Tuesday, October 16, 2018

தமிழ் சினிமா 2018

மலையாள சினிமா கடந்த காலங்களில் மிக அட்டகாசமான கதைகளுடன் களமிறங்கி அறிவுபூர்வமான ரசிகர்களை தக்க வைத்து கொண்டிருந்தது. யார் கண் பட்டதோ இந்த தலைமுறை மலையாள இளைஞர்கள் அயல் மொழியான ஆங்கிலத்தில் மயங்கி அதன் பின்னே செல்ல ஆரம்பித்து விட்டனர். எடுத்துக்காட்டாக மொழி இலக்கியம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆங்கிலம் எழுதும் நம்ம ஊர் சாரு நிவேதிதாவிற்கு வாசகர்கள் அதிகரித்து கொண்டே போகின்றனர். பிரபல முன்னணி எழுத்தாளர் பால் சர்க்காரியா கூட, இலக்கியம், வாசிப்பு என்றாலே  மலையாள உலகம் என்பது இந்த தலைமுறையில் மாறி, இலக்கியத்தில் தமிழை விட பின் தங்கி விட்டது என ஆதங்கம் தெரிவித்திருந்தார். மலையாளிகள் புத்தகங்களை மறந்து பாண்டஸி எனும் மசாலா சினிமாவை நோக்கி போய் கொண்டிருக்கையில், தமிழ் சினிமா கதைகளை கையாள தொடங்கி விட்டது.

அதிலும் இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு மிக சிறப்பான வருடம், குறிப்பாக இந்த இரண்டு மாதங்கள் பொற்காலம். இந்த வருடங்கள் வந்த திரைப்படங்களை பற்றி நான்கைந்து வரிகளில் ஆராய்வோம்.

1. இரும்புத்திரை 

வணிக சினிமாவாக இருந்தாலும், விஷால் பறந்து பறந்து சண்டை போடாமல் அடக்கி வாசித்தார். சொல்ல போனால் படத்தின் வில்லன் அர்ஜுன் தான் பெரும் படத்தின் பலம், இணைய தீமைகளை விரிவாகவே பட்டியலிட்டது இந்த படம். நீண்ட வருடங்களுக்கு பிறகு நல்ல லாபத்தை, விஷாலுக்கு சம்பாதித்து கொடுத்தது

2. தமிழ் படம் 2.0

 மிக எதிர்பார்க்கப்பட்ட கமலின் விஸ்வரூபம்,  விக்ரமின் ஸ்கெட்ச், சாமி 2, சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், சந்திரசேகரின் ட்ராபிக் ராமசாமி, மிஷ்கினின் சவரக்கத்தி, பாலாவின் நாச்சியார், விஜய் சேதுபதியின் ஜூங்கா எல்லாம் வசூலில் தோல்வி கண்ட நிலையில், சினிமாவை அரசியலை கிண்டலடித்து வந்த தமிழ்ப்படம் தாறுமாறு வசூலை குவித்தது இந்த வருட ஆச்சர்யங்களின் ஒன்று.

3. மேற்கு தொடர்ச்சி மலை 

ஏராளமான கதைகளை தன்னுள் புதைத்து வைத்த இந்த திரைப்படம், தமிழ் மொழிக்கு புதிது. சினிமா அறிமுகமே இல்லாத சாதாரண மக்களை வைத்து மிக அட்டகாசமாக எடுக்கப்பட்ட திரைப்படம். வணிக ரீதியில் வெற்றி பெறுமா என தெரியாத நிலையில் இதை தயாரித்த விஜய் சேதுபதி மிக பாராட்டுக்கு உரியவர். படத்திற்கு மேலும் அழகூட்டுகிறது இளையராஜாவின் இசை. பட இயக்குனர் லெனின் பாரதியின் கடுமையான உழைப்பிற்கு ராயல் ஸல்யூட்.

4. கடைக்குட்டி சிங்கம் 

நட்சத்திர பாட்டாளங்களுடன் களமிறங்கிய பாண்டியராஜ், டிவி சீரியல் போல இருக்கும் ஒரு கதையை குடும்ப உறவுகளை வைத்து அற்புதமாக கையாண்டார், விவசாயத்தை உயர்த்தி பிடித்த அவர் அதன் துயரங்களையும் சொல்ல தவறவில்லை.. வணிக ரீதியாகவும் நல்ல வசூலை ஈட்டியது இந்த படம்.

5. காலா 

வணிக ரீதியாக தோல்வியா வெற்றியா என்ற விவாதம் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா மற்றொரு வித்தியாசமான முயற்சியே, அழுத்தமான கதையுடன் கேங் ஸ்டர் படமாக வந்த இதில் நானா படேகர் நடிப்பு பிரமிக்க வைத்தது.

6. பரியேறும் பெருமாள் 

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் இன்னொரு வாசல், திரைப்படம் என்ற உணர்வை தராத அளவிற்கு பட ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை நம்மை அவ்விடத்திற்க்கே அழைத்து சென்றிருக்கிறார் இயக்குனர். குறைவான திரையரங்கு காட்சிகளுடன் ஆரம்பித்த இந்த படம், அதிக தியேட்டர்களை கைப்பற்றியது இந்த படத்தின் கதையின் மாபெரும் வெற்றி.

7. செக்க சிவந்த வானம் 

விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சாமி, அருண் விஜய், பிரகாஷ் ராஜ், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே கூட்டி வந்து நடிக்க வைத்திருக்கிறார் மணிரத்னம், கலவையான விமர்சனங்கள் வந்தாலும் படம் வணிக ரீதியில் வெற்றி பெற்றது.

8. 96


இதயத்தில் தூங்கி கிடந்த பழைய காதலை மீட்டெடுத்த காவியம். படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஆனால் இளையராஜா இசை போல் இடையில் ஜானகி பாடுவது  தாலாட்டு, அதிலும் யமுனை ஆற்றிலே உணர்வுபூர்வம். தமிழ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த காதல் திரைப்படம்.

9. கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் 

நயன்தாராவை ஏன் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடுகிறார்கள் என்பதற்கு இந்த இரண்டு படங்களும் சான்று, கோலமாவு கோகிலாவின் அமைதியான ஆனால் மிகப்பெரிய குற்றங்களை கையாள வேண்டிய நிர்பந்த வேடம், இமைக்கா நொடிகளில் சிபிஐ அதிகாரி. இரண்டிலும் வித்யாசம் காட்டியிருப்பார். இரண்டு படங்களுமே நன்றாக இருந்தன. குறிப்பாக இமைக்கா நொடிகள் மிக நன்று.

10. ராட்சசன்.

முண்டாசுப்பட்டியில் நகைச்சுவையை படர விட்ட இயக்குநரா இது? என ஆச்சர்யம் கொள்ள வைத்தார் ராம்குமார். நல்ல சைக்கோ திரில்லர் என்ற பெயரை இந்த படம் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.


இந்த வருடம் வடசென்னைசண்டைக்கோழி 2, சர்க்கார், எந்திரன் 2.0என்னை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம் வரிசையில் வர இருக்கிறது அதை பற்றி படம் வெளி வந்த பின் அலசுவோம்



No comments:

Post a Comment