Wednesday, February 8, 2017

பணம் இருந்தா பத்து ரூவா குடு

நெடுநெடுவென வளர்ந்திருக்கும், பஞ்சாயத்துபடிகளில் மெளனமாக அமர்ந்திருக்கும், சிலசமயம் கூச்சல் இட்டபடி தெருவில் ஓடும், வலிய சென்று வண்டிகளில் பாரம் இறக்கிவிட்டு விடுவிடுவென நடந்து வந்து அதே படிகளில் அமர்ந்து கொள்ளும், சில சமயம் என்னை பார்த்து சிரிக்கும், 'சொல்லுங்கள் ராஜாவே', என்றால் வெட்கப்பட்டு தலை குனிந்துகொள்ளும்.

   மாதத்தில் ஏதாவது ஒரு நாள் தலையை தாழ்த்தியபடி "பத்து ரூபா கொடு", என்று வரும். "ஏன் சாப்பிடலயா?", என்றால் எவனுமே தர மாட்டேங்கிறான் என்று சொல்லும். "எங்கிட்ட கேட்க வேண்டியதுதானே?" என்றால் "பத்து ரூபா கொடு" என்று மீண்டும் தொடங்கும். காசை வாங்கியவுடன் வேகமாக கடைக்கு சென்றுவிடும்,  ஏதாவது சாப்பிட வாங்கி அதே படிகளில் அமர்ந்து கொள்ளும்.

 முழு சுயநலம் கொண்டுதான் அவரிடம் நட்பாக இருக்கிறேன், என்னையும் அந்த படிகளில் காலம் அமர்த்த கூடும், அப்போது உங்களுக்கு என்னைப் பற்றி யாராவது இப்படி எழுதிக் கொண்டிருப்பார்கள்... இல்லையா?     

Wednesday, February 1, 2017

செங்"குட்டுவன்"

தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் செங்குட்டுவன் என்ற விவசாயி போட்ட கணக்கில் மாவட்ட ஆட்சியருக்கு தலைசுற்றியது. இதையடுத்து அவரால் பதில் எதுவும் பேசமுடியாமல், சிரித்து மழுப்பி விவசாயியிடமிருந்து தப்பிச் சென்றார்.
விவசாயின் பட்டியல்
1970 ஆண்டுகளில்..
எம்.எல்.ஏ. சம்பளம் - ரூ.150
பேங்க் மானேஜர் - ரூ.250
ஆசிரியர் சம்பளம் - ரூ..90
60 கிலோ நெல் மூடைக்கு - ரூ.40
கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.90
ஆனால் இன்று..
எம்.எல்.ஏ. சம்பளம் - ரூ.55,000
பேங்க் மானேஜர் - ரூ.66,000
ஆசிரியர் சம்பளம் - ரூ.39,000
60 கிலோ நெல் மூடைக்கு - ரூ.880
கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.2850
மத்திய அரசு 7-வது ஊதியக்குழு மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளது. அதேபோல், விவசாயிகளுக்கு இந்த விகிதாச்சார அடிப்படையில் கரும்பு டன்னுக்கு ரூ.39 ஆயிரமும், 60 கிலோ நெல் மூடைக்கு ரூ.18 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று விவசாயி செங்குட்டுவன் வலியுறுத்தினார். இல்லையெனில், கரும்பு ஆலையில் பங்குதாரராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற மாற்று யோசனையையும் மாவட்ட ஆட்சியரிடம் முன்மொழிந்தார்.
Karuna Murthy fb

Tuesday, January 31, 2017

விக்ரமாதித்யன் கவிதைகள்

கூண்டுப் புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்


நீலகண்டம்

அவனுக்குத் தெரியாதா
ஆலகால விஷம்
அவளேன் அலறிப் புடைத்து ஓடிவந்து
அவன் சங்கைப் பிடித்தாள்
கறுத்த கழுத்து
காமத் தழும்பு!


நகரம்

விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்


வாழ்க்கை

அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை






Friday, January 6, 2017

இரசனைகளின் தருணம்..... அமீர் அப்பாஸ்

நட்சத்திரங்களின்
ஒளிச்சொற்களால்
பூக்களின் இதழ்களில்
காற்றின் பாடல்களுக்கு
கையொப்பம் இட வந்தவன்
என்னை
கணிதப்பாடத்தை
மனனம் செய்யச்சொல்லி
கட்டாயப்படுத்தாதீர்கள்..!
கொட்டும் அருவிகளின்
வற்றாத ஜீவநதிகளின்
அடர்ந்த காட்டின்
பேரமைதியில்..
தனித்திருக்க வந்த
இயற்கையின்
யாசகன் நான்..!
என்னை
செல்வந்தர்களிடம்
கையேந்தி நிற்கச் சொல்லி
காயப்படுத்தாதீர்கள்..!
ஒரு பறவையைப் போல
பூமியை தரிசிக்க வந்த
யாத்ரீகன் நான்..!
குடும்பம், சாதி, மதம்
ஆகிய கூண்டுகளில்
சிறைப்பிடிக்க வேண்டி
என் சிறகுகளை
வெட்டி விடாதீர்கள்..!
என் வண்ணங்கள்
பிடிக்கவில்லை என்றால்
விலகிச் செல்லுங்கள்..!
உங்களின் சாயத்தை..
என் மீது பூசிச் செல்லாதீர்கள்..!
பெருமழைக் காத்திருக்கிறது
வண்ணங்கள் கலைந்திடும்
வாழ்க்கை ஒரு வானவில்..!
பூட்டி வைத்த..
ஆபரணங்களுக்காக
நீங்கள் விழித்திருங்கள்..!
ஒரு நாடோடியின்
இரசனை மிகுந்த
இராத்திரியைப் போல
மிஞ்சியிருக்கும்
இந்த வாழ்க்கை
எனக்குப் போதும்..!
மரணத்தின் வாழ்வை
தினமும் வாழ்பவன்..!
வாழ்வின் மரணத்தை
என் மீது
திணித்து விடாதீர்கள்..!
பயணிக்காத
கப்பலின் பாதுகாப்பு
எனக்கு வேண்டாம்..!
ஒரு புயலைக்
கடந்து செல்லும்
ஒரு கட்டு மரம் போல்
வாழ்வேன்..!
வேதங்களின்..
மந்திரச்சொற்களால்
சிறைவைக்கப்பட்ட
உங்கள் இறைவன்
எனக்கு வேண்டாம்..!
தாய்மையின் சிறகுகளாய்
கைகள் விரித்து
காத்திருக்கும்
காலத்தின் மடியில்
சரணடைவேன்..!
சுவடுகள்
ஏதுமின்றிக் கரையும்
ஒரு நொடி போதும்..!
கடலிற்குள்
காணாமல் போகும்
நதியாவேன்..!

Wednesday, January 4, 2017

சம்பவம்

துடியலூர் அருகே ஒரு ஆவின் பூத்தில் டீ குடிப்பதற்காக நின்றிருந்தேன், ஒரு போலீஸ் ஜீப்பில் இரண்டு போலீஸ்காரர்கள் அமர்ந்து கொண்டு, அதில் ஒருவர் அதட்டும் குரலில் "டீ போடுய்யா", என்றார்,

கடைக்காரர் என்னை மறந்துவிட்டு வேகமாக அவர்களுக்கு டீ போட்டு ஓடி சென்று கொடுத்தார், "சாரி சார்", என்று என்னை பார்த்து சிரித்துவிட்டு எனக்கும் அவசரமாக போட்டு கொடுத்தார், நான் போலீஸ்காரர்களை பார்த்தேன், அவர்களும் என்னை பார்த்து ஏதோ பேசிக்கொண்டது போல் தெரிந்தது.

காசை கொடுக்க பர்ஸ் எடுப்பதற்குள், ஒரு போலீஸ் வேகமாக இறங்கி வந்து டீக்கான காசை கொடுத்தார், கடைக்காரர் தலையை சொறிந்துகொண்டே "வேண்டாம்", என்றார், "குடுக்கலேன்னாலும் கேட்டு வாங்கனும்யா" என்றார் அதே அதட்டும் குரலில், போலீஸ் பற்றிய என் பிம்பம் உடைய ஆரம்பிக்கையில், "உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?"என்றதற்கு, "உங்கள மாதிரி காசு கொடுத்து டீ குடிக்கும் சாதாரணன்தான் நானும்" என்றேன்...

இருவரிடமும் ஏனோ மெல்லிய சிரிப்பு மலர்ந்தது.

Saturday, December 17, 2016

ஆதிரை புத்தக விமர்சனம்

 சயந்தன் இலங்கையிலிருந்து இடம் பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒரு இளைஞர், இவரின் பெயரற்றது என்ற சிறுகதை தொகுதியை படித்து முடித்த உடனேயே யோசிக்காமல் ஆதிரையை வாங்கினேன்.

  1977லில் ஆரம்பமாகும் இந்த நிஜங்களின் தொகுப்பு மூன்று தலைமுறைகளை கடந்து 2013 இல் முடிவடைகிறது.

  இதுவரை இலங்கையை நேரடியாக அறியாத, ஊடகங்களில், அரசியல் பிரசாரத்தில் மட்டுமே தெரிந்த, என் போன்ற சாதாரண தமிழ்நாட்டு வாசகனுக்கு, இலங்கை தமிழர்கள் வாழ்வு பற்றிய பிம்பம் சர்வ நிச்சயமாக உடைபடும். தூக்கம் தொலைய வைக்கும் சம்பவங்கள் நிறைந்திருக்கும். நான் நிறைய இரவுகளின் கொலைக்கள சம்பவங்களால் தூக்கம் தொலைத்தேன். அதற்காக சயந்தன் எதையும் மிகைப்படுத்தவும் இல்லை, எங்கள் நிலையை பார்த்தீர்களா என்று கெஞ்சவும் இல்லை, நம்மை நேரடியாக அவ்விடங்களுக்கு கூட்டி சென்று ஒரு மௌன சாட்சியாக வேடிக்கை பார்க்க வைக்கிறார். அவரும் ஒரு இரண்டு வரி கதை பாத்திரமாக வந்து போகிறார்.

 அன்றாட வாழ்க்கை பிடியில் சிக்கி தவித்த சாதாரண மனிதர்கள், அடுத்த கட்ட வாழ்க்கையில் காலடி வைக்கும் தருணங்களில் நடந்த கொடூரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இடம் பெயர்ந்தவர்கள் என்ற  சொல்லுக்கு பின்னிருக்கும் தீராவலியை நான் எப்படி விளக்கினாலும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது, கண்டிப்பாய் கிடைத்திருக்க வேண்டிய, சாதாரண வாழ்க்கையைக் கூட பறி கொடுத்தவர்களுடைய நிம்மதியில்லா போராட்டம் அது.

மலையக தோட்ட தொழிலாளியான சிங்கமலையின் ஒற்றையடி தடம் வழியாக புறப்படும் இந்த 664 பக்கங்கள் கொண்ட நெடும் கதையின் பெரும் பகுதி, எளிய மனிதர்களின் வாழ்வு பற்றியது, இழப்புகளின் வலியை பற்றியிருந்தாலும், இன்னொரு படி ஏறத்துடிக்கும் மனித இயல்பின் தீரா தேடல்கள் தான் களம். ஆண்களை ஏதாவது ஒரு வழியில் இழந்து விட்ட தாய்களின் நெடும்போர், அவர் வார்த்தையிலேயே சொல்லவேண்டும் எனில் தமிழன்னையின் கண்ணீர் துளி.

இலங்கை தமிழ் முதல் 50, 60 பக்கங்களிலேயே பழகி விடுகிறது, ஜெயமோகனின் காடு நாவலின் மொழியை புரிந்துகொள்ள எடுத்த சிரமங்களில் இது 5 சதவீதம் கூட இல்லை.

தனிகல்லடியை, எட்டேக்கரை தவிர மற்ற இடங்களை கூகிளில் கண்டுபிடிக்க முடிகிறது. யாழ், வவுனியா போன்ற பெருநகரங்களையும்  விட அதில் வரும் பல இடங்களை (ஆனையிறவு, கேப்பாப்புலவு பாதை, வட்டுவாகல்,தர்மபுரம், ஆலங்கேணி, இலுப்பைக்கடவை, இன்னும் பல) google map மற்றும் youtube காணொளி வழியாக படித்ததில் நான் அந்த பகுதிகளில் வாழ்ந்த, நன்கு அறிந்த ஒருவனாகவே மாறிப்போனேன்.  

சாதாரண வார்த்தைகள் வழியாக வனத்தின் வேட்டையும், மலரின் ஒற்றை சைக்கிள் பயணங்களும், எட்டேக்கரில் ஒளி பாய்ச்சப்படும் டார்ச்சும், நாமகளின் உடையழகும்,  சின்னாச்சிக்காக உருவாகும் வீடு பற்றிய பிம்பங்களும், கடற்கரைகளும், போர் கலைத்து போட்ட வாழ்க்கையும், சிறுவர்கள் முன்னாள் கொல்லப்படப் போகும் வணிகனும், மயில்குஞ்சனின் வழிதவறிய காடும், இன்னும் கொஞ்சம் உணவை யாசிக்கும் கெஞ்சலும்........  நேர்த்தியான திரைபடத்தின்  ஒலிப்பதிவை கண்முன் கொண்டுவரும் அழகுடன் மிளிர்கிறது.

 500 பக்கங்களில் இருந்து ராணுவத்தினர் சோற்று பொதிகளை போடும்வரை நடக்கும் நிகழ்வுகளை நான் எப்படி விளக்கி சொன்னாலும் அது நான் உணர்ந்ததை சொல்ல இயலாது, பக்கத்துக்கு பக்கம், துப்பாக்கியால் சுட்டதில் முதுகில் ஏறிவிட்ட புல்லட்டின் மிச்சம், அந்த வலியும், வேதனையும். அதை படித்தே உணரமுடியும்.

 காதல்களில், "குடும்பத்தில் ஆரும் வேண்டாமெண்டிட்டு என்னை மட்டுமே நம்பி வந்தவளடா" என்ற கதையிறுதி வாக்கியம் தனி கதையாகவே எழுதப்பட்டிருக்க வேண்டிய கண்ணீர் காவியம்.

 புலிகளை போற்றி பேசவும், தூற்றவும், ராணுவத்தின் நல்லது கெட்டதை அலசவும் சில பாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன, அது சயந்தனின் அரசியல் நிலைப்பாட்டை தாண்டிய உண்மையான வாதங்களாக இருக்கக்கூடும்.

 நீங்கள் எந்தவிதமான வாசகராக இருந்தாலும், உங்களை இத்தனை பக்க நெடுகிலும் வழிதவறாமலும், சலிப்பை தராமலும்  கூட்டி செல்லும் இயல்பான எழுத்துக்கள் இதன் சிறப்பு. இங்கே ஈழ தமிழர்கள் பெயரால் நடந்த சில ஆதாயம் மிக்க அரசியலின் உண்மைத்தன்மையை புரிந்துகொள்ளவாவது இதை நிச்சயம் வாசிக்க வேண்டும்.

 என்னிடம் குறைந்தது நான்கு பக்கங்களை தாண்டும் கதை பற்றிய எண்ணங்கள் நிரம்பி வழிகின்றன, ஆனால் அதை பற்றி எழுதினால் படிக்கும் சுவாரஸ்யம் குறைய கூடும் என்ற எண்ணத்தில்தான் விரிவாக எழுதவில்லை.

 அரசியல் காரணங்களோ, தனிப்பட்ட கருத்து மோதல்களோ, இலங்கை தமிழர் நிலைப்பாடுகளோ எனக்கு இதுவரை இல்லை, நான் இந்த புத்தகத்தையும் எந்த எதிர்பார்ப்பு கொண்டும் படிக்கவில்லை. ஒரு சாதாரண வாசக மனநிலையின் என் எண்ணங்களைதான் நான் எழுதி இருக்கிறேன்.  


 2009 போருக்கு பிறகு சர்வதேச அழுத்தம் காரணமாக, சாலை வசதிகளும், நவீன கட்டடங்கள் சிலவும், 4 ஜி போன்ற தொழில் நுட்ப வசதிகளும், மக்கள் வாழ அமைதியான சூழலும் யாழ்ப்பாணம் போன்ற பெரு நகரங்களில்  ஏற்பட்டிருக்கிறது என்றும், அவைகளெல்லாம் பாதுகாப்புக்கு வந்து இன்னமும் வெளியேறாத இராணுவ வீரர்களுக்காகத்தான், தமிழர்களுக்கு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை என்றும் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன.

 அப்படி இருந்தாலும் அச்சம் முழுதும் நீங்கி, அந்த மன வருத்தங்கள் குறைந்து, புலம் பெயர்ந்த மக்கள் மீண்டும் நம்பிக்கையுடன் நாடு திரும்பவும், வளர்ச்சி காணவும், மனித நேயம் தழைக்கவும், அந்த காயங்கள் ஆறவும் இரண்டு தலைமுறைகள் கடந்து போக வேண்டும். இனியாவது அமைதியும் நிம்மதியும் அங்கு பரவட்டும்.    

 சில பயணங்களை, சில பிரிவின் வலியை, சில பாடல்களை, சரியான தருணத்தில் வீசப்பட்ட வார்த்தைகளை, எதிர்பார்ப்பின்றி தரப்பட்ட அன்பை மனது சுமந்து கொண்டே திரியும், ஏனெனில் அவைதான் நமக்கான பொக்கிஷங்கள். அதில் இப்போது ஆதிரையும் இணைந்திருக்கிறது.
நன்றி சயந்தன். 

Thursday, November 24, 2016

இணைய விற்பனையில் Amazon ஏன் முதலிடத்தில் இருக்கிறது?

தற்போது இணையத்தில் கிடைக்காத பொருட்களே இல்லை என  எண்ணுமளவு இணைய சந்தை வளர்ச்சி கண்டிருக்கிறது. நம்பகமான, நிறைய வலைத்தளங்கள்  இருந்தாலும், இணைய பொருட்கள் விற்பனையில்  அமேசான் எப்படி முதலிடத்தில் இருக்கிறது என பார்ப்போம்.

flipkart, ebay, snapdeal, jabong, shopclues, Myntra, Homeshop18, என்று இணைய விற்பனை வலைத்தளங்கள் மிக நீண்ட வரிசை கொண்டது.

இதில் ebayதான் இந்தியாவில் இணைய பொருட்கள் விற்க முதன் முதலாக பெரிய தொகையை முதலீடு செய்து களமிறங்கியது, ஆனால் இப்போது அது பின்னுக்கு தள்ளப்பட்டு ஏறக்குறைய காணாமல் போகும் நிலைக்கு வந்து விட்டது. உதாரணமாக ebayவில் இதுவரை மூன்று முறை பொருட்கள் வாங்கி இரண்டு முறை திருப்தி இல்லாமல் திருப்பி கொடுத்துள்ளேன், நமது பணம் நமக்கு திரும்ப கிடைக்க ஏறக்குறைய 25 நாட்களை கடத்துகிறது, replace எனும் மாற்று முறையில்  மிக மோசமான வணிகம் ebayவில் இருக்கிறது, பொருள் கிடைக்கவும் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது.  வாடிக்கையாளர்களை திருப்தி படுத்துவதை விட, நாம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதில் இருந்து தப்பிப்பதே அவர்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

shopclus ஓரளவு வேகமாக செயல்படுகிறது, ஆனால் பொருளின் தரத்தை நம்ப முடிவதில்லை.  flipkart, snapdeal, jabong, Myntra, Homeshop18, போன்ற தளங்களை ஒப்பிடுகையில் flipkartன் சேவை திருப்திகரமாக இருந்தாலும், டெலிவரி பெரு நகரங்களுக்கு கூட தாமதமாகவே கிடைக்கிறது.  

 நாம் இணையத்தில் பொருட்களை வாங்குவதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள், வாங்கும் இணையம் பாதுகாப்பானதா, அதில் உள்ள   பொருளின் தரம் நன்றாக உள்ளதா, அது மற்ற நிறுவனங்களை விட விலை குறைத்து தருகிறதா, திருப்தி இல்லை என்றால் திரும்ப ஒப்படைப்பதில் எளிய அணுகுமுறை உள்ளதா, replace எனப்படும் மாற்று விரைவில் கிடைக்கிறதா என்பனவே.

Amezon இதை சிறப்பாக செயல் படுத்துகிறது, அதனால் தான் இந்திய வணிக சந்தையில் முதலிடம் வகிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஏராளமான பொருட்கள், பண பாதுகாப்பு, விரைவான டெலிவரி, எளிதான திரும்ப எடுக்கும் முறை (easy returns), வாடிக்கையாளர் சேவை, மாற்றுபொருளை விரைவில் அனுப்புதல் எனும் செவைகளால் இது முதலிடம் பிடிக்கிறது. இணைய பொருட்கள் வாங்க Amezon உகந்தது.