Saturday, February 16, 2019

அன்புள்ள மிஷ்கின் அவர்களுக்கு,

வணக்கம்.
இப்போதுதான் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை ஹாட் ஸ்டாரில் பார்த்தேன். இந்த கடிதம் வணிக சம்மந்தமானதல்ல, அது சம்மந்தமாக எழுதினாலும் யாருக்கும் உபயோகமும் இல்லை.
தவிர இந்த படத்தையும் நீங்கள் வணிக ரீதியில் சமரசம் செய்ய முற்படவில்லை என்பது வேறு விஷயம். "ஏன் முன்பு தியேட்டரில் பார்க்கவில்லை?" என்ற கேள்விக்கு நிச்சயம் என்னிடம் பதிலில்லை, ஏனெனில் படம் வந்ததே தெரியாத அளவிற்கு எனக்கு ஏற்பட்ட விபத்தோ, மகனின் பிறப்பில் ஏற்பட்ட கோளாறால் மருத்துவமனையிலோ அல்லது வேறு ஏதாவது பண தேவை சம்மந்தப்பட்ட பைத்தியமாகவோ நான் இருந்திருக்க கூடும்.
நிற்க,
படத்தின் கதாநாயகன் சர்வ நிச்சயமாக இளையராஜா தான், இந்த படத்தின் காட்சிகளை பார்வையாளர்களுக்கு வசனம் எழுதி புரிய வைக்க வேண்டிய தேவையை ஏறக்குறைய விலக்கியே வைத்து விட்டார். படத்தை பதைபதைப்பாய் கொண்டு சென்றதில் அவர்தான் போர் வீரன்.
ஓநாய் நீங்கள் தான். உடல் மொழியில் அப்படியே கொண்டுவந்திருக்கிறீர்கள், உடல் முழுவதும் காயம்பட்டு கிடந்தாலும் கொஞ்சம் கூட குறையாத வேட்டையாடும் துடிப்பும், இழப்பின் ஊமை தவிப்பும், அதுவும் ஒவ்வொரு இழப்பின்போதும் மெளனமாக தலை குனியுமிடம் உச்சம். திருநங்கை ஏஞ்சல் கிளாடியா தலை நிமிர்ந்து உங்களை பார்க்கையில், காப்பாற்ற இயலாமல் தரை நோக்கும் காட்சி உச்சமய்யா. என்னால் இன்னமும் அதிலிருந்து மீண்டு வர இயலவில்லை. படத்தில் உங்களுக்கு வசனமே இல்லையோ என நினைத்திருந்த நேரத்தில் அந்த "எட்வினண்ணா நீங்களாவது கதை சொல்லக் கூடாதா" என குட்டி இளவரசி கேட்கையில் ஆரம்பித்தீர்களே? கண்கள் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது.
ஸ்ரீ எனும் ஆட்டு குட்டியின் உடலில் ஒரு டன் சுமையை வைத்து சுமக்க சொல்லி விட்டீர்கள், அற்புதம் அந்த குட்டி எந்த வித யோசனையுமில்லாமல் உங்களின் உடலைக் கூட சேர்த்தே சுமந்து வந்தது.
இதை தாண்டிய வசீகரிப்பை சொல்லிக்கொண்டே போகலாம்
"நீ டாக்டர், நீ டாக்டர்" என கையில் கொடுத்த பணத்தை வீசி எறிந்து விட்டு குதூகலிக்கும் மனநிலை தவறியவர்.
"அவனை அரெஸ்ட் பண்ணது தப்புதான் சார், நியாயமா உங்களை முதல்ல பிடிச்சிருக்கணும்" வெறியோடு குற்றவாளியை தேடி தொலைத்துக்கொண்டே இருப்பவனின் கோபம்.
"பணமெல்லாம் தேவைப்படாது, நான் சாகப்போறேன் அதுக்கு முன்னாடி எட்வினை கொல்லனும்" முதன்மை தொழில்முறை வேலைக்காரனின் கூரிய வசனம்.
"மூத்திர பையோட அலைஞ்சிட்டிருக்கேன், அவனை உயிரோடவும், உயிரில்லாதவும் பார்க்கணும்" கடிபட்ட கரடியின் வெறி.
"கொல்லப்பட்டு சாவும் போலீஸ்காரர்கள் வித விதமான குரலெழுப்பி சாவது,
அதிலும் அந்த "ஐயா", பதவியை அந்த வார்த்தையாலே தக்கவைத்து, சாகும் போதும் அது தவிர வேறு எண்ணமே வராத எழுபது விழுக்காடு காவலர்களின் நிலைமை.
"நல்லவேளை அதில ஒருத்தன் மார்ல உதைச்சான், மயக்கமாகி விழிச்சு பார்க்கிறேன், இங்கே இருக்கேன்" எனது நெஞ்சிற்கு கடத்தப்பட்ட வலி.
சாவின் விளிம்பிலும் யாரும் துப்பாக்கியால் சாக கூடாது என மேல் நோக்கி சுடும் அப்பா.
ஒரு பெரும் கொலைகாரன் கதவை திறந்து விடச்சொல்லி பார்வையால் காவலாளியை கெஞ்சும் இடம்
"அம்மாக்கு என்னாச்சு எட்வின் அண்ணா?" என்ற பதில் சொல்லவே இயலாத கேள்விக்கு,
"செத்துட்டாங்க" ஒரே வார்த்தையில் அதை முடித்த விதம்.
ஒரு திரில்லர் படத்தில் மனித நேயத்தை விதைக்கும் வித்தை எப்படி கை வந்தது?
இந்த அரைகுறை எழுத்தை வைத்துக்கொண்டு என்னால் இதற்கு மேல் எழுத தெரியவில்லை
வேறென்ன....
உங்களுக்கும், பவாவிற்கும் நன்றி மிஷ்கின், ஏனெனில் உங்களை ஒரு இயக்குனராக இல்லாமல் "இந்த ஜோயல் இருக்கானே இவன்தான் என் தாய், தகப்பன், நண்பன் எல்லாம்... மத்தியானம் அவன் பட்டினி கிடந்தது எனக்கு பத்து ரூபாய்க்கு சோறு வாங்கி போட்ருக்கான், அவன் கணக்கையே அடைக்க முடியல பவா" என வேறு ஒரு கோணத்தில் எல்லா நாளும் கார்த்திகையில் அறிமுகம் செய்ததே அவர்தான். புத்தகங்களை அடுத்தநாளே அனுப்பிய என் அக்கா சைலஜாவிற்கும் அன்பு.
உங்கள் காட்டின் இந்த இலை, இனி ஒநாயையும் ஆட்டுக்குட்டியையும் அதன் உள்ரேகை போல சுமந்து கொண்டே திரியும்.

Thursday, February 14, 2019

டாலர் தேசம் புத்தக விமர்சனம்

பொதுவாக பொருளாதாரம், கடந்த கால வரலாறு போன்ற புத்தகங்கள் போரடிக்க கூடியவை, விதி விலக்காக மதன் தமிழில் சுவாரஸ்யமாக எழுதுவார். அதுவும் கிமுகிபி அட்டகாசமாக வந்த புத்தகம். அதற்கு அடுத்தபடியாக  பா ராகவன்  அமெரிக்காவின் கதையா டாலர் தேசம் என்ற பெயரில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதி  வெளியிட்டிருக்கிறார், நான்கு நாட்களில் 600 பக்கங்கள் கொண்ட  அந்த புத்தகத்தை இன்றுதான்  முடித்தேன்.

ஒரு ராட்டினத்தில் அமரவைத்து மிக உயரமாக சென்று கீழிறங்கியதை போல ஜெட் வேகம். மூன்று நாட்களிலேயே படித்து முடிக்க முடிந்தது. அமெரிக்காவை கண்டுபிடித்ததில் இருந்து சதாம் உசேனை பிடித்தது வரை பல புத்தகங்கள் மற்றும் இணைய தளங்கள் உதவியுடன் எழுதி இருக்கிறார். மக்களை உணவுக்கே கையேந்த விட்ட அமெரிக்கா எப்படி வல்லரசானது, வெளியுறவு கொள்கை என்று படிக்கிறோமே அது என்ன? உலகில் ஏதாவது ஒரு மூலையில் இன்னமும்  ஏன் போர்கள் நிலவுகின்றன, அங்கெல்லாம் பொருளுதவி, எக்கச்சக்கமான பண உதவி கொண்டு ஓடி வந்து  அமெரிக்கா உதவுகிறதே எதனால்? என்பது போன்ற எக்கச்சக்க கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறது இந்த புத்தகம்.

அந்தந்த காலகட்டங்களை நேரடியாகவே கூட்டிப்போய் திரைப்படம் காட்டுவது போல் காட்சிகளை விவரிக்கிறார் எஸ் ரா., ஜார்ஜ் வாஷிண்டனுக்கு முன்னாலேயே ஏழு அதிபர்கள் ஆண்டாலும் அதை மறைத்த இருண்ட பக்கங்களின் வரலாற்று குறிப்பு, உண்மையான அமெரிக்கர்களான செவ்விந்தியர்களின் பரிதாப நிலை, லிங்கனின் வரலாறு,
கறுப்பினத்தவர்களின் அடிமைப் புரட்சி, முதல் உலக யுத்தம் கொடுத்த லாபம், டாலர் சம்பாதிக்க ஆரம்பித்த வழி,  அதன் பின் வந்த சோசலிச கம்யூனிஸ போட்டிகள், உருவான நவீன அமெரிக்கா என ஜரூராக முதல் பாகம் செல்கிறது.
ஹிட்லர் ஆடிய ஆட்டங்கள், அவரின் வீழ்ச்சி,  பேர்ல் துறைமுக அழிப்பு, தொடர்ந்த அந்த ஹிரோஷிமா நாகசாகி பயங்கரம், ரஷ்யாவிற்கும், அமெரிக்காவிற்குமான பனிப்போர், அதன் விளைவுகள், வியட்னாம் என்றொரு குட்டி தேசம் ஏற்படுத்திய ஆறா காயங்கள். மார்ட்டின் லூதர் கிங் என முழுவதையும் ஒன்று விடாமல் அலசி அதில் சுவாரஸ்யமானதை தொகுத்து ஆத்ம சுத்தியுடன் (குறைத்து ஐம்பது இடங்களிலாவது ஆத்ம சுத்தி வருகிறது) கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.

குஜாலான கிளிண்டன் மோனிகா பக்கங்களும் உண்டு, கனிம வளங்களை வளைக்க செய்யும் யுத்திகள்,  ஹமாஸும், பின்லேடனும், சதாம் உசேன் பகுதிகளும் எக்ஸ்பிரஸ் ஓட்டம், திகில் தரும் திட்டமிட்ட சம்பவங்கள். அதிலும் கால்வாசி புத்தகம் பின் லேடன் பற்றித்தான். செப்டம்பர் 11ம் தேதி சம்பவங்களின் பக்கத்திலே யாரோ தீவிரவாதி அமர்ந்து திட்டமிட்டது போல தொகுப்பு ஜில்லிட வைக்கிறது. சரியான திட்டமிடல், அதற்கு தகுதியான ஆட்கள், ஊடுருவும் போராளிகள், பயிற்சி, கடைசி வரை ரகசியம் காத்தல், தனி மனிதனாக உலகின் ஒரே ஒரு வல்லரசுக்கு அறை கூவல் விடுதல் காரியத்தை கச்சிதமாக செய்து முடித்தல் என பின் லேடன் பகுதி ரணகளம். அதுசரி, பின்லேடனை விட்டுவிட்டு அமெரிக்க சரித்திரம் எழுத முடியுமா என்ன? இந்த புத்தகத்தை படித்த பின் உங்களின் அரசியல் பற்றிய பார்வையே மாறிப்போகும் என்பதற்கு நான் உத்திரவாதம்

உலக அரசியல் தெரிந்து கொள்ள நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம். அமேசானில் புத்தகமாகவும், மின் நூலாகவும் (மூன்று மடங்கு குறைந்த விலையில்) கிடைக்கிறது