சக்கரத்தில் சங்கிலி பிணைத்த வண்டிகளையே பனிமலையில் பயன்படுத்துகிறார்கள். நான், சுரேஷ் கோபி, முகேஷ், கணேசன், விஜயராகவன், குஞ்சன், சித்திக், மோகன், ஜோஸ், மணியன் பிள்ளை ராஜு என எல்லோரும் சேர்ந்து சங்கிலியால் சக்கரம் பிணைக்கப்பட்ட வண்டியில் புறப்பட்டோம். பிரதான சாலையை விட்டு மலைப் பாதைக்கு திரும்பியதுமே புறக்காட்சிகளின் வசீகரம் எங்களை ஈர்த்தன. பனியால் சூழப்பட்ட வெண்மையென்ற ஏக நிறமானாலும், நிற்க வைத்து கவனத்தை கோரும் அழகு அதற்கிருந்தது. காலை பத்து மணி. வண்டியில் கேட்ட அபஸ்வரத்தின் தொடர்ச்சியாய் நின்று போன வாகனத்திலிருந்து இறங்கி பார்த்த டிரைவர் ஹிந்தியில் சொன்னான்.

"சின்ன பிரச்னை தான் உடனே சரி பண்ணிடறேன்"

பிரச்னையின் தீவிரத்தை ட்ரைவர் உட்பட நாங்கள் யாருமே புரிந்து கொள்ளாமல் போனதால், வண்டிக்கு உட்கார்ந்தபடி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். பிறகு வெளியே இறங்கி வந்து சூழலின் அழகை ரசித்தோம். கேலிக்கும், கிண்டலுக்கும் குறைவதும் இல்லாமல் நேரம் நகர்ந்தது. மகிழ்வின் சிறகடிப்புகளில் இரண்டு மூன்று மணி நேரம் உதிர்ந்திருந்தது. பேச்சின் கதகதப்பில் மெல்ல மெல்ல ஈரம் படர்ந்தது. பலருக்கும் கிண்டலே வராமல் போன நேரமது. பசிக்க தொடங்கிய நேரத்தில் சாப்பாடு இல்லையென்றாலும் நல்ல சாப்பாட்டை பற்றி பேசலாமே என எப்போதோ சாப்பிட்ட செம்மீன் குழம்பு வைப்பதை நேர்த்தியாக சொல்ல தொடங்கினேன். சுத்தமாக கழுவிய செம்மீனை, மிளகாய், வெங்காயம், இஞ்சி வைத்து நன்றாக கல்லில் தட்டி எடுத்து புரட்டி கொள்ள வேண்டும். மசாலாவில் ஊறிய செம்மீனை இளந்தீயில் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி நீர் வற்றும்போது குடம்புளி கறிவேப்பில்லையில் சேர்த்து வறுத்து எடுக்க வேண்டும்.

பசியை மறக்க சாப்பாட்டை பற்றிய விவரணையே சிறிது நேரத்திற்கு போதுமானதாக இருந்தது. எங்கள் வண்டியில் தண்ணீர் கூட இல்லை. பழுது சரியாகி விடுமென்று டிரைவர் இன்னமும் சொல்லிக் கொண்டிருந்தான். மேலும் மூன்று மணி நேரம் கரைந்திருக்க பலரின் முகம் இருளடைந்தது. கடைசி முறையாக வண்டியில் இருந்து வெளியே வந்த டிரைவர் இப்போதைக்கு வண்டியை சரி செய்ய முடியாதென்றும் நாளை காலை மெக்கானிக் வந்தால்தான் முடியுமென்றும் சொல்லி அதிர வைத்தார். பணியில் வண்டி புதைந்து நீரன்று பழக்கமிருந்த டிரைவரின் பேச்சில் எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் இருந்தது. ஆனால் அதைக் கேட்ட எங்கள் முகங்களில் ரத்த நாளங்கள் வற்றி போனது.

               மணி ஆறு, காலையில் ஹோட்டலில் எதுவும் சாப்பிடாமல் லொகேஷனில் போய்ப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்திருந்த எங்களுக்கு அந்தக் குளிரிலும் பசி அதிகரித்தது. பசியில் தளர்ந்து போயிருந்தோம். ஒரு பகல் முழுவதும் அங்கேயே நின்றிருந்த போதும் எந்த வாகனமும் எங்களை கடந்து போகவில்லை. எங்களை தேடி யாரும் வரவும் இல்லை. ஒருவேளை நாங்கள் பாதை மாறி வந்திருக்கலாம் அல்லது பனிமலை சரிந்து மூடியிருக்கலாம். சாலையின் ஒருபுறம் மலைக்கு மேலே போகும் பனிமலை, மறுபுறம் ஆழமான பள்ளம். அந்த இடத்தின் பேரழகு ஏதோ ஒரு பயங்கரத்தை தனக்குள் புதைத்து வைத்திருப்பதாக தோன்றியது                               
பனிக்காற்றை தடுக்கும் போர்வைகளோ, கம்பளி உடைகளோ எங்களிடம் இல்லை, பகலில் அணியும் சாதாரண உடைகளையே அணிந்திருந்தோம். இன்னும் இரண்டு மணி நேரத்தில் பனிக்காற்றின் தாண்டவம் தொடங்கிவிடும். அந்த அதிர்வில் அதன் பாகங்கள் உடைந்து விழலாம், வண்டியில் உக்காந்திருப்பது கூட ஆபத்தானது. நாங்கள் பேச்சற்று போயிருந்தோம். எங்களிடம் வயர்லெசோ அலைபேசியோ இல்லை. எப்படி இந்த இரவை கடப்பது? விடிந்தால் எங்களில் யார் மிச்சமிருப்பார்கள்? அதி சீக்கிரமாக சூழல் இருள துவங்க பனிக்காற்றின் ஊளையிடல் ஒரு துர்கனவினை போல எங்களை கவிழ்த்தது. பனியிலும் பயத்திலும் உறைந்து போனோம். சட்டென அதிர வைப்பது போல மலை உச்சியிருந்து ஒரு குரல்.

 "ஏய் மம்முட்டி"

   அனைவரும் அதிர்ந்து ஒலி வந்த திசையில் திரும்பினோம், இந்த இரவில் காஷ்மீரின் நடுக்கமான குரலில் யார் என்னை கூப்பிடுவது?

  மலையில் இருந்து மூன்று பேர் பெட்டியை தூக்கிக்கொண்டு இறங்கி வந்தார்கள். உடல் முழுவதும் கம்பளிகளால் மூடி இருந்தார்கள். அருகில் வந்தபோது ஆஜானுபாகுவான ஒரு ஆணும், பெண்ணும், இளம்பெண்ணுமாக மூன்று பேர் என்பது புரிந்தது. கனவா அல்லது நிஜமா என்றே தெரியவில்லை. அவர் தன்  கையை என்னை நோக்கி நீட்டி பச்சை மலையாளத்தில்,

"நான் கர்னல் கமால், திருவனந்தபுரம்" என்றார்.

இறுகப் பிடித்த அவருடைய கைசூட்டின் இதமான வெப்பம் மிகப் பெரிய நிம்மதியாய் என் உடல் முழுவதும் பரவியது. எங்கள் எல்லோர் முகங்களிலும் வர்ண மொட்டுக்கள் பூக்க ஆரம்பித்தன. நாங்கள் கர்நாளிடம் எங்கள் சூழ்நிலையைச் சொன்னோம்.

எங்கள் வண்டி நிற்பதற்கு கொஞ்சம் மேலேதான் அவருடைய வீடு. பக்கத்தில் இதேபோல் வேறு சில வீடுகளும் இருக்கின்றன. ஆனால் மழையின் அடுத்த அடுக்கிற்கு ஏறினால்தான் அந்த வீடுகளை பார்க்க முடியும். பனி மூடியதால் அவற்றைக் கொண்டுபிடிப்பதும் சிரமம். வீட்டிலிருந்து வண்டிப்பாதையும் தெரியாது. எங்களுடைய வண்டி பழுதாகி நின்றிருந்த இடத்தையும் தாண்டி, நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற அவர்களுடைய வண்டியை எடுக்கவே அவர்கள் இப்போது வந்திருக்கிறார்கள். மகளை இரவுப்பயணத்திற்கு டில்லிக்கு அனுப்பவேண்டும். காலையிலிருந்து சாப்பிடாமல் இருக்கும் எங்கள் நிலைமையை அவரிடம் சொன்னோம். அவர் எங்களை அவர்களின் வீட்டிற்கு அவசரமாய் அழைத்துப் போனார்.

ஊருக்கு போக இருந்ததால் அவர்கள் வீட்டில் அன்று சமைத்திருக்கவில்லை. சமையலுக்கான பொருட்களும், பெரிதாக அந்த வீட்டில் இருப்பில்லை. கிடைத்த கேக்கும்,ரொட்டி துண்டுகளும் கருப்பு டீயும் அதீத ருசியை தந்தன. இனி இறந்து போக மாட்டோம் என்ற தைரியம் துளிர்விட முகம் தெளிய ஆரம்பித்து மற்ற விஷயங்களையும் யோசிக்க வைத்தது. கமாலின் வீட்டிலிருந்து நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு தொலைபேசியில் தகவல் தந்தோம்.

கமால் அவருடைய கார் நிற்கும் இடத்திற்கு எப்போதும் வேறு வழியில் தான் செல்வாராம். அன்றைக்கு மட்டுமே இந்த வழியில் வந்திருக்கிறார். பகல் முழுவதும் அதே இடத்தில பட்டினியால் அலைந்தபோதும் கொஞ்சம் மேலே சாலை ஓரத்தில் பனியில் புதைந்தபடி இப்படியொரு வீடு இருப்பதை நாங்கள் பார்க்கவில்லை. ஆனால் இரவில் ஆபத்தின் விளிம்பிலிருந்து எண்களைக் காக்க ஒரு ரட்சகனாய் கமால் வந்தார். ஆகாயத்திலிருந்து ஒரு ரட்சகன் இறங்கி வருவதை போலத்தான் முதல் பார்வையில் அவர் எங்களுக்கு தெரிந்தார். அதன் பின்பு அங்கிருந்த நாட்களில் கமாலோடு நெருங்கிய நண்பர்களானோம். அந்த திருவனந்தபுரத்து மலையாளியை அதற்கு பின்பு நான் சந்திக்கவே இல்லை.

"உயிர் காத்த ரட்சகனே இப்போது நீ எங்கிருக்கிறாய்?"

கடுங்குளிரிலும் பனிபொழிவிலும் காப்பாற்றப்பட்ட அந்த இரவின் அடர்த்தியில் நான் ராணுவ வீரர்களைப் பற்றி பலவாறு யோசித்தபடி இருந்தேன்.

ஒரு நாளில் தற்செயலாய் அமைத்த பட்டினியையும், குளிரையும், நிர்கதியையுமே எங்களால் தாள முடியாமல் தளர்ந்திருந்தோம். நாள் கணக்கில் உணவும் தண்ணீருமில்லாமல் தனியாளாய் சில இடங்களில் மாட்டிக்கொள்ளும் ராணுவ வீரன், ஐஸ் கட்டியை கையில் எடுத்து உரசி சூடாக்கி, தண்ணீரை குடித்த அனுபவதியெல்லாம் கமால் சொன்னார். நாம் தூங்கும்போது, இந்த அவஸ்தையிலும், நம் நல்வாழ்வுக்காக, பாதுகாப்புக்காக, நிம்மதிக்காக, நாம் காணும் சந்தோச கனவு கலையக்கூடாது என்பதற்காக, அவர்கள் பனிபொழியும் இரவுகளில் காவலுக்கு நிற்கிறார்கள்.

எல்லை பாதுகாப்பில் இருக்கும் ஜவான்களுக்கு வாழ்விற்கும், மரணத்திற்குமான தூரம் ஒரே ஒரு வெடிகுண்டின் இடைவெளியாக மட்டுமே இருக்கிறது. நம் எல்லோரையும் அதன் அழகின், கம்பீரத்தை வழி ஈர்க்கும், பனியில் பொதித்து வைக்கப்பட்டிருக்கும் கன்னி வெடிகளுக்கு மேலே வைக்கும் ஒரு காலடியில் அகலம் மட்டுமே இருக்கிறது. ராணுவவீரர்கள் தங்களுக்குள் எந்த பகையுடனுமில்லை. அவர்கள் பரஸ்பரம் அறிமுகமே இல்லாதவர்கள். ஆனால் தங்கள் நாட்டிற்காக பகையியேற்றிருக்கிறார்கள்.

ஒரு கோழியை கொல்லக் கூட தயங்கும் சாத்வீகன்தான் எதிரில் வரும் ஒரு மனிதனின் இதயத்துக்கு நேராக மிகச்சரியாக குறிபார்க்கிறான். வெடிகுண்டை வெடிக்க செய்து மனிதகுலத்தைச் சீதைத்தழிக்கிறான்.

பனியிலும் கடுங்குளிரிலும் தூங்காமல் பார்வையைக் கூர்மையாக்கி, துப்பாக்கியுடன் உலவும்பொழுது மனதில். வீட்டில் உள்ளவர்களின் முகங்களோ, சொந்தபந்தங்கள் நினைவுகளோ இல்லை. மின்னி மறையும் ஒரு நிமிட இடைவெளிகூட ஒரு யுத்தத்திற்கான முதல் அழைப்பாய் இருக்கலாம். எந்தக் சூழலிலும் உள்ளே அணையாமல் இருப்பது தேசத்தின் மீதான மாறாத பற்று மட்டுமே.

யுத்த காலத்தில் மட்டும் நாம் இவர்களை பற்றி கொஞ்சமாவது யோசிக்கிறோம். யுத்தமில்லாத நேரங்களில் வெறுமனே தின்றும், குடித்தும், அலைந்தும் நாட்களை கடத்துபவர்களாகத்தான் நாம் அவர்களை நினைக்கிறோம். "அவன் மிலிட்ரிக்காரன்" எனும் தொனியில் விடுமுறையில் கொண்டுவரும் மதுகுப்பிகளிலேயே நம் கவனம் குவித்து, அவனுடைய தியானத்திற்கான மரியாதையை சிதைக்கிறோம். மிகச்சரியாக இயற்கையின் பேரழிவையோ, ஒரு வெடிகுண்டின் சப்தத்தையோ அனுபவித்தறியாத ஒருவனுக்கு பத்திரிகையிலும் தொலைக்காட்சியிலும் பார்ப்பது மட்டுமே யுத்தம். எல்லையில் நடக்கும் கலவர பேராவஸ்தை பற்றி அவனுக்கு என்ன தெரியும்? நம்முடைய தேசத்தின் மீதான பிரியம் கூட எதார்த்தத்தில் இருந்து மிக தொலைவில் நிற்கிறது.

வீர மரணம் அடையும் ராணுவ வீரர்களை நேசிப்பது போல, நமக்காக தன் சந்தோசத்தின் துளிகளைக் கூட தியாகம் செய்து காவலிருக்கும் அந்த வீரர்களை நாம் நேசிப்போம். மரியாதை செய்வோம், அவர்களை நினைத்து பெருமைப்படுவோம். கர்வப்படுவோம். அவர்களை போல் இந்த தேசத்திற்கு என்ன செய்யலாம் என யோசிப்போம்

ஜெய் ஹிந்த்.
-------------------------------------------------------------------------------