Friday, April 20, 2018

செம்புலம் புத்தக விமர்சனம்

பொள்ளாச்சியில் இருந்து கேரளா போகும் வழியில் உள்ள காமாட்சிபுரம் எனக்கு தெரிந்த பகுதி, என் நண்பன் பாபுவின் தோட்டம் அங்கே தான் உள்ளது, அவன் ஜமீன்தார் பரம்பரையும் கூட. முப்பது ஏக்கரில் தோட்டம், பழங்கால அரண்மனை போன்ற வீடு அவனுக்கு உண்டு. இருபது தோட்டக்காரர்களும், சில வீட்டு வேலைக்காரர்களும் பாபுவின் வீட்டில் உண்டு. அரசியலில் அவனது அப்பா ஒரு நல்ல பதவி வகிக்கிறார் . தரம் உயர்ந்த குதிரைகளையும், வெளிநாட்டு நாய்களையும் பிரியமாக வளர்கிறான். உயர் ரக காரின் மீது அவனுக்கு அலாதி மோகம் உண்டு, சந்தையில் எந்த புதிய வாகனம் வந்தாலும் அதன் விபரத்தை விரல் நுனியில் வைத்திருப்பான்.

சோமனூர் பகுதியில் பாலு என்ற நண்பன் தன் அப்பா கொடுத்த மூன்று தறிகளுடன் வாழ்வை தொடங்கியவன், அதை தன் உழைப்பால் பத்து தறிகளாக மாற்றி முன்னேறியவன், தறி பட்டறையின் முழு வரலாறும் அதில் லாப நஷ்டங்களும், அதில் அவன் பட்ட கஷ்டங்களும் முழுவதும் எனக்கு அத்துப்படி. அதே போல் அரசு கல்லூரியில் படித்துக்கொண்டே கூலிக்கு தறிவேலைக்கு விடுமுறையில் வரும் விஜயகுமார் என்ற மாணவனும் எனக்கு நன்கு தெரியும். சரளமாக கமெண்ட் அடிப்பதில் மன்னன், மிக சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே இருப்பான், ஒன்றாக உட்கார்ந்து சரக்கடித்திருக்கிறோம். ஒருமுறை பாலு தனது பட்டறையை நடத்த முடியாமல், வாங்கிய கடனை அடைக்க வேண்டி  கூலி வேலைக்கு கூட சென்றிருக்கிறான்.

 நான் கோவையை சேர்ந்தவன் என்பதால் இங்கிருக்கும் ஆர் எஸ் புரம் பகுதியில் தான் எனக்கான முதல் வேலை வாய்ப்பே தொடங்கியது, அதுவும் மூன்று வருடம் முன்பு அன்னபூர்ணா தான் எங்களது மாலை காபி கடையே....
'
நிற்க...

இதற்கும் செம்புலத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா?

நான் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நடக்கும் இதே போன்ற மூன்று பிரிவு மக்களின் கதைதான் செம்புலம். நான் நேரிலேயே நின்று இந்த சம்பவங்களை பார்த்து போன்ற உணர்வு கதை நெடுகிலும் வந்ததை என்னால் தடுக்க இயலவில்லை.

பாஸ்கர் எனும் இளைஞனின் கொலை வழியே ஆரம்பமாகும் இந்த தொகுதி,
கம்யூனிச பார்வையில் சம்பவங்களை அலசுகிறது. முதல் தொகுதியில் போலீஸ் விசாரணையும், அவர்களின் பார்வையும், ஆரம்பத்தில் கைதியை கட்டி வைத்து பீடி கொடுக்கும் நிகழ்வுகளும், அவர்களின் சாட்சிகளுமென அவர்களின் நிஜ உலகத்தை காட்டியிருக்கிறார். முதல் தகவல் அறிக்கையில் இருந்து, சாதி சம்மந்தம் கொண்ட கேஸை யார் விசாரிப்பார்கள் என்பது வரை சட்டத்தில் உள்ள பொதுவான நுண்ணிய தகவல்களை விரிவாகவே எழுதி இருக்கிறார். முருகவேள் காவலராக பணியாற்றி இருப்பாரோ என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

பொதுவாக நிஜ சம்பவங்களை எழுதும் போது சலிப்பு தட்டிவிடும், ஆனால் நாவலின் இறுதிவரி வரை சுவாரஸ்யம் குன்றாமல் கொண்டு சென்றதற்கு பாராட்டுக்கள் . திரைப்படமாக இதை வடிவமைத்தால் ஆடுகளம் போல பேசப்படும்.

ஜாதி என்ற அடிமைத்தனம் எப்படி மறு உருவம் எடுக்கிறது என்பதையும் பாஸ்கர் வழியாகவே சொல்லி விடுகிறார். மூன்று பேராவில் முடிந்து விடும் பேரூர் கோவிலில் நடந்ததாக சொல்லப்படும் அந்த ஆணவ கொலை கதை பகீர் ரகம்.

வன்கொடுமை தடுப்பை இந்த நிறுவனங்கள் கையாளும் விதம் பற்றி இன்னமும் பேசி இருக்கலாம் என்றே தோன்றுகிறது. வெறும் விசாரணை அளவிலேயே முடிந்து விடுவதும், அவர்கள் செய்த உதவிகளின் பட்டியல் மனதில் தாங்காமல் மேலோட்டமாக முடிந்து விடுகிறது.

ஜாதி என்ற அமைப்பை எந்த காரணமும் இல்லாமல் வலுவாக பற்றி நிற்கும் பலரை இந்த கதை யோசிக்க வைக்கும்.

மொத்தத்தில் இந்த புத்தகம் நிறைய ஆவணங்களுடன் கூடிய சுவாரஸ்யம் நிறைந்த நிஜங்கள் படைப்பு.

வாசிக்க வேண்டிய புதினம்



Monday, April 9, 2018

வெள்ளிங்கிரி பயணம்

இயற்கையின் அழகை பெற விடுமுறை சமயங்களில் NP லாரி, பேருந்து, ரயில் (அதிலும் இது மிகவும் ஸ்பெஷல்) , பைக், கார், விமானம் வரை எங்கெங்கோ பயணம் சென்றிருக்கிறேன். நடந்தும் திருப்பதி, சபரிமலை (காலில் அடி பட்டு தையல் பிரித்த ஒரு வாரத்திலேயே), கர்நாடகாவில் ராஜ்குமார் பங்களா அமைத்திருக்கும் மலைப் பகுதி, கரளயம் எனும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதி என அலைந்திருக்கிறேன்.

கடந்த வாரம் வெள்ளிங்கிரி போகலாம் என முடிவெடுத்து மூன்று பேருடன் தொடங்கியது எங்கள் பயணம், அதிலும் என் மாமன் மகன் கிருபா பத்து மாத கர்ப்பிணி போன்றே தொப்பை வைத்திருப்பவன். "நானா? வெள்ளியங்கிரியா? என்ன விளையாடுறியா?" என்றவனை "உடம்புல என்னடா இருக்கு? மனசு பலம் போதும்டா" என வர வைத்தேன். இன்னொருவன் சஞ்சீவ் பக்கத்துக்கு வீட்டு தம்பி. அவன் இதற்கு முன்பு நான்கு முறை ஏறி இருப்பதால் அவனை வரவைத்தேன்.

இரவு ஏழு மணிக்கே மலை ஏற ஆரம்பித்தோம். முதல் மலை முழுவதும் படிகள், சில உடைந்திருக்கின்றன, 1600 படிகள் என வழியில் ஒருவர் தகவல் தந்து உதவினார். முதல் மலையில் உடலில் இருக்கும் மொத்த தண்ணீரும் வெளிவந்து விடுமளவு நன்றாக வியர்க்கும்,  பொறுமையாகவே ஏறினோம், ஒன்றில் நாங்கள் தெளிவாக இருந்தோம், "இந்த மலை எப்போது முடியும் அடுத்த மலை எப்போது ஆரம்பிக்கும்" என்றெல்லாம் கவலைப்படாமல் ஒவ்வொரு படியும் அனுபவித்தே ஏறுவது என்று.
அந்த எண்ணம் இறங்கும் வரை கை கொடுத்தது.

அதற்கு முன் மலை ஏற்றத்தின் போது என்ன தேவை என்பதையும் சொல்லி விடுகிறேன். மாற்று துணி ஒரு செட், ஒரு நல்ல டார்ச், இரண்டு பாக்கெட் ஆரஞ்சு மிட்டாய்கள் (நா வறலாமல் காக்கும்), க்ளுகோஸ் ஒரு பாக்கெட், ஜெர்கின், போர்த்திக்கொள்ள ஒரு போர்வை, இரண்டு லிட்டர் தண்ணீர், சப்பாத்தி அல்லது அதிகம் எண்ணெய் இல்லாத உணவு, உலர் தீனி (திராட்சை போன்று) மலை அடிவாரத்தில் விற்கும் ஊன்றுகோல்.

முதல்மலையின் முடிவில் இருக்கிறது வெள்ளி விநாயகர் கோவில். கல்லும் முள்ளுமாக கிடந்த இந்த மலையை சீராக்கி படிகள் செய்ய உதவியவர் ஒட்டர் என்ற சித்தராம். அங்கே இரு புறமும் கடைகள் இருக்கின்றன, தர்பூசணி பீஸாக தருகிறார்கள், குளிர் பானங்களை விட அவை எடுத்துக்கொள்ளுங்கள், குளிர்பானங்கள் தாகத்தை அதிக படுத்தும்.

அங்கே பதினைந்து நிமிட நேர ஓய்வுக்கு பின் இரண்டாவது மலைக்கு ஏற ஆரம்பித்தோம், மின்சார வசதியில்லாத, சிதிலமடைந்த படிகளின் வழியே நிலவொளியில் மரங்களின் ஊடே காற்றின் தாலாட்டில் நடப்பது சுகம்.

இரண்டாவது மலை கொஞ்சம் படிக்கட்டுகள் கொஞ்சம் வன பாதைகள் என இருக்கிறது, அதன் முடிவில் பாம்பாட்டி சுனை வரும், அங்கே ஒரு சிறிய மூங்கில் வழியாக நீர் பிடித்து கொள்ளலாம், மலை வழியே வரும் அந்த மூலிகை தண்ணீர் நல்ல சுவை கொண்டது, தண்ணீர் தான் உங்களின் உயிர் தோழன், முடிந்த வரை நாக்கை நனைத்து கொள்ள உபயோக படுத்துங்கள், ஒரு மலைக்கு இரண்டு  ஆரஞ்சு மிட்டாயை உபயோகப் படுத்துங்கள்  ஐம்பது ரூபாய்க்கு ஒரு தண்ணீர் லிட்டர் விற்கிறார்கள், மலை ஏற்றத்தில் சுமந்து வருபவர்களுக்கு கூலி கொடுத்து, போலீஸ்காரர்களுக்கு (நாங்கள் கீழே இறங்கி வரும்போது கடமை மிக்க காவல் அலுவலர் கடைக்கு 300 வாங்கி கொண்டிருந்தார்)  லஞ்சம் கொடுத்து கடை வாடகையும் கொடுத்து பிழைப்பு நடத்த வேண்டுமே என கடைக்காரர் ஒருவர் புலம்பினார்.

 பாறைகளுக்கு நடுவில் படிக்கட்டுகள் செதுக்கி பாதை அமைத்திருக்கிறார்கள், வழுக்குப் பாறை என்று பெயர், சிறிது கவனத்துடன் கடக்க வேண்டிய பகுதி, இது போன்ற இடங்களிலே தான் மூன்றாவது காலான மூங்கில் குச்சி அருமையாக செயல்படும். முன்பெல்லாம் கயிறு கட்டி கடந்த இந்த பகுதியை சீராக்கி இப்போது பாதை அமைத்து தந்திருக்கிறார்கள்.

 மூன்றாவது மலை முடிவிலும் நீர் பிடிக்க இடம் உண்டு, அதன் பெயர் கைதட்டி சுனை. அதிலிருந்து குளிர் உங்களை வரவேற்று தழுவிக்கொள்ளும்.
இடையிடையே கடைகள் இருக்கும், மோர் அல்லது தர்பூசணி அல்லது மூலிகை சூப் கிடைக்கிறது, விலை ஒரு மடங்கு அதிகமாக இருக்கும், இருந்தாலும் அங்கெல்லாம் விலையை பற்றி யோசிக்காமல் வாங்குவது புத்திசாலித்தனம். பஜ்ஜி போண்டாவெல்லாம் விற்பார்கள், கீழே சென்று எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் அங்கே வேண்டாம், மலை ஏறுதலின் ஸ்பீட் ப்ரேக்கர்கள் அவை.

அடுத்ததாக வெள்ளை ஜிப்ஸம் மண் நிறைந்த மலையை விபூதிமலை என்று அலைகிறார்கள், திருநீறு போன்றே இருப்பதால் அதை குடைந்து எடுத்து செல்லும் முட்டாள் தனத்தை நீங்களும் செய்ய வேண்டாம், சிவ தரிசம் முடிந்த உடனேயே அங்கேயே விபூதி பொட்டணம் தருவார்கள்.

இங்கெல்லாம் குளிர் காற்றில் தாலாட்டை நன்கு உணர முடியும், வியர்வை வழிய நடக்கும் உடலுக்கு அது தரும் இதம் சுகம்.

காத்தாதி திட்டு எனப்படும் ஐந்தாவது மலை ஏற்ற இறக்கங்கள் கொண்டது. அங்கேயே ஒரு கடை அருகில் கையில் கொண்டு போயிருந்த புளி, தயிர் சாதத்தை முடித்து விட்டு, இரண்டு மணி நேரமாவது தூங்கி விட்டு செல்லலாம் என படுத்துகொண்டோம். ஜெர்கின் போர்வை தாண்டியும் குளிர் ஊடுருவுகிறது, இரண்டு மணி நேர தூக்கத்திற்கு பிறகு பக்கத்துக்கு கடையில் சுக்கு காபி கிடைத்தது, அவ்வளவு குளிரிலும் அத்தனை சூடான காபி வரம். கொதிக்க கொதிக்க ஊதி ஆனந்தமாக அனுபவித்து சாப்பிட்ட அதன் சுவை வாழ்நாள் முழுவதும் மறக்காது.

ஆறாவது மலையை காஞ்சி மாநதி என்றும், ஆண்டி சுனை என்றும் அழைக்கிறார்கள், அதிலிருந்து கீழே இறங்கி போக வேண்டும். நான்கு காலால் இறங்கும் நகைச்சுவை காட்சிகள் எல்லாம் உண்டு.
 நாங்கள் கீழே சென்ற போது நீர் வரத்து குறைவாக இருந்ததால் குளிக்க முடியவில்லை.

அதிலிருந்து ஏழாவது மலை உச்சியில் பரமன் அருகில் நெருக்கும் நேரம் ஆரம்பிக்கிறது. சிறிது தூரம் கடக்கையிலேயே கடவுளைக் காண பக்தர்கள் காத்திருக்கும் கூட்டம் தெரிய ஆரம்பிக்கும். ஏழாவது மலை சற்றே சோதித்தாலும், காணும் இடமெல்லாம் மேகம் உரசும் நிறைவும், இயற்கையின் கண் கொள்ளா பேரழகும் வாரி அணைத்துக்கொள்ளும். சிவன் அருகில் நெருங்க நெருங்க பரவசம் தொற்றிக்கொள்ளும், உச்சியில் வேல்கள் சூழ நடை பாதை அமைத்து வரிசையில் பரமனை காண நிற்க வேண்டியது தான்.

அழுவதெல்லாம் அவமான சின்னமாக நினைக்கும் எனக்கு சிவனை பார்த்த உடனே ஏனோ கண்ணில் நீர் வழிந்து கொண்டே இருந்தது, நிச்சயம் அதில் துக்கமில்லை, பரவசமா, ஆனந்தமா, உச்ச நன்றி உணர்ச்சியா சொல்ல தெரியவில்லை.

சிவனை தரிசித்து விட்டு வந்து அமர்ந்தீர்கள் எனில் அட்டகாசமான சூரிய உதயம் பார்க்கலாம், அதையெல்லாம் எவ்வளவு எழுத்துக்கள் போட்டு எழுதினாலும் நிரப்பவே முடியாது. சோலை சூழ பனிக்காற்று உடல் மீது பரவ, ஆனந்தம் நிரம்பி வழிய, சூரியன் தன் கிரகணத்தை விரிக்கும் நேரம் சொர்க்கம். அந்த அழகின் மயக்கம் தீர மூன்று மணி நேரம் ஆனது.

நீங்கள் ஆத்திகரோ, நாத்திகரோ, இந்துவோ, வேறு மதத்தினரோ அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, உங்கள் உடலையும், மனதையும் வலுப்படுத்த, இயற்கையின் முழு வீச்சை அனுபவிக்க ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தி விட்டதுபோல் பெருமை சொல்ல நிச்சயம் ஒரு முறை வெள்ளியங்கிரி சென்று வாருங்கள்... என் வாழ்நாளில் நான் சென்ற பயணங்களில் மிக சிறப்பான பயணம் என இதைத்தான் கூறுவேன்.

பின் குறிப்பு: எனது மாமன் மகன் கடைசி மலை இறங்கும் பொழுது மிகவுமே சிரமப்பட்டான், மிக மிக மெதுவாக இறங்கினால் போதும் என்றே வந்தோம்... அதிசயம் என்னவெனில் என்னை விட சீக்கிரமாக அவன் இறங்கி விட்டான்.
காலையில் போன் செய்து "என்ன நடந்தாலும் வருடாவருடம் இந்த அற்புதமான பேரழகை தவற விடக்கூடாது, இனி உடல் எடையை குறைத்து விட வேண்டியதுதான்" என தீர்மானமாக சொன்னான்.

சில அறிவுரைகள்:
தயவு செய்து பிளாஸ்டிக் குப்பைகளை, தண்ணீர் பாட்டில்களை போட கடைகளிலேயே ஒரு சாக்கு வைத்திருக்கிறார்கள், அதிலேயே போடுங்கள்.

நடைபாதை நடப்பதற்கு மட்டுமே. மனிதன் என்ற பெயரில் ஒரு சில மிருகங்கள் அதை கழிப்பறையாக உபயோகப் படுத்துகின்றன. அந்த ஆபாச செயலை தயவு செய்து செய்ய வேண்டாம்.

சக மனிதர்களிடம் சண்டை போடும் இடமோ, கெத்துக் காட்டும் இடமோ அதுவல்ல என உணருங்கள்.

 முடிந்தவரை மலை ஏற சிரமப்படும் மனிதர்களுக்கு ஆறுதலாக இருங்கள், என் மாமன் மகன் அதில் சிறப்பு நானே ஏறுறேன் உங்களுக்கு என்ன பாஸ் என குறைந்தது முப்பது பேரிடமாவது சொல்லி உந்துதல் தந்தான்.

கூடுதல் தகவல்கள் :
1) பிப்ரவரி மாத தொடக்கத்தில் (1ம் தேதி)  இருந்து மே மாத இறுதி வரை (30) மட்டுமே செல்ல அனுமதி உண்டு. மற்ற மாதங்களில் வெள்ளிங்கிரி செல்ல இயலாது.

2) ஆண்களுக்கு வயது வரம்பு கிடையாது, பெண்கள் எனில் 13 வயதிற்கு கீழும் 45 வயதிற்கு மேலும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

கீழ்கண்ட லிங்கில் இந்த மலையை பற்றி முழு தகவலும் ஆங்கிலத்தில் உள்ளது படித்து பயன்பெறுக
https://tamilnadu-favtourism.blogspot.com/2015/10/velliangiri-mountains-coimbatore.html

-நன்றி

Thursday, April 5, 2018

நகைச்சு வை

"ஈவினிங் எங்காவது போகலாமா? போர் அடிக்குது" கேட்டது மனைவி.

"லலிதா ஜுவெல்லரி போவோம்"

"ரியலி !"

"உனக்கு பிடிச்ச நகையை செலக்ட் பண்ணிக்கோ"

"நிஜமாகவா?"

"அங்கே ஒரு எஸ்டிமேட் வாங்கிப்போம்"

"வெரி குட் !"

"அப்படியே அந்த எஸ்டிமேடை எடுத்துக்கிட்டு கல்யான் ஜுவெல்லர்ஸ், GRT, உமிடியார்ஸ் மற்றும் சரவணா போவோம். கடைசியா எல்லா எஸ்டிமேட்டையும் எடுத்துக்கிட்டு சரவண பவன் போவோம்."

"அப்பறம்..."

"தோசை, சப்பாத்தி, இட்லினு விதவிதமா சாப்பிடுவோம். சாப்பிடும் போதே எஸ்டிமேட்களை வைத்து சீரியஸா டிஸ்கஸ் பண்ணுவோம்."

"ஓகே..."

"வீட்டுக்கு போவோம்"

"அப்புறம்"

"அடுத்த வாரம் ரொம்ப போர் அடிக்கும் இல்லையா... அப்ப திரும்ப லலிதா போவோம். இன்னொரு நகையை செலக்ட் பண்ணி எஸ்டிமேட் வாங்கி அந்த எஸ்டிமேடை எடுத்துக்கிட்டு கல்யான் ஜுவெல்லர்ஸ், GRT, உமிடியார்ஸ் மற்றும் சரவணா போவோம். எல்லா எஸ்டிமேட்டையும் எடுத்துக்கிட்டு சரவண பவன் போவோம். தோசை, சப்பாத்தி இட்லினு சாப்பிடுவோம். சாப்பிடும் போதே எஸ்டிமேட்களை வைத்து சீரியஸா டிஸ்கஸ் பண்ணுவோம் ..."

மனைவியின் முகம் நெருப்பில் போட்ட தங்கம் போல் சிவந்து கொண்டிருந்தது.

பாத்தியா, பாத்தியா... தங்கமா ஜொலிக்குது உன் முகம்... சூப்பரா இருக்கு... உன் அழகே அழகுதான்... இணையே இல்லை, கண்ணாடில போய் பாரேன்....

#Facebook