Tuesday, October 25, 2016

தேவதேவன் கவிதைகள் இரண்டு

தேவதேவன்

கடவுளின் நிலைமையில் இருந்து யோசித்து எழுதியது போன்ற எளிய கவிதை போல் தெரிந்தாலும், ஆழமான அர்த்தம் கொண்டது பின் வரும் கவிதை, வேறென்ன செய்து விட முடிகிறது கடவுளால்

"காட்சியளிப்பது மட்டுமே தன் கடமையென

உணர்ந்தார், துயர்குழப்பமிக்க

இவ்வுலகில் தன் கடமை என்னவென்ற

வெகுயோசனைக்குப் பின்,

கடவுள்"

பூனை கவிதை, எல்லோருக்குள்ளும் ரசிப்பு தன்மை ஆரம்பிக்கும் முதல் பார்வையே பயத்தில் இருந்து தானே தொடங்குகிறது, பால்யத்தை மீட்டெடுக்கும் நினைவு படலங்களுடனே முடிகிறது இக்கவிதை...   

"முதல் அம்சம்

அதன் மெத்தென்ற ஸ்பரிசம்

குழைவு அடிவயிற்றின்

பீதியூட்டும் உயிர் கதகதப்பு


இருவிழிகள் நட்சத்திரங்கள்

பார்க்கும் பார்வையில்

சிதறிஓடும் இருள் எலிகள்

நான்! நான்!என புலிபோல

நட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்

உருளும் கோட்டமுள்ள சக்கரமென

புழுப்போல

அதன் வயிறசைதல் காணலாம்

கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாத

சாமர்த்திய நடை இருந்தும்

மியாவ்என்ற சுயப்பிரலாப குரலால்

தன் இரையை தானே ஓட்டிவிடும்

முட்டாள் ஜென்மம்

நூல்கண்டோடும்

திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்

விளையாடும் புத்திதான் எனினும்

பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு

எலியை குதறுகையில்

பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்

நக்கி நக்கி பாலருந்துகையில்

தெரியவரும் இளகிய நாக்கையும்

ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்

ஞாபகப்படுத்திப்பாருங்கள்

உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்

இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவே


சினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?"

Friday, October 21, 2016

An Occurrence at Owl Creek Bridge அட்டகாசமான குறும்படம்


An Occurrence at Owl Creek Bridge என்னும் கதையை அம்ப்ரூஸ் பியர்ஸ் என்பவர் 1891லேயே எழுதி  இருந்தார், அது பிற்பாடு குறும்படமாக எடுக்கப்பட்டு பல விருதுகளை அள்ளி குவித்தது.

செர்லாக் ஹோம்ஸ் கதைகள் எப்படி நூற்றாண்டு கடந்த பின்னும் சுவாரஸ்யம் குறையவில்லையோ அதே போல, இதுவும் மிக சிறப்பான திரைக்கதை அமைக்கப்பட்டு youtubeல் காண கிடைக்கிறது.

ஒரு துளி வசனம் கூட இல்லாமல் வெறும் காட்சி அமைப்பில் உருவான கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த கூடிய நல்ல படம். வெறும் பதினோரு நிமிடங்கள் தான் வருகிறது.

இதில் பாடல்களை இணைத்திருக்கிறார்கள்,  இசையும் பாடலும் அந்த படத்திற்க்கு இன்னும் வேகம் சேர்க்கின்றன.

கதை

ஒரு தண்டனை கைதியை, ஒரு பாலத்திற்கு கீழே அழைத்து வந்து, கை, கால்களை கட்டி, கயிறை கழுத்தில் மாட்டி தூக்கில் போட போகிறார்கள் அதிகாரிகள், அதை நிறைவேற்றும் சமயத்தில், அதிர்ஷ்ட வசமாக  அந்த கயிறு அறுந்து அவன் நீருக்குள் வீழ்கிறான், தனது கட்டுகளை அவிழ்த்து, நீருக்கு மேலே வந்து தப்ப முயல்கிறான்,   துப்பாக்கியால் சுட்டு மீண்டும் அவனை கொல்ல முயற்சிக்கிறார்கள்.

அம்முயற்சியிலும் அவன் தப்பி, தன் வீடு செல்கிறான். அவனுக்காக அவன் மனைவி காத்திருக்கிறான். கடைசி இரண்டு செகண்ட்கள் காட்சியமைப்பு மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறது. ஏன் அத்தனை விருது அதற்க்கு கிடைத்தது என்பது பிறகு உங்களுக்கு புரியும். பட்டென முடிந்து விடும் அந்த காட்சியை சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். பொறுமையாக முழுதும் பாருங்கள்.

மொக்கை தமிழ் சினிமாவை பார்பதற்க்கு பதில், இதற்கு தாராளமாக நேரம் செலவழித்து பாருங்கள், அற்புதமான திரைக்காட்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அரை நூற்றாண்டுகளுக்கு முன்பே உதாரணம் காட்டி இருக்கிறார்கள்.

கீழே இருக்கும் அந்த படத்தின் பெயரை click செய்து பார்த்து விட்டு, உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக இடுங்கள்.                    

An Occurrence at Owl Creek Bridge or dead mans dream

Monday, October 3, 2016

பேயை நேருக்கு நேர் சந்தித்த போது...

 திகில் கதை என்று பதட்டப்பட்டு தெறித்து விட வேண்டாம், உங்களை எந்த விதத்திலும் பயப்படுத்தாது என்ற உத்தரவாதத்துடன் தொடங்குகிறேன்.

 பத்தாம் வகுப்பு விடுமுறையின் போது , பொலவக்காளிபாளையம் எனும் என் சிறிய கிராமத்தில் இருந்து, கோபிசெட்டிபாளையம் சாந்தி தியேட்டரில் வீட்டிற்கு தெரியாமல் நைட் ஷோ பார்ப்பதில் எங்கள் சங்கத்துக்கு திரில் இருந்தது. அதுவும் ஜாக்கிஜான், ஜெட்லி படமென்றால் இரகசிய திட்டத்துடன், வீட்டில் ஆட்டையை போட்ட ஐந்து, பத்து பணத்துடன் ஜெட்டில் (சைக்கிள் தான்) கிளம்பி விடுவோம்.

 
படம் முடித்து ஜாக்கிஜான் போலவே ஓடி வந்து சைக்கிளில் ஏற முயன்ற என் அண்ணா ஜகதீஸ், நான் பிரேக் பிடித்தால் படாத இடத்தில் பட்டு ஒரு வாரம் மருத்தவமனையில் ஓய்வெடுத்தது, கேட்டின் வழியே செல்லாமல், வீரத்தை காட்ட வீட்டின் ஓட்டை பிரித்து அவர் இறங்கும்போது, உள்ளே இருந்த அவர் அம்மா நிஜ ஜாக்கிஜானாக மாறி அவரை பிரித்து எடுத்தது எல்லாம் எங்கள் வரலாற்று காவியங்கள்.

நிற்க,

 அதே போன்ற ஒரு இரவில் மூன்று பேர் கொண்ட குழு வீர சாகச திரைபடத்தை பார்த்து விட்டு, வித்தை செய்யும் முடிவுடன் பதினைந்து நிமிடத்தில் ஊர்க்கு வந்து சேர்ந்தோம் (7 கி மீ), வடக்காலூர் தெக்காலூர் என்ற இரு பெரும் கிளைகள்(?) எங்கள் ஊருக்கு உண்டு, மற்ற இருவரும் அதே வேகத்தில் என்னை சுடுகாட்டுக்கு பிரியும் வழியில் விட்டுவிட்டு வடக்கே பறந்து விட்டனர். நண்பர்களாம்....  நான் தெற்க்கே போக வேண்டும்  

 வீரப்பரம்பரையானாலும், சரியாக 12 மணியளவில் சுடுகாடு வழியாக வீட்டுக்கு செல்வதென்பது எந்த கைப்பிள்ளைக்கும் பெரும்சோதனை தரக்கூடியது.

வெகு வேகமாக அந்த இடத்தை சைக்கிளில் கடந்து விடுவதும், கடந்த பின் "தப்பிச்சோம்" என்ற பெருமூச்சு விடும் சாதனையை நிறையமுறை நிகழ்த்தி இருந்ததாலும், அதே போன்ற வேகத்துடன் அன்றும் செல்ல ஆரம்பித்த உடன் நேர்ந்தது சோதனை.

  சினிமா படங்களில் வரும் காட்சியை போலவே வெள்ளை புடவை கட்டி, வேகமாக தூரத்தில் ஒரு உருவம். சரியாக பிணம் எரிக்கும் இடத்தின் இடது புற சாலையில் நான். அந்த பயத்தின் உணர்வுகளை வார்த்தையாய் கொண்டு வருவது என்பது பாலா படத்தில் நடிப்பதை விட மோசமானது.

 வருவது கிளைமாக்ஸ்...

 "யார்றா அவன்" என்று என்னை சப்தம் போட்டு கேட்டது பேய், சப்த நாடியும்  ஒடுங்கி விட்டதென்று படித்திருப்பீர்கள், அனுபவித்தேன். சைக்கிளை போட்டு கீழே விழப்போன என்னை ஓடி வந்து பிடித்து விட்டது, "அடேய் பிரகாசு, இந்நேரத்துல இங்க என்னடா பண்றே" என்று பெயர் சொல்லி வேறு கூப்பிட்டது.

என்னடா நெப்(போலி)யனுக்கு வந்த சோதனை என பார்த்தால் என் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் வேலம்பாலயத்து (ஊர் பெயர்) ஆயா, அது வயதான விதவை... உயிரை கொண்டு வந்து திரும்ப கொடுத்த எல்லா சாமிகளுக்கும் நன்றி சொல்லி, "நீ என்ன பண்றே ஆயா, பன்னண்டு மணிக்கு?" என்று பாசம் பொங்கும் குரலில் கேட்டேன், "நைட் கரண்ட்டுடா, லட்சுமண் (அண்ணா)  ஊருக்கு போய்ட்டான், அதான் நானே தோட்டத்துக்கு தண்ணி எடுத்து விட மோட்டார் போட வந்தேன், (அப்போதெல்லாம் இரவு 12 மணிக்குத் தான் மின்சாரம் தருவார்கள்)   பாத்து போ" என்ற படி கடந்து போய்விட்டார்.

 அதற்கு பின் நான் எந்த பேயையும் கடவுளையும் நேருக்குநேர் இதுவரை சந்திக்கவில்லை. சந்தித்தால் இன்னொரு கட்டுரை எழுதுகிறேன்.