Saturday, March 25, 2017

Baraka என்னும் அற்புத ஆவணப்படம்.

மொழி தெரிய வேண்டிய அவசியம் இல்லை, இயற்கையின் சப்தங்கள், அவற்றின் மொத்த அழகு, சிறந்த பிரார்த்தனைகள், பல்வேறு வகையான வாழ்க்கை முறை அதற்கு கோர்த்திருக்கும் வலுவான இசை, பதினான்கு மாத கடுமையான உழைப்பு எல்லாம் சேர்ந்து கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறது Baraka என்னும் அற்புதம்.

   Ron Fricke என்பவர் இயக்கியுள்ள இப்படம் 1992ல் வெளி வந்தது, இன்னும் ஐம்பது ஆண்டுகள் கடந்தாலும் வியப்பில் ஆழ்த்தும். இருபத்தி நான்கு நாடுகளில் இருந்து காட்சிகள் பரவுகின்றன,  இயற்கையின் அழகை, கொண்டாட்டங்களை, மனித இயந்திர வாழ்வை, சோகங்களை எந்த குறிப்பையும் சொல்லாமல் முன் வைத்து விட்டு நகர்கிறது.
    பெரும் காட்டுதீ, புத்தர் பெரிய முகம், உடைந்த சிலைகள், மண்ணோடு மண்ணான அரச மாளிகை, வழிபட்டு மனிதர்களின் கொண்டாட்டங்கள், அடர் வனங்கள், மலை சிகரங்கள், கடல் அலைகள், பாலைவன இரவுகள், கென்ய மக்களின் அலங்காரங்கள், ஜெருசேல நெரிசல்கள், கண்ணாடி மாளிகையின் பேரழகு என இதன் பார்வை உலகம் சுற்றி வருகிறது.

 விழியிழந்த தேர்ந்த புகைவண்டி புல்லாங்குழல்காரர் தரும் மயக்கும் இசை போல  படம் நெடுகிலும் உணர்வுகளுக்கு ஏற்ப கொள்ளை கொள்கிறது இசை. வாகன விரைவு, புகைவண்டி வழியனுப்பல்கள், நிலவு மாறும் கணம், இரவு நிலவு சூரியன் வருகை என ஒரு சில பகுதிகளில் ஒரே இடத்தில நாட்கணக்கில் அமர்த்து ஒரு சில காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள்.

கழுதையின் வண்டியில் தொடங்கும் ஒரு காட்சியில் அடித்தட்டு மக்கள் கொட்டப்பட்ட குப்பைகளிலிருந்து, நாய்களுடனும் பன்றிகளுடனும் சரிசமமாக உணவு தேடி கொள்வது நிச்சயம் மனதை உலுக்கும்.

ஒரே வேலையை சலிப்பில்லாது செய்யும், ஜப்பானிய பங்களாதேஷ் ஊழியர்களின் வாழ்க்கையை சொல்கிறது நிறுவனங்களில் படம் பிடிக்கப்பட்ட காட்சி. நமது கங்கையில் பாதி எரிந்து கீழே விழப்போகும் உயிரற்ற சடலத்தில் கால் உங்களை திகைக்க வைக்கும்.

 வரலாற்று கவிதையின் கால் தடம் இது, இருபத்தி ஐந்து வருடங்கள் கடந்தும் கண்களுக்கு விருந்து படைக்கும் அற்புதம்.

 பார்க்கும் எவரும் புரிந்து கொள்ளும் மிக சிறந்த உலக படத்திருக்கு உதாரணம் இது

நீண்ட நேர மயக்கும் பார்வைகளின் பிம்பம் இன்னும் விலகாது தொடர்கிறது.
படத்தின் தலைப்பின் அர்த்தம் "வாழ்வின் மூச்சு",  குப்பை தமிழ் படங்களை சிலாகித்து கொண்டிருக்காமல் இந்த மூச்சை சுவாசியுங்கள்...
மீண்டும் மீண்டும் இயல்பாய் சுவாசிக்க விரும்புவீர்கள்.

Thursday, March 9, 2017

கொங்கு பிரியாணி செய்முறை (அரிசிம் பருப்பு)

கொங்கு பிரியாணி என்பது வேறொன்றும் இல்லை அரிசி பருப்பு சாதமே.

கொங்கு மண்ணின் பாரம்பரிய சமையலான இது தனிச்சுவை கொண்டது, அசைவ உணவு ஒரு புறமும், அரிசிம் பருப்பு சாதம் மறுபுறமும் வைக்கப்பட்டால், நான் விரும்பி சாப்பிட நினைப்பது இதுவே.
ஓய்வு நேரங்களில் சமைப்பது எனக்கு பொழுதுபோக்கு,  என் இந்த சமையலுக்கு நிறைய அடிமைகள் உண்டு.

செய்முறை

தேவையான பொருட்கள்        
அரிசி ஒரு டம்ளர்
துவரம் பருப்பு, அவரை பருப்பு இரண்டும் சேர்த்து அரை டம்ளர்
கடுகு கொஞ்சம்
வெங்காயம் சிறியது ஒரு கப்
பூண்டு ஆறு பல்
தக்காளி மூன்று
பச்சை மிளகாய் ஒன்று
கறிவேப்பில்லை
கொத்துமல்லி தலை
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
உப்பு, எண்ணெய், நெய், கடுகு.
தண்ணீர் 3 டம்ளர்.
----------------------------------------------
மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் 2, பட்டை ஒரு துண்டு, கிராம்பு 3 இவற்றை பொடித்து வைத்து கொள்ளுங்கள்          
-------------------------------------------------
செய்முறை

அரிசி பருப்புகளை அரை மணி நேரம் ஊற விடுங்கள்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி, நான்கு டீஸ்பூன் நெய்யை அதில் கலந்திடுங்கள்.
 கடுகு தாளித்து, வெங்காயம் பூண்டு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்குங்கள், பின் தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, மஞ்சள் தூள், (காரம் அதிகம் வேண்டும் என்பவர்கள் தேவையான அளவு மிளகாய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்) பொடித்து வைத்துள்ள மிளகு சீரக கலவையை கலந்து ஒரு நிமிடம் வதக்கிய பின், தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
பின் உப்பு, கொத்துமல்லிதலை சேர்த்து அரிசி பருப்பை போட்டு நன்கு கிளறி,      மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விடுங்கள்.
சுவையான கொங்கு பிரியாணி ரெடி.
------------------------------------------------------------------------

அதற்கு  தொட்டுகொள்ள நிலகடலை சட்னி அருமையாக இருக்கும்.

சின்ன வெங்காயம் பத்து,
வர மிளகாய் 2,
பூண்டு 2 பல்,
கறிவேப்பில்லை நான்கைந்து இலை,
சீரகம் கொஞ்சம்,
மல்லித்தூள் ஒரு ஸ்பூன்,
நிலகடலை தேவையான அளவு (வறுத்தது)
உப்பு.
புளி பெரிய நெல்லி அளவு        

 புளி தவிர  மேற்கூறிய அனைத்தையும் வரிசைபடி எண்ணெய் ஊற்றி வறுத்து, புளி கலந்து மிக்ஸியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்தால் வாசனைமிக்க நிலகடலை சட்னி ரெடி.    

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

Wednesday, February 8, 2017

பணம் இருந்தா பத்து ரூவா குடு

நெடுநெடுவென வளர்ந்திருக்கும், பஞ்சாயத்துபடிகளில் மெளனமாக அமர்ந்திருக்கும், சிலசமயம் கூச்சல் இட்டபடி தெருவில் ஓடும், வலிய சென்று வண்டிகளில் பாரம் இறக்கிவிட்டு விடுவிடுவென நடந்து வந்து அதே படிகளில் அமர்ந்து கொள்ளும், சில சமயம் என்னை பார்த்து சிரிக்கும், 'சொல்லுங்கள் ராஜாவே', என்றால் வெட்கப்பட்டு தலை குனிந்துகொள்ளும்.

   மாதத்தில் ஏதாவது ஒரு நாள் தலையை தாழ்த்தியபடி "பத்து ரூபா கொடு", என்று வரும். "ஏன் சாப்பிடலயா?", என்றால் எவனுமே தர மாட்டேங்கிறான் என்று சொல்லும். "எங்கிட்ட கேட்க வேண்டியதுதானே?" என்றால் "பத்து ரூபா கொடு" என்று மீண்டும் தொடங்கும். காசை வாங்கியவுடன் வேகமாக கடைக்கு சென்றுவிடும்,  ஏதாவது சாப்பிட வாங்கி அதே படிகளில் அமர்ந்து கொள்ளும்.

 முழு சுயநலம் கொண்டுதான் அவரிடம் நட்பாக இருக்கிறேன், என்னையும் அந்த படிகளில் காலம் அமர்த்த கூடும், அப்போது உங்களுக்கு என்னைப் பற்றி யாராவது இப்படி எழுதிக் கொண்டிருப்பார்கள்... இல்லையா?     

Wednesday, February 1, 2017

செங்"குட்டுவன்"

தேனி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நான்காவது வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று நடைபெற்ற கூட்டத்தில் செங்குட்டுவன் என்ற விவசாயி போட்ட கணக்கில் மாவட்ட ஆட்சியருக்கு தலைசுற்றியது. இதையடுத்து அவரால் பதில் எதுவும் பேசமுடியாமல், சிரித்து மழுப்பி விவசாயியிடமிருந்து தப்பிச் சென்றார்.
விவசாயின் பட்டியல்
1970 ஆண்டுகளில்..
எம்.எல்.ஏ. சம்பளம் - ரூ.150
பேங்க் மானேஜர் - ரூ.250
ஆசிரியர் சம்பளம் - ரூ..90
60 கிலோ நெல் மூடைக்கு - ரூ.40
கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.90
ஆனால் இன்று..
எம்.எல்.ஏ. சம்பளம் - ரூ.55,000
பேங்க் மானேஜர் - ரூ.66,000
ஆசிரியர் சம்பளம் - ரூ.39,000
60 கிலோ நெல் மூடைக்கு - ரூ.880
கரும்பு டன் ஒன்றுக்கு - ரூ.2850
மத்திய அரசு 7-வது ஊதியக்குழு மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரித்துள்ளது. அதேபோல், விவசாயிகளுக்கு இந்த விகிதாச்சார அடிப்படையில் கரும்பு டன்னுக்கு ரூ.39 ஆயிரமும், 60 கிலோ நெல் மூடைக்கு ரூ.18 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று விவசாயி செங்குட்டுவன் வலியுறுத்தினார். இல்லையெனில், கரும்பு ஆலையில் பங்குதாரராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற மாற்று யோசனையையும் மாவட்ட ஆட்சியரிடம் முன்மொழிந்தார்.
Karuna Murthy fb

Tuesday, January 31, 2017

விக்ரமாதித்யன் கவிதைகள்

கூண்டுப் புலிகள்

நன்றாகவே பழகிவிட்டன
நாற்றக் கூண்டு வாசத்துக்கு
பெரிதாக ஒன்றும் புகார் இல்லை
நேரத்துக்கு இரை
காலமறிந்து சேர்த்து விடப்படும் ஜோடி
குட்டி போட சுதந்திரம் உண்டு
தூக்க சுகத்துக்கு தடையில்லை
கோபம் வந்தால்
கூண்டுக் கம்பிகளில் அறைந்து கொள்ளலாம்
சுற்றிச் சுற்றி வருவதும்
குற்றமே இல்லை
உறுமுவதற்கு உரிமையிருக்கிறது
முகம் சுழிக்காமல்
வித்தை காண்பித்தால் போதும்
சவுக்குச் சொடுக்குக்குப் பயந்து
நடந்து கொண்டால் சமர்த்து
ஆதியில் ஒரு நாள்
அடர்ந்த பசியக்காட்டில்
திரிந்து கொண்டிருந்தனவாம்
இந்தக் கூண்டுப் புலிகள்


நீலகண்டம்

அவனுக்குத் தெரியாதா
ஆலகால விஷம்
அவளேன் அலறிப் புடைத்து ஓடிவந்து
அவன் சங்கைப் பிடித்தாள்
கறுத்த கழுத்து
காமத் தழும்பு!


நகரம்

விரும்புவது
நதிக்கரை நாகரிகம்
விதிக்கப்பட்டது
நெரிசல் மிக்க நகரம்


வாழ்க்கை

அவர்கள்
பேசுவது பகவத்கீதை
பின்னால் இருக்கிறது
பாதுகாப்பான வாழ்க்கை






Friday, January 6, 2017

இரசனைகளின் தருணம்..... அமீர் அப்பாஸ்

நட்சத்திரங்களின்
ஒளிச்சொற்களால்
பூக்களின் இதழ்களில்
காற்றின் பாடல்களுக்கு
கையொப்பம் இட வந்தவன்
என்னை
கணிதப்பாடத்தை
மனனம் செய்யச்சொல்லி
கட்டாயப்படுத்தாதீர்கள்..!
கொட்டும் அருவிகளின்
வற்றாத ஜீவநதிகளின்
அடர்ந்த காட்டின்
பேரமைதியில்..
தனித்திருக்க வந்த
இயற்கையின்
யாசகன் நான்..!
என்னை
செல்வந்தர்களிடம்
கையேந்தி நிற்கச் சொல்லி
காயப்படுத்தாதீர்கள்..!
ஒரு பறவையைப் போல
பூமியை தரிசிக்க வந்த
யாத்ரீகன் நான்..!
குடும்பம், சாதி, மதம்
ஆகிய கூண்டுகளில்
சிறைப்பிடிக்க வேண்டி
என் சிறகுகளை
வெட்டி விடாதீர்கள்..!
என் வண்ணங்கள்
பிடிக்கவில்லை என்றால்
விலகிச் செல்லுங்கள்..!
உங்களின் சாயத்தை..
என் மீது பூசிச் செல்லாதீர்கள்..!
பெருமழைக் காத்திருக்கிறது
வண்ணங்கள் கலைந்திடும்
வாழ்க்கை ஒரு வானவில்..!
பூட்டி வைத்த..
ஆபரணங்களுக்காக
நீங்கள் விழித்திருங்கள்..!
ஒரு நாடோடியின்
இரசனை மிகுந்த
இராத்திரியைப் போல
மிஞ்சியிருக்கும்
இந்த வாழ்க்கை
எனக்குப் போதும்..!
மரணத்தின் வாழ்வை
தினமும் வாழ்பவன்..!
வாழ்வின் மரணத்தை
என் மீது
திணித்து விடாதீர்கள்..!
பயணிக்காத
கப்பலின் பாதுகாப்பு
எனக்கு வேண்டாம்..!
ஒரு புயலைக்
கடந்து செல்லும்
ஒரு கட்டு மரம் போல்
வாழ்வேன்..!
வேதங்களின்..
மந்திரச்சொற்களால்
சிறைவைக்கப்பட்ட
உங்கள் இறைவன்
எனக்கு வேண்டாம்..!
தாய்மையின் சிறகுகளாய்
கைகள் விரித்து
காத்திருக்கும்
காலத்தின் மடியில்
சரணடைவேன்..!
சுவடுகள்
ஏதுமின்றிக் கரையும்
ஒரு நொடி போதும்..!
கடலிற்குள்
காணாமல் போகும்
நதியாவேன்..!

Wednesday, January 4, 2017

சம்பவம்

துடியலூர் அருகே ஒரு ஆவின் பூத்தில் டீ குடிப்பதற்காக நின்றிருந்தேன், ஒரு போலீஸ் ஜீப்பில் இரண்டு போலீஸ்காரர்கள் அமர்ந்து கொண்டு, அதில் ஒருவர் அதட்டும் குரலில் "டீ போடுய்யா", என்றார்,

கடைக்காரர் என்னை மறந்துவிட்டு வேகமாக அவர்களுக்கு டீ போட்டு ஓடி சென்று கொடுத்தார், "சாரி சார்", என்று என்னை பார்த்து சிரித்துவிட்டு எனக்கும் அவசரமாக போட்டு கொடுத்தார், நான் போலீஸ்காரர்களை பார்த்தேன், அவர்களும் என்னை பார்த்து ஏதோ பேசிக்கொண்டது போல் தெரிந்தது.

காசை கொடுக்க பர்ஸ் எடுப்பதற்குள், ஒரு போலீஸ் வேகமாக இறங்கி வந்து டீக்கான காசை கொடுத்தார், கடைக்காரர் தலையை சொறிந்துகொண்டே "வேண்டாம்", என்றார், "குடுக்கலேன்னாலும் கேட்டு வாங்கனும்யா" என்றார் அதே அதட்டும் குரலில், போலீஸ் பற்றிய என் பிம்பம் உடைய ஆரம்பிக்கையில், "உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?"என்றதற்கு, "உங்கள மாதிரி காசு கொடுத்து டீ குடிக்கும் சாதாரணன்தான் நானும்" என்றேன்...

இருவரிடமும் ஏனோ மெல்லிய சிரிப்பு மலர்ந்தது.