Wednesday, January 20, 2016

சிறப்பு கவிதைகள்

உயிரின் ஒலி

ஒரு முறை முத்திரை கவிதைகள் என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் இவை இடம் பெற்றிருந்தன, ஒன்றை மிஞ்சும் மற்றொன்று ராகங்கள்

வாழ்ந்து கெட்டவனின் பரம்பரை 
  வீட்டை விலை முடிக்கும் முன் 
உற்று கேள் 
கொல்லையில் சன்னமாக எழும் 
பெண்களின் விசும்பலை 
- மகுடேஸ்வரன்
----------------------------------------------------------

தவம் 

நகர்ந்து கொண்டே இரு 
ஒரு நதிபோல 
நான் காத்திருப்பேன் 
ஓரிடத்தில் 
கடலாக

- அண்ணாமலை 
---------------------------------------------------------

மனசு 

சோக கலவை பூசிய முகங்கள் 
எறும்பு தொடர்தலாய் துக்க விசாரிப்புகள் 
இறுதி சடங்கில் இனிய நண்பன் 
கவலைக்குள் முழ்கி தேகம் நனைக்கையில் 
ஆசையில் நினைத்தது
நேற்றிரவு நான் வாங்கிய 
பத்தாயிர கடனை 
பத்தினியிடம் சொல்லி இருப்பானோ?

-கீதா வெங்கட் 
----------------------------------------------------------- 
வலி

ஓங்கி ஒலிக்கும் 
கெட்டி மேளத்தில் 
அமுங்கி போகிறது 
யாரோ ஒருத்தரின் 
விசும்பல் சப்தம் 
எப்போதும் 

-வித்யா ஷங்கர் 
---------------------------------------------------------

வதை 

திருவிழா கூட்டத்தில் 
குழந்தையை தொலைத்து விட்டு 
தவிக்கையில்.... 
சின்ன வயதில் வீட்டு தொழுவத்தில் 
தெருநாய் ஈன்ற குட்டிகளை 
கோணிப்பையில் திணித்து 
ஊருக்கு வெளியே 
கள்ளிக்காட்டில் கொண்டு போய் 
விட்டதெல்லாம் நினைவுக்கு 
வருகிறது 

-விஜயலக்ஷ்மி
------------------------------------------------------



No comments:

Post a Comment