Tuesday, January 31, 2017

விக்ரமாதித்யன் கவிதைகள்

கூண்டுப் புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்


நீலகண்டம்

அவனுக்குத் தெரியாதா
ஆலகால விஷம்
அவளேன் அலறிப் புடைத்து ஓடிவந்து
அவன் சங்கைப் பிடித்தாள்
கறுத்த கழுத்து
காமத் தழும்பு!


நகரம்

விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்


வாழ்க்கை

அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை






Friday, January 6, 2017

இரசனைகளின் தருணம்..... அமீர் அப்பாஸ்

நட்சத்திரங்களின்
ஒளிச்சொற்களால்
பூக்களின் இதழ்களில்
காற்றின் பாடல்களுக்கு
கையொப்பம் இட வந்தவன்
என்னை
கணிதப்பாடத்தை
மனனம் செய்யச்சொல்லி
கட்டாயப்படுத்தாதீர்கள்..!
கொட்டும் அருவிகளின்
வற்றாத ஜீவநதிகளின்
அடர்ந்த காட்டின்
பேரமைதியில்..
தனித்திருக்க வந்த
இயற்கையின்
யாசகன் நான்..!
என்னை
செல்வந்தர்களிடம்
கையேந்தி நிற்கச் சொல்லி
காயப்படுத்தாதீர்கள்..!
ஒரு பறவையைப் போல
பூமியை தரிசிக்க வந்த
யாத்ரீகன் நான்..!
குடும்பம், சாதி, மதம்
ஆகிய கூண்டுகளில்
சிறைப்பிடிக்க வேண்டி
என் சிறகுகளை
வெட்டி விடாதீர்கள்..!
என் வண்ணங்கள்
பிடிக்கவில்லை என்றால்
விலகிச் செல்லுங்கள்..!
உங்களின் சாயத்தை..
என் மீது பூசிச் செல்லாதீர்கள்..!
பெருமழைக் காத்திருக்கிறது
வண்ணங்கள் கலைந்திடும்
வாழ்க்கை ஒரு வானவில்..!
பூட்டி வைத்த..
ஆபரணங்களுக்காக
நீங்கள் விழித்திருங்கள்..!
ஒரு நாடோடியின்
இரசனை மிகுந்த
இராத்திரியைப் போல
மிஞ்சியிருக்கும்
இந்த வாழ்க்கை
எனக்குப் போதும்..!
மரணத்தின் வாழ்வை
தினமும் வாழ்பவன்..!
வாழ்வின் மரணத்தை
என் மீது
திணித்து விடாதீர்கள்..!
பயணிக்காத
கப்பலின் பாதுகாப்பு
எனக்கு வேண்டாம்..!
ஒரு புயலைக்
கடந்து செல்லும்
ஒரு கட்டு மரம் போல்
வாழ்வேன்..!
வேதங்களின்..
மந்திரச்சொற்களால்
சிறைவைக்கப்பட்ட
உங்கள் இறைவன்
எனக்கு வேண்டாம்..!
தாய்மையின் சிறகுகளாய்
கைகள் விரித்து
காத்திருக்கும்
காலத்தின் மடியில்
சரணடைவேன்..!
சுவடுகள்
ஏதுமின்றிக் கரையும்
ஒரு நொடி போதும்..!
கடலிற்குள்
காணாமல் போகும்
நதியாவேன்..!

Wednesday, January 4, 2017

சம்பவம்

துடியலூர் அருகே ஒரு ஆவின் பூத்தில் டீ குடிப்பதற்காக நின்றிருந்தேன், ஒரு போலீஸ் ஜீப்பில் இரண்டு போலீஸ்காரர்கள் அமர்ந்து கொண்டு, அதில் ஒருவர் அதட்டும் குரலில் "டீ போடுய்யா", என்றார்,

கடைக்காரர் என்னை மறந்துவிட்டு வேகமாக அவர்களுக்கு டீ போட்டு ஓடி சென்று கொடுத்தார், "சாரி சார்", என்று என்னை பார்த்து சிரித்துவிட்டு எனக்கும் அவசரமாக போட்டு கொடுத்தார், நான் போலீஸ்காரர்களை பார்த்தேன், அவர்களும் என்னை பார்த்து ஏதோ பேசிக்கொண்டது போல் தெரிந்தது.

காசை கொடுக்க பர்ஸ் எடுப்பதற்குள், ஒரு போலீஸ் வேகமாக இறங்கி வந்து டீக்கான காசை கொடுத்தார், கடைக்காரர் தலையை சொறிந்துகொண்டே "வேண்டாம்", என்றார், "குடுக்கலேன்னாலும் கேட்டு வாங்கனும்யா" என்றார் அதே அதட்டும் குரலில், போலீஸ் பற்றிய என் பிம்பம் உடைய ஆரம்பிக்கையில், "உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?"என்றதற்கு, "உங்கள மாதிரி காசு கொடுத்து டீ குடிக்கும் சாதாரணன்தான் நானும்" என்றேன்...

இருவரிடமும் ஏனோ மெல்லிய சிரிப்பு மலர்ந்தது.